search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்பு"

    • வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.
    • வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும்.

    தினை: கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தானியம். இதன் உற்பத்தியில் இந்தியாவுக்கே முதல் இடம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, பாஸ்பரஸ், மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதயத்தை பலப்படுத்தவும், கண்பார்வை சிறப்பாக இருக்கவும் துணைபுரியும். பிரமாதப் பலன்களைத் தரும் தினையில் உருவான பலகாரங்கள் நம் உடல்நலம் காக்கும்.

    கேழ்வரகு: கேழ்வரகு, வெப்பமான பகுதிகளில் விளையும் தன்மை கொண்டது. அரிசி, கோதுமையை விட கேழ்வரகில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிக அளவில் உள்ளன. குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது. கேழ்வரகில் கூழ் செய்து பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


    சாமை: அரிசியை விட இதில் நார்ச்சத்து பலமடங்கு உள்ளது. அதேபோல மற்ற சிறுதானியங்களை விட சாமையில் இரும்புச்சத்தும் அதிகம் உண்டு. இது, ரத்தசோகையை நீக்க உதவும். இதில் இட்லி, மிளகுப் பொங்கல் (வெண் பொங்கல்), இடியாப்பம், காய்கறி பிரியாணி என வகை வகையாக உணவுகளைச் செய்ய முடியும்.

    வரகு: இது பல நாடுகளின் பாரம்பரிய உணவு. வறட்சியான நிலத்தில் கூட விளையும் ஆற்றல் கொண்டது. உடலுக்கு அதிக சக்தியளிக்கும். அரிசி, கோதுமையை விட இதில் நார்ச்சத்து அதிகம். விரைவில் செரிமானமாகும் தன்மை கொண்டது. இதில் பாஸ்பரஸ், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி அனைத்தும் நிறைந்துள்ளன. இதில் புட்டு, வெண் பொங்கல், கார பணியாரம், இட்லி, புளியோதரை, உப்புமா என விதவிதமாக செய்ய முடியும்.

    கம்பு: இந்தியா முழுக்கப் பயிர் செய்யப்படும் தானிய வகை இது. வைட்டமின்கள் நிறைந்த கம்பு, உடலுக்குச் சிறந்த ஆற்றலையும் வலிமையையும் தரும். உடல் உஷ்ணத்தை குறைக்கும். சோர்வை நீக்கி, புத்துணர்வு தரும். வளரும் குழந்தைகளுக்கும், பூப்பெய்திய பெண்களுக்கும் ஏற்றது. உடலுக்கு நன்மை தரும் கொழுப்பு இதில் உள்ளதால், இதய நோயிலிருந்து பாதுகாக்கும்.


    சோளம்: இந்தியாவில் பஞ்ச காலத்தில், மக்கள் பசியை அதிகம் போக்க உதவிய தானியம் இது. நார்ச்சத்து, புரதச்சத்து, மாவுச்சத்து நிறைந்தது. உடல் எடையை அதிகரிக்க உதவும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், செரிமானக் கோளாறு பிரச்சினை இருப்பவர்கள், ரத்தசோகை இருப்பவர்களுக்கு சோளம் சிறந்தது. இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண் குறைபாடுகளைச் சரிசெய்ய உதவும். இதில் தோசை, பணியாரம் தயாரிக்கலாம்.

    சிறுதானியங்களில் கஞ்சி, கூழ், களி, தோசை, பொங்கல், அடை, பிரியாணி, கொழுக்கட்டை, இனிப்பு, கார பலகாரங்கள் போன்ற பல சுவையான, ஆரோக்கியம் பெருக்கும் உணவுகளை தயாரிக்கலாம். சிறுதானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வோம். நமது பாரம்பரியத்தைப் போற்றி வளர்ப்போம்.

    • அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது.
    • நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ, நமது உடல் திசுக்கள் ஒவ்வொன்றிலும் நாம் பாரம்பரியமாக உண்டு வந்த தானியங்களின் மூலக்கூறுகள் பதியப்பட்டிருக்கும். நமது நிலத்தில் விளையும் கிழங்கு, காய், கனி, தானியங்கள், இதில் உலவும் விலங்குகளின் பால், ஊண் ஆகியவற்றை ஏற்கும் விதத்திலேயே நமது செல்கள் வடிவமைந்திருக்கும்.

    சந்தை தாராளமயமாதலுக்கு முன்னர்வரை நாம் உண்டுவந்த உணவுப் பொருட்கள் நமது சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளைந்தவை.

    இன்றைக்கு நம் கண்ணெதிரில் விளையாத கோதுமை, ஓட்ஸ், சோயா போன்ற பலவும் நம் உணவுப்பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டு விட்டன. இவற்றை உண்பதா, வேண்டாமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலங்காலமாக உண்டுவந்த தானிய வகைகளை ஏன் திடுமென நாம் கைவிட்டோம்?

    ஆற்றுப்பாசனம் அல்லாத மானாவாரிப் பயிர்கள் விளையும் தமிழக நிலப்பகுதிகளில் விவசாயிகள் சிறிதளவே நெல்லை விளைவித்தார்கள். பெரும்பாலான நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற தானியங்களையே விளைவித்து வந்தார்கள். நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    'பசுமை புரட்சி' என்ற பெயரில் அன்றாட பயன்பாட்டு விளைபொருளுக்கு மாறாக பணப்பயிர் விளைச்சலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. பணப்பயிர் உற்பத்தி தொடங்கியதும் மக்களுக்கும், மண்ணுக்கும் இடையில் இருந்த உயிர்ப்புமிக்க பிணைப்பு அறுபட்டு விட்டது.

    குறுகிய காலப்பயிர் வகைகளை விவசாயிகள் விளைவிக்க தொடங்கினார்கள். இதன் விளைவாக இந்த மண்ணில் நெல் ஏகபோகமானது போலவே, நமது உணவிலும் அரிசி ஏகபோகமானது. பல தானிய, பலவகை உணவு என்றிருந்த நமது உணவுக்கலாசாரம் சிதைந்து போனது.

    இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது. இன்றைய வேலை முறையில் உடலுழைப்பு குறைந்துவிட்டது என்றாலும், பல்திறன் தேவைப்படும் காலம் இது. பல்திறனை ஈடுசெய்யும் வகையில் குறைந்த அளவில் அதிக ஆற்றலை வழங்கும் உணவே நம்முடைய தேவை. அதற்கு பொருத்தமானவை சிறுதானியங்களே. அதேபோல் சிறுதானிய சமையலும் சட்டென்று முடிந்துவிடக்கூடியது.

    அரிசியும், உளுந்தும் ஊறவைத்து, அரை மணி நேரம் ஆட்டி, எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தட்டிலோ, தோசைக் கல்லிலோ வார்த்து, துணையாக சட்னியோ சாம்பாரோ செய்ய ஏக தடபுடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரிசி, உளுந்து போட்டு மாவாட்டி ஒரு வாரத்துக்கு பிரிஜ்ஜில் வைக்கிறார்கள். ஆனால் இந்த மாவு, அரைத்த மறுநாளே தன் உயிராற்றலை இழந்துவிடுகிறது.

    இதை பலர் உணர்வதில்லை. சிறுதானியங்கள் நெருப்புச்சத்து கொண்டவை என்பதால், உடலுக்கு பல நன்மை அளிப்பவை.

    • கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க அழைப்பு விடுத்துள்ளனர்.
    • சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் வட்டாரத்தில் மானியத்திட்டத்தில் கம்பு மற்றும் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க வேளாண்மைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆரோக்கியமான உணவு வகைகளில் சிறுதானியங்களுக்கு முதலிடம் உண்டு. நமது முன்னோர்கள் காலத்தில் பிரதான உணவாக, தினசரி பயன்பாட்டில் இருந்த சிறுதானியங்கள் தற்போது சிறப்பு உணவாக, எப்போதாவது பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. எனவே மீண்டும் சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநிலஅரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்துடன் நடப்பு ஆண்டை மத்திய அரசு சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் மடத்துக்குளம் வட்டாரத்தில் 100 ஏக்கரில் கம்பு மற்றும் 65 ஏக்கரில் உளுந்து செயல்விளக்கத் திடல் அமைக்க மானியம் வழங்கப்படவுள்ளது.

    இது குறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    மடத்துக்குளம் வட்டாரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தில் 100 ஏக்கரில் கம்பு செயல்விளக்கத் திடல் அமைக்க ஏக்கருக்கு ரூ. 2400 மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும் 65 ஏக்கரில் உளுந்து செயல் விளக்கத்திடல் அமைக்கும் வகையில் ஏக்கருக்கு ரூ. 1740 மானியமாக வழங்கப்படவுள்ளது.இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண்மைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இதுதவிர விவசாயிகள் பயன்பெறும் வகையில் உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள், விதைகள் உள்ளிட்டவை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது.அந்தவகையில் மடத்துக்குளம் வேளாண்மைத்துறை அலுவலக சேமிப்புக் கிடங்கில் உயர் விளைச்சல் ரகங்களைச் சேர்ந்த 4 டன் உளுந்து, 12 டன் நெல் விதைகள் இருப்பு உள்ளது. இதுதவிர பாரம்பரிய ரகமான தூயமல்லி நெல் விதை 280 கிலோ மற்றும் சோளம் 97 கிலோ இருப்பு உள்ளது. இதனை பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

    இவ்வாறு வேளாண்மைத்துறையினர் கூறினர்.

    • புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள்.
    • வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் வளர்க்க முடியும்.

    நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக்கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். வண்ணக்கோழி ரகங்களை எளிதான முறையில் வீடுகளில் புறக்கடை முறையில் வளர்க்க முடியும்.

    நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் சமீபகாலங்களில் கால்நடை பல்கலை கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வண்ணக் கோழி இனங்கள் உருவ ஒற்றுமையில் நாட்டுக்கோழி போன்றே காணப்பட்டாலும், இவை நாட்டு கோழிகளை விட மேம்பட்டவை. வண்ணக் கோழிகளை வீடுகளில் புறக்கடை முறையில் எளிதாக வளர்த்து பொருளாதாரம் ஈட்டலாம்.

    நாட்டு கோழிகளை வணிகரீதியாக வளர்க்கும் போது சில குறைபாடுகள் உள்ளன. ஆனால், நாட்டு கோழிகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள வண்ணக்கோழிகளில் அந்த குறைபாடுகள் களையப்பட்டுள்ளன. வண்ணக்கோழிகள் நாட்டுக் கோழிகளை விட துரிதமாக எடை கூடும். இவை அனைத்து வகையான தட்பவெப்ப நிலையிலும் வளரக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.

    மேலும், நாட்டுக்கோழிகளை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியும், அதிக முட்டைகள் இடும் திறனும் கொண்டது. இதன் முட்டைகள் நாட்டுக் கோழி முட்டைகளை போலவே பழுப்பு நிறம் கொண்டதால் நாட்டுக் கோழி முட்டைகளின் விலைக்கே விற்பனை செய்யலாம்.

    பொதுவாக, கோழிகளுக்கு வழக்கமான தீவனத்துடன் கரையான்களை உணவாக அளிக்கும் போது கோழியின் உடல் வளர்ச்சி வளர்ச்சி விகிதம் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. கரையான்களில் 36 சதவீதம் புரதம், 44 சதவீதம் கொழுப்பு உள்ளது.

    கரையான்களை உணவாக கொடுப்பதால் கோழிகளின் இதனால் தீவனச்செலவு பெரும்பகுதி குறைந்து விடும். கரையான்களை வீட்டின் அருகிலேயே உற்பத்தி செய்யலாம். கிழிந்த கோணிப்பை, பழைய துணி, காய்ந்த மாட்டு சாணம், உலர்ந்த இலை, கூழான மரக்கட்டைகள் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒரு மண் பானைக்குள் போட்டு அந்த பானையில் அடைத்து, நீர் தெளித்து தரையில் கவிழ்த்து வைக்கவும். 24 மணி நேரத்தில் இதில் கரையான் உற்பத்தி ஆகி இருக்கும்.

    வண்ணக்கோழிகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு ஆகியவற்றை 30 முதல் 35 பங்கும், கடலைப் புண்ணாக்கு 15 பங்கும், தவிடு வகைகள் 15 பங்கும், சமையலறை கழிவுகள் 5 சதவிகிதமும், கரையான் 10 பங்கும், புளியங்கொட்டை 10 பங்கும், கருவாட்டு தூள் 5 பங்கு, தாது உப்பு 1 பங்கு மற்றும் வைட்டமின் கலவை 1 பங்கும் எடுத்து நன்றாக இவற்றை கலந்து கொண்டு கோழி தீவனம் தயாரிக்கலாம்.

    இவைதவிர வேலி மசால், குதிரை மசால் மற்றும் அசோலா போன்ற நீலப்பச்சை பாசியை 5 முதல் 10 சதவிகிதம் அறுவடை செய்து கொடுக்கலாம். வேலிமசால், குதிரை மசால் போன்ற பசுந்தீவனங்களை அளிக்கலாம்.

    வண்ணக்கோழிகளை நோய்களில் இருந்து பாதுகாக்க தகுந்த காலகட்டத்தில் தடுப்பூசிகளை அளிப்பது நல்லது. இந்த வகை கோழிகளின் குஞ்சுகளுக்கு பிறந்த 6-வது நாள் லசோட்டா தடுப்பூசியும், 12-வது நாள் கம்போரா தடுப்பூசியும், 27-ம் நாள் மீண்டும் லசோட்டா தடுப்பூசியும், இரண்டாவது மாதத்தில் ராணிகெட் தடுப்பூசியும், தொடர்ந்து 3 மாதத்திற்கு ஒரு முறை ராணிகெட் தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும்.

    நாட்டுக் கோழிகளை ஒப்பிடும் போது வண்ணக் கோழிகள் அதிக அளவு சிறப்பம்சங்களை கொண்டுள்ளன. நாட்டுக் கோழிகள் 8 வார கால அளவில் 600 முதல் 800 கிராம் எடை அளவே எடை கூடுகிறது. ஆனால், வண்ணக் கோழிகள் இதே 8 வாரங்களில் ஆயிரத்து 500 முதல் ஆயிரத்து 600 கிராம் எடையை அடைகிறது. அதே போல், நாட்டு கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 7௦ முட்டைகள் வரை இடுகிறது.

    ஆனால், வண்ணக் கோழிகள் 100 முதல் 120 முட்டைகளை இடுகிறது.மேலும், நாட்டுக் கோழி முட்டையின் எடை 45 முதல் 50 கிராம் அளவே இருக்கிறது.ஆனால், வண்ணக் கோழிகளின் முட்டை 55 முதல் 65 கிராம் வரை இருக்கிறது. எனவே, தொழில்முனைவோர் வண்ணக் கோழிகளை வளர்த்து லாபம் பெறலாம்.

    • கோடை சீசனில் கம்மங்கூழ் தயாரிப்புக்காக கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும்.
    • கம்பு சாகுபடி செய்து கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.

    உடுமலை:

    உடுமலை சுற்றுப்பகுதிகளில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி கம்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தானிய தேவைக்காகவும் கால்நடைகளின் உலர் தீவனத்திற்கும் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கு

    றிப்பாக கோடை சீசனில் கம்மங்கூழ் தயாரிப்புக்காக கம்பு தானியத்தின் தேவை அதிகரிக்கும். எனவே இந்த சீசனை இலக்காக வைத்து பரவலாக வீரிய கம்பு சாகுபடி செய்து கதிர்கள் அறுவடைக்கு தயாராகி வருகிறது. கோடைகாலத்தில் கம்புக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    • உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.
    • உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    காங்கயம்,

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் கொங்கு மண்டலத்தில் உள்ள முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கும் கோவில்களில் முக்கியமான கோவிலாகும். சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற ஸ்தலமாகவும், விநாயகப் பெருமான் முருகனை வழிபடும் புகழ்பெற்ற தலமாகவும் விளங்குகிறது.

    வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத சிறப்பு இந்தக் கோவிலுக்கு உள்ளது. அது இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். முருகப் பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளை சுட்டிக் காட்டி அதை உத்தரவு பெட்டியில் வைக்க ஆணையிடுவார்.

    அவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் மூலவர் முன்பு பூப்போட்டு உத்தரவு கேட்டு அதன் பின்னர் அந்தப் பொருள் பெட்டியில் வைக்கப்படுவது வழக்கம். இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு கால நிர்ணயம் ஏதும் கிடையாது.

    அடுத்தொரு பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை பெட்டியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும். இவ்வாறு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொருள் ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையானதாகவும் இருக்கலாம். எதிர்மறையானதாகவும் இருக்கலாம்.

    முந்தைய காலங்களில் சைக்கிள் வைத்து பூஜிக்கப்பட்ட போது, அதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்து போனது. மண் வைத்து பூஜிக்கப்பட்டபோது நிலத்தின் விலை பல மடங்கு உயர்ந்தது. துப்பாக்கி தோட்டா வைத்து பூஜிக்கப்பட்ட போது கார்கில் போர் ஏற்பட்டு அதில் இந்தியா வெற்றி வாகை சூடியது. தண்ணீர் வைத்து பூஜிக்கப்பட்டபோது சுனாமி பேரலை ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாயினர்.

    இவ்வாறு எந்தப் பொருள் வைக்கப் படுகிறதோ, அது ஏதாவது ஒரு வகையில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 1 ந்தேதி முதல் கடலூர் பகுதியைச் சேர்ந்த கபில்தேவ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான ஸ்ரீபோகரின் திருவுருவப்படம் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

    1-ந் தேதி வைக்கப்பட்டு 2நாட்கள் மட்டுமே பூஜிக்கப்பட்ட நிலையில் கோவை, பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் உத்தரவான 3கிலோ விபூதி மற்றும் 7எலுமிச்சை பழங்கள் வைத்து ஏப்ரல்4-ந் தேதி முதல் பூஜிக்கப்பட்டு வந்தது.

    தற்போது பக்தர் ஒருவரின் கனவில் உத்தரவான நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது.இது போல் இதற்கு முன்பாக தானியங்கள் வைத்து பூஜை செய்தபோது அதன் விளைச்சல் உயர்வு மற்றும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. தற்போது கம்பு வைத்து பூஜை செய்வது மானாவாரி நிலங்களில் அதிக அளவில் இந்த ஆண்டு சாகுபடி பணிகள் நடைபெறலாம்.

    அதன் மூலம் உணவு தானிய பயிர் விளைச்சல் அதிகரிக்கலாம் என்பதை சிவன்மலை ஆண்டவன் உணர்த்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் தற்போது தென்மேற்கு பருவ மழை சராசரியாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்,அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கயம் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நிறைபடி கம்பு வைத்து பூஜை செய்வது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×