என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டை இலை சின்னம்"

    • எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.
    • புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உள்கட்சி மோதல் நீடித்துக்கொண்டே செல்கிறது.

    அ.தி.மு.க.வில் தலைமைப் பதவியை யார் வகிப்பது? என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியை வழிநடத்தி வருகிறார். இரட்டை இலை சின்னமும் அவரிடமே உள்ளது.

    அ.தி.மு.க.வில் சட்ட விதிகளை திருத்தி எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஏற்கனவே தொடரப்பட்ட பல வழக்குகள் தள்ளுபடியாகி உள்ள நிலையில் சிவில் நீதிமன்றத்தில் மட்டும் அது நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனை குறிப்பிட்டு சிவில் வழக்கு விசாரணை முடியும் வரையில் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.

    இதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்த நிலையில் அதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை முடித்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷனர் விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ள ஐகோர்ட்டு இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதன் மூலம் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரிடம் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விரைவில் அழைப்பாணை அனுப்புவதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் ஏப்ரல் 28ம் தேதி தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து புகார்தாரர்களும் ஏப்ரல் 28ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆஜராக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • தனி நீதிபதி எங்களுக்கு சாதகமான தீர்ப்பை சொன்னார்.
    • டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அ.தி.மு.க. போட்டியிட உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. போட்டியிட்டது.

    இந்த நிலையில் தனது பலத்தை காட்டும் விதத்தில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ,பன்னீர்செல்வம் அதிரடி காட்டி உள்ளார். அ.தி.மு.க. சார்பில் நாங்களே போட்டியிடுவோம் என்றும் இரட்டை இலை சின்னத்துக்காக கையெழுத்திடும் உரிமை எனக்கே உள்ளது என்றும் அவர் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ளோம் என்கிற நல்ல செய்தியை தற்போது உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறோம். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தற்போது நானே தொடர்கிறேன்.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் 5 ஆண்டுக்கு உள்ளன. இந்த அங்கீகாரத்தை 1½ கோடி தொண்டர்கள் எனக்கு வழங்கி உள்ளனர். எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முழு உரிமையும் எங்களுக்கு உள்ளது.

    கே:- தேர்தலில் போட்டியிட ஏ, பி, பார்மில் நீங்களும் கையெழுத்து போட வேண்டும். அவரும் (ஈ.பி.எஸ்.) கையெழுத்து போட வேண்டும் என்கிற நிலை தானே உள்ளது?

    ப:- இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி ஏ மற்றும் பி பார்மில் நான் கையெழுத்திடுவேன். அவர் கையெழுத்திடுவாரா? மாட்டாரா? என்பது அவருடைய விருப்பம்.

    கே:- அவர்களும் போட்டியிட்டால் சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமே?

    ப:- உங்கள் அனைவருக்கும் தெரியும், இந்த பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் வழக்காக இருந்துகொண்டு இருக்கிறது. தீர்ப்பு இன்னும் வராத சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் நடந்த இந்திய தேர்தல் ஆணைய கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நாங்கள் தான் கலந்துகொண்டுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கே:-உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலை ஏற்பட்டு சுயேட்சையாக போட்டியிடக்கூடிய நிலை உருவானதே?

    ப:- உள்ளாட்சி தேர்தலின் போது தான் ஒருங்கிணைப்பாளராகவும், அவர் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தோம். அந்த சூழலில் தேர்தல் நடைபெற்றது. தலைமை கழக நிர்வாகி ஏ, பி, பார்மில் கையெழுத்திடுவதற்காக என்னிடம் வந்து கேட்டார். நான் அதில் கையெழுத்து போட்டு கொடுத்து அவரிடம் அனுப்பினேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதில் கையெழுத்திடவில்லை.

    அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு இல்லாமல் கழக தொண்டர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இப்படி இரட்டை இலை சின்னம் முடங்கி இருந்ததற்கு நான் காரணம் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அதேநேரத்தில் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் பொது சின்னத்தில் (சுயேட்சையாக) போட்டியிடவும் தயாராக உள்ளோம்.

    கே:- இப்போது அது தானே நடக்க வாய்ப்பு உள்ளது?

    ப:- உங்களுக்கு நன்றாகவே தெரியும். 23-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் சட்ட விரோதமாக ஒருமுகமாகவே நடத்தப்பட்டது. அதில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டோம். இதனை அனைத்து மக்களும் அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்களும் நன்கு அறிவார்கள்.

    பொதுக்குழுவை கூட்டுவதற்கு எனது இசைவு தேவை. எனது இசைவு இல்லாமலேயே 11-ந்தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அது சட்டவிரோதமான பொதுக்குழு என்பதால் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதற்காகத்தான் தர்மயுத்தத்தையும் சட்ட போராட்டத்தையும் நடத்தி வருகிறோம்.

    கே:- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற நிலைப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள்? தற்போது தனித்தனியாக அறிவிப்பு கொடுப்பதன் மூலமாக கட்சியில் மேலும் பிளவு போன்ற நிலைதானே தொடரும்?

    ப:- எங்களை பொறுத்தவரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மாவும் 50 ஆண்டு காலம் தொண்டர்களின் இயக்கமாக இந்த இயக்கத்தை உருவாக்கி உள்ளார்கள்.

    இந்த இயக்கம் கட்டுக்கோப்பாக ஒருங்கிணைந்த இயக்கமாக இருக்க வேண்டும் என்றுதான் எப்போதும் நினைக்கிறோம் என்றைக்கும் இப்படித்தான் இருப்போம்.

    இந்த நிமிடம் வரையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை 1½ கோடி தொண்டர்களின் கோரிக்கையும் அதுதான்.

    கே:- அ.தி.மு.க.வில் நீடிக்கும் இப்பிரச்சினை இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்தாதா?

    ப:- ஆட்சி பொறுப்பேற்ற தி.மு.க. ஒன்றே முக்கால் வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழலிலேயே உள்ளது. எனவே உறுதியாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி அடையும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கே:- தற்போதைய சூழலில் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான நிலை ஏற்பட்டுவிடாதா?

    ப:- இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு எந்த காலத்திலும் பன்னீர் செல்வம் காரணமாக இருக்க மாட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கே:- 23-ந்தேதி கூட்டப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா?

    ப:- அந்த கூட்டம் திட்டமிட்டபடி உறுதியாக நடைபெறும். அதிலும் நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு நல்லதொரு முடிவை எடுப்போம்.

    கே:- நீங்களும் போட்டியிட போவதாக கூறுகிறீர்கள்? பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவளிப்போம் என்கிறீர்கள்? உங்கள் முடிவே குழப்பமாக உள்ளதே?

    ப:-இதுபோன்ற குழப்பத்தை உருவாக்கியது யார்? "நாங்கள் அல்ல. பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அனைத்து சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாகும்.

    இந்த குழப்பத்தை தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எந்த நோக்கத்திற்காக அ.தி.மு.க.வை உருவாக்கினார்களோ அதை நோக்கித்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

    கே:- நீங்கள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறீர்களா?

    ப:- நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

    கே:- ஆனால் அவர்கள் உங்களை சேர்க்க தயாராக இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்களே?

    ப:- நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அதுதான் இப்போதும் எனது பதிவாகும்.

    கே:- தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு நீங்கள் அவர்களிடம் ஏதும் பேசினீர்களா? இல்லை, அவர்கள் ஏதேனும் பேசினார்களா?

    ப:- இதுவரை யாரும் பேசவில்லை.

    கே:- வேட்பாளரை எப்போது எப்படி முடிவு செய்வீர்கள்?

    ப:- அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து மாவட்ட செயலாளர்கள், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்போம்.

    கே:- இடைத்தேர்தலை காரணமாக வைத்து பிரிந்துள்ள அணிகளை ஒன்றிணைக்க சூழல் உள்ளதா?

    ப:- அதுபோன்ற சூழல் இருந்தால் நாங்கள் வரவேற்போம்.

    கே:- அதற்கான முன்னெடுப்பை நீங்கள் எடுப்பீர்களா?

    ப:- அனைவரும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்லபடியாக அது முடியும் என்று நம்புகிறோம். தோழமை கட்சிகள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதற்காக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    கே:- அவர்கள் தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தரப்பில் அதுபோன்று வேட்பாளரை நிறுத்தினால் நீங்கள் ஆதரிப்பீர்களா?

    ப:- நாங்கள் வேட்பாளரை நிறுத்தப் போகிறோம்.

    கே:- உச்சநீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்புகிறீர்களா?

    ப:- நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறோம்.

    கே:- சட்டமன்ற துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே?

    ப:- இதற்கு சட்டப் பேரவைத் தலைவர் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளின் படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி இல்லை என்று அவரே தெளிவுபடுத்திக்கொள்ள சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு மட்டுமே உள்ளது என்று அவர் கூறி உள்ளார்.

    சட்டப்பேரவை தலைவரின் சுய உரிமை ஆகும்.

    கே:- தேர்தல் ஆணையத்தில் தற்போது வரை எந்த ரெக்கார்டு உள்ளது?

    ப:- தற்போது வரையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்கிற ரெக்கார்டு தான் உள்ளது.

    கே:- எடப்பாடி பழனிசாமி தரப்பில் கொடுத்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளதே?

    ப:- தனி நீதிபதி எங்களுக்கு சாதகமான தீர்ப்பை சொன்னார். டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே சென்று அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இதை எதிர்த்து தான் உச்சநீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். அதில் தான் வாதங்கள், பிரதிவாதங்கள் எல்லாம் முடிவடைந்து தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளோம்.

    கே:- நீங்கள் இப்படி தனித்தனியாக போட்டியிடுவது ஆளும் கட்சிக்குத் தானே சாதகமாக அமையும்?

    ப:- இந்த கேள்வி கேட்கப்பட வேண்டிய இடம் இதுவல்ல. நாங்கள் ஒன்றுபட வேண்டும் என்று தான் கூறிக்கொண்டிருக்கிறோம். இதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று சொல்பவர்களிடம் தான் இதனை நீங்கள் கேட்க வேண்டும்.

    கே:- இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றிபெறும் என்கிற பார்முலா உள்ளதே?

    ப:- இந்த தேர்தலில் அந்த பார்முலாவை முறியடித்து காட்டுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.
    • 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நேற்று அதிரடியாக அறிவிக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை எதிர்கொள்ள இன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை அருகே தேர்தல் பணிமனை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பூஜையை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இங்கு நாங்கள் அமைதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வோம். அதன் முன்னோட்டமாக ஏற்கனவே ஊழியர் கூட்டம் நடத்தப்பட்டது. இன்று தேர்தல் பணிமனை அமைப்பதற்கு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

    கூட்டணி கட்சிகளுடன் கலந்துபேசி போட்டியிட விரும்புவர்களிடமிருந்து விருப்பமனு பெற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி வேட்பாளரை அறிவிக்க உள்ளார். மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்அ.தி.மு.க. உறுதியாக வெற்றி பெறும் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம். 1972 திண்டுக்கல் தேர்தல்போல் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையாக அமையும். தி.மு.க. தேர்தல் பணி குழுவில் அமைச்சர்கள் இடம் பெற்றிருப்பது வழக்கம் தான். நாங்களும் பணிகுழுஅமைத்து தேர்தல் பணியை துவக்குவோம். மக்கள் சரியாக இருக்கிறார்கள். மனம் மாறி இருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பார்கள்.

    இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும். அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலிமையுடன் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.

    பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு செங்கோட்டையன் கூறும்போது, ஓ.பன்னீர்செல்வம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று கூறியிருப்பதற்கும் இரட்டை இலை சின்னம் தனக்குதான், இ.பி.எஸ். அணியுடன் பேச தயார் என்று அறிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்து போட்டியிட வாய்ப்புள்ளதாக பாஜக துணைத் தலைவர் கே. பி. ராமலிங்கம் கூறியதற்கு அவர் மீண்டும் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

    • ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.
    • எப்போது பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

    அ.தி.மு.க.வை மீண்டும் தனித்தன்மையோடு கொண்டு வர முடியும் என்று உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே அ.தி.மு.க. ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். ஏன் வாய்ப்பு இருக்கிறதா? என்று நினைக்கிறீர்கள். நிச்சயம் ஒன்றிணையும்.

    என்னை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் ஊடகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

    ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று கேட்கிறீர்கள். அதனை நான் எப்படி சொல்ல முடியும். அது மக்கள் கையில் தான் இருக்கிறது.

    நான் ஜெயலலிதாவின் பிரசாரங்களுக்கு சென்றிருக்கிறேன். ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியுமோ அதனை மட்டும் தேர்தல் பிரசாரத்தில் சொல்வோம். ஏனென்றால் திரும்பவும் மக்களை நாங்கள் சந்திக்கும் போது அவர்கள் எங்களிடம் பேச வேண்டுமே தவிர, ஏன் சொன்னதை செய்யவில்லை என்று கேள்வி கேட்கக்கூடாது என்ற எண்ணத்தில் என்ன செய்ய போகிறோமோ அதனை மட்டும் தான் சொல்வோம்.

    தி.மு.க. சார்பில் தேர்தல் சமயத்தில் பெரிய பெட்டி வைத்து பூட்டு போட்டு, அதில் மக்கள் தங்கள் கோரிக்கைகளை கடிதங்களாக போடுங்கள். அதன் சாவி என்னிடம் தான் இருக்கும்.

    ஆட்சிக்கு வந்ததும் அந்த பெட்டிகளை எல்லாம் திறந்து அந்த கோரிக்கை கடிதங்களை மாவட்டம் வாரியாக பிரித்து, அதில் ஒன்றியம், நகரம், பேரூர், ஊராட்சி வாரியாக மீண்டும் பிரித்து மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னது ஊடகங்களிடம் இருக்கும்.

    அது போன்று சொல்லி மக்களை நாங்கள் ஏமாற்ற மாட்டோம். அந்த பெட்டியின் சாவி தொலைந்து விட்டது என்று தான் நான் நினைக்கின்றேன். ஏனென்றால் அந்த சாவி இருந்திருந்தால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி இருப்பார்கள்.

    ஊடகங்கள் முன்பு வைத்து தான் அந்த பெட்டிகளை பூட்டு போட்டு பூட்டினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆக போகிறது. 5 வருடங்களுக்கு பிறகு அந்த பெட்டிகளை திறந்தால் பிரயோஜனமில்லை.

    அதனால் எப்போது அந்த பெட்டிகளை திறந்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள்?

    அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. நாம் சரியாக இருந்தால் நம்மை யார் என்ன செய்து விட முடியும். பா.ஜனதா மட்டுமல்ல, எல்லா கட்சியையும் சொல்கின்றேன் அடுத்த கட்சியை குறை சொல்லி கொண்டு இருக்க கூடாது.

    அவரிடம் கொடு, இவரிடம் கொடு என்று மற்ற கட்சிகள் ஏமாற்றுவதற்கு நாம் என்ன ஒரு மாத குழந்தையா? நாம் சரியாக இருந்தால், சரியாக செயல்பட முடியும். என்னையெல்லாம் யாரும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட யாரும் நெருங்க முடியாது.

    நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை ஒரு போதும் முடங்க விடமாட்டேன்.

    இவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை பார்க்கும் போது அது தி.மு.க.வுக்கு தான் நல்லதாக இருக்கிறது. அதனால் ஒருவருக்கொருவர் திட்டுவதை விட்டு விட்டு ஒழுங்காக ஒருங்கிணைந்து தி.மு.க.வை வீழ்த்துவதற்கு கைகோர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு.
    • பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற கோரிக்கை.

    புதுடெல்லி:

    அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு அனுமதிக்ககோரி நீதிபதிகளிடம்  இன்றுமுறையீடு செய்யப்பட்டது.

    அதில், ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    தேர்தல் ஆணைய இணையதளத்தில் அதிமுக பொதுக்குழு தீர்மானம் பதிவேற்றப்படும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதாக ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஆகிவிடுவார். சின்னமும் கிடைத்துவிடும் என்ற நோக்கில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முறையிடும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

    • அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது.
    • இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் தேர்தல் பணிக்குழுவை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா மேலிடம் ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த சர்வேயில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டால் சுமார் 8 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாகவே கிடைக்கும் என்பது தெரியவந்தது.

    மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடும் முடிவை பாரதிய ஜனதா கைவிட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதால் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் எந்த அணிக்கு பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரில் ஒருவரை ஆதரித்தால் சர்ச்சை ஏற்படலாம் என்ற நிலையில் பாரதிய ஜனதா தவிப்புக்குள்ளானது. இந்த இரு அணிகளில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர்.

    ஒருவேளை இரட்டை இலை சின்னம் இரு அணிகளுக்கும் கிடைக்காமல் முடங்கும் பட்சத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர் செல்வம் அணியினரும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட முடியும். ஆனால் சுயேட்சை சின்னத்துக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

    இத்தகைய சூழ்நிலையில் தனித்து போட்டியிடாமலும், அதே சமயத்தில் அ.தி.மு.க.வை ஆதரிக்காமலும் செயல்பட பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காத நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் நடுநிலை வகிக்க முடிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் அளித்துள்ள பேட்டியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூசகமாக சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் அவர், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பா.ஜனதாவுக்கு பரீட்சார்த்த களம் அல்ல. 2024-ம் ஆண்டு தேர்தல்தான் இலக்கு" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    எனவே நாளை நடக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் இந்த அடிப்படையில்தான் தீர்மானங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிய வந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கும் நிலையில் அந்த தொகுதியில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வாக்களிக்கலாம் என்று அறிவிக்கவும் தமிழக பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.

    • அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.
    • இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் இரு அணிகளாக செயல்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஒரு வேட்பாளரை நிறுத்துகிறது.

    இதேபோல் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது.

    இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களை இரு அணியினரும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

    இதில் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது.

    இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இடையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    அதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்ட வேட்பு மனுவையும், பொதுக்குழு தீர்மானங்களையும் தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

    இந்த இடையீட்டு மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனு தொடர்பாக 3 நாட்களுக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும், ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இதுபற்றி ஓ.பன்னீர் செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அணியினர் இரட்டை இலை சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்று தெரிந்து விட்டது.

    அப்படியென்றால் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எங்கள் வசம்தான் இரட்டை இலை சின்னம் உள்ளதாக கருத வேண்டி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தொடர்பான நோட்டீசு எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. வந்தாலும் பதில் அனுப்பப்படும்.

    இதற்காக எங்களது மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், ரஞ்சித் குமார் ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்துடன் ஆலோசித்து முடிவெடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது.
    • தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    நெல்லை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைத்து கட்சிகளும் வேட்பாளர் அறிவிப்பதை போன்று அ.தி.மு.க.வும் வேட்பாளர் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளதால் ஓ.பி.எஸ்., பா.ஜ.க.வின் நிலைப்பாடு அறிவிப்புக்கு பின் முடிவு எடுப்பதாக சொல்லி உள்ளார்.

    தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குறிக்கோள். அதற்காக இரவு, பகல் பாராது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பாடுபடுகிறார்கள்.

    மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி மிகப்பெரிய அறிஞர். அவரின் நினைவாக பேனா சின்னம் வைப்பது தவறில்லை. கடுமையாக நிதி நெருக்கடியில் அரசு இருக்கும்போது தி.மு.க. கட்சியின் சார்பாக அந்த சின்னத்தை வைத்துக் கொள்ளலாம் .

    கடலில் வைத்து சுற்றுச்சூழலை மாசுபடச் செய்யாமல் அறிவாலயம் உள்ளிட்ட தி.மு.க.வின் சொந்த இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓர் அணியில் பணியாற்றினால் தி.மு.க.வை வீழ்த்தலாம் என்பது என்னுடைய கருத்து. இதையே தான் ஓபி.எஸ்.சும் சொல்லி உள்ளார். ஓ.பி.எஸ். வேட்பாளர் அறிவிக்கிறாரா? என்பதை பார்த்து அவரது நிலைப்பாட்டை அறிந்து, இணைந்து பணியாற்றுவது குறித்து முடிவெடுக்கலாம். இன்னும் நேரம் இருக்கிறது.

    ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் இரட்டை இலை சின்னத்திற்கு சண்டையிட்டால் 2017-ல் நான் போட்டியிடும் போது நீதிமன்றம் இரட்டை இலை சின்னம் இருவருக்கும் இல்லை என்ற முடிவெடுத்ததை போல் கூட முடிவெடுக்கலாம்.

    பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சி செய்வது காங்கிரசுக்கு ஏன் கசக்கிறது. தி.மு.க.வின் தோளில் ஏறிக்கொண்டு எட்டிய தூரத்திற்கு எதிரி இல்லை என காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது.

    களத்தில் தனியாக இறங்கி நின்று காங்கிரஸ் போட்டி போட்டால் அவரது நிலை தெரியும்.

    இரட்டை இலை சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட வேண்டும் என்பதை நிலைப்பாடாக கொண்டுள்ளது.

    இருவரும் இணைந்து கையொப்பம் இடவில்லை என்றால் சின்னம் முடக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அ.தி.மு.க. இன்று பலவீனம் அடைந்துள்ளது. அது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது.

    சுயநலத்தோடும் பணத்திமிரிலும் சிலர் செயல்படுவதால் தான் 5 ஆண்டுகளுக்கு முன்பே அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி குக்கர் சின்னத்தில் போட்டியிட்டோம்.

    கடந்த தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் வருங்காலத்தில் வாய்ப்பு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் போராடுகிறோம். தி.மு.க. வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும். காலம் அனைத்திற்கும் தீர்வு கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

    சென்னை:

    டெல்லியில் பிரதமர் மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை இன்று காலையில் திடீரென சென்று சந்தித்து பேசி உள்ளார்.

    பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் இந்த சந்திப்பு சுமார் 10 நிமிட நேரம் நடந்தது.

    பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்க சந்தித்து விட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாகவே இந்த சந்திப்பு நடந்ததாக தெரிய வந்துள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. இரு அணிகளும் போட்டியிடும் நிலையில் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு கிடைக்குமா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு கிடைக்குமா? அல்லது இரட்டை இலை முடக்கப்படுமா? என்ற நிலை உள்ளது.

    இந்த சூழலில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததற்கு தேர்தல் கமிஷன் தனது நிலைப்பாட்டை நாளை தெரிவிக்க உள்ளது.

    இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    எனவே இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடியை எடப்பாடியின் ஆதரவாளரான தம்பித்துரை எம்.பி. சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
    • இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர இருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில்முருகன் என்பவர் போட்டியிடுகிறார்.

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். ஆகியோர் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளதால் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதில் கடந்த 11.7.2022-ல் நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனுவின் மீது பதில் அளிக்குமாறு ஓ.பி.எஸ். தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

    ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அ.தி.மு.க.வின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதேபோல் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் அளிக்கப்பட்டிருந்த பதில் மனுவில், 2022 ஜுலை 11-ந் தேதி அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு நிலுவையில் இருப்பதால், இதுவரையில் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை.

    அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தாலும், இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் எனத் தெரிவித்து இருந்தனர்.

    இந்நிலையில் இந்த மனுவின் மீதான விசாரணை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரும் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவக்குமாரிடம் கேட்டபோது, இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பு இன்று வர இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் அதற்கு தகுந்தாற்போல் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவது யார்? இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல் முடங்கி விடுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஈரோடு இடைத்தேர்தலில் என் கையெழுத்துடன் கூடிய வேட்பாளர் பெயரை ஏற்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. எனவே என்னை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்து நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இது தொடர்பாக தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. அதன்படி தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் இன்னமும் ஏற்கவில்லை.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, யாரும் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை தொடர்பாக தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான ஏ,பி படிவங்களில் கையெழுத்திட ஓ.பன்னீர் செல்வம் தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் அந்த படிவத்தில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தயாராக இல்லை என்பதால் இரட்டை இலை சின்னம் கிடைக்காது. வருகிற 10-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதற்குள் தீர்ப்பு வராவிட்டாலும் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போகலாம். இப்போதைய சூழ்நிலையில் இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கோ இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அணியின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பதால் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் தானாகவே முடங்குகிறது. எனவே இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினருமே சுயேட்சை சின்னத்தை ஏற்பதை தவிர வேறு வழி இல்லை.

    எனவே சுயேட்சை சின்னத்தை பெற்றாலும் தங்களின் பலத்தை காட்ட இரு அணியினருமே தயாராகி வருகிறார்கள்.

    • எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. இன்று மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

    இடைத்தேர்தலில் போட்டியிட இன்று மதியம் வரை 70-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசும் இன்றுதான் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    என்றாலும் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இடையேதான் வழக்கம் போல பலப்பரீட்சை உருவாகி இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வமும் போட்டி வேட்பாளரை அறிவித்ததால் அ.தி.மு.க. வேட்பாளராக யார் கருதப்படுவார் என்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதுபோல யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதிலும் பரபரப்பு நிலவியது.

    இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வின் அவை தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி அவர் பொதுக்குழு உறுப்பினர்களில் 98 சதவீதம் பேரிடம் கையெழுத்து பெற்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று சமர்பித்தார்.

    அதை தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமாருக்கு டெல்லி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து கடிதம் அனுப்பியது.

    அதில், "அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஏ, பி படிவத்தில் கையெழுத்திட்டு வழங்கும் அதிகாரம் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கப்படுகிறது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ளவும்" என்று கூறி இருந்தது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுறுத்தல் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளருக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியானது. இதை தேர்தல் அதிகாரி சிவக்குமார் உறுதிப்படுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், "தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதம் எனக்கு வந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப நான் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்வேன்.

    அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தரும் ஏ, பி படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறினார். இதன் மூலம் அ.தி.மு.க.வில் நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின் பேரில் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்ப பெற்றுள்ளார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபட்டு பணியாற்றும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

    இதனால் உற்சாகம் அடைந்துள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் இன்று தங்களது பிரசாரத்தை சுறுசுறுப்புடன் தொடங்கி உள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஈரோடுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.

    ×