search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்"

    • கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம்.
    • புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம்.

    நவீன காலத்து உடை நாகரிகம் பற்றியும், 'பொட்டிக்' எனப்படும் பிரத்யேக ஆடை வடிவமைப்பு தொழில் கலாசாரம் பற்றியும், அதன் மூலம் பெண்களுக்கு உருவாகி இருக்கும் வேலைவாய்ப்புகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

    'பொட்டிக்' என்பது காஸ்டியூம் டிசைனர்கள் எனப்படும் உடை வடிவமைப்பாளர்களால் நிர்வகிக்கப்படும் பிரத்யேக உடை கடை. இங்கு, பேஷன் டிரெண்டிங்கான உடைகளை வடிவமைப்பார்கள். அதேபோல வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற, பிரத்யேக உடைகளையும் வடிவமைத்து கொடுப்பார்கள். இதில், எல்லா கலாசார உடைகளும் அடங்கும். அது சுடிதாராக இருக்கலாம். டிசைனிங் வேலைபாடுகள் நிறைந்த சேலை பிளவுஸ்களாக இருக்கலாம். பிரைடல் பிராக், லெஹெங்கா, ஸ்கர்ட், பட்டுப்புடவைகளில் இருந்து தைக்கப்படும் நவ-நாகரிக உடைகள், குறிப்பிட்ட விழாக்களை அழகாக்கும் தீம் மற்றும் கஸ்டமைஸ்ட் உடைகள், பிறந்த குழந்தைகளுக்கான விஷேச உடைகள்... இப்படி உடை கலாசாரத்தில் வரும் எல்லா வகைகளையும், தைத்துக் கொடுக்கலாம். ரெடிமேட் துணிகளுக்கு மாற்றாக, நமக்கு வேண்டியதை, சிறப்பான வேலைப்பாடுகளுடன் தைத்துக் கொடுப்பதுதான், பொட்டிக் கடைகளின் அடிப்படை.

    முன்பை விட, இப்போது நிறைய மக்கள் கஸ்டமைஸ்ட் ஆடைகளை அணிய ஆசைப்படுகிறார்கள். ஒருகாலத்தில் திருமண வரவேற்புக்கு மட்டுமே 'கஸ்டமைஸ்ட்' ஆடைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. நிச்சயதார்த்தத்தில் தொடங்கி, திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய போட்டோஷூட்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், ஹனிமூன் பயணங்கள், கர்ப்ப கால போட்டோ ஷூட், குழந்தை பிறப்பு, குழந்தையின் முதல் வருட பிறந்த நாள் கொண்டாட்டம்... இப்படி எல்லா விஷேசங்களுக்கும், அவர்களுக்கு பிடித்த மாதிரியில், பிடித்த நிறங்களில், பிடித்த தீம் (கருப்பொருளில்) ஆடைகளை வடிவமைத்து அணிகிறார்கள். இது, இன்றைய டீன்-ஏஜ் வயதினரின் தவிர்க்கமுடியாத பழக்கமாகிவிட்டது. அதனால் 'காஸ்டியூம் டிசைனிங்' துறையிலும், பொட்டிக்கடை களிலும் சிறப்பான எதிர்காலம் இருக்கும்.

    கிரியேட்டிவிட்டி, குவாலிட்டி, டெலிவரி மற்றும் பிட்டிங்... இவை நான்கையும், சிறப்பாக பின்பற்றினால், பொட்டிக் தொழிலில் வெற்றி பெறலாம். கிரியேட்டிவிட்டி எனப்படும் படைப்பாற்றல் வெளிப்படும் வகையிலான உடைகளை உருவாக்குவது அவசியம். அதேசமயம், லாப நோக்கத்திற்காக துணிகளின் தரத்தில் (குவாலிட்டி) எந்தவித சமரசமும் இருக்கக்கூடாது. அதேபோல, 2 நாட்களில் தைத்து கொடுப்பதாக (டெலிவரி) கூறி, அதை 4 நாட்களாக தாமதப்படுத்தி கொடுக்கக்கூடாது. இறுதியாக, நாம் தைத்து கொடுப்பது அவர்களின் உடலோடு சரியாக பொருந்தக்கூடிய அளவில் பிட்டிங் துல்லியமாக இருக்க வேண்டும். இவை நான்கையும் சரியாக கடைப்பிடித்தால், வெற்றி பெறலாம்.

    புதுமைகள்தான், பேஷன் துறையின் அடிநாதம். அதில் உருவானதுதான், இந்த டெக்னிக். எல்லோர் வீட்டிலும், அம்மா, பாட்டிகளின் நினைவுகளை தாங்கிய பழைய புடவைகள் இருக்கும். அதை இப்போது உடுத்து பவர்களும் உண்டு. பழைய டிசைன் என்ற தயக்கத்தினால், உடுத்த தயங்குபவர்களும் உண்டு. அப்படி தயங்குபவர்களுக்காகவே, இந்த முயற்சி. பழைய புடவையை புடவையாகத்தான் அணியவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுக்கு பிடித்த வகையில், சுடிதாராக அணியலாம். இல்லையென்றால் அனார்கலி, கவுன், லாங் பிராக், ஸ்கர்ட், அம்பர்லா கவுன், குர்த்தி... இதுபோன்ற பேஷன் வடிவங்களுக்கும் மாற்றிக்கொள்ளலாம்.

    சில பெண்கள், அவர்களது அம்மா புடவையில் தங்களுக்கும், மகளுக்கும் ஒரே டிசைனில் உடை தைத்து அணிகிறார்கள். ஏதோ ஒரு வகையில், முன்னோர்களுக்கும், அவர்களுக்குமான பந்தத்தை உடை வடிவில் தொடர விரும்புகிறார்கள்.

    கிழிந்த புடவைகளையும், பேஷன் உடைகளாக மாற்றலாம். புடவையின் கிழிந்த பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, நல்ல நிலையில் இருக்கும் மற்ற புடவை துணிகளிலும், நவ-நாகரிக உடைகளை தைக்கலாம். அவரவர் பட்ஜெட்டிற்கு ஏற்ப, ஆரி வேலைப்பாடுகள் செய்து, புடவைகளை அழகாக்கலாம். அதேபோல, கறை படிந்த பட்டுப்புடவைகளை கூட ஆடைகளாக மாற்றலாம்.

    ஆடம்பரமாக காட்சியளிக்கும் உடைகளை 'லைட் வெயிட்' முறையில் லேசாக வடிவமைப்பதும், அணிவதும்தான் இப்போதைய டிரெண்ட். இதனுடன், அம்மா-மகள் உடைகள், தீம் முறையில் ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான உடைகள், விஷேசங்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ்ட் உடைகள், பட்டுப்புடவைகளில் உருவாகும் பல உடைகள்... என எந்த வரம்பிற்குள்ளும் சிக்காமல், ஆடைகளின் டிரெண்ட் வளர்ந்துகொண்டே இருக்கிறது.

    தையல் கலையை பொறுத்தவரை, வாய்வழி செய்திகளாகவே பெரும் விளம்பரம் நடக்கும். நீங்கள், உங்களுக்கு தெரிந்த தோழிகளிடம் பரிந்துரைப்பீர்கள். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் பரிந்துரைப்பார்கள். இதோடு கொஞ்சம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தள புரோமோஷன் இருந்தால் போதும், சிறப்பாக முன்னேறலாம்.

    • வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
    • ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள்.

    வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது!

    * குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..?

    - 51.8 சதவீத பெண்கள் 'மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை' என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள்.

    - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.

    - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

    * நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு..?

    - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள்.

    - மீதமுள்ள பெண்கள் 'சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்' வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள்.

    தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.

    * வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு..?

    - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள்.

    - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்.

    - 13 சதவீத பெண்கள், 'வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக' சொல்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் 'கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    * அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு..?

    - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

    - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

    - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள், 'அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்' என்று கூறியிருக் கிறார்கள்.

    * உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு..?

    - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து.

    - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

    - 20 சதவீதத்தினர், 'உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது' என்று கூறியிருக்கிறார்கள்.

    - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். 'திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

    பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். 'இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள்கிறேன்' என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவி மார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை.

    அதே நேரத்தில் 'வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்' என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.

    * பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு..?

    - 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள்.

    - 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

    - 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    • சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
    • தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது.

    வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்யும் பழக்கம் பெண்களிடம் அதிகரித்து வருகிறது. அதற்கான கடன் உதவி, வழிகாட்டுதல், சந்தைப்படுத்துதல் என பல்வேறு வகையிலான திட்டங்களை அரசும், தனியார் அமைப்புகளும் உருவாக்கி, சுயதொழிலில் ஈடுபடும் பெண்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. எனினும், நாம் செய்யும் தொழிலின் தயாரிப்பும், உற்பத்திப் பொருளும் தனித்துவமாக இருந்தால் அதில் அதிக லாபம் பெற முடியும்.

    அந்த வகையில், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் 'தென்னை நார் கால்மிதியடி தயாரிப்பு' தொழில் குறித்த விளக்கமான தகவல்களை இங்கு பார்க்கலாம்.

    பொதுவாக நாம் தயாரிக்கும் பொருள் இயற்கையாகவும், சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையிலும் இருந்தாலே அது நிச்சயம் வெற்றி பெறும். அந்த வகையில் தென்னை நார் கால் மிதியடி, பயன்படுத்துபவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதத்திலும் கெடுதல் அளிக்காது. ஆகையால், இவற்றை விற்பனை செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது.

    இது தவிர, நாம் உற்பத்தி செய்யும் பொருளின் சிறப்பம்சம் மற்றும் நன்மைகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமான ஒன்று. தென்னை நார் மருத்துவ குணம் கொண்டதுடன், எளிதில் கிடைக்கக்கூடியது. விலை குறைவானது. எளிதில் பயன்படுத்தக்கூடியது. மேலும், பிளாஸ்டிக், ரப்பர் மற்றும் துணியால் செய்யப்பட்ட கால்மிதியடிகளை விட பாதுகாப்பானது, உடல் நலம் மற்றும் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காது.

    கால்மிதியடிகள் தயாரிக்க தேங்காய் நார், கயிறு திரிக்கும் இயந்திரம் மற்றும் மேட் தயாரிக்கும் இயந்திரம் தேவைப்படும். இதை இயக்குவது மிகவும் எளிதானது. அரசு மானியத்தின் மூலம் அல்லது சுயதொழில் கடன் உதவி மற்றும் மகளிர் சுய உதவி மூலமாக மானிய முறையில் இயந்திரம் வாங்கலாம். இந்த இயந்திரத்தில் முதலில் தேங்காய் நாரை கயிறாக திரிக்கும் வசதி இருக்கும்.

    அதைப் பயன்படுத்தி கயிறு திரித்து பின் அதை சீராக்கி, கால்மிதியாக தயாரிக்கலாம். இதற்கான பயிற்சி, மத்திய கயிறு வாரியத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. ஒரு கிலோ தேங்காய் நாரில் 2 கால்மிதியடிகள் தயாரிக்கலாம். குறைந்த பட்சமாக ஒரு வாரத்தில் 100 கிலோ தேங்காய் நார் கொண்டு 200 கால்மிதியடிகள் தயாரிக்க முடியும். ஒரு கிலோ தேங்காய் நாரின் இப்போதைய விலை 50 ரூபாய்.

    ஆனால், நேரடியாக தென்னை சாகுபடி செய்பவர்களிடம் மொத்த விலைக்கு வாங்கும்போது இதன் விலை மேலும் குறையலாம். தவிர, தயாரிப்பு செலவுகள் சேர்த்து ஒரு 'மேட்' தயாரிக்க சுமார் 70 ரூபாய் ஆகும். ஒரு மேட்டை 90 முதல் 120 ரூபாய் வீதம் நேரடியாக சந்தையில் விற்கலாம். அல்லது மொத்த விலைக் கடையில் பங்குதாரர் முறையில் விற்கலாம். ஆன்லைனில் தனியாகவும், மொத்தமாகவும் விற்கலாம்.

    • கொரானாவால் வேலையிழந்து நாடு திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா பரவலால் வேலையிழந்து 1.1.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இந்த திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்ப தாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்க ளுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம்.

    திட்ட தொகையில் பொதுப் பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதம் தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் கடவுசீட்டு, விசா நகல், கல்வித்தகுதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், மாற்றுத்திற னாளிகளாக இருந்தால் அதற்கான அடையாள அட்டை மற்றும் திட்ட விவரங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். மானியத் தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடன்தொகையில் ஈடு செய்யப்படும். திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின் 6 மாதங்கள் கழித்து முதல் தவணைத் தொகையை வங்கியில் செலுத்த வழி வகை செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையை திரும்ப செலுத்த வேண்டும்.

    கொரோனா பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்த, இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட பெருந்திட்ட வளாகம், விருதுநகர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 89255 34036 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெண்கள் பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.
    • முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள்.

    கண் மை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்காகவும், மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரம்ப காலத்தில் பசுங்கற்பூரம், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. தற்போது, வணிக ரீதியான லாபம் பெற இயற்கை பொருட்களுடன் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலவகை கண் மைகளில் 'ஈயம்' மூலக்கூறுகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை கண் தசைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பார்வைத் திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கண் மைகளைப் பயன்படுத்துவது நல்லது.

    ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு பிரகாசத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். கண்களின் தசைகளை வலுப்படுத்தி பார்வைத் திறனை மேம்படுத்தும்.

    ஆர்கானிக் சாதனம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது பெண்கள் பெரிதும் விரும்பும் அழகு சாதனப் பொருள் என்பதால், இதனை தயாரித்து விற்பனையும் செய்யலாம். பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.

    எந்த ஒரு பொருளையுமே, விற்பனை செய்யும் முன்பு முதலில் அதனை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தயாரிப்பைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள். பிறகு சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    பெரிய அளவு மண் அகல் - 1

    சந்தனத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

    வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு

    பசுநெய் - 3 டேபிள் ஸ்பூன்

    பாதாம் பருப்பு - 1 சிறிய

    அகலமான கண்ணாடி குப்பி - 1

    டீஸ்பூன் - 1

    செய்முறை: சந்தனத்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, டீஸ்பூன் மூலம் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் பருத்தித் துணியை நன்றாக நனைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு, அதைத் திரி போல சுருட்டிக் கொண்டு, அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள். விளக்கின் இரண்டு பக்கமும் நீளமான டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வையுங்கள்.

    பாதாம் பருப்பை ஒரு இடுக்கியால் பிடித்துக் கொண்டு விளக்கில் காண்பிக்க வேண்டும். அது நன்றாக எரிந்ததும் ஆறவைக்கவும். பின்பு அதை ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும். அகலில் நெய் தீர்ந்ததும் அதை அணைத்து, அதன் மேலே கவிழ்த்திருக்கும் தட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு தட்டை எடுத்து பார்த்தால் அதன் மீது கரி படிந்திருக்கும்.

    அதனை டீஸ்பூனால் சுரண்டி சேகரித்து கண்ணாடி குப்பியில் கொட்டவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பாதாம் கரியையும் கலந்து கொள்ள வேண்டும். கண்ணாடி குப்பியை காற்று புகாமல் மூடி வைக்கவும். இதை நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குழைத்து பயன்படுத்தலாம்

    • பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும்.
    • நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    இன்றைய காலகட்டத்தில் தொழில் தொடங்க நினைக்கும் இளம் தலைமுறையினருக்கு நமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை வகுத்துத் தருகிறது. உதாரணமாக தமிழக அரசு அளிக்கும் 'ஸ்டார்ட் அப் டி.என்' என்ற திட்டம் மிகவும் உபயோகரமாக உள்ளது. அதனை, பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் இளம் தலைமுறையினர் தங்களது யோசனைகளை முன் வைத்தால் மட்டுமே போதுமானது. நல்ல யோசனைகளை தேர்ந்தெடுத்து அதற்கேற்றவாறு நிதி உதவி வழங்கி வருகின்றனர்.

    கடனாக அல்லாமல் உதவியாகவே வழங்குகின்றனர். அதுமட்டுமின்றி கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'ஆன்ட்ரப்ரனர்ஷிப்' என்ற வகுப்பை உருவாக்கி தொழில் தொடங்கும் ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கற்று தருகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் படிப்பை முடித்ததும் வேலைக்கு செல்லாமல் நிறுவனம் தொடங்கலாம் என்ற மனநிலைக்கு மாறுகின்றனர். நானும் அத்தகைய வகுப்புகளை கல்லூரிகளில் நடத்தி வருகின்றேன். எனவே தொழில் தொடங்க விரும்புபவர்கள் நல்ல யோசனைகளை மட்டும் முன்வைத்து இத்தகைய திட்டங்களை பயன்படுத்திக் கொண்டாலே போதுமானது.

    முதலாவது, நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள், ஆரம்ப காலகட்டத்தில் பணிக்கு நிறைய ஆட்களை சேர்க்கக்கூடாது. உங்களால் எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும் என்பதை பொறுத்து குறைவான ஆட்களை சேர்த்தால் போதுமானது. இரண்டாவது ஊழியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்க வேண்டும். குறைவான சம்பளம் கொடுத்தால் அவர்கள் அனுபவத்தை பெற்றுக்கொண்டு, மற்றொரு நிறுவனத்திற்கு பணியாற்ற சென்று விடுவார்கள்.

    இதனால் நாம் மீண்டும் பணத்தை செலவழித்து ஆட்கள் சேர்க்கும் நிலை ஏற்படும். நிதியை நிர்வகிக்க, கணக்கு வழக்குகளை பார்க்க ஆட்களை பணியில் அமர்த்தியிருந்தாலும், ஒரு நிறுவனராக நாமும் அதனை கவனிக்க வேண்டும். இப்பொழுது ஆரம்பிக்கப்படும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியடைய இவைதான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் கருத்தில் கொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும்.

    சமூகம் பெண்கள் முன்னேற்றத்தை பற்றி பேசினாலும், ஒரு பெண் சுயமாக நிறுவனத்தை தொடங்கினாலும் சிலர் எதிர்மறையாக பேசத்தான் செய்வார்கள்.

    பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் இருப்பதுதான் பெண்களுக்கான பெருந்தடை. பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும். ஏட்டுப் படிப்பை மட்டுமே கற்றுக்கொள்ளாமல், பிற திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக ஊடகங்களை ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும். உங்களிடம் திறமையும், நிதி மேலாண்மையும் இருந்தாலே போதும். நீங்கள் தொழில் தொடங்க உங்கள் குடும்பத்தினரே உறுதுணையாக இருப்பார்கள்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • ஒற்றைசாளர முறையில் தொழில் தொடங்க அனுமதி பெறுவது எப்படி?என கலெக்டர் விளக்கம் அளித்தார்.
    • ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டுதல் நிறுவனம் மற்றும் டி.ஏ.எம்.இ.-டி.என். இணைந்து ஒற்றை சாளர முறையில் விரைவாக உரிமம் மற்றும் அனுமதி பெறும் இணைய தளம் குறித்தும், வழிமுறைகள் தொடர்பாகவும் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை யில் தொழில் மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் கருத்தரங்கு நடைபெற்றது.

    இதில் கலெக்டர் பேசும் போது கூறியதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கு பவர்களுக்கான முன்னெடுப்புகள் ஆகியன தொடர்பாகவும், அதற்கான அரசின் திட்டங்கள் குறித்தும், புதிய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு துறைகள் ரீதியாக பெறப் படும் தடையின்மைச்சான்று, உரிய அனுமதி ஆகியவைகள் குறித்தும், அதற்கான உரிய வழிமுறைகளை எளிதாக பெறுவதற்கெனவும், தமிழக அரசின் சார்பில் ஒற்றை சாளர முறை சார்ந்த இணையதளம் ஏற்படுத்தப் பட்டுள்ளது.

    இதன்மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை களுக்கு ஏறத்தாழ ரூ.50 கோடிக்கு கீழ் தொழில் தொடங்குவதற்கும், பெரு நிறுவனங்களுக்கென ரூ.50 கோடிக்கு மேல் தொழில் தொடங்குவதற்கும் ஒற்றை சாளர முறையின் மூலம் எந்தத் தொழில் தொடங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து விதமான விபரங்களை அதன்மூலம் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், உதவி மைய நிர்வாகி சார்லஸ் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பரமக்குடியில் தொழில் பழகுநர் தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
    • 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுபவர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின்சார வாரியம், வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம்,தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம்,தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்த வர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை.
    • ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.

    பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

    சுயதொழில்

    படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.

    பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.

    அதிக லாபம்

    ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊருகாய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.அதில லாபம் ஈட்டக்கூடிய குறிப்பிட்ட ஐந்து தொழில்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே காண்போம்.

    தையல் தொழிலை பொறுத்தவரை நன்கு சம்பாதிக்க கூடிய தொழில் என்று தான் கூற வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் தைத்தால் 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிலேயே வி ஷேப், யூ ஷேப், நாட் மாடல், டிசைன்ஸ் வைத்து தைத்தால் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.பெண்களுக்கான சுடி தைத்தால் 400 ரூபாய் வரை கிடைக்கும். தையல் தொழிலை பொறுத்தவரை டிசைன் சுடி, டிசைன் பிளவுஸ்,திருமணத்திற்கான ஆரி ஒர்க் பிளவுஸ் மூலம் நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

    மாவு வியாபாரம்

    இன்றைய பரபரப்பான உலகில், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டில் காலையில் எழுந்து காய்கறிகள் வெட்டி சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.எனவே சிலர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை வாங்கி சட்டென்று சமைத்து விடுகின்றனர்.அந்த வகையில் பூண்டு, வெங்காயம், பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பதற்கு ஏற்றவாறு பாக்கெட்டில் பேக் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.

    மாவு வியாபாரம் தொழிலை பொறுத்தவரை ஒரு கிலோ இட்லி அரிசி 34 ரூபாயாகும்.அதனுடன் உளுந்து 200 கிராம் சேர்த்து அறைத்தால் 3 கிலோ மாவு கிடைக்கும்.ஒரு கிலோ மாவு ரூ.40 க்கு விற்றால் ரூ.120 ஒரு நாளைக்கு எளிதாக சம்பாதிக்க முடியும்.நீங்கள் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் தெரிஞ்சவர்களிடம் கூறியும் விற்பனை செய்யலாம்.

    வீட்டில் இருக்கும் நிறைய பெண்கள் அவர்களின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டு விதவிதமான மசாலாக்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் இட்லி பொடி, சாம்பார் பொடி, மல்லி பொடி, கரமசாலா பொடி,பூண்டு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி பொடி வகைகளை செய்து அருகில் இருக்கும் மளிகைக்கடை அல்லது அக்கம் பக்கத்தினரிடமும் கூறி விற்பனை செய்யலாம். இதற்கான விலையை உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.அதே சமயத்தில் வாங்குபவர்களுக்கும் ஏற்ற விலையில் கொடுத்தால் சில நாட்களிலேயே உங்கள் பிசினஸ் சூடு பிடித்துவிடும். பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்''.

    • தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும்.
    • பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம்.

    செய்யும் தொழிலே தெய்வம். அத்தகைய தொழிலை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். ஏற்கனவே தொழிலில் வெற்றிபெற்றவர்கள், நல விரும்பிகள், வங்கி அதிகாரிகள் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுதல் என்பது மிக அவசியம். மேலும் நமது நிதி நிலைமை, சுற்றுப்புற சூழல் ஆகியவற்றையும் அறிந்து வைத்து இருக்க வேண்டும்.

    தொழில் என்பது 2 பிரிவுகளை கொண்டு உள்ளது. உற்பத்தி அல்லது தயாரிப்பு அடிப்படையிலானது. விற்பனை அல்லது தேவை அடிப்படையிலானது. உதாரணமாக ஸ்டீல் தகடு உற்பத்தி செய்யப்பட்டு அவை பாத்திரங்கள், பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. அந்த பாத்திரங்களை வாங்கி ஒருவர் விற்பனை செய்கிறார். பாத்திரங்களின் பளபளப்பு குறைந்தால் அதனை ஒருவர் பாலீஷ் செய்து தருகிறார். இவைகளில் உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை, சேவை என 4 அடிப்படைகள் உள்ளதை புரிந்து கொள்ளலாம். இவற்றில் சேவை என்பது கட்டணம் பெற்று செய்து கொடுக்கும் தொழில்களை குறிப்பிடுவது ஆகும்.

    தயாரிப்பு தொழிலை மேற்கொள்வோர் அதற்கு உரிய விற்பனை வாய்ப்பை தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும். தயாரிக்கப்படும் பொருட்கள் அதிக வியாபார போட்டி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பதாக இருக்க வேண்டும். அல்லது நாம் வசிக்கும் பகுதியில் மலிவாகவும், நிறைவாகவும் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் பொருட்களின் விற்பனை வாய்ப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறிந்து இருக்க வேண்டும்.

    சிறிய முதலீட்டில் பெரிய அளவிலான தயாரிப்பு தொழில்கள் எதையும் மேற்கொள்ள இயலாது. எனவே, பட்ஜெட்டுக்குள் அடங்கும்படியான சிறிய அளவிலான தயாரிப்பு தொழிலையே மேற்கொள்ளலாம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் காலத்தில் ஏற்படும் சூழலை சந்திக்க சிறிது பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும். எனவே எப்போதும் சிறிய அளவிலான தொகை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் உங்களது தயாரிப்பு பொருளை சந்தையில் விற்பதற்கும், மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கும் அவ்வப்போது விளம்பரங்கள் செய்ய வேண்டும். இவற்றுக்கான மூலதனங்களை நீங்கள்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஆகவே தயாரிப்பு தொழிலை செய்ய விரும்புபவர்கள் ஓரளவு பொருளாதாரம் உடையவராக இருக்க வேண்டும். கடன் தொல்லை இல்லாமல், சுய முதலீடு இல்லாதவர்கள் விற்பனை தொழிலை தேர்ந்து எடுக்கலாம். அதுதான் சிறந்தது.

    முக்கியமான விஷயம், தொழில் தொடங்க கடன் கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் முழு கடன் தொகையையும் வாங்க நினைக்கக்கூடாது. நம் தொழிலுக்கு தேவையான நிதி எவ்வளவோ அந்த அளவுக்கு மட்டுமே கடன் வாங்க வேண்டும். இல்லையேல் கடன் நம்மை அமுக்கிவிடும். இதை தொழில் தொடங்குவோர் கவனத்தில் கொண்டால் வெற்றி பெறலாம்.

    • படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம்.
    • தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது.

    "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில்" என்ற பாடல் வரிகளில் புதைந்துள்ள கருத்துகள் வளர்ந்து வரும் இளைஞர்களுக்காக கூறப்பட்டது. நமது நாடு தன்னிறைவு பெறும் காலம் வரை இந்த வரிகள் உயிருடன் இருக்கும். படித்த பெண்கள் அரசு வேலைகளுக்காக காத்திருக்காமல் சுலபமாக தொழில் தொடங்கலாம்.

    அதற்காக தொழில் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து நமக்கு என்ன தொழில் தொடங்க விருப்பமோ அந்த தொழிலில் பயிற்சிப்பெற்று தொடங்கலாம். இதற்காக தொழில் ஆலோசனை கூறும் அரசு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் ஆலோசனை பெறலாம். அவர்கள், எளிதான முறையில் தொழில் யோசனைகளையும் வழங்குகிறார்கள்.

    விவசாயத் தொழில்கள் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு, தோல் பொருட்கள் தயாரிப்பு, எலக்ட்ரானிக் போன்ற மின்னணு கருவிகள் தயாரிப்பு, பீங்கான் பொருட்கள் தயாரித்தல், பெயிண்டிங், வர்ணம் தீட்டுதல், மாடலிங் செய்தல், ரேடியோ, ரெப்ரிஜிரேட்டர், குளிர்சாதனப்பெட்டி, வாஷிங் மெஷின் போன்றவற்றை பழுது பார்த்தல் போன்ற பல தொழில்களை தொடங்கலாம். மேலும் கம்ப்யூட்டர் வேலைகளுக்கு அது பற்றிய தொழில்நுட்பங்களை அறிந்து இதில் ஈடுபடலாம்.

    இதன் மூலம் நமக்கு தினசரி வருமானம் கிடைப்பதுடன் தொழிலை விரிவுபடுத்தி பலருக்கு வேலை வாய்ப்பையும் வழங்கலாம்.

    தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் கடன் உதவிகளும் வழங்குகிறது. அதன்படி மானியத்துடன் கடன் உதவிகள் பெற்று தொழில் வல்லுனர்களை அழைத்து வந்து எளிதில் வேலைகளை முடிப்பதற்கான நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.

    பணிகளை விரைவில் முடிப்பதால் பல தொழில் ஆர்டர்களை பெறும் போது நமக்கு கூடுதலாக வருமானமும் கிட்டும். மேலும் தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் கடன் உதவி அளிக்கிறது.

    தொழில் முதலீட்டுக்கழகமும் கடன் உதவி வழங்குகிறது. சிறு தொழில் நிறுவனமும் கடன் தர தயாராக உள்ளன. இந்த நிறுவனங்களில் கடன் பெற்று தொடங்கிய தொழிலை அபிவிருத்தி செய்யவோ, புதிய தொழில் தொடங்கவோ கடன் பெறலாம். எந்தவொரு தொழிலையும் தள்ளி விடாது. அது பற்றி ஆராய்ந்து அறிந்து வாழ்க்கையில் முன்னேறலாம்.

    • இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான இறால் வளர்ப்பு சங்க கூட்டம் பைபாஸ் சாலையில் நடந்தது.

    சங்கத்தின் மாநில தலைவர் அலிஉசேன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் பாண்டி பாலா மாநில பொருளாளர் கிரி மாநில துணை தலைவர்கள் சேதுராமன், சங்கர் பிள்ளை, இரவிப்பாண்டியண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    மாநில செயற்குழு கூட்டத்தில் இறால் வளர்ப்பு தொழிலுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.

    இறால் வளர்ப்பு தொழிலுக்கு உரிமம் கேட்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உடனடியாக லைசன்ஸ் வழங்க வேண்டும் இறால் வளர்க்கும் உரிமையா ளர்களுக்கு அரசு தரமான இறால் குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் குறைந்த விலையில் தரமான இறால் தீவனம் வழங்க வேண்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பட்டியலில் இருந்து இறால் தொழிலை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர்.

    கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நாராயணசாமி மயிலாடுதுறை மாவட்ட சங்கத்தின் நிர்வாகிகள் ஞானம் அரவிந்தன் சாய் பாஸ்கரன் கார்த்திகேயன் அக்பர் சேகர் திருவாரூர் மாவட்ட தலைவர் செல்லப்பா புதுக்கோட்டை மாவட்ட பொறுப்பாளர் முத்துராமன், கடலூர் வெங்கடகிருஷ்ணன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் கலியபெரும்ள் உட்பட பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட துணைத் தலைவர் சாய் பாஸ்கரன் நன்றி கூறினார்.

    ×