என் மலர்
நீங்கள் தேடியது "ஓசூர்"
- பிற வக்கீல்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி தாலுகா அலுவலக சாலையில் உள்ள கோர்ட் வளாகத்தில் தாசில்தார் அலுவலகம், மூன்று கோர்ட்டுகள், மகளிர் போலீஸ் நிலையம், போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் நிலையம், பி.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு தினமும் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள், போலீசார் மற்றும் வக்கீல்கள் பல்வேறு வழக்குகள் தொடர்பாக வந்து இருந்தனர்.
ஓசூரைச் சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் கண்ணன் (வயது 30), வக்கீல். இவர் ஓசூர் உழவர் சந்தை அருகில் உள்ள மூத்த வக்கீல் சத்யநாராயணன் என்பவரிடம் ஜூனியர் வக்கீலாக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று மதியம் கோர்ட்டில் வழக்கு சம்மந்தமாக ஆஜராகிவிட்டு வெளியே நடந்து வந்தார். இவரை பின்தொடர்ந்து வந்த ஓசூர் நாமல்பேட்டை பகுதியை சேர்ந்த குமாஸ்தா ஆனந்தகுமார் (39) என்பவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த கண்ணனை, ஆனந்தகுமார் ஆட்டை வெட்டுவதை போல தலை, முகம், கழுத்து உள்பட உடலில் 8 இடங்களில் சரமாரியாக வெட்டினார்.
கோர்ட்டு முன்பு ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணனை ஆத்திரம் தீர வெட்டி தள்ளிய ஆனந்தகுமார் பின்னர் அங்கிருந்து எந்தவித பதற்றமும் இன்றி, நேராக ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அரிவாளுடன் சென்றார். அங்கு மாஜிஸ்திரேட்டு முன்பு அவர் சரண் அடைந்தார்.
இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வக்கீல் கண்ணன் துடிதுடித்து உயிருக்கு போராடியபடி கிடப்பதை கண்ட பிற வக்கீல்கள் அங்கு ஓடி வந்தனர்.
அவர்கள் கண்ணனை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கழுத்து, முகம் பகுதியில் வெட்டுகாயம் ஏற்பட்டதால் நள்ளிரவு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது தொடர்பாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட வக்கீல் கண்ணனுக்கும், குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்யவதிக்கும் இடையே முன்விரோதம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
தொடர்ந்து கண்ணன் தகராறு செய்து வந்ததால் ஆனந்தகுமார் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் குமாஸ்தா ஆனந்தகுமாரின் மனைவியான வக்கீல் சத்தியவதி நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பட்டப்பகலில் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல் கண்ணனை, ஆனந்தகுமார் என்பவர் சரமாரி அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் வெட்டுகாயம் அடைந்த கண்ணன் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் 10 மணி நேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து ஓசூரில் இன்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஆனந்தகுமார் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறை எச்சரிக்கை.
- விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று நள்ளிரவு நாகமங்கலம் கிராமத்தை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தன.
இந்த யானைக்கூட்டம், அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, சானமாவு, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப் பள்ளி, கொம்மேப்பள்ளி, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்பவர்கள் என அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கழுதை பாலை விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கழுதை நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார்.
இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது.
உடனே அவர் கொட்டாகைக்கு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்தை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் தலையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆனந்த் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்கு வந்த மர்ம நபர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் பின்னர் கழுதையின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை எடுத்து சென்றுள்ளனர்.
நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமித்ஷா படத்தை கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர்.
- அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓசூர்:
ஓசூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை கண்டித்து ஒசூர் தொகுதி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் எம்.ஜி.ரோடில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெற்றது.
இந்த நிலையில், மறியலில் ஈடுபட்டவர்கள் திடீரென அமித் ஷாவின் உருவ படத்தை தீ வைத்து எரித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் சப்-இன்ஸ்பெக்டர், கட்சியினரிடமிருந்து படத்தை கைப்பற்ற முயன்றார்.
ஆனால் கட்சியினர் அவரை சூழ்ந்து கொண்டு, சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தி, அமித் ஷாவின் படத்தை முழுவதுமாக எரித்தனர்.
மேலும், அவரது படத்தை கீழே போட்டு கால்களால் மிதித்து அவமரியாதை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செந்தமிழ், ஜீபி கிருஷ்ணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
- 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
- 2 பேர் தலைமறைவாகிவிட்டனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் இ.எஸ்.ஐ. ரிங் ரோடு மத்தம் சர்க்கிள் பகுதியில் நேற்று பிற்பகல் 2.45 மணி அளவில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் உத்தரவின் பேரில் ஓசூர் வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அதிரடியாக சோதனை நடததினார்கள். அதில் 4 பேர் ஒரு ஜோடி யானை தந்தங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அதை வைத்திருந்த தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை அருகே அனுமந்தபுரம் பக்கமுள்ள திப்பனூரை சேர்ந்த வெங்கடேஷ் (27), கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சம்மந்தூர் பக்க முள்ள மாரநாயக்கன அள்ளியை சேர்ந்த விஜயகுமார் (25), ஊத்தங்கரை தாலுகா நடுப்பட்டி அருகே உள்ள ஒந்தியம்புதூரை சேர்ந்த ஹரிபூபதி (39), ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்த பரந்தாமன் (27) ஆகிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஸ்கூட்டரும், 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதில் தொடர்புடைய தேன்கனிக்கோட்டை தாலுகா அய்யூரை சேர்ந்த முனிராஜ் (29), பெட்டமுகிலாளம் அருகே உள்ள தொளுவபெட்டா பழையூரை சேர்ந்த லிங்கப்பா (39), பசலிங்கப்பா (42) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய பெட்டமுகிலாளம கிராமம் போப்பனூரை சேர்ந்த பசப்பா (40), ஜெயபுரத்தை சேரந்த மத்தூரிகா (39) ஆகிய 2 பேர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை வனத்துறையினர் தேடி வருகிறார்கள்.
கைதான 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் சிறையில் அடைத்தனர்.
- நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
- ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை.
ஓசூர்:
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் தொற்று, கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த, 8 மாதம், 3 மாத குழந்தை என இருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்த குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று, ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு மிக அருகாமையிலுள்ள, தமிழக எல்லையான ஓசூரை சேர்ந்த மக்கள் பல ஆயிரம் பேர், பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூரு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூருவில் எச்.எம்.பி.வி., வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதால், தமிழக எல்லையை உஷார்படுத்தி, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், நோய் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, ஓசூர், மாநகர நல அலுவலர் அஜிதா கூறுகையில், ஓசூரில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் காய்ச்சலுக்கு வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்வோர் குறித்த விபரங்கள் பெறப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை ஓசூரில், எந்த பாதிப்பும் கண்டறியப்பட வில்லை என்றார்.
- முனீஸ்வர் நகர் சர்க்கிள் அருகே, ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷ்ய் வாக்கரே தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
- முனீஸ்வர் நகர், வ.உ.சி.நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அங்கு குவிந்தனர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரிங் ரோடு பகுதியில் உள்ள முனீஸ்வர் நகர் சர்க்கிள் பகுதிக்கு தந்தை பெரியார் சதுக்கம் என பெயர் வைக்க ஓசூர் மாநகராட்சியில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஏற்று தமிழக அரசு சார்பில் 22.08.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து, கடந்த 21-ந்தேதி, ஓசூர் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் தந்தை பெரியார் சதுக்கம் என்ற பெயர் பலகையை திறந்து வைத்தனர்.
இதற்கு அந்த பகுதி பொது மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி முனீஸ்வர் நகர் சர்க்கிள் அருகே, ஓசூர் ஏ.எஸ்.பி. அக்ஷ்ய் வாக்கரே தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகளும் விசுவ இந்து பரிஷத் அமைப்பின் மாநில துணை செயலாளர் விஷ்ணு குமார், சேலம் கோட்ட பஜ்ரங்தள் அமைப்பின் பொறுப்பாளர் தேவராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அங்கு வந்தனர்.
மேலும், முனீஸ்வர் நகர், வ.உ.சி.நகர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அங்கு குவிந்தனர். இந்த நிலையில், ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாக நாகராஜ் மற்றும் விஷ்ணுகுமார், அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சி நிர்வாகம், பெயர் மாற்ற தீர்மானத்தை வாபஸ் பெற்று முனீஸ்வரர் நகர் என்ற பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் கைவிடப் பட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- 3000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சுமார் 2000 லாரிகள் ஓடாது.
ஓசூர்:
தென்னிந்திய மோட்டார் போக்குவரத்து சங்க பொது செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா நேற்று ஓசூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் பகுதி கிரஷர் உரிமையாளர்கள் ஜனவரி 1- ந் தேதி முதல் 1 டன்னுக்கு 100 ரூபாய் அதிகமாக கொடுத்தால்தான் ஜல்லி கற்கள் மற்றும் எம். சாண்ட் கொடுப்போம் என்று அறிவித்துள்ளனர். ஒரே தடவையில், ஒரு டன்னுக்கு 100 ரூபாய் உயர்த்தியது லாரி உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு நாளைக்கு லாரி உரிமையாளர்கள் 30 டன் ஜல்லிக்கற்கள் ஏற்றி சென்றால், 3 ஆயிரம் ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இருந்தபோதிலும் கிரஷர் உரிமையாளர்களிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு டன் ஜல்லிக்கு 80 ரூபாய் கொடுப்பதாக ஒப்புக் கொண்டோம்.
ஆனால் கிரஷர் உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் இருந்து தவறி விட்டார்கள். எங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கை யை அவர்கள் மீறிவிட்டார்கள், இந்த விலை உயர்வு காரணமாக ஓசூர் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்கள், 3000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கிரஷர் உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு வரும் வரை ஓசூர் மற்றும் ஆனேக்கல் பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் நாளை (திங்கட்கிழமை, முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
எந்த ஜல்லி பாரமும் ஏற்றக் கூடாது. லாரிகளை வீட்டின் முன்புறமோ அல்லது செட்டுகளில் நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்த அறிவிப்பின்படி, சுமார் 2000 லாரிகள் ஓடாது, ஒரு நாளைக்கு 40,000 டன் அளவில் வர்த்தகம் இருக்காது.
இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.
- பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தார்.
- மாணவனை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஓசூரில் தனியார் குட்டையில் மூழ்கி உயிரிழந்த ள்ளி மாணவன், தலைமை ஆசிரியரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில்,உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலையையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது.
- தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் தாமதமாக செல்லும்
திருப்பூர் :
கோவை- மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் 21 நாட்களுக்கு ஓசூர் செல்ல தாமதமாகும் என சேலம் ெரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
தர்மபுரி - ஓசூர் இடையே மின்மயமாக்கல், சிக்னல் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவையில் இருந்து திருப்பூர் வழியாக செல்லும் லோகமான்யதிலக்(மும்பை) குர்லா எக்ஸ்பிரஸ் நாளை 29-ந் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 1, 4, 6, 8, 11, 13, 15, 18, 20, 22, 25, 27, 29ந்தேதிகள், நவம்பர் மாதம், 1, 3, 5, 8, 10, 12 ஆகிய தேதிகளில் 21 நாட்கள் ஓசூர் அருகே ராயக்கோட்டை - கீழமங்கலம் இடையே ஏதேனும் ஒரு இடத்தில் 40 நிமிடம் நிறுத்தி வைக்கப்படும். இதனால் வழக்கமாக தினமும் மதியம் 2:05க்கு ஓசூர் அடையும் குர்லா எக்ஸ்பிரஸ் இந்த நாட்களில் தாமதமாக செல்லும் என சேலம் கோட்ட ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
- தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
ஓசூரில் நேற்றிரவு லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக பெய்ய தொடங்கியது.
இரவு முழுவதும் பெய்த மழை இன்றுகாலை வரை நீடித்தது. கனமழை காரணமாக ஓசூரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
மழைநீர் தேங்கியதால் ஓசூர் பஸ்நிலையம் குளம்போல் காட்சி அளிக்கிறது.
இதே போல நகரில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். காலையில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதே போல் தேன்கனிக்கோட்டை பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதிகளில் தொடர்ந்து சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஓசூர், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.