search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்கிரீம்"

    • விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
    • ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விஸ்கி ஐஸ்க்ரீம் விற்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் சரத் சந்திரா ரெட்டி என்பவர் நடத்தி வந்த ஐஸ்கிரீம் பார்லரில் ஒரு கிலோ ஐஸ்கிரீமில் 60 எம்எல் விஸ்கி என்ற வீதத்தில் கலந்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது.

    இது தொடர்பாகக் கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 11.5 கிலோ எடையுடைய 23 விஸ்கி ஐஸ்கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் விஸ்கி ஐஸ்கிரீம் தொடர்பாக பேஸ்புக்கில் அவர்கள் விளம்பரம் செய்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற கடைகள் வேறு எங்கும் செயல்பட்டு வருகிறதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர்.
    • விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் இம்மாதம் 14-ந்தேதி ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஓம்கர் என்பவரின் விரல் தான் அது என டி.என்.ஏ. பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஐஸ் கிரீம் தயாரிக்கும் போது அவரின் நடுவிரல் துண்டாகி உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது.

    முன்னதாக, அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

    மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த வாரம் ஆன்லைனில் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த ஐஸ் கிரீமை சாப்பிட துவங்கியதும் அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதை மருத்துவரான அவரது சகோதரர்  வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடவே விஷயம் பூதாகரமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக புனேவை சேர்ந்த சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

    ஐஸ் கிரீம் உற்பத்தியாளரின் தயாரிப்பு ஆலைக்கு சீல் வைத்து உரிமத்தை ரத்து செய்தனர். ஐஸ் கிரீமில் கிடந்த மனித விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விரல் யாருடையது என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது அதற்கான விடை ஓரளவு கிடைத்துள்ளது.

     

    அதாவது ஐஸ் கிரீம் ஆலையில் வேலை பார்த்து வந்த ஒருவர் சமீபத்தில் ஆலையில் நடந்த விபத்தில் தனது விரலை இழந்துள்ளார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபரின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையில் விரலில் உள்ள டி.என்.ஏ.வும் அந்த நபரின் டி.என்.ஏவும் ஒத்துபோகும் பட்சத்தில் இந்த மர்மத்துக்கு முழுமையான விடை கிடைக்கக்கூடும்.  

    • தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார்.
    • கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.

    உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தீபா தேவி என்பவர் தனது 5 வயது மகனுக்காக ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார்.

    ஆர்டர் செய்யப்பட்ட அமுல் வெனிலா மேஜிக் ஐஸ்கிரீமை திறந்தபோது அதில் பூரான் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனையடுத்து தீபா உடனடியாக ஆன்லைனில் வாங்கியவர்களிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர்கள் ஐஸ்கிரீம் தொகையை திரும்ப அளித்தனர். தீபா தேவி புகார் தொடர்பாக அமுலுக்கு தெரியப்படுத்துவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

    கடந்த வாரம் மும்பையை சேர்ந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ்கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது. இதையடுத்து அவர் அளித்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்கிரீமை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஐஸ்கிரீமில் பூரான் இருப்பது ஐஸ்கிரீம் பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    • டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    இந்தாண்டு கோடைக்காலம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. மக்கள் வெயிலில் வாடி வதங்குகின்றனர். மனிதர்களாலே இந்த வெயிலின் சூட்டை தாங்கிக் கொள்ள முடியவில்லை. வாயில்லா ஜீவங்கள் என்ன அவஸ்தை படுகின்றனர் என்பதை சொல்லவா வேண்டும்.

    டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வருவதால் அங்கு இருக்கும் டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவின் நிர்வாகம் அங்கு இருக்கும் 1300 விலங்குகளுக்கும் வெப்ப அலையில் இருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    கோடை வெப்பத்தில் இருந்து தப்பிபதற்கு ஃப்ரூட் ஐஸ் பால், ஐஸ் கிரீம்உணவாக தருகின்றனர் தண்ணீரை சிபிரிங்க்லர் முறையில் விலங்குகள் மீது தெளிக்கின்றனர். விலங்களுக்கு சாப்பாட்டு அளவை குறைத்து நீர்சத்து மிகுந்த உணவுகளையும் , நீர் நிறைந்த ஆகாரத்தையும் கொடுக்கின்றனர்.

     

    ஒவ்வொரு விலங்களுக்கு ஏற்றார்போல இந்த பணிகளை செய்து வருகின்றனர். விலங்குகள் இருக்கும் இடத்தில் ஏர் கூலர்கல்களும் வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
    • மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார்.

    நாட்டின் பல நகரங்களிலும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள், நுங்கு, இளநீர், ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பிரபல ஆன்-லைன் உணவு வினியோக நிறுவனமான ஸ்விக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 15 வரையிலான காலகட்டத்தில் தங்களுக்கு வந்த ஆர்டர்கள் குறித்து கூறி உள்ளது. அதன்படி கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 16 சதவீதத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலான நேரத்தில் சுமார் 6.9 லட்சத்திற்கும் அதிகமாக ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையிலான நேரத்தில் 4.6 லட்சம் ஆர்டர்களும், காலை 7 மணி முதல் 11 மணி வரையிலான நேரத்தில் சுமார் 80 ஆயிரம் ஆர்டர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் மும்பையை சேர்ந்த ஒரு நபர் 45 நாட்களில் 310 ஐஸ்கிரீம்கள் ஆர்டர் செய்துள்ளார். இது இந்திய அளவில் ஒருவர் இதுவரை மிகவும் அதிகமாக ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் ஆர்டர் ஆகும்.

    • வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது.
    • செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு சவாலாக இருக்கிறது. பள்ளிகள் விடுமுறை என்பதால் பிள்ளைகளுக்கு வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது. வீட்டிலேயே குறைந்த செலவில் ஐஸ்கிரீம் கிடைந்ததால் எப்படி இருக்கும். அதைதான் நான் இப்போது சொல்ல போகிறேன். வாங்க அனைவரும் ஜில் என்று ஆகலாம்.

    தேவையான பொருட்கள்:

    தர்பூசணி - 1

    கிரீம் மில்க் - 750 ml

    சர்க்கரை - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு முழு தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

    * நறுக்கிய தர்பூசணி துண்டுகளை கரண்டி கொண்டு நன்கு நசுக்கி சாறு எடுக்க வேண்டும். (குறிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது)

    * பின்னர் அந்த சாரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் மாற்றில் அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு செய்ய வேண்டும்.

    * அந்த சாரானது ஒரு திக்கான கலவையாக வந்த உடன் அடுப்பை அனைத்து விட வேண்டும். (குறிப்பாக 1 டம்ளர் சாறு அரை டம்ளர் வந்தவுடன்)


    * அடுத்ததாக கிரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹாண்டு மிக்சரை வைத்து அதை நன்கு மிக்ஸ் செய்து ஒரு திக்காக கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும். அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்யவேண்டும்.

    * சர்க்கரையும், மில்க் கிரீமும் நன்கு ஒன்று சேர்ந்தவுடன் தயாரித்து வைத்துள்ள தர்பூசணி திரவத்தை அதனுடன் சேர்த்து, பின்னர் அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து ஒரு நல்ல கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும்.

    * பின்னர் இதை ஒரு கண்ணாடி பவுல் அல்லது வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஃப்ரிசரில் 4 முதல் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.

    5 மணிநேரம் கழித்து எடுத்து பரிமாறினால் சுவையான ஐஸ்கிரிம் ரெடி. இந்த வெயிலுக்கு குடும்பமாக செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.

    • ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • பூஜா மாண்டியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு 1½ வயதில் திரிசூல், திரிஷா ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இவர்களது ஊருக்கு வாகனத்தில் கொண்டு வந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது. இதை பூஜா தனது 2 குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தார். பின்னர் அவரும் சாப்பிட்டார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. மேலும் பூஜாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர்களை மாண்டியா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இரட்டை குழந்தைகள் திரிசூல், திரிஷா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் பூஜா மாண்டியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல் இந்த ஊரில் பலர் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே இரட்டை குழந்தைகள் மரணம் சந்தேகத்துக்கு உரியது என்று அரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • சாலையோரம் உணவு விற்போருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது.

    அதில் ஐஸ்கிரீம் வியாபாரி சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகுத் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கி விற்பனை செய்த காட்சிகள் உள்ளன.


    இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதையடுத்து வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும், அவர் எங்கே ஐஸ்கிரீம்களை வாங்கினாரோ அங்கே சென்றும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அங்கே வைக்கப்பட்டிருந்த பழ சாலட்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர்.

    இது குறித்து சாலையோரம் உணவு விற்பனை செய்வோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது.
    • ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஐஸ்கிரீம் உள்பட பால் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    கோடை காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்களுக்கு வழக்கத்தை விட தேவை அதிகரிக்கும்.

    தற்போது கோடை காலம் உச்சத்தை எட்ட தொடங்கி இருக்கிறது. அடுத்த வாரம் முதல் வெயில் அளவு கடுமையாக உயரும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது. இதனால் ஐஸ்கிரீம் விற்பனை கணிசமாக உயர வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அதிரடியாக ஐஸ்கிரீம் விலையை உயர்த்தி இருக்கிறது. இது தொடர்பாக ஐஸ்கிரீம் விற்பனையாளர்களுக்கு கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நேற்று முன்தினம் கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில் 4 வகையான ஐஸ்கிரீம் விலையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 65 எம்.எல். எடை கொண்ட சாக்கோ பார் ஐஸ்கிரீம் விலை ரூ.20-ல் இருந்து ரூ.25ஆக அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல 125 எம்.எல். எடை கொண்ட பால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.

    100 எம்.எல். எடை கொண்ட கிளாஸ்சிக் கோன் வெண்ணிலா ஐஸ்கிரீம் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அது போல கிளாஸ்சிக் கோன் சாக்லெட் ஐஸ்கிரீமும் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது.

    ஐஸ்கிரீம் விலை உயர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வருவதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று தெரிகிறது.

    ஐஸ்கிரீம் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பால் உபபொருட்களின் விற்பனை விலையை நேரடியாகவும், பால் விற்பனை விலையை மறைமுகமாகவும் கடந்தாண்டு வரலாறு காணாத வகையில் உயர்த்திய ஆவின் நிர்வாகம் நடப்பாண்டில் நாளை (3-ந் தேதி) முதல் ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

    ஏனெனில் தனியார் பால் நிறுவனங்கள் பலவும் பால் உபபொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் விற்பனை விலையை குறைப்பது, பல்வேறு சலுகைகள் வழங்குவது என செயல்பட்டு வரும் சூழலில் ஆவின் நிர்வாகத்தின் செயல்பாடுகள் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போலிருக்கிறது.

    மேலும் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதலில் கவனம் செலுத்தாமல், வடமாநிலங்களில் இருந்து பால் பவுடர், வெண்ணெய் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் ஈட்டி, தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்வதில் அக்கறை காட்டும் ஊழல் அதிகாரிகளால் ஆவின் நிர்வாகம் சிதிலமடைந்து வரும் நிலையில் இதுபோன்ற விற்பனை விலை உயர்வு அறிவிப்புகள் ஆவினுக்கு பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் எச்சரிக்கையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

    அத்துடன் பால் வளத்துறை அமைச்சரும், ஆவின் நிர்வாக இயக்குனரும் அதிகாரிகள் மட்டத்தில் குளிர்சாதன அறைகளில் அமர்ந்து கொண்டு ஆலோசனை கூட்டம் என்கிற பெயரில் மக்களின் வரிப்பணத்தை, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பால் வரும் வருமானத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இல்லையேல் நடப்பாண்டின் கோடை காலத்தில் ஆவின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • நுங்கு உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும்.
    • நுங்கு வைத்து விதவிதமான ரெசிபிகள் தயார் செய்யலாம்.

    'இயற்கை ஜெல்லி' என்று அழைக்கப்படும் நுங்கு, உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப் புண்களை ஆற்றும். கல்லீரல் இயக்கத்தை சீராக்கும். கொழுப்பைக் குறைக்கும். இதைக் கொண்டு விதவிதமான ரெசிபிகள் தயார் செய்யலாம்.

    தேவையானப் பொருட்கள்

    நுங்கு - 10

    எலுமிச்சம்பழச் சாறு - 2 தேக்கரண்டி

    சர்க்கரை - 5 தேக்கரண்டி

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    நுங்கின் மேல் தோலை நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அதனுடன் சர்க்கரை, எலுமிச்சம்பழச் சாறு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

    அதை குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும்.

    கலவையை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து மிக்சியில் அரைத்து, மீண்டும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து குளிர்விக்கவும்.

    இதேபோல தொடர்ந்து நான்கு முறை செய்யவும்.

    இப்பொழுது நாவில் கரையக் கூடிய சில்லென்ற 'நுங்கு ஐஸ்கிரீம்' தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×