என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அணு ஆயுதம்"

    • ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டனர்.
    • அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் டிரம்ப்.

    தெஹ்ரான்:

    ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டனர். அப்போது, அமெரிக்காவும், ஈரானும் அணு ஆயுத பயன்பாடு பற்றி அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்துள்ளன.

    ஓமனின் வெளியுறவுத்துறை மந்திரி பத்ர பின் ஹமத் அல்-புசைதி என்பவரை தலைமை மத்தியஸ்தராக கொண்டு ஈரானிய வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இது ஆக்கப்பூர்வ முறையில் மற்றும் பரஸ்பர மதிப்பு அடிப்படையில் நடந்துள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

    முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், அணு ஆயுதம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று ஏற்படாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், அணு ஆயுத பயன்பாடு குறித்த அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரோம் நகரில் இந்த வார இறுதியில் நடைபெறும் என ஈரானிய அரசு டிவி தெரிவித்துள்ளது.

    • அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது.
    • அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    அணுஆயுத உற்பத்தியில் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை அந்நாடு மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்க புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

    இது தொடர்பாக அவர் ஈரானுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் இதனை ஈரான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் ஈரான் அணு ஆயுதம் தொடர்பான ஐ.நா. சபையின் உடன்பாட்டுக்கு வராவிட்டால் ஈரான் மீது பாதுகாப்பு சார்ந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், ஈரான் மீது அமெரிக்கா குண்டுகளை வீசும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

    மேலும் அந்நாட்டின் மீது 2- வது கட்ட வரி விதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

    டிரம்பின் இந்த பகிரங்க மிரட்டல் ஈரானை கொதிப்படைய செய்துள்ளது. அவரது இந்த மிரட்டலுக்கு ஈரான் பணியவில்லை.

    அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கும் மறுத்து விட்டது. மாறாக அமெரிக்காவுக்கு எதிராக அதி நவீன ஆயுதங்களுடன் ஏவுகணை தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள டெஹ்ரான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

    ஈரான், நாடு முழுவதும் தனது நிலத்தடி ஏவுகணை ஆயுதக்கிடங்கை தயார் செய்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. கெய்பர், ஹேகான், ஹக் காசெம், செஜ்ஜில், எமாத் உள்ளிட்ட அதி நவீன ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்களை ஈரான் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

    அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி கொடுக்க தயாராகி வருவது உலக நாடுகள் மத்தியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

    • நாசகார ஆயுதம் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாக உக்ரைன் மீது ரஷியா குற்றம்சாட்டியது.
    • அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆய்வு செய்தார்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி 8 மாதங்கள் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷியா, தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை.

    இதற்கிடையே உக்ரைன் அணுமின் நிலையங்களில் அணுக் கழிவுகளை பயன்படுத்தி நாசகார ஆயுதங்களை அந்த நாடு தயாரித்து வருவதாகவும், அதன் மூலம் தாக்குதலை நடத்த திட்டமிடுவதாகவும் ரஷியா குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டை உக்ரைன் மறுத்துள்ளது. அத்துடன் ரஷியாதான் அப்படிப்பட்ட நாசகாச ஆயுதங்களை தயாரிப்பதாக எதிர்குற்றச்சாட்டை முன்வைத்தது.

    இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் உக்ரைன் படைகள் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், அதற்கு தக்க பதிலடி தரும் வகையில் ரஷிய சிறப்பு படைகள் பயிற்சியை தொடங்கின. நவீன ஏவுகணைகளை செலுத்தி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. அணுசக்தி திறன் கொண்ட படைகளின் இந்த ஒத்திகையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காணொலி காட்சி வாயிலாக ஆய்வு செய்தார்.

    தரை, கடல் மற்றும் வான் பாதுகாப்பு மற்றும் தடுப்புப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் கிரெம்ளின் செய்தி வெளியிட்டுள்ளது.

    ஆர்க்டிக் பகுதியில் உள்ள பேரண்ட்ஸ் கடலில் இருந்து சினேவா பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்த, நீர்மூழ்கிக் கப்பல் குழு தயாராகும் காட்சிகளை ரஷிய அரசு ஊடகம் வெளியிட்டது. கிழக்கு பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் இருந்து ஏவுகணைகளை சோதனை செய்வதும் இந்த பயிற்சியில் அடங்கும். ரஷிய படைகளின் இந்த ஒத்திகையின்மூலம், உக்ரைன் போர் அணு ஆயுத மோதலாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    • ரஷியாவின் இந்த நடவடிக்கையானது உள்நாட்டின் ஸ்திரமின்மையை நோக்கிய நகர்வு என உக்ரைன் கருத்து
    • பெலாரஸ் அரசு, ரஷிய படைகளை தனது நாட்டில் இருந்து உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க அனுமதி அளித்தது

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. உக்ரைன் முக்கிய பகுதிகளை கைப்பற்றி ரஷியா, தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்துகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. நட்பு நாடுகளிடம் இருந்து கிடைக்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம் சண்டையிட்டு வருவதால் போர் நீடிக்கிறது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், நட்பு நாடான பெலாரசில் முக்கியமான அணு ஆயுதங்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நானும் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவும் ஒப்புக்கொண்டோம் என்றும் புதின் தெரிவித்தார்.

    இதையடுத்து, பெலாரசை அணு ஆயுதப் பணயக் கைதியாக ரஷியா வைத்திருப்பதாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் டேனிலோவ் குற்றம்சாட்டி உள்ளார். ரஷியாவின் இந்த நடவடிக்கையானது உள்நாட்டின் ஸ்திரமின்மையை நோக்கிய ஒரு நகர்வு என்றும், புதினின் அறிவிப்பு பெலாரஸ் மக்களிடையே ரஷியா மீதான எதிர்மறையான கருத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் அவர் கூறினார்.

    2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெலாரஸ் அரசு, ரஷிய படைகளை தனது நாட்டில் இருந்து உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்க அனுமதி அளித்தது குறிப்பிடத்தகக்து. 

    • அணு ஆயுதம் குறைப்பு காரணமாக அமெரிக்கா- ரஷியா இடையே START ஒப்பந்தம்
    • உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி வழங்குவதால் ரஷியா ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்தது

    அணு ஆயுதங்களை குறைப்பதற்காக New START (Strategic Arms Reduction Treaty) அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் அமெரிக்கா- ரஷியா இடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அணு ஆயுதம் எங்கு உள்ளது. எங்கிருந்து ஏவப்படுகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை போன்ற தரவுகளை பகிர்வது. அணு ஆயுதம் எண்ணிக்கை அதிரிகரிப்பதை தடுப்பது. இரு நாடுகளும் தங்களுக்குள் தரவுகளை பகிர்ந்து கொண்டிருந்தன.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து அமெரிக்கா- ரஷியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்து (குறிப்பாக நேட்டோ நாடுகள்) அமெரிக்கா பல்வேறு தடைகளை ரஷியா மீது சுமத்தியது.

    மேலும், அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் வழங்கியது. இதனால் உக்ரைன் மீதான போரை முழுமையான வெற்றி என்று ரஷியா கூறமுடியவில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியாவின் முக்கிய நோக்கம் முறியடிக்கப்பட்டுள்ளது என நேட்டோ நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா அறிவித்ததும் புதின் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

    இதனால் ஒப்பந்தத்தை ரஷியா இடைநிறுத்தியது. இதன்மூலம் ரஷியா அணு ஆயுத தரவுகளை அமெரிக்காவுக்கு கொடுக்க வேண்டியதில்லை எனக் தெரிவித்தது.

    இந்த நிலையில், அமெரிக்கா பதிலடி கொடுக்கும் வகையில் நாங்களும் அணு ஆயுதம் குறித்த தரவுகளை கொடுப்பதில்லை என முடிவு செய்துள்ளது.

    இதுகுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியதாவது:-

    அமெரிக்கா அணு ஆயுதம் குறித்த தகவல், இருக்கும் இடம் குறித்து எந்த தகவலையும் தெரிவிக்காது. ஆனால், கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த தகவல்களை தொடர்ந்து ரஷியாவுக்கு தகவல் கொடுப்போம்.

    அமெரிக்க பிராந்தியத்தில் ரஷியாவின் ஆய்வுக்குழு, அவர்களுக்கான விசா வழங்கும் முறை, START தொடர்பாக ஆய்வு நடத்துவது, விமானப்படையினர் ஆகியோருக்கும் தடைவிதிக்கப்படுகிறது. ரஷியா ஆய்வு விமானங்களுக்கான டிப்ளோமெட்டிக் அனுமதிக்கும் தடைவிதிக்கப்படுகிறது.

    கண்டம் விட்டு கண்டம் பாயும், நீர் மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் குறித்த டெலிமெட்ரிக் தகவல்களும் வழங்கப்படாது. இது ஏவுகணை பரிசோதனை செய்யப்படும் விமானத்தில் இருந்து கிடைக்கும் தகவல். இரு நாடுகளும் இந்தத் தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தன.

    START ஒப்பந்தத்தை ரஷியா மீறியதற்காக பதில் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷியா ஒப்பந்தத்தை மீறியது சட்டப்பூர்வமாக செல்லாது. ரஷியா இந்த ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள சம்மதம் தெரிவித்தால், நாங்களும் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளது.

    ரஷியாவும், அமெரிக்காவும் உலகின் 90 சதவீத அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துகின்றன. START ஒப்பந்தம் அணு ஆயுதங்களை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 2010-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2026-ல் காலாவதியாகிறது. இந்த ஓப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்கா, ரஷியா 1550 அணு ஆயுதங்கள், நிலம் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து தாக்கும் ஏவுகணைகள் 700-க்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பதுதான்.

    • அமேரிக்கா அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார்.
    • அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று ஐன்ஸ்டீன் எண்ணினார்.

    அணு ஆயுதங்களின் திறன் குறித்து 1939ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஃபிராங்களின் டி ரூஸ்வெல்ட்டிற்கு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதத்தின் நகல் இந்திய மதிப்பில் சுமார் 32.7 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

    இந்த கடிதம் அமெரிக்காவின் அணு ஆயுத உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல மனித உயிர்களை பறிபோக காரணமாக இருந்ததால் அதற்காக பின்னாட்களில் ஐன்ஸ்டீன் மனம் வருந்தினார்.

    அமெரிக்க அணுசக்தி திட்டத்தை முன்னெடுத்ததில் ஐன்ஸ்டீன் முக்கிய பங்கு வகித்தார். ஆனால் 1945 இல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் அணுகுண்டு வீசியதால் ஏற்பட்ட பேரழிவை பார்த்து ஐன்ஸ்டீன் வேதனை அடைந்தார். அணு ஆயுதங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டதை தன வாழ்வில் தான் செய்த மாபெரும் தவறு என்று அவர் எண்ணினார்.

    நியூயார்க்கில் உள்ள பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நூலகத்தில் ஐன்ஸ்டீனின் அசல் கடிதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐன்ஸ்டீனின் கடிதங்கள் ஏலம் விடுவது ஒன்றும் இது முதன் முறையல்ல. ஏற்கனவே ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் கையெழுத்துப் பிரதி ரூ.96.77 கோடிக்கும் அவர் எழுதிய கடவுள் கடிதம் ரூ.20 கோடிக்கும் ஏலம் போனது.

    • கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மேற்கொண்டது
    • தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வருகிறன.

    கொரிய சாம்ராஜ்யம் 

    தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரிய தீபகற்பத்தில் ஒரே நாடக இருந்த கொரிய சாம்ராஜ்யம் 1910 முதல் 1945 வரை ஜப்பானின் காலனியாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜப்பான் சரணடைந்த பின்னர் அதே வருடத்தில் சுதந்திரம் பெற்ற கொரியா இரண்டாகப் பிரிந்தது.

    வட கொரியா 

    வரலாற்றின் போக்கில் இரண்டு நாடுகளுக்குமிடையேயான பகைமை வளர்ந்து வந்தது. உலகின் இருந்து தன்னை முற்றிலுமாக துண்டித்து வாழும் வட கொரியா சமீப காலங்களாக ரஷியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தென் கொரியவுக்கு குப்பை பலூன்களை அனுப்புவது, எல்லையில் ராணுவ சோதனைகளைச் செய்வது என உலக நாடுகளையும் பயத்திலேயே வட கொரியா வைத்துள்ளது.

     

    அணு ஆயுதம் 

    கடந்த 2006 ஆம் ஆண்டு, முதல் அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா அதுமுதல் உலகின் அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளுள் முக்கியமானதாக மாறியது, இந்தியா உள்ளிட்ட மற்றைய அணு ஆயுத நாடுகள் மேற்கு நாடுகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் நிலையில் வட கொரியா சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதால் எப்போது என்ன செய்யும் என்று யூகிக்க முடியாமல் மேற்கு நாடுகள் குழம்பிப்போயுள்ளது.

     

    கிம் ஜாங் உன் 

    கடந்த 2011 ஆம் ஆண்டு தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அதிகாரத்துக்கு வந்த கிம் ஜாங் உன் [40 வயது] மேற்குலகுக்குக் கடந்த காலங்களிலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தாலும்,தற்போதைய எச்சரிக்கை நவம்பர் 5 வர உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

     

    எச்சரிக்கை

    நேற்றைய தினம் [ திங்கள்கிழமை] 'கிம் ஜாங் உன்' பல்கலைக்கழகத்தில் வைத்து நடந்த அரசு நிகழ்ச்சியில் உரையாற்றிய கிம் ஜாங் உன், நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது. தாக்குதல் என்று நான் சொன்னதில் அணு ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த எச்சரிக்கையானது தென் கொரிய ராணுவம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வரும் சூழலுக்கிடையில் கிம் ஜாங் உன் தரப்பில் இருந்து வந்துள்ளதாகவும் பார்க்கவேண்டியுள்ளது. 

    • அமெரிக்காவுக்கு வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்து வருகிறது
    • இந்திய நேரப்படி இன்று மாலை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குகிறது

    உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில் தென் கொரியாவையும் அதற்கு உதவும் அமெரிக்காவையும் பரம எதிரியாக கருதும் வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை செய்து சர்வதேச அரங்கில் பீதியை கிளப்பியுள்ளது.

    சமீப காலங்களாகவே அமெரிக்காவுக்கு தொடர்ந்து அணு ஆயுத மிரட்டல் விடுத்துவரும் வட கொரியா எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ரஷியாவுடன் நட்பு பாராட்டி வருகிறது. உக்ரைன் போர் சூழலில் ரஷியாவுக்கு 12 ஆயிரம் வரையிலான வட கொரிய ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். தென் கொரியாவும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னதாக வட கொரிய ராணுவம் குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை கிழக்கு கடல் நோக்கி ஏவி சோதனை செய்துள்ளது. இதை தென் கொரியாவும், ஜப்பானும் உறுதிப்படுத்தியுள்ளது.

     

    அந்த ஏவுகணைகள் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. சர்வதேச அரசியல் களம் அமெரிக்க தேர்தலை நோக்கி திரும்பியிருக்க வடகொரியாவின் இந்த சோதனை உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    • போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது
    • ஜோ பைடன் பதவியை விட்டு செல்வதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கலாம்

    உக்ரைன் போர்  

    உக்ரைன் மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் இணைய முயன்றால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா கடந்த 2022 பிப்ரவரியில் போரை தொடங்கியது. 1000 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் போரில் இரண்டு பக்கமும் இழப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கினார்.

     

    இதனால் உக்ரைன் முதல் முறையாக கடந்த மாதம் ரஷியா மீது அந்த பாலிஸ்டிக் மிசைல்களை பயன்படுத்தியது. அவற்றை தாக்கி அழித்த ரஷியா உக்ரைன் மீது தாங்கள் கண்டுபிடித்த புதிய ரக பாலிஸ்டிக் மிசலை ஏவியது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யும் அமெரிக்கா அடுத்ததாக அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற செய்திகள் பரவின.

     

     புதின் மிரட்டல் 

    ரஷிய அதிபர் புதின், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு எந்த அணு ஆயுதம் கொண்ட நாடு உதவினாலும் தங்களின் அணு ஆயுதங்களை அவர்கள் மீது பயன்படுத்தலாம் என ரஷியவின் அணு ஆயுத விதியை திருத்தி எழுதினார். இதன் பிறகே அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன.

    சோவியத் யூனியன்

    கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்த சமயத்தில் ரஷியா உக்ரைன் தனித்தனி நாடானது. அப்போது சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களில் ஒரு பங்கு புதிதாக உருவான உக்ரைன் நாட்டுக்கு கிடைத்தது.

    ஆனால்  1994 புடாபெஸ்ட் உடன்படிக்கையின் படி உக்ரைன் தனது அணு ஆயுதங்களைத் துறந்தது. இந்நிலையில் உக்ரைன் துறந்த அந்த அணு ஆயுதங்களை மீண்டும் இந்த போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது.

     

    ஜேக் சல்லிவன்

    இது தொடர்பாக நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஏபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சில மேற்கத்திய அதிகாரிகள் ஜோ பைடன் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க பரிந்துரைத்ததாகக் கூறுகின்றனர்.

     

    ஆனால் அது பரிசீலனையில் இல்லை, போரில் உக்ரைனின் இயல்பான திறன்களை அதிகரிப்பதே நாங்கள் செய்வது, இதனால் அவர்கள் திறம்பட தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும, ஆனால் அவர்களுக்கு அணுசக்தி திறன் வழங்கப்படாது என்று தெரிவித்தார்.  நேட்டோ நாடுகளுடன் தங்களை இணைத்துக்கொள்வதே போருக்கு தீர்வு என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுள்ளார்.
    • ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது.

    அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டிரம்ப் பதவியேற்றது முதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலையை  ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தங்கள் நாட்டின் அணு ஆயுத உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அமெரிக்காவிடம் தனது இருப்பை மீண்டும் நிரூபித்துள்ளார்.

    கிம் ஜாங் உன் அணு ஆயுத கூடத்தில் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டின் அணுசக்தி போர்த் திறனை குறித்து உலக நாடுகளைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. முன்னதாக கடந்த 2019 இல் அதிபராக இருந்த சமயத்தில் டிரம்ப் வடகொரியா சென்று கிம் ஜாங் உன் - ஐ சந்தித்தார். வடகொரியாவுக்கு ஒரு அமெரிக்க அதிபர் செல்வது அதுவே முதல் முறை.

    ஆனால் அதன்பின் அமைந்த ஜோ பைடன் அரசுடன் வடகொரியா நல்லுறவைப் பேணவில்லை. மாறாக மேற்கு நாடுகளைப் பகைத்து உக்ரைனுடன் போரிடும் ரஷியாவுடன் வட கொரியா கைகோர்த்தது. ரஷியா மற்றும் வடகொரியா இடையில் ராணுவ ஒத்துழைப்பு உடன்படிக்கை கையெழுத்தானது. உக்ரைன் உடனான போரில் வடகொரிய வீரர்களை ரஷியா பயன்படுத்தியது.

    இதற்கிடையே அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து வட கொரியா தனது திறனை பறைசாற்றி வருகிறது. கடந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்ற சமயத்திலும் வடகொரியா ஏவுகணை சோதனை செய்தது.

    மேலும் கடந்த செப்டம்பரில் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி மேற்கு நாடுகளை மிரள வைத்தது. இந்நிலையில் நேற்று அணு ஆயுத உற்பத்தி மையத்தில் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அணு ஆயுத உற்பத்திக்குத் தேவையான யுரேனியம் செறிவூட்டலை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று நாட்டின் அணுசக்தி கேடயத்தை வலுப்படுத்த இந்த ஆண்டு உற்பத்தி இலக்கையும் தாண்டி தயாரிக்க கிம் உத்தரவிட்டுளளார் என்று கூறப்படுகிறது.

     

     

    எதிரி நாடான தென் கொரியா மீது எந்நேரமும் வடகொரியா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிபர் பதவியேற்ற பின் ஒரு பேட்டியில், கிம் ஜாங் உன் புத்திசாலி என்றும் வடகொரியாவுடன் நல்லுறவை பேண விரும்புவதாக டிரம்ப் பேசியிருந்தார்.

    தென் கொரியாவின் அனுமானப்படி 2018 ஆம் ஆண்டிலேயே வட கொரியா 20 முதல் 60 அணு ஆயுதங்களை தயாரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. ஆனால் வடகொரியாவிடம் 100 க்கும் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்ற வல்லுநர்கள் சந்தேகிக்கின்றனர். 

    • 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும்
    • இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.

    வட கொரியா தனது முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது கட்டுமானத்தில் உள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல் நீருக்கடியில் இருந்து ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது.

    வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், கப்பல்கட்டும் தளங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள கடற்படை கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திட்டங்களை நேரில் ஆய்வு செய்த படங்களை அந்நாட்டு அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

    அப்போது பேசிய அவர், கடற்படை சக்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். மேலும், கடலால் சூழப்பட்ட நாட்டின் இறையாண்மைக்கு, கடற்படை சக்தி மற்றும் அணு ஆயுதங்கள் மிக முக்கியமானவை என்றும் குறிப்பிட்டார்.

    இந்த நீர்மூழ்கிக் கப்பல் 6000 முதல் 7000 டன் எடையுள்ளதாகவும், சுமார் 10 ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த செய்தி தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

    2021 ஆம் ஆண்டு நடந்த ஒரு ராணுவ மாநாட்டின் போது அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதாக கிம் ஜாங் உன் அறிவித்தார். இப்போது இந்தத் திட்டம் உறுதியான வடிவம் பெறுவதால், வட கொரியாவின் ராணுவத் திறன்களில் பெரிய மாற்றம் ஏற்படும்.

     

    பிற நாடுகளிடம் இருந்து துண்டிக்கப்பட்ட போதும் இத்தனை நவீன தொழில்நுட்பங்களை வட கொரியா எங்கிருந்து பெறுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பலர் ரஷியாவின் திசையை நோக்கி கை காட்டுகின்றனர். 

    யுரேனிய உலோகத்தை கொண்டு அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்பதால், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
    நியூயார்க்:

    கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் ஒப்பந்தத்தின்படி ஈரான் 300 கிலோ யுன்ரேனியத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஈரான் 3809 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை குற்றம்சாட்டியுள்ளது.

    இது ஈரானுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட 13 மடங்கு அதிக யுரேனியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோக உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது. யுரேனிய உலோகத்தை கொண்டு அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்பதால், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. 
    ×