என் மலர்
நீங்கள் தேடியது "ஏவுகணை தாக்குதல்"
- உக்ரைன் மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷியா 85 ஏவுகணைகளை வீசியது.
- உக்ரைனின் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா, அந்நாட்டு முக்கிய பகுதிகளில் தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ரஷிய படைகள் குறைந்த பட்சம் 85 ஏவுகணைகளை வீசியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உக்ரைன் மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்கியதில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். எனினும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து இழந்த அனைத்தையும் மீட்டெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷிய ஏவுகணைத் தாக்குதல்கள் பழிவாங்கும் மற்றொரு முயற்சி என்றும், குளிர் காலத்திற்குள் உக்ரைன் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலைகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த ரஷியா முயற்சிக்கும் என்றும் உக்ரைன் மந்திரி ஹெர்மன் ஹலுஷெங்கோ குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசப்பட்ட ரஷிய ஏவுகணை ஒன்று தாக்கியதில் உக்ரைன் அண்டை நாடான மால்டோவா பாதிக்கப்பட்டது. உக்ரைனில் இருந்து அந்நாட்டிற்கு செல்லும் முக்கிய மின்வழி தடம் இந்த தாக்குதலால் சேதம் அடைந்ததால், மின்வெட்டு ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இதனிடையே ரஷிய வீசிய ஏவுகணை ஒன்று குறி தவறி போலந்து நாட்டின் ப்ரெஸெவோடோவா கிராமத்தில் தானியங்களை உலர்த்தும் பகுதியை தாக்கியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ரஷிய ஏவுகணை தாக்குதல் குறித்து போலந்து அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தவில்லை. ஆனால் போலந்து உயர்மட்டத் தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
- இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.
ஜெருசலேம்:
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஆட்சி செய்யும் ஹமாஸ் அமைப்பினர் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். பதிலுக்கு இஸ்ரேலும் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு அல்-அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் போலீசார் நுழைந்து பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹாஸ் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது குண்டுகளை வீசினர்.
இதனால் காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. மேலும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் அங்கிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. 6-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், இஸ்ரேலின் வடகிழக்கு பகுதி நோக்கி வீசப்பட்டது. இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. ஒரே ஒரு ஏவுகணை மட்டும் இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து கோலன் குன்றுகளில் உள்ள ஒரு வயலில் விழுந்தது.
இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் சிரியாவில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத குழு தாக்குதல் நடத்தி இருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இஸ்ரேல் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே மேற்கு கரையில் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 20 வயது பாலஸ்தீனியர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் ராணுவத்தினர் மீது கற்கள், வெடிபொருட்களை வீசிய பாலஸ்தீனியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
- வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்
கீவ்:
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமைதி பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் சண்டை நீடிக்கிறது. ஆரம்பத்தில் உக்ரைன் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்கி முக்கிய பகுதிகளை கைப்பற்றிய ரஷிய படைகள், பின்னர் முன்னேறி மக்கள் வசிக்கும் பகுதிகளையும் தாக்கின. மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
அவ்வகையில் நேற்று இரவு உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷியா சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை உக்ரைன் வான் பாதுகாப்பு படைகள் முறியடித்துள்ளன.
கீவ் மற்றும் பிற பகுதிகளை குறிவைத்து வெவ்வேறு திசைகளில் இருந்து மொத்தம் 30 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 29 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தி அழித்ததாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
- மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம்.
- ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும்.
கிவ்:
உக்ரைன் மீது ரஷிய படைகளின் போர் தாக்குதல் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் உள்ள ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அக்கட்டிடம் இடிந்து தீப்பிடித்து எரிந்தது. 3 மாடி கொண்ட அந்த கட்டிடத்தின் மேல்தளம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானார்கள். 23 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி டுவிட்டரில் கூறும்போது, "மற்றொரு ஏவுகணை தாக்குதல், மனித குலத்திற்கு எதிரான மற்றொரு குற்றம். ஒரு தீய அரசு மட்டுமே ஆஸ்பத்திரிகள் மீது தாக்குதல் நடத்த முடியும். இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது. இது தூய ரஷிய பயங்கரவாதம்" என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே தலைநகர் கிவ், டினிப்ரோ மற்றும் கிழக்கு பகுதிகள் மீது ரஷியா தாக்குதல் நடத்திய போது அதன் 10 ஏவுகணைகள், 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் கடந்த சில தினங்களாக உக்ரைனின் பதில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்து, உக்கிரமான பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 7 கிராமங்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாள் இரவில் உக்ரைன் படைகள் ஜபோரிஜியா பகுதியில் உள்ள பெர்டியன்ஸ்க்கில் ஒரு கிலோமீட்டர் வரை முன்னேறியதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரில் ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், தெற்கு உக்ரைனில் நடந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவின் மேஜர் ஜெனரல் செர்ஜி கோரியாச்சேவ் கொல்லப்பட்டதாக ரஷிய ஆதரவு வலைத்தள பதிவர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு உக்ரைனில் 35வது படைப்பிரிவை வழிநடத்திச் சென்ற செர்ஜி கோரியாச்சேவ், நேற்று தெற்கு டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த சண்டையின்போது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சண்டையில்தான் உக்ரைன் தனது எதிர்தாக்குதல் மூலம் 4 கிராமங்களை விடுவித்துள்ளது.
ராணுவ அதிகாரி கோரியாச்சேவ் இதற்கு முன்பு டிரான்ஸ்னிஸ்ட்ரியா, மால்டோவாவில் அறிவிக்கப்பட்ட ராணுவமயமாக்கப்பட்ட பகுதி மற்றும் தஜிகிஸ்தானில் பணியாற்றியிருக்கிறார்.
- குடியிருப்புகள் மீதும் இந்த தாக்குதல் நடந்து வருகிறது.
- தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருகிறது.
டமாஸ்கஸ்:
சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இங்கு மேலும் பல பயங்கரவாத அமைப்புகளும் செயல் பட்டு வருகின்றது.
இந்த குழுக்களை சேர்ந்த பயங்கரவாதிகளை ஒடுக்க சிரியா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும், இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளை குறிவைத்து சிரியாவில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. குடியிருப்புகள் மீதும் இந்த தாக்குதல் நடந்து வருகிறது.
இதில் தீவிரவாதிகள் மட்டுமல்லாது அப்பாவி பொதுமக்களும் உயிர் இழந்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் காரணமாக இஸ்ரேல் மற்றும் சிரியா இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் படையினர் வான் வெளி தாக்குதல் நடத்தினார்கள். சரமாரியாக ஏவுகணை வீசி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் அறிவித்து உள்ளது. ஆனால் இந்த ஏவுகணை தாக்குதலில் சிரியா படையை சேர்ந்த 4 வீரர்கள் பலியானார்கள். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.கட்டிடங்களும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இஸ்ரேல் படையின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சிரியா தெரிவித்துள்ளது.
- செர்னிஹிவ் நகரத்தில் நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் உள்ளன
- இந்த தாக்குதலில் 6-வயது குழந்தை ஒன்றும் பலியாகி இருக்கிறது
கடந்த 2022 பிப்ரவரி மாதம் 22 அன்று, சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை கடுமையாக எதிர்த்து, ஆக்ரமிப்புக்கு பணிய மறுத்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளதவியுடனும், ராணுவ உதவியுடனும் உக்ரைன், ரஷியாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.
இப்போரில் இரு நாடுகளிலும் கடும் உயிர்ச்சேதங்களும், கட்டிட சேதங்களும் ஏற்பட்டு வருகிறது. போர் 18 மாதங்களுக்கு மேலாக 540 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் கடல் டிரோன்கள் மூலம் பரஸ்பரம் தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில் ரஷியா மீண்டும் உக்ரைன் மீது ஒரு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைனின் தலைநகர் கீவிற்கு வடக்கில் 145 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செர்னிஹிவ் நகரம். இந்நகரம் இரு பக்கமும் அழகான மரங்கள் நிறைந்த சாலைகளுக்கும், நூற்றாண்டு கால பழமையான தேவாலயங்கள் புகழ் பெற்றது.
இந்நகரின் மத்தியில் உள்ள ஒரு சதுக்கத்தின் அருகே ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில், மத விடுமுறையை கொண்டாட அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சிற்கு சென்று கொண்டிருந்த மக்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் 6-வயது குழந்தை ஒன்றும் அடங்கும். 90 பேர் காயமடைந்துள்ளனர். அவற்றில் 12 பேர் குழந்தைகள் மற்றும் 10 பேர் காவல் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
"ரஷியாவின் தாக்குதலில் அந்நகரில் அந்த சதுக்கம், ஒரு பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் மற்றும் கலையரங்கம் ஆகியவை சேதமடைந்துள்ளன" என சுவீடன் நாட்டிற்கு சென்றிருக்கும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
இப்போரினால் உலகளாவிய பொருளாதாரமும், உணவு தானிய வினியோகமும் பெருமளவில் வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால் போர் விரைவில் முடிவிற்கு வந்து அமைதி திரும்ப வேண்டும் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன.
- பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
மேற்கு ஈராக்கில் அல் அசாத் விமான தளம் உள்ளது. இங்கு அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்கியிருந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அல்-அசாத் விமான தளம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் சிலர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து அமெரிக்க ராணுவம் கூறும்போது, மேற்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளத்தின் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. பெரும்பாலான ஏவுகணைகள், வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
ஆனால் சில ஏவுகணைகள் ராணுவ தளம் மீது விழுந்தது. ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.
- இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது.
- ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழப்பு.
ஈரானின் தென்கிழக்கு பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக இதே பகுதியில் இருதரப்பினர் இடையே மோதல் நடைபெற்ற நிலையில், இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
"இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஈரானியர்கள் அல்லாத ஒன்பது பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சரவன் நகரை அடுத்த சிர்கான் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து நடைபெற்றது," என ஈரானை சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இதுவரை பயங்கரவாத அமைப்புகள் எதுவும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே பயங்கர மோதல் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
- பணிபுரிந்து வந்த ஏழு வெளிநாட்டினர் காயம் அடைந்தனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை அடிக்கடி ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. இந்த பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.
ஏவுகணை தாக்கியதில் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் அடைந்த நிலையில், அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இவர்களில் பாட்னிபின் மேக்ஸ்வெல் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ஜிவ் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அதேவேளையில் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் ஜார்ஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேச முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வினுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டு, ஜிவ் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.
- லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
- இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த நபர் பலியானார்.
திருவனந்தபுரம்:
இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இஸ்ரேல் எல்லையில் உள்ள பகுதிகளை ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியில் தாக்கியது. ஏவுகணை தாக்கியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாட்னிபின் மேக்ஸ்வெல் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விரைவில் மேக்ஸ்வெல் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் உயிரிழந்த கேரளாவை சேர்ந்த மேக்ஸ்வெல் உடல் இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி முரளீதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்களை மந்திரி முரளீதரன் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
- கடந்த வாரம் மின்சார உற்பத்தி நிலையம் மீது தாக்குதால் நடத்தியது.
- உக்ரைனிடம் தற்போது வான்பாதுகாப்பு உபகரணங்கள் போதுமானதாக இல்லாததால் இழப்புகளை சந்தித்து வருகிறது.
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் இருந்து சுமார் 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள செர்னிஹிவ் நகர் மீது ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இன்று காலை ரஷியா 8 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் மீது நடத்திய தாக்குதலில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செர்னிஹிவ் ரஷியா மற்றும் பெலாரஸ் எல்லையில் உள்ளது. இங்கு சுமார் 2.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது ரஷியாவின் தாக்குதல் 3-வது ஆண்டாக நீடித்து வருகிறது. தற்போது அமெரிக்காவின் உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதால் உக்ரைனால் ரஷியாவின் வான்வழி தாக்குதலை எதிர்கொள்வதற்கு தடுமாறி வருகிறது. இதனால் உக்ரைன் இழப்புகளை சந்தித்து வருகிறது.
கடந்த வாரம் முக்கியமான மின்சார உற்பத்தி நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 11 ஏவுகணைகளில் ஏழு ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்தது. மேலும், தாக்குதல் நடத்த ஏவுகணை இல்லாததால் தாக்குதலை எதிர்கொள்ள நேரிட்டது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
குளிர்காலத்தில் ரஷியா உக்ரைனை நோக்கி முன்னேறாமல் இருந்தது. ஆனால் ஆயுத உதவி கிடைக்காமல் உக்ரைன் திணறி வரும் நிலையில், இதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேறி வருவதாக ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
60 பில்லியன் அமெரிக்க டாலர் அளிவிலான ஆயுத உதவிகளுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்றம் இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இதனால் உக்ரைனுக்கு ஆயுத உதவி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
வான்பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கும்படி மேற்கத்திய நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவி கேட்டு வருகிறார். உக்ரைன் போதுமான பாதுகாப்பு ஆயுதங்களை பெற்றிருந்தால் செர்னிஹிவ் தாக்குதல் நடைபெற்றிருக்கிறாது எனவும் தனது கவலையை தெரிவித்துள்ளார்.