என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் அலுவலகம்"

    • 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார்.
    • இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

    மார்ச் 29 தேதியிட்ட உத்தரவில், அமைச்சரவையின் நியமனக் குழு அவரை நிரந்தர அடிப்படையில் பிரதமரின் தனி செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

    யார் இவர்?

    நிதி திவாரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, வாரணாசியில் கூடுதல் ஆணையராக (வணிக வரி) பணியாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, பின் 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார், அன்றிலிருந்து பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    நவம்பர் 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.

     

    இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார். அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார்.

    மோடிக்கு தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிதி திவாரியும் மோடியின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    • விசாரணை நடந்த பகுதியில் உள்ளூர் போலீசார் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரவில்லை.
    • இன்று மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை அதிகாரிகள் தஞ்சாவூரில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தஞ்சாவூர்:

    சென்னைக்கு வருகிற 27-ந்தேதி வருகை தரும் பிரதமர் மோடி, முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த ஒருங்கிணைந்த புதிய விமான முனையங்களை திறந்து வைக்கிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் சென்னையில் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்றுள்ள இ-மெயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த பூண்டி அருகேயுள்ள சாலியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் விக்டர் ஜேம்ஸ்ராஜா (வயது 35) என்பவரது முகவரியில் இருந்து சென்றுள்ள அந்த மெயிலில் பிரதமர் குறித்து அவதூறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் அந்த இ-மெயிலில் பெண்ணின் மார்பிங் செய்யப்பட்ட படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த நோக்கத்துடன் அந்த மெயில் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதற்காக டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரி சஞ்சய்கவுதம் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் தலைமையிலான 9 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பூண்டிதோப்புக்கு வந்து விக்டர் ஜேம்ஸ்ராஜாவை பிடித்து தஞ்சையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான கல்வி அலுவலகத்தில் ஒரு அறையில் விசாரணையை தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்றும் விசாரணை நடைபெற்றது.

    இன்று 3-வது நாளாகவும் மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜாவிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நடந்த பகுதியில் உள்ளூர் போலீசார் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரவில்லை. விசாரணைகள் அனைத்தும் ரகசியமாக நடந்து வருகிறது. இதன் முடிவில் எதற்காக அவதூறு இ-மெயிலை மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜா அனுப்பினார் என்பது போன்ற பல்வேறு தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த நிலையில் இன்று மாணவர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை அதிகாரிகள் தஞ்சாவூரில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் மாணவர் விடுவிக்கப்படுவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா அல்லது அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் எடுத்து டெல்லிக்கு அழைத்து செல்வார்களா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே மாணவர் விக்டர் ஜேம்ஸ்ராஜாவின் தந்தை ஜெயபால் கூறுகையில், எங்களது மகன் எந்த தவறும் செய்ய வாய்ப்பு இல்லை. வீட்டில் இருந்து எங்களிடம் எதுவும் கூறாமல் எனது மகனை அழைத்து சென்றுள்ளனர் என்றார்.

    • அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார்
    • பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் செல்லும் கோண்ட்வானா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த ஒரு அருவருப்பூட்டும் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோண்ட்வானா எக்ஸ்பிரசில் பி-9 பெட்டியில் கீழ் இருக்கையில் தனது 7 வயது மகனுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த ராணுவ வீரர் ஒருவர் அவர்களுக்கு மேல் இருக்கையில் ஏறி அமர்ந்து ஆயாசமாக சிறுநீர் கழித்துள்ளார். இதனால் அப்பெண்ணின் மீது சிறுநீர் படிந்துள்ளது. உடனே தனது கணவரிடம் முறையயிட்ட அவர் ரயில்வே உதவி எண்ணுக்கு அழைத்து இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

    மத்திய பிரதேசம் குவாலியர் நிலையத்துக்கு ரயில் வந்ததும் ரயில்வே போலீசார் ஒருவர் சம்பவ இடத்துக்கு சென்று நடந்ததை  கேட்டறிந்துவிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றார்.

     

    அந்த ராணுவ வீரர் ரயிலில் தொடர்ந்து பயணித்த நிலையில் இறுதிவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க்காததால் அந்த பெண் சமூக வலைத்தளங்களில் தனக்கு நேர்ந்த கசப்பான சம்பவத்தை பகிர்ந்து பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
    • 'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது.

    வங்காளதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திர போரில் பங்கேற்று உயிர் தியாம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது. மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த 2018-ல் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

    இந்த சூழலில் மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை கடந்த மாத இறுதியில் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசு அறிவித்தது. இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

     

    நாடு முழுவதும் போராட்டக்கார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் ஏற்பட்டு வன்முறை களமாக மாறியது. ராணுவம் வரவழைக்கப்பட்டு போரட்டக்காரர்களை கண்டதும் சுடுவதற்கான உத்தரவையும் அரசு பிறப்பித்தது. இதற்கிடையே  போராட்டத்துக்கு காரணமான இடஒதுக்கீட்டை அரசு ரத்து செய்துள்ளது.

    ஆனாலும் போராட்டம் ஓயாமல் நடந்து வரும் நிலையில் தற்போது பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி மற்றும் காவல்துறை இணையதளங்கள் "THE R3SISTANC3" என்ற மர்ம கும்பலால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த இணையதளங்களில், 'ஆப்ரேஷன் ஹண்ட் டவுன், மாணவர்களை கொள்வதை நிறுத்துங்கள்' என்றும் 'இது இனிமேல் போராட்டம் அல்ல போர்' என்றும் சிவப்பு எழுத்துக்களால் ஹேக்கர்கள் மேற்கோள் காட்டிய வாசகங்கள் திரையில் வருகின்றன.

    ஹேக்கர்கள் விடுத்துள்ள பிரகடனத்தில், 'திறன் மிக்க மாணவர்களால் அமைதியான வழியில் நடந்தப்பட்ட போராட்டத்தை அரசு மற்றும் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து வன்முறையாலும் கொலைகளாலும் ஒடுக்க முயன்றுள்ளது. இனி இது வெறும் போராட்டம் இல்லை. நீதிக்கான, சுதந்திரத்துக்கான, எதிர்காலத்துக்கான போர்' என்று குறிப்பிட்டுள்ளனர்.


     



    அதுமட்டுமின்றி, ' மற்ற ஹேக்கர்கள், பத்திரிகையாளர்கள், இன்டலிஜென்ஸ் நிபுணர்கள் எண்களின் இந்த முன்னெடுப்பில் சேர வேண்டும், உங்களிடம் உள்ள திறனும், தழுவலும், தன்னம்பிக்கையும் எங்களுக்கு தேவை. வேடிக்கை பார்ப்பதற்கான காலம் முடிந்துவிட்டது' என்றும் "THE R3SISTANC3" கும்பல் ஹேக்கர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    'தயாராக இருங்கள், நீதிக்கான சண்டை இப்போதுதான் தொடங்கியிருக்கிறது' என்று ஹேக்கர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை கிளப்பியுள்ளது. ஹேக்கர்களின் அந்த பிரகடனத்தில் இடம்பெற்ற புகைப்படங்களில், இரண்டு நாயுடன் அடையாளம் தெரியாத 5 நபர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
    • இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் உள்ளிட்ட இமெயில்களை அனுப்பியுள்ளார்.

    பிரதமர் அலுவலகத்துக்கு போலி  மிரட்டல் விடுத்து 100 ஈமெயில் வரை அனுப்பிய இளைஞர் போலீசில் பிடிப்பட்டுளார். சமீப காலமாக விமானங்கள், ஹோட்டல்கள் என நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 35 வயதான ஜெகதீஸ் என்ற நபர் பிரதமர் அலுவலகம், ரெயில்கள், விமானங்கள் என தொடர்ச்சியாக போலி ஈமெயில் மிரட்டல் விடுத்திருக்கிறார். பயங்கரவாதத்தை குறித்து எழுதிய டெரரிசம் - டிமானிக் ஸ்டிராம் (Terrorism: A Demonic Storm) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை ஜெகதீஸ் எழுதியுள்ளார்.

    இதை வெளியிடுவதற்கான முயற்சியில் மிரட்டல் விடுக்கும் ஈமெயில்களை அவர் அனுப்பத்தொடங்கியுள்ளார். முதலில் தனது புத்தகத்தை வெளியிட உதவுமாறு பிரதமர் அலுவகத்துக்கு மெயில் அனுப்பிய அவர் அதற்கு பதில் வராததால் இந்தியாவுக்கு ஸ்லீப்பர் செல் அச்சுறுத்தல் என்பது உள்ளிட்ட போலி மிரட்டல் மெயில்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக நாக்பூர் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து போலீஸ் விசாரித்து வருகிறது.

    • கேரள பாதிரியார் ஒருவர் மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி தலைமையில் ஒரு குழு வாடிகன் சென்றது.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் கத்தோலிக்க தலைமை குருவாக போற்றப்படுபவர் போப் பிரான்சிஸ். இவருக்கு ஆலோசனை கூறவும், கத்தோலிக்க சமய முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவதிலும் கார்டினல்களுக்கு முக்கிய பங்கு உண்டு. போப் தேர்வில் ஓட்டு போடும் தகுதியும் கார்டினல்களுக்கு உண்டு. பல்வேறு மறை மாவட்டத்திற்கு தலைமையாக கார்டினல் செயல்படுவார்.

    உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட கார்டினல்கள் தேர்வு செய்யப்பட்டு போப்பால் நியமனம் செய்து உத்தரவிடப்படும்.

    இதற்கிடையே, இந்த கார்டினல் பொறுப்பில் இந்தியாவில் இருந்து கேரளாவின் செங்கனாச்சேரியைச் சேர்ந்த மான்சிக்னார் ஜார்ஜ் ஜேக்கப் கோவாகாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இவரது பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க இந்திய குழுவினர் செல்ல மத்திய மீன்வளத்துறை மந்திரி ஜார்ஜ் குரியன் தலைமையில் காங்கிரஸ் எம்.பி. கொடிக்குனில் சுரேஷ், ராஜ்யசபா எம்.பி சதம்சிங் சாந்து, பாஜ., வை சேர்ந்த அனில் ஆண்டனி, அனூப் ஆண்டனி, தாம் வடக்கன், ஆகியோர் வாடிகன் சென்றுள்ளனர்.

    இந்நிலையில், பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பேராயர் ஜார்ஜ் கூவக்காட் கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது இந்தியாவுக்குப் பெருமை அளிக்கும் விஷயமாகும் என பதிவிட்டுள்ளது.

    வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய தகவல்களை தெரிவிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. #PMO #BlackMoney
    புதுடெல்லி:

    பிரபல இந்திய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நடிகர்-நடிகைகளில் பலர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை முறைகேடாக பதுக்குவதாக குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் பெரும் அளவில் கருப்பு பணம் வருவதாகவும் கூறப்படுகிறது.

    2005-14-ம் ஆண்டுகளில் இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் சுமார் ரூ.11 லட்சம் கோடியை கருப்பு பணமாக பதுக்கி வைத்திருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய நிதி விவகார கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது. அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் ரூ.53 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவி இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.

    இதைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் சஞ்சீவ் சதுர்வேதி என்பவர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கருப்பு பணம் மீட்கப்பட்டது என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினார்.

    அதற்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதில் அளித்த பிரதமர் அலுவலகம் இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்று கூறிவிட்டது.

    இதனால் சதுர்வேதி மத்திய தகவல் ஆணையத்தை இது தொடர்பாக அணுகினார். அதையடுத்து பிரதமர் அலுவலகம் அடுத்த 15 நாட்களுக்குள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் பற்றிய விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்று கடந்த மாதம் 16-ந்தேதி உத்தரவிட்டது.


    என்றபோதிலும் பிரதமர் அலுவலகம் மத்திய தகவல் ஆணைய உத்தரவின்படி கருப்பு பணம் பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அதேநேரம் பிரதமர் அலுவலகம் இதற்கு பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

    கருப்பு பணத்தை மீட்பதற்காக ஏற்கனவே சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் கருப்பு பணம் தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை வெளியே கூறினால் அது விசாரணைக்கு முழுமையாக இடையூறு ஏற்படுத்துவதாக அமைந்து விடும்.

    அதேபோல் இது சிறப்பு குழுவின் விசாரணையை தாமதப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் தப்பி விடுவதற்கு உதவி செய்வது போலவும் அமைந்து விடும். மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8 (1) இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு விதிவிலக்கு அளித்து இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.  #PMO #BlackMoney 
    பாகிஸ்தானும், காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்து பேசியதாக குஜராத் தேர்தல் பிரசாரத்தில் மோடி குற்றம் சாட்டியதற்கு எந்த நம்பகத்தகுந்த ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகம் பதிலளித்துள்ளது. #Modi #PMO #RTI
    புதுடெல்லி:

    கடந்தாண்டு டிசம்பர் மாதம் 10-ம் தேதி குஜராத் சட்டசபை தேர்தலை ஒட்டி பலன்புர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயரின் டெல்லி இல்லத்தில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி, அந்நாட்டு தூதரக அதிகாரிகள் உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குஜராத் தேர்தல் தொடர்பாக மூன்று மணிநேரம் ஆலோசணை நடத்தியதாக குற்றம் சாட்டினார்.

    மோடியின் குற்றச்சாட்டு அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் காங்கிரஸ் உடன் கைகோர்த்து செல்வாக்கை காட்ட நினைக்கிறது என பாஜகவின் மற்ற தலைவர்களும் மோடியை தொடர்ந்து பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

    இந்நிலையில், டிசம்பர் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சாகெத் கோகலே என்பவர் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றை அனுப்பினார். அதில், மோடியின் குற்றச்சாட்டு எதனை அடிப்படையாக கொண்டது. அதற்கான ஆதாரம் என்ன? என்ற கேள்விக்கு பதில் கேட்டிருந்தார்.




    மனு நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த நிலையில், கோகலே மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவுக்கு பலனாக 30 நாட்களில் பிரதமர் அலுவலகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், கடந்த 7-ம் தேதி பிரதமர் அலுலவகம் தனது பதிலை கோகலேவுக்கு அனுப்பியுள்ளது.

    அதில், அந்த தகவல்கள் (மோடியின் குற்றச்சாட்டு) இந்த அலுவலகத்தில் எந்த பிரிவிலும் இல்லை. பல்வேறு தரப்பில் இருந்து வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு பிரதமர் மோடி பேசியிருக்கலாம் என பதிலளிக்கப்பட்டுள்ளது. 

    அதாவது, காங்கிரஸ் தலைவர்களும் பாகிஸ்தான் பிரதிநிதிகளும் சந்தித்ததற்கு எந்த நம்பகத்தகுந்த ஆவணங்களும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
    கோகினூர் வைரம், திப்பு சுல்தான் போர்வாள் உள்ளிட்ட இந்தியாவின் வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர அரசு செய்தது என்ன? என பிரதமர் அலுவலகத்துக்கு தகவல் ஆணையர் கேள்வி எழுப்பியுள்ளார். #CIC #PMO #MEA
    புதுடெல்லி:

    கோகினூர் வைரம், மகாராஜா ரஞ்சித் சிங்கின் தங்க சிம்மாசனம், ஷாஜகானின் மதுக்கோப்பை, திப்பு சுல்தானின் போர்வாள், புத்தர் பாதம், சரஸ்வதி மார்பிள் சிலை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பொக்கிஷங்கள் முந்தைய காலங்களில் பல்வேறு படையெடுப்பின் கீழ் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

    இதற்கிடையே, இந்தியாவின் இந்த பொக்கிஷங்கள் எப்போது இங்கு கொண்டுவரப்படும் என தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெளியுறவு அமைச்சகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த மனுவை பரிசீலித்த அதிகாரிகள் தொல்லியல் துறையை நாடுமாறு பதிலளித்துள்ளனர்.



    இதையடுத்து, தொல்லியல் துறையிடம் கேட்டதற்கு, வெளிநாடுகளில் இருந்து பொருள்களை கொண்டு வருவது நாங்கள் அல்ல. இருக்கும் பொருள்களை அப்படியே பார்த்துக் கொள்வதுதான் எங்கள் வேலை என தெரிவித்தனர்.  இதனை அடுத்து மனுதாரர் தலைமை தகவல் ஆணையரிடம் மேல்முறையீடு செய்துள்ளார்.

    மேல்முறையீட்டு மனுவை விசாரித்துள்ள தலைமை தகவல் ஆணையர் ஆசார்யுலு இதுதொடர்பாக, வரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது தொடர்பாக பிரதமர் அலுவலகம், கலாச்சார துறை அமைச்சகம் பதிலளிக்க அவர் அறிவுறுத்தியுள்ளார். #CIC #PMO #MEA
    உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மீண்டும் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கொலிஜியம் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. #KMJoseph #Collegium
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    இது தொடர்பாக முடிவெடுக்க தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலிஜியம் கடந்த 2-ம் தேதி கூடியது. கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும், கே.எம் ஜோசப் பரிந்துரை தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.



    கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இன்று கொலிஜியம் கூட்டம் நடந்தது. மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் ஜோசப் பெயரை மீண்டும் பரிந்துரை செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

    2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

    ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் கேரளாவை சேர்ந்த நீதிபதி ஏற்கனவே இருப்பதால், ஜோசப் பெயர் ஏற்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. #KMJoseph
    சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக கே.எம்.ஜோசப்பை நியமிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உடனே கொலிஜியத்தை கூட்ட வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் எழுதியுள்ளார். #KMJoseph
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

    இதனை அடுத்து, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டது.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

    கடந்த 2-ம் தேதி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கூடிய கொலிஜியம் கூட்டத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பது ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், கே.எம். ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதற்காக கொலிஜியத்தை உடனே கூட்ட வேண்டும் என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அடுத்த மாதம் 22-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நீதிபதி செல்லமேஸ்வர் தலைமை நீதிபதிக்கு எதிராக புகார் கூறிய நீதிபதிகளில் ஒருவராவார்.

    நீதிபதி கே.எம் ஜோசப்

    2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

    கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. #KMJoseph 
    ×