என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஐஏ"

    • குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று வாதிட்டார்.
    • ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது.

    தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

    2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தஹாவூர் ராணா இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டார். பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய தொழிலதிபர் தஹாவூர் ராணா, ஏப்ரல் 10 ஆம் தேதி நீதிமன்றத்தால் 18 நாள் காவலில் வைக்கப்பட்டார்.

    இந்நிலையில் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச அனுமதி கேட்டு ராணா பாட்டியாலா என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 19 இல் மனுதாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

    ராணாவின் சட்ட ஆலோசகர் பியூஷ் சச்தேவா, ஒரு வெளிநாட்டவர் என்ற முறையில், காவலில் இருக்கும் போது தனக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கவலைப்படும் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை உரிமை அவருக்கு உள்ளது என்று  வாதிட்டார்.

    இருப்பினும், தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA) இந்தக் கோரிக்கையை எதிர்த்தது, நடந்து வரும் விசாரணையை மேற்கோள் காட்டி, ராணா முக்கியமான தகவல்களை வெளியிடக்கூடும் என்ற கவலையை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சிறப்பு NIA நீதிபதி சந்தர் ஜித் சிங், தஹாவுர் ராணா குடும்பத்தினருடன் பேச அனுமதி மறுத்து அவரது மனுவை நிராகரித்தார்.

    • லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
    • தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மும்பை தாக்குதல் பயங்கரவாதி தஹாவூர் ராணாவுக்கு 18 நாள் என்.ஜ.ஏ. காவல் அளித்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இதையடுத்து அவர் என்.ஐ.ஏ. தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராணாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவரிடம் மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லியின் நம்பிக்கைக்கு உரியவராக ராணா திகழ்ந்து வந்தார். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அன்று தொடங்கிய அவர்கள் நட்பு தொழிலில் பங்குதாரராக ஆகும் அளவுக்கு விரிவடைந்தது. பின்னர் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் ரகசிய தொடர்பு வைத்துக்கொண்டு மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு முன்பாக துபாயை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை ராணா சந்தித்து சதிதிட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யார்? அவருக்கும், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ராணாவிடம் துருவி துருவி கேள்வி கேட்டனர்.

    அப்போது அவரை பற்றிய பல்வேறு விவரங்களை ராணா கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த நபர் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    மும்பை தவிர இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் ராணா தனது மனைவியுடன் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு வந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர், ஆக்ரா மற்றும் டெல்லி, கேரள மாநிலம் கொச்சி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் அவர் தனது மனைவியுடன் தங்கிய விவரம் தெரிய வந்துள்ளது.

    அவர் இந்தியாவை வேவு பார்க்க வந்து இருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. தாக்குதலுக்கு பிறகு ராணாவிடம் ஹெட்லி மும்பைக்கு செல்ல வேண்டாம் என வெளிப்படையாக எச்சரித்து உள்ளார். இது தொடர்பாக ராணாவிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அமெரிக்காவில் இருந்த நாடு கடத்தப்பட்ட ராணா இன்று மாலை டெல்லி விமான நிலையம் கொண்டு வரப்பட்டார்.
    • என்.ஐ.ஏ. அவரை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையாக கைது செய்துள்ளது.

    மும்பை தொடர் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். அவர் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பயனாக இன்று இந்தியா கொண்டு வரப்பட்டார்.

    ராணா டெல்லி வந்தடைந்ததும் என்.ஐ.ஏ. முறையாக அவரை கைது செய்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை என்.ஐ.ஏ. கைது செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து என்.ஐ.ஏ. குழு, தேசிய பாதுகாப்பு குழு, மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஆகியவை சிறப்ப விமானம் ராணவை இந்தியாவுக்கு கொண்டு வந்தனர்.

    ராணாவுக்காக டெல்லி சட்ட சேவைகள் ஆணையத்தில் இருந்து வழக்கறிஞர் பியூஷ் சச்தேவா ஆஜராகிறார். சிறப்பு அரசு வழக்கறிஞர் நரேந்திர மான், மூத்த வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் அரசு சார்பில் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள்.
    • ராணா கைது செய்யப்பட்ட பின்னர் குண்டு துளைக்காத காரில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்.

    இந்தியாவின் வர்த்தக மையமாக திகழும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி தாஜ்ஓட்டல், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹட்லியும் ஒருவர்.

    லஷ்கர் இ தொய்பா என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இவரும், பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடா நாட்டு தொழில் அதிபரான தஹாவூர் ராணாவும் மும்பை தாக்குதலில் கூட்டு சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது

    இந்த வழக்கில் தஹாவூர் ராணாவை இந்தியா தேடி வந்தது. இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். 2014-ம் ஆண்டு அவருக்கு 14 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தடுப்பு மையத்தில் அடைக்கப்பட்டார்.

    தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா பல ஆண்டுகளாக கோரி வந்தது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்தது. ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என அறிவித்தார்.

    தன்னை நாடு கடத்தக்கூடாது என தஹாவூர் ராணா அமெரிக்க கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது கடைசி கட்ட முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    ராணாவை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக இந்திய சி.பி.ஐ. உள்ளிட்ட விசாரணை அமைப்பின் அதிகாரிகள் அமெரிக்கா சென்றனர். அவர்களிடம் ராணாவை அமெரிக்க அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    அவரை நாடு கடத்துவதற்கான அனைத்து சட்ட நடைமுறைகளும் முடிக்கப்பட்டு இந்திய நேரப்படி நேற்று இரவு ராணாவை அதிகாரிகள் தனி விமானத்தில் ஏற்றினார்கள். நேற்று இரவு 7.10 மணி அளவில் அந்த விமானம் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டது.

    இந்தநிலையில், தஹாவூர் ராணா இந்தியா கொண்டு வரப்பட்டார். பின்னர், இதுதொடர்பான அனைத்து ஆவணங்களும் என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) அதிகாரப்பூர்வமாக அவரை கைது செய்ய உள்தாக தகவல் வௌியாகியுள்ளது.

    ராணா கைது செய்யப்பட்ட பின்னர் குண்டு துளைக்காத காரில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு பயங்கரவாதி தஹாவூர் ராணா டெல்லி திகார் ஜெயிலில் உயர் பாதுகாப்பு வார்ட்டில் உள்ள அறையில் அடைக்கப்பட உள்ளார். 

    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    சென்னை

    கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விளக்கினார்.

    இந்நிலையில் கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். கோவை சம்பவம் போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க காவல்துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

    உளவுத்துறையில் கூடுதல் காவலர்கள் நியமனம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
    • கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23-ம் தேதியன்று அதிகாலை கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார்.

    இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26), அப்சர்கான் ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2-வது நாளாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் விக்னேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    என்.ஐ.ஏ பதிவு செய்து விசாரித்து வரும் இந்த வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    • கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.

    கோவை:

    கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந்தேதி அதிகாலையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தான்.

    போலீசார் நடத்திய விசாரணையில் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக இறந்த ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த முபின் மற்றும் கைதானவர்கள் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

    இதுவரை இந்த வழக்கினை கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 7 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர்.

    தற்போது இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி.வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைத்தனர்.

    கார் வெடிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்கள், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அறிக்கைகள், கைப்பற்றப்பட்ட பொருட்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றையும் ஒப்படைத்தனர்.

    கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்கள் உள்ளிட்டவற்றை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கினர்.

    போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்றுக்கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தங்களது விசாரணையை தொடங்கினர்.

    இன்று காலை என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் விக்னேஷ் தலைமையிலான அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து காரில், கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு செல்கின்றனர்.

    அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர். பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்த உள்ளனர்.

    தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூடுதல் தடயங்கள் கிடைக்கிறதா? என சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

    தொடர்ந்து கார் வந்த இடமான உக்கடத்தில் இருந்து கோட்டைமேடு பகுதி வரையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரின் வீடுகளுக்கும் சென்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைதான 6 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுதவிர இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெரோஸ், இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டு கேரளா சிறையில் இருந்த ரசித் அலி, முகமது அசாருதீனை சந்தித்துள்ளார். இது தொடர்பாக இவர்களை கேரளாவுக்கு அழைத்து சென்று விசாரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கி உள்ளதால் இந்த வழக்கில் மேலும் புதிய தகவல்கள் கிடைக்கும் என தெரிகிறது.

    • கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.
    • முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ந்தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான்.

    போலீஸ் விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இறந்த முபினின் கூட்டாளிகளான 6 பேரை கைது செய்தனர்.

    முபின் வீட்டில் இருந்து வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயனங்கள், ஐ.எஸ். ஆதரவு வாசகங்கள் அடங்கிய பொருட்கள், செல்போன்கள், சிம்கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கார் வெடிப்பு வழக்கினை தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த முபின் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கோவில்கள் மற்றும் அங்கு நடக்கும் உருவ வழிபாடுகள் மீது முபினுக்கு வெறுப்புணர்வு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாகவே அவர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவதற்காக திட்டமிட்டு வந்த தகவலையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    2019-ம் ஆண்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முபின் வீட்டில் சோதனை நடத்தினர். அதன்பின்னர் அவரை தொடர்ந்து கண்காணிக்க உளவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது. உளவுத்துறையினரும் அவரை கண்காணித்து வந்தனர்.

    ஆனால் அவர்களின் கண்காணிப்பையும் மீறி அடுத்தடுத்து முபின் 3 வீடுகளுக்கு மாறியதும், இதை மத்திய, மாநில உளவுத்துறையினர் கண்காணிக்க தவறியதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் போலீசாரின் தொடர் விசாரணையில், முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்கு பிரத்யேகமாக செயலி ஒன்றை பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

    கார் வெடிப்பு சம்பவத்தின் போது முபின் வைத்திருந்த ஒரு செல்போன் உடைந்து நொறுங்கி விட்டது.

    தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் போலீசாருக்கு கிடைத்தது. இதேபோல் கைதான மற்றவர்களின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்த செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது, முபின் தனது கூட்டாளிகளுடன் பேசுவதற்காக ஐ.எம்.ஓ. என்ற பிரத்யேக செயலியை பயன்படுத்தியது தெரியவந்தது.

    இந்த செயலியை பயன்படுத்தி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ளவர்களுடனும் பேசலாம். மேலும் செல்போனில் சிம்கார்டுகளை பயன்படுத்தி பேசினால் ஏதாவது ஒரு வகையில் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதை அறிந்து ஐ.எம்.ஓ. எனப்படும் பிரத்யேக செயலியை பயன்படுத்திருக்கலாம்.

    இந்த செயலியில் வீடியோ அழைப்பு, வாய்ஸ் கால் எனப்படும் குரல்பதிவு அழைப்பு, சாட் எனப்படும் எழுத்து பரிமாற்றம் மூலமாகவும் பேச முடியும்.

    இதில் முபின் மற்றும் அவரது கூட்டாளிகள் சாட்களை பயன்படுத்தாமல் வீடியோ, வாய்ஸ் கால் அழைப்புகள் மூலம் பேசி வந்துள்ளனர். இவற்றை ரெக்கார்டு செய்ய முடியாது. மேலும் பேசியவுடன் அந்த தகவல்களை உடனுக்குடன் அழித்தும் உள்ளனர்.

    மேலும் முபின் ஐ.எ.ம்.ஓ. செயலி மூலம் வெளிநாட்டு நபர்களுடன் பேசியிருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் முபினை மூளைச்சலவை செய்தததுடன், அவருக்கு வெடிபொருட்கள் வாங்க பணம் உதவி செய்திருக்கலாம் என என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கூறும்போது, வாட்ஸ்அப் அழைப்பு, ஐ.எம்.ஓ. போன்ற செயலிகளில் இருதரப்பினரின் ரகசியம் காக்கப்படும் என்பதாலும், போலீசாரால் கண்காணிக்க முடியாது என்பதாலும் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

    இதுபோன்ற செயலிகளின் தலைமையை தொடர்பு கொண்டு கேட்டாலும் தகவல்கள் எளிதாக கிடைப்பதில்லை. சட்டவிரோத செயல்களை தடுக்க இதுபோன்ற செயலிகளின் பயன்பாட்டை கண்காணிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுப்பது ஒன்றே தீர்வாகும் என்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கோவையில் யாரெல்லாம் இதுவரை ஆன்லைனில் வெடி பொருட்கள் வாங்கி உள்ளனர் என்ற பட்டியலை தயாரிக்கும் பணியில் போலீசார் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 6 பேரும் நாளை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    இதற்காக இன்று 6 பேரும் கோவை மத்திய ஜெயிலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். நாளை காலை என்.ஐ.ஏ. கோர்ட்டில் 6 பேரும் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

    அதன்பின்னர் அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. கோர்ட்டில் அனுமதி பெற்று கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும், அவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    • என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
    • கோவையின் 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தான். விசாரணையில் முபின் கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக முபினின் கூட்டாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து கார் வெடிப்பு நடந்த இடம், கார் இருந்த நிலை, வெடிவிபத்தால் பாதிக்கப்பட்ட கோவிலின் முன்புறம் உள்ளிட்ட இடங்கள், காரின் உதிரி பாகங்கள், சிலிண்டர்கள் கிடந்த இடம், முபின் உயிரிழந்து கிடந்த இடம், கோவில் வளாகம், சுற்றுப்புற பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    என்.ஐ. அதிகாரிகள் விசாரணை முழுவதையும் ஆடியோ மற்றும் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து கோவையில் முகாமிட்டு இந்த வழக்கு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், கோவையில் உள்ள 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
    • சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

    கோவை:

    கோவையில் நாச வேலைக்கு திட்டமிட்ட ஜமேஷா முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார்.

    காரில் வெடி பொருட்களை நிரப்பி கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி தீபாவளிக்கு முந்தைய நாள் மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் அதனை வெடிக்கச் செய்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்த முபின் திட்டமிட்டு இருந்தார்.

    ஆனால் முபின் திட்டம் பலிக்காமல் அவரது சதித்திட்டத்தில் அவரே சிக்கி உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து 75 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

    இது தொடர்பாக போலீசார் அவரது கூட்டாளிகளான முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    முதற்கட்டமாக கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடமான கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கோவில் பூசாரியிடமும் விசாரித்தனர்.

    வழக்கில் கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்காக கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 6 பேரையும் நேற்றுமுன்தினம் சென்னை அழைத்து சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கார் வெடிப்பு தொடர்பாக விசாரித்த போது தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக கோவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100-க்கும் அதிகமானோர் செயல்படுவது தெரிய வந்தது. இதனால் அவர்களை கண்காணிப்பதுடன் அவர்களின் வீடுகளில் சோதனையிடவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் சென்னை, கோவை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது.

    கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த ஆதரவாளர்களின் பட்டியல்களை தயாரித்து உளவுத்துறை, என்.ஐ.ஏ.விடம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே தமிழகம் முழுவதும் இன்று இந்த சோதனை நடந்தது.

    கோவையில் கோட்டை மேடு, உக்கடம், பொன்விழா நகர், புல்லுக்காடு, ரத்தின புரி, ஜி.எம்.நகர் உள்பட 33 இடங்களில் சோதனை நடந்தது.

    பலியான முபின் மற்றும் கைதான 6 பேரின் உறவினர்கள், நண்பர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்களின் வீடுகள் என 33 இடங்களில் அதிகாலை முதலே அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து வந்த 30-க்கும் மேற்பட்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள், கோவை மாநகர போலீசாருடன் இணைந்து இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சோதனையின் போது வீடுகளில் இருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. வீடுகளில் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சல்லடை போட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வீடுகளில் இருந்த லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் ஏதாவது தகவல்கள் இருக்கிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தினர்.

    சோதனை நடந்த சில இடங்களில் இருந்து அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

    காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை வரை நீடிக்கும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் இந்த சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் சோதனை முடிவிலேயே என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்த முழுமையான விவரங்கள் தெரியவரும்.

    என்.ஐ.ஏ. சோதனை நடந்த இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க அந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சென்னையில் புதுப்பேட்டை, மண்ணடி, பெரம்பூர், ஜமாலியா உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். நெல்லையில் 2 இடங்களிலும், திருப்பூரில் ஒரு இடத்திலும், மதுரையில் 2 இடத்திலும், கயல்பட்டினத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திரு முல்லைவாசல் சொக்கலிங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த அல்பாஷித் (22) என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. காலை 5 மணிக்கு 6 பேர் கொண்ட அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அல்பாஷித் வீட்டில் தான் இருந்தார். ஆம்புலன்ஸ் டிரைவாக பணியாற்றும் அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

    கார் வெடிப்பு தொடர்பாக கோவையில் கைதானவர்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தி இருந்தனர். தற்போது 2-வது முறையாக என்.ஐ.ஏ. சோதனை நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
    • இந்த கும்பலுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கு யார் உதவினார்கள்? என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் போலீசார், கடந்த மே மாதம் 19-ந் தேதி, புளியம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சேலம் சன்னியாசிகுண்டு மணல்காரர் தெருவை சேர்ந்த நவீன் என்கிற நவீன்சக்கரவர்த்தி (வயது 25), செவ்வாய்ப்பேட்டை ஜம்புலிங்கம் தெருவைச் சேர்ந்த சஞ்சய்பிரகாஷ் (25) ஆகியோரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள், சேலம் செட்டிச்சாவடி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. இருவரையும் ஓமலூர் போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு உதவிபுரிந்த கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கபிலர் என்கிற கபிலன் என்பவரும் கைதானார். கைதானவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வீரப்பன், பிரபாகரன் ஆகியோரின் புத்தகங்கள் இருந்ததால், இவ்வழக்கை சேலம் கியூ பிரிவுக்கு மாற்றினர்.

    கியூ பிரிவு அதிகாரிகள் விசாரித்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை 27-ந் தேதி தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. அவர்கள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் கைதான 3 பேர் மீது, என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று என்.ஐ.ஏ போலீசார் நவீன்சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் மற்றும் சேலத்தைச் சேர்ந்த கபிலர் என்கிற கபிலன் ஆகியோர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் நவீன் சக்கரவர்த்தி சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ 3-ம் ஆண்டும், சஞ்சய் பிரகாஷ் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ படித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நவீன் சக்கரவர்த்தி மற்றும் சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

    கபிலர் என்கிற கபிலன் ஜாமீனில் வந்து தலைமறைவானதால் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பலுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கு யார் உதவினார்கள்? என்பது குறித்தும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர்.
    • கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

    கோவை:

    கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் முபின் என்ற வாலிபர் பலியானார். முபினுடன் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தற்போது இந்த வழக்கை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். முதல்கட்டமாக அவர்கள் கார் வெடித்த கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து முபின் மற்றும் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். கோவையில் 33 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 43 இடங்களில் இந்த சோதனை நடந்தது. இதில் சில முக்கிய ஆவணங்கள், செல்போன்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    அடுத்தக்கட்டமாக கைதான 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு கட்டமாக 6 பேரையும் சென்னை அழைத்துச் சென்று பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் மீண்டும் அவர்களை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இதையடுத்து காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு போதுமான காரணங்கள், ஆதாரங்களை என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான் காவல் அனுமதி கிடைக்கும். அதனால் அதற்கான ஏற்பாடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    அனேகமாக அவர்கள் நாளை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்ய அதிகம் வாய்ப்புள்ளது. அல்லது வியாழக்கிழமைக்குள் காவலில் எடுத்து விசாரித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    6 பேரும் காவலில் எடுத்து விசாரிக்கப்படும் பட்சத்தில் அவர்களது வீடுகள் மற்றும் சதித்திட்டம் தீட்டிய இடங்களுக்கு அவர்களை நேரில் அழைத்துச் சென்று விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டம் வகுத்துள்ளனர். இதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் முடிவு செய்துள்ளனர்.

    ×