search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110448"

    சிவகங்கை அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே உள்ளது பெரியகோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் 3 ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய சிறு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கான ஆழ்துளை மோட்டார் பழுதாகியது.

    மேலும் ஆழ்துளை கிணற்றுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு தொட்டியும் தற்போது செயல்படவில்லை. இதையடுத்து இங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி இந்த கிராம மக்கள் தற்போது குடிநீர் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் தங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வைரவன்பட்டி பகுதிக்கு நடந்து சென்று அங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இந்த அவல நிலையை போக்கிட மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பெரியகோட்டை கிராமத்துக்கு போதிய குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
    மத்தியில் தற்போது இருக்கும் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம் வந்து விட்டது என சிவகங்கை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    சிவகங்கை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

    இந்த சிவகங்கை தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படவில்லை, தகுதி  அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டார்.

    ஆளுங்கட்சியின் துணையோடு பாஜக சார்பில் நிற்கும் எச். ராஜாவை பற்றி நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலே இது போன்ற கடைந்தெடுத்தவரை பார்த்ததில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுவது. பொய்களையே பேசுவது இது தான் ராஜாவின் பணி.  மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எச். ராஜா பாராளுமன்றத்திற்கு போனால் சிவகங்கை தொகுதிக்கே அவமானம். அவர் மோசமான அரசியல்வாதி.



    இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கக்கூடிய கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறுகிறேன். பெரியார், அறிஞர் அண்ணா, மற்றும் திராவிட இயக்கத்தினை மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிற ராஜாவை விடுத்து, நீங்கள் அனைவரும் கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    பிரதமர் மோடியின் இந்த ஆட்சியில்,  பாஜக கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காத சலுகைகளே இல்லை. எனவே பாரதீய  ஜனதா என அழைக்காமல் கார்ப்பரேட் ஜனதா என்றே கூறுங்கள். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களின் பேரில் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார். யாருக்கேனும்  போட்டுள்ளாரா? அப்படி போட்டிருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

    பிரதமர் மோடி வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார். ஆனால் செயல் ஒன்றும் இருக்காது. பாஜகவிற்கு எதிராக யாரும் பேசினால் தேச துரோகி என கூறுகிறார்களே ,இது முறையா? 5 ஆண்டுகளுக்கு முன் மதச்சார்பற்ற இந்தியா உருவாகும் என கூறினார்களே, அப்படி செய்தார்களா? நாற்காலி தான் இவர்களது நோக்கம்.

    இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019

     
    சிவகங்கையில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பறித்துச் சென்றனர்.

    விருதுநகர்:

    சிவகாசி தில்லை நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஜெயக்கொடி (வயது 45). இவர், உறவுக்கார பெண்ணுடன் மொபட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்றார்.

    ஜக்கம்மாள் கோவில் அருகே சென்றபோது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்தனர். அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜெயக்கொடி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.

    இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசில் ஜெயக் கொடி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கையில் தூய்மைப்பணி மேற்கொண்ட கவர்னர், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். #BanwarilalPurohit

    சிவகங்கை:

    சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    பின்னர் அவர் சிவகங்கைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பின்னர் சிவகங்கை நகராட்சி பஸ் நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் துப்புரவு பணியை மேற்கொண்டார்.

    இதில் கலெக்டர் ஜெயகாந்தன், அமைச்சர் பாஸ்கரன், தலைமை கூடுதல் செயலாளர் ராஜகோபால், செந்தில்நாதன் எம்.பி., மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து சிவகங்கையில் உள்ள வேலு நாச்சியார் விருந்தினர் மாளிகையில் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    சிவகங்கையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று மாலை ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கவர்னர் செல்கிறார். ராமேசுவரத்திற்கு நாளை (12-ந் தேதி) காலை செல்லும் கவர்னர் அங்கு புனரமைக்கப்பட்ட 30 தீர்த்தங்களை பொது மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.  #BanwarilalPurohit

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் தற்போது மதுரை, தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய  மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேனியில் இரவு நேரங்களில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  இன்று விடுமுறை அளித்து ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    மேலும் நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை உள்பட 4 மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.
    ராமநாதபுரம்:

    அரபிக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று காலை மழை சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்தது.

    ராமநாதபுரம் நகர், பரமக்குடி, கமுதி, திருவாடானை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. சில இடங்களில் இடியுடன் மழை பெய்ததால் மின்தடை ஏற்பட்டது.

    ராமேசுவரத்தில் நள்ளிரவு 2 மணி முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்தது. பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    பலத்த காற்றுடன் கடல் சீற்றம் இருந்ததால் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமநாதசுவாமி கோவில் பிரகாரத்தில் மழைநீர் புகுந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காலையும் மழை நீடித்ததால் மாணவ -மாணவிகள், வேலைக்கு செல்வோர் கடும் அவதி அடைந்தனர்.


    சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் கண்மாய், ஏரி, குளங்களின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காளையார்கோவில், காரைக்குடி, கல்லல், திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை இருந்தது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருப்புவனம்- 148.6

    தேவகோட்டை- 2.2

    காளையார்கோவில்- 9.8

    சிங்கம்புணரி- 13.6

    விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத போதிலும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் 75 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பி உள்ளது.

    ராஜபாளையத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக அய்யனார்கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் லேசான மழை இருந்தது.

    மாவட்டத்தின் உள்பகுதிகளான விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத நிலையில் நேற்று மதியம் முதல் ஆங்காங்கே லேசான முதல் மிதமான மழை பெய்தது. நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. வாடிப்பட்டி, சமயநல்லூர், சோழவந்தான், மேலூர், நாகமலை புதுக்கோட்டை, அலங்காநல்லூர், பாலமேடு, குமாரம், ஆண்டிப்பட்டி, திருமங்கலம், விரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இன்று காலையில் சில இடங்களில் மழை பெய்தது. வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.

    மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    உசிலம்பட்டி- 26.20

    மதுரை தெற்கு- 40.30

    விரகனூர்- 110.50

    விமான நிலையம்- 21.20

    இடையபட்டி- 57.20

    புலிப்பட்டி- 8.40

    சோழவந்தான்- 30.10

    கள்ளிக்குடி- 12.20

    மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை வரை 853.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, திருத்தங்கல், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது.
    மதுரை:

    கேரளாவை யொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் மதுரை நகரில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாலை நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருவதால் தண்ணீர் சாலைகளில் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சோழ வந்தானில் 53.10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, திருவாடானை, சாயல்குடி, திருத்தங்கல், மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் நகரில் சாலையில் மழை நீர் தேங்கியது. சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. காலையில் பெய்த மழையால் பள்ளி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர்.

    ராமேசுவரத்தில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் ராமநாதசாமி கோவில் பிரகாரத்தில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ராமேசுவரத்தில் நேற்று இரவு மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    பலத்த காற்றுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், ராமேசுவரம், மண்டபம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் ரெயில் குறைந்த அளவு வேகத்தில் இயக்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டத் திலும் நல்ல மழை பெய்து வருகிறது. காரைக்குடி, தேவகோட்டை, கல்லல், காளையார்கோவில், மானாமதுரை ஆகிய பகுதிகளில் மழை காரணமாக கண்மாய் ஏரிகளுக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இன்று காலையும் மழை தொடர்வதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அய்யனார் கோவில் ஆறு, முள்ளி ஆறு, பேயனாறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதன் காரணமாக 6-வது மைல் குடிநீர் தேக்க ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ஸ்ரீவில்லிபத்தூர், சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய், ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய், சிறுநீரகம் மற்றும் கண்ணுக்கான புதிய சிகிச்சை மையங்களை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் புதிய சிகிச்சை மையங்கள் மற்றும் பொது சுகாதார வளாகங்கள் திறப்பு விழா, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு பி.ஆர்.செந்தில் நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பாஸ்கரன் தலைமை தாங்கி புதிதாக தொடங்கப்பட்டுள்ள 14 படுக்கைகள் கொண்ட புற்றுநோய் சிகிச்சை பிரிவு மையம், 25 படுக்கைகள் கொண்ட கண் அறுவை சிகிச்சை பிரிவு மையம், 20 படுக்கைகள் கொண்ட சிறு நீரக அறுவை சிகிச்சை பிரிவு மையம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    அதன்பிறகு அமைச்சர் பாஸ்கரன் கூறியதாவது:- சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறந்து விளங்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறது. சிவகங்கை பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும். ஆனாலும் இங்குள்ள மருத்துவமனையில் மதுரை, சென்னை உள்ளிட்ட வளர்ந்த நகரங்களுக்கு ஈடாக நவீன உபகரணங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அத்துடன் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்பட்டு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேபோல் பெரியாறு பாசன பகுதிகளுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழாவில் வருவாய் அலுவலர் லதா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் வனிதா, உறைவிட டாக்டர் மகேந்திரன், நிலைய அலுவலர் குழந்தை ஆனந்தன், துணை நிலை அலுவலர் ராஜராஜன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் முன்னாள் எம்.எல்.ஏ சந்திரன், நகர செயலாளர் ஆனந்தன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்களை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார். மேலும் 26 பேருக்கு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்ட விலையில்லா தையல் எந்திரங்களையும் அவர் வழங்கினார். 
    இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் நாளை 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, காலாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
    சிவகங்கை:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில் ஆகிய 5 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தாலுகாக்களில் உள்ள பள்ளிகளில் நடக்க இருந்த காலாண்டு தேர்வுகள் வரும் 15-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் அறிவித்துள்ளார். 
    கருணாநிதி மறைவை முன்னிட்டு விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இன்று பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. #Karunanidhideath #Karunanithi #DMK
    விருதுநகர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

    பஸ்கள் ஓடாததால் வெளியூரில் இருந்து உள்ளூர் திரும்பியவர்களும் அவதிப்பட்டனர். பஸ் போக்குவரத்து நேற்று இரவு 7 மணி முதல் படிப்படியாக நிறுத்தப்பட்டது. இன்று காலை பஸ் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    சிவகங்கை நகரில் இன்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிவகங்கை பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

    அரண்மனை ரோடு, நேரு பஜார், தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் வெறிச்சோடியது. இதே போல் காரைக்குடி, திருப்பத்தூர், காளையார் கோவில், தேவகோட்டை, கல்லல், சருகணி, மானாமதுரை, இளையாங் குடி, திருப்புவனம், சிங்கம்புணரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

    கருணாநிதி மறைவையொட்டி இன்று மாலை சிவகங்கை நகரில் அனைத்து கட்சி சார்பில் மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெறுகிறது.

    மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பஸ்நிலையம், முக்கிய பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர்.

    ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை.

    இதனால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு இன்று விடுமுறை அறிவித்து விட்டதால் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டமும் காணப்படவில்லை.



    இதேபோல் 3 மாவட்டங்களிலும் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. சிறு சிறு டீக்கடைகள் கூட ஒன்றிரண்டே ஆங்காங்கே திறந்திருந்தன. ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டே இருந்தன.

    இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடை வீதிகள் இன்று வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் வீதிகளில் தங்கி இருந்த மக்கள் பெரும் சங்கடத்திற்கு ஆளானார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வீதிகளில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ராமநாதபுரம், சிவகங்கை நகர சாலைகளிலும் ஆங்காங்கே கருணாநிதி படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை நடக்கும் சந்தை இன்று ரத்து செய்யப்பட்டது. இன்று வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் நேற்று இரவே ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் மதுரை, திருச்சி விமான நிலையங்களுக்கு சென்று விட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். #Karunanidhideath #Karunanithi #DMK
    சிவகங்கை நகரில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் திடீர் நடவடிக்கை எடுத்ததாக கூறி வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகரின் முக்கிய வர்த்தக வீதியான நேருபஜார் பகுதியில் ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்புகளை வர்த்தகர்கள் முன்வந்து உடனடியாக அகற்ற வேண்டும், இல்லையென்றால் அதிகாரிகள் அகற்றுவார்கள் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையாளர் அயூப்கான், தாசில்தார் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அழகர், ரவிச்சந்திரன், மோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சென்று நேருபஜாரில் கடைகளின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். அப்போது அதிகாரிகளின் இந்த செயலுக்கு அந்த பகுதி வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    கடைகளுக்கு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாக்க கடையில் இருந்து 3 அடிக்கு தரையில் கால் ஊன்றாமல் மேற்கூரை அமைக்க அனுமதி பெற்று தான் அமைத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். அத்துடன் உரிய அவகாசம் தராமல் திடீரென்று அதிகாரிகள் அகற்றுவது நியாயம் இல்லை என்றனர்.

    இருப்பினும் அந்த வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு முழுவதையும் அதிகாரிகள் அகற்றினர்.

    இதுகுறித்து நகர் வர்த்தகர் சங்க தலைவர் அறிவுத்திலகம் கூறும்போது, சிவகங்கையில் முக்கிய வர்த்தக பகுதியாக நேருபஜார் உள்ளது. இங்கு தான் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள்.

    அவ்வாறு வரும் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க வசதியாக அனுமதிபெற்று மேற்கூரை அமைத்துள்ளோம். இந்தநிலையில் அதனை ஆக்கிரமிப்பு கூறி எந்தவித அவகாசம் தராமல் திடீரென்று அகற்றியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதுதொடர்பாக இன்று(ஞாயிற்றுக்கிழமை) வர்த்தகர் மற்றும் அனைத்துக்கட்சியினர் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம் என்றார்.

    அதிகாரிகள் கூறுகையில், சிவகங்கை நகரில் நேரு பஜாரை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது என்றனர். 
    சிவகங்கை அருகே இலுப்பகுடி இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு பயிற்சி மையத்தில் வீரர்களின் பயிற்சி நிறைவு விழா மற்றும் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
    சிவகங்கை:

    சிவகங்கை அருகே இலுப்பகுடியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் எல்லை பாதுகாப்பு படைக்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஓராண்டு பயிற்சி பெற்றுச் செல்வது வழக்கம்.



    இதேபோன்று கடந்த(2017-18) ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 242 வீரர்களை நாட்டின் எல்லை பாதுகாப்பு படைக்கு அனுப்பி வைக்கும் விழா, பயிற்சி நிறைவு விழா மற்றும் வீரர்களின் அணிவகுப்பு, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பயிற்சி மைய மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு இலுப்பகுடி பயிற்சி மையத்தின் டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈபன் தலைமை தாங்கினார். அப்போது வீரர்களின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். மேலும் பயிற்சியில் சிறந்து விளங்கிய அஜய்குமார், அங்குஷ் சவுத்ரி, யாசின், சகில்சிங், மன்ஜீத் தாகூர், அமித் ஆகிய வீரர்களை பாராட்டி பரிசு கோப்பைகளை வழங்கினார்.

    முன்னதாக நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் வீரர்களின் அணி வகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து தேசிய கொடியை முன்னிறுத்தி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வீரர்களின் சாகச நிகழ்ச்சியாக கராத்தே, கயிறு ஏறுதல், தீ வளையத்திற்குள் தாவுதல், துப்பாக்கிகளை கையாளும் விதம், நடனம் போன்றவை நடைபெற்றன.

    தற்போது பயிற்சி நிறைவு செய்து செல்லும் 242 வீரர்களும் தமிழகம், ஜம்முகாஷ்மீர், ஜார்கண்ட், குஜராத், ஆந்திரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, அரியானா, சத்தீஸ்கர், தெலுங்கானா, புதுடெல்லி ஆகிய 11 மாநிலங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 
    ×