search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூத்த குடிமக்கள்"

    • மூத்த குடிமக்கள் இலவச பஸ் பயண டோக்கன்கள் பணிமனை அலுவலகத்தில் வழங்கப்படும்.
    • கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று சமர்ப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    மாநகர் போக்குவரத்து கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான இந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 42 மையங்களில் வருகிற 21-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை (காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை) வழங்கப்படும்.

    அதன் பின்னர், இவை வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்திலும் வழங்கப்படும். சென்னை சார்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் 2 வண்ண புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேற்கண்ட தகவல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
    • பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள்.

    வயசான காலத்துல என்னால வெளியில போய் காய்கறி வாங்க முடியல. எனக்கு தினமும் இரண்டு கீரை கட்டு வேணும். உங்களால வாங்கித் தர முடியுமா? என்று கேட்டதும் ஓடோடி சென்று உதவி செய்திருக்கிறார்கள் சென்னை போலீசார்.

    என்னது... சென்னை போலீஸ் கீரை வாங்குவதற்கெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கிறார்களா? என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இதனை நம்ப முடியவில்லையா? நம்பித்தான் ஆக வேண்டும். சென்னை போலீசார் முதியோர்களுக்காக அவர்களைத் தேடித் தேடி உதவி செய்து வருகிறார்கள். கரடு முரடான காக்கி சட்டைக்குள் இத்தனை கருணை உள்ளமா? என்று கண்களை ஆச்சரியத்துடன் விரிய வைக்கிறது சென்னை போலீசாருக்கும் முதியோர்களுக்கும் இடையேயான இந்த பந்த பாசப் பிணைப்பு.

    கீரைக்கட்டு மட்டுமின்றி மருந்து மாத்திரைகளையும் கூட முதியவர்களுக்காக வாங்கி கொடுத்து உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர போலீசார். இப்படி முதியவர்களுக்காக அவர்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை தேடி தேடி கண்டறிந்து தனியாக இருக்கும் முதியவர்களின் குடும்பத்தில் ஒருவர் போல தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சென்னை மாநகர காவல் துறையினர்.

    சென்னை மாநகர காவல் துறையில் முதியவர்களுக்கு உதவி செய்வதற்காகவே கடந்த ஜனவரி மாதம் பந்தம் என்கிற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. பரபரப்பான சென்னை மாநகரில் சென்னை வாசிகள் பலர் பெற்றோர்களை தனியாகவே தவிக்க விட்டு இருக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையாகாது. ஆசை ஆசையாய் வளர்த்து அவர்களை பார்த்து பார்த்து கவனித்த தாய் தந்தையர் பலரை பிள்ளைகள் தவிக்க விட்டு விட்டு தனியாகவே பிரிந்து வாழ்வதை பார்க்க முடிகிறது.

    இது போன்ற நேரங்களில் முதியோர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு யாரும் இருப்பதில்லை. இதனால் பல்வேறு சிரமங்களை வயதானவர்கள் சந்தித்து வருகிறார்கள். தங்களுக்கு தேவையானதை யாராவது தினமும் வாங்கிக் கொடுக்கமாட்டார்களா? என்கிற ஏக்கம் தனியாக வசிக்கும் ஒவ்வொரு முதியவர்களின் மனதிலுமே மேலோங்கி காணப்படுகிறது. பெற்ற பிள்ளைகளே தவிக்க விட்டு விட்டு சென்று விடும் நிலையில் பக்கத்தில் இருப்பவர்களா ஓடோடி சென்று உதவி செய்துவிடப் போகிறார்கள்?



    இப்படிப்பட்ட சூழலில் தான் முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பந்தம் என்கிற பெயரில் சென்னையில் வசிக்கும் முதியவர்களுக்கு உதவுவதற்காக புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலும் கலந்து கொண்டார்.

    இந்த பந்தம் திட்டத்தின் மூலமாக முதியவர்களை பாசத்தோடு கவனித்துக் கொள்வது என்கிற நோக்கத்தில் அதற்காக தனித்தனி காவலர்கள் கமிஷனர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள். கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மேற்பார்வையில் இணை கமிஷனர் கயல்விழி தலைமையில் பெண் போலீஸ் படையினர் 24 மணி நேரமும் 75 வயதை தாண்டிய முதியவர்களுக்கு உதவுவதற்காக தயாராக இருக்கிறார்கள். தங்களது தேவைகளுக்காக முதியவர்கள் 9499957575 என்ற கட்டணமில்லா இலவச செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தொலைபேசி எண்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு முதியவர்கள் எந்த நேரமும் அழைக்கலாம் என்று போலீசார் அறிவித்திருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே இந்த தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு சென்னை மாநகரிலுள்ள வயதான தாத்தா பாட்டிகளில் தனியாக வசிப்பவர்கள் தினமும் சென்னை போலீசை அழைத்து உதவி கேட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 28 பேர் தொடர்பு கொண்டு பேசி உள்ள நிலையில் இதுவரை

    150-க்கும் மேற்பட்டோர் உதவி கேட்டு நாடி இருக்கிறார்கள். இப்படி உதவி கேட்டு பேசும் முதியவர்களில் பலர் தங்களது உணவு தேவைகளை பூர்த்தி செய்யவும் மருந்து மாத்திரைகள் வாங்கி தரவும் போலீசாரின் உதவியை நாடி உள்ளனர்.

    வயதான மூதாட்டி ஒருவர் எனக்கு தினமும் கீரை வேண்டும். வெளியில் சென்று என்னால் வாங்க முடிவதில்லை அது கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? என்று குழந்தைகள் தின்பண்டங்களை கேட்பது போல கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பந்தம் பிரிவு போலீசார் அதற்கென்னம்மா... ஏற்பாடு செய்து விட்டால் போச்சு எனக் கூறி தினமும் கீரை கட்டு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கீரை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவரிடம் சொல்லி மூதாட்டியின் வீட்டுக்கு தினமும் இரண்டு கட்டு கீரையை கொடுக்க அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதேபோன்று மேலும் சிலர் தங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதாகவும் ஆனால் அதற்கான மருந்து மாத்திரைகளை வெளியில் சென்று வாங்குவதற்கு சிரமமாக உள்ளது என்றும் அதனை யாராவது வீடு தேடி வந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர். அதற்கும் போலீசார் ஏற்பாடு செய்து உள்ளனர்.

    அதே நேரத்தில் இட பிரச்சினை உள்ளது. அதனை தீர்ப்பதற்கு உதவி செய்ய முடியுமா? என்றும் முதியவர்கள் பலர் உதவி கேட்டுள்ளனர். இது போன்ற பிரச்சினைகளுக்கும் போலீ சார் சட்ட ஆலோசனைகளை வழங்கி இருக்கிறார்கள். 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இதுபோன்று தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ள சென்னை மாநகர காவல் துறையினர் முதியவர்களை பாதுகாக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த பந்தம் திட்டம் காவல்துறைக்கும் மூத்த குடிமக்களுக்கும் இடையேயான பாச பந்தம் என்று கூறி பெருமிதப்பட்டார் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர். ஆனால் சென்னை மாநகர காவல் துறையினர் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். முதியவர்களை பாதுகாக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கியுள்ள இந்த பந்தம் சிறப்பு திட்டம் நிச்சயம் பாராட்டுதலுக்குரியதாகவே மாறியிருக்கிறது என்றால் அது மிகையல்ல. முதியோருக்கும் போலீசுக்கும் இடையேயான இந்த பாச பந்தம் காவலர்களை உணர்வுப் பூர்வமான மகன்களாக... மகள்களாகவும் மாற்றி இருக்கிறது என்றே கூறலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். அது 100 சதவீதம் உண்மைதான் என்பதையும் சென்னை போலீசாரின் செயல்பாடுகள் உணர்த்தியுள்ளன.

    • ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை?
    • இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது

    மோடியின் ஆட்சியில் ரயில்வேதுறை சுய விளம்பரத்திற்காகவே பயன்படுத்தப்படுகிறது. மோடியின் 3டி செல்ஃபி பாயின்ட்கள் மற்றும் வந்தே பாரத் நிகழ்வின் பச்சைக் கொடிகளை காட்டி வேண்டுமென்றே ரெயில்வே துறையை சீரழித்துள்ளது பாஜக என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மல்லிகார்ஜூன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் ரயில்வே துறை பற்றிய 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    1. ரயில்வேயில் 3 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்களை பாஜக அரசு ஏன் நிரப்பவில்லை? இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் இடஒதுக்கீடு பெறக்கூடிய SC, ST, OBC, EWS மக்களுக்கு பாஜக எதிரானதா?

    2. 2013-14 காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரயில் பயணத்தில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பயணியின் சராசரி விலை 0.32 பைசாவில் இருந்து 2023ல் 0.66 பைசாவாக இருமடங்காக உயர்ந்தது ஏன் ?

    3. 2017 மற்றும் 2021 க்கு இடையில் 1,00,000 க்கும் மேற்பட்ட ரயில் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன. கிட்டத்தட்ட 300 பேரின் விலைமதிப்பற்ற உயிரைப் பறித்த கொடிய ஒடிசா ரெயில் விபத்து (2023) இந்த பட்டியலில் இல்லை. ரெயில்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் தடுக்கக்கூடிய எதிர்ப்பு தொழில்நுட்பம் ரெயில்வே நெட்வொர்க்கில் 2.13% மட்டுமே உள்ளது என்பது உண்மையல்லவா?

    4. கொரோனா பொது முடக்கத்தான் போது , மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சலுகைகளை மோடி அரசு ஏன் திரும்பப் பெற்றது? இதன் மூலம் ஒரே ஆண்டில் ₹2242 கோடியை மோடி அரசு கொள்ளையடித்தது.

    5. CAG அறிக்கையின் படி, ₹58,459 கோடியில் 0.7% நிதி மட்டுமே ரெயில்வே பாதை புதுப்பித்தலுக்கு செலவிடப்பட்டது ஏன்? இதுவே, மோடி அரசாங்கத்தால் கூறப்படும் 180 கிமீ வேகத்திற்குப் பதிலாக, வந்தே பாரத் அதிவேக ரெயில்களின் சராசரி வேகம் மணிக்கு 83 கி.மீ. தான்.

    6. ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் உடன் இணைக்கும் நடவடிக்கை என்பது பின் வாசல் வழியாக அதன் நிதியை குறைப்பதற்கான ஒரு வழியாகும் என்பது உண்மையல்லவா ?

    7. இந்திய ரெயில்வேவை தனியார்மயமாக்கும் பெரும் திட்டத்தை மோடி அரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது உண்மையல்லவா ? மோடி அரசின் தேசிய ரெயில்வே திட்டத்தின் (2021) படி, அனைத்து சரக்கு ரெயில்களும் 2031க்குள் தனியார்மயமாக்கப்படும் என்றும் 750 ரெயில் நிலையங்களில் 30 சதவீதம் தனியார்மயப்படுத்தப்படும் என்று பாஜக அரசு அறிவித்துள்ளது.

    லாபம் ஈட்டும் அனைத்து ஏசி பெட்டிகளும் தனியார் மயமாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கும் இரண்டாம் வகுப்பு பயணிகள் ரெயில்கள் மட்டுமே ரயில்வேயிடம் விடப்படும். இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிர்நாடியாக ரயில்வே உள்ளது.

    ஆனால் மோடி அரசு ரெயில்வே துறையின் நிதி, பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் மலிவு விலையில் மக்கள் பயன்படுத்தும் வசதியை அழித்துவிட்டது.

    2012-13ல் 79% ஆக இருந்த மெயில் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 2018-19ல் 69.23% ஆக குறைந்ததில் ஆச்சரியமில்லை.

    காங்கிரஸ் கட்சி ரயில்வே துறைக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும்" என்று பதிவிட்டுள்ளார். 

    • கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது
    • 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்

    மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் இந்தியன் ரெயில்வே ₹5,800 கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியன் ரெயில்வே பதில் அளித்துள்ளது.

    அதில், மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் மார்ச் 20, 2020 முதல் ஜனவரி 31, 2024 வரை ரெயில்வே துறைக்கு 5,875 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பொது முடக்கத்தின்போது மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணங்களில் வழங்கப்பட்ட சலுகைகளை ரயில்வே அமைச்சகம் நீக்கியது.

    இந்த சலுகை திரும்பப் பெறப்பட்டதிலிருந்து, மூத்த குடிமக்கள் ரயில் பயணங்களுக்கு மற்ற பயணிகளுக்கு இணையாக முழு கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

    ரயில்வே விதிமுறைகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் திருநங்கைகளும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மூத்த குடிமக்களாக கருதப்படுவார்கள்.

    அதன்படி, கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு, ரெயில் கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும், ஆண் மற்றும் திருநங்கைகளுக்கு 40 சதவீத சலுகையும் ரெயில்வே வழங்கியது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் பிரிவில் சுமார் 13 கோடி ஆண்களும், ஒன்பது கோடி பெண்களும் மற்றும் 33,700 திருநங்கைகள் மொத்தமாக 13,287 கோடி பணம் செலுத்தி ரெயில் டிக்கெட் பெற்றுள்ளனர்.

    • முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
    • அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனி:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர் மற்றும் முக்திநாத் ஆகியவற்றிற்கு ஆன்மிகப் பயணம் சென்று வருபவர்களுக்கு ஆண்டுதோறும் மானியம் வழங்கப்படும் என தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

    இதேபோல் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரேமுறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு 5 முறை அதாவது 1,000 பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்து வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இதன் முதற்கட்டப் பயணம் கடந்த ஜன.28ம் தேதி சென்னை கந்தக்கோட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

    இதில் பங்கேற்ற 207 மூத்த குடிமக்களும் அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் சிறப்பாகவும், மிகுந்த மனநிறைவை தந்ததாகவும் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களை சேர்ந்த 200 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அறுபடை வீடு ஆன்மீகப் பயணத்தின் 2ம் கட்டப் பயணம் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்கியது.

    பழனியில் சாமி தரிசனம் செய்த பக்தர்களை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பாரதி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் இந்தக்குழு திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய திருக்கோவில் தரிசனத்துக்கு பின் பழனியில் நிறைவடைகிறது. இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப்பைகள் வழங்கப்படுகின்றன. மேலும் அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர்.

    • அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் நாளை பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்குகிறது.
    • திருச்செந்தூர், பழ முதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனியில் நிறைவடைகிறது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணம் நாளை பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இருந்து தொடங்குகிறது. பின்னர், திருச்செந்தூர், பழ முதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை மற்றும் திருத்தணி ஆகிய கோவில்களில் தரிசனம் செய்த பின் பழனியில் நிறைவடைகிறது.

    இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் போர்வை, துண்டு, குளியல் சோப், டூத் பிரஷ், பேஸ்ட், முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் எண்ணெய், சீப்பு போன்ற பொருட்கள் அடங்கிய பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றன. மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது
    • இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது.

    அகமதாபாத்:

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியது.

    இதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த குடிமக்களுக்கான சலுகையை இந்திய ரெயில்வே ரத்து செய்தது. ஆனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதமே ரெயில் சேவை முழுவதுமாக தொடங்கப்பட்ட நிலையில் இப்போது வரை மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் புல்லட் ரெயில் திட்டப்பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, 'மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை மீண்டும் வழங்கப்படுமா?' என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அவர் நேரடியாக பதிலளிக்காமல் "இந்திய ரெயில்வே ஏற்கனவே ஒவ்வொரு ரெயில் பயணிக்கும் ரெயில் கட்டணத்தில் 55 சதவீத சலுகையை வழங்கி வருகிறது. சேரும் இடத்துக்கான ரெயில் டிக்கெட் ரூ.100 என்றால், ரெயில்வே கட்டணம் ரூ.45 மட்டுமே. இதன் மூலம் ரூ.55 சலுகையாக அளிக்கப்படுகிறது" என கூறினார்.

    • 2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்யத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.
    • 40 மையங்களில் பயண அட்டை மற்றும் டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    மாநகர் போக்குவரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2023 டிசம்பர் மாதம் வரை பயணம் செய்யத்தக்க வகையில், மூத்த குடிமக்களுக்கு பயண அட்டை மற்றும் டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

    அடுத்த அரையாண்டிற்கு ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் மற்றும் பயண அட்டைகள் அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், மந்தைவெளி, தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பே.நி, மத்திய பணிமனை, சென்ட்ரல் பேருந்து நிலையம், பிராட்வே உள்ளிட்ட 40 மையங்களில் வரும் 21.12.2023 முதல் 31.01.2024 வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், 01.02.2024 முதல் அந்தந்த பணிமனைகளின் அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

    சென்னைவாழ் மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை கொண்டு வர வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்.

    மேலும் ஏற்கனவே இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெற்று, தற்பொழுது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது அடையாள அட்டையுடன் தங்களின் தற்போதைய வண்ண பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.
    • மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்னவிற்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சையில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ் போல் பகல்நேர சேர்கார் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றை புதிதாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்-அரியலூர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை, பட்டு க்கோட்டை-மன்னார்குடி, கும்பகோணம்-விருத்தா சலம் ரெயில் பாதை திட்டங்களுக்கு அதிகளவு பணம் ஒதுக்கி திட்டங்களை உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    பூதலூரில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சையில் இருந்து திருப்பதிக்கும்,தூத்துக்குடிக்கும், திருவனந்தபுரத்திற்கும் புதிதாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை 5 ரெயில் பெட்டிகள் உள்ள கோச் ஒன்றை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக 3 பொது பெட்டிகளை இணைக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் மாரியம்மன் கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்களை நிறுத்துவதற்கு மத்திய அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

    காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுகக்கான ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள அட்டையின் நோக்கமாகும்.
    • இ-சேவை மையத்துக்கு வருகை தருகின்ற மூத்தகுடி மக்களுக்கு வங்கி கணக்கு,ஏடிஎம் உள்ளிட்டவை இருப்பதில்லை.

    உடுமலை :

    நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடு தழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள அட்டையின் நோக்கமாகும்.அதில் கண்ணின் விழித்திரை, கைரேகை போன்றவற்றுடன் பெயர்,முகவரி,பிற சுய குறிப்புகளும்,புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்பட்டது.அப்போது மேற்கொள்ளப்பட்ட பதிவில் ஒரு சில குறைபாடுகள் தவறுகள் இருந்ததால் அதை திருத்தம் செய்ய பொதுமக்கள் இன்றளவும் இ-சேவை மையத்தை நாடி வருகின்றனர். இந்த சூழலில் ஆதார் பதிவில் திருத்தங்கள் மேற்கொள்ள நேரடியாக பணத்த செலுத்தும் நடைமுறை மாறி ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவிக்கப்பட்டது.இதனால் திருத்தம் மேற்கொள்ள வருகின்ற மூத்த குடிமக்கள் கட்டணம் செலுத்த முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    ஆதார் எண் சேவையை வாக்காளர் அடையாள அட்டை, மின்கட்டணம், பான் கார்டு உள்ளிட்ட மற்ற சேவைகளுடன் சேர்க்கப்பட்டதால் இரட்டை பதிவு, போலிகள் கண்டறியப்பட்டது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் ஆதார் பதிவு முதன் முதலில் மேற்கொண்ட போது முகவரி, வயது, தாய் தந்தை, கணவர் பெயர், பிறந்த தேதி, செல்போன்எண் போன்றவை உள்ளீடு செய்ததில் குறைபாடுகள் இருந்து வருகிறது. அதை திருத்தம் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் சம்மந்தப்பட்ட தாலுகா மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்த சூழலில் ஆதார் பதிவில் திருத்தம் மேற்கொள்வதற்கு நேரடியாக பணம் பெற்ற சூழல் மாறி ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்துமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்வாறே வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இ-சேவை மையத்துக்கு வருகை தருகின்ற மூத்தகுடி மக்களுக்கு வங்கி கணக்கு,ஏடிஎம் உள்ளிட்டவை இருப்பதில்லை. ஒரு சிலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் கூட டிஜிட்டல் பணம் பரிமாற்றத்துக்கான வழிமுறைகள் விழிப்புணர்வு தெரிவதில்லை.இதனால் மூத்த குடிமக்கள் கட்டணம் செலுத்த இயலாமல் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர். ஒரு சில மூத்த குடிமக்கள் அங்குள்ள வேறொருவரிடம் பணம் கொடுத்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றி வருகின்றனர்.அப்போது சம்பந்தப்பட்ட நபரின் இணையதளம்,வங்கிக் கணக்கு இயங்காமல் போய்விடுகிறது.இதன் காரணமாக பதிவை திருத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு குறிப்பிட்ட சேவையை தக்க தருணத்தில் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாக வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆதார் திருத்தம் மேற்கொள்ள ஆன்லைன் கட்டணம் செலுத்துவதில் இருந்து மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளித்து முன்பு போல் நேரடியாக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • 2020-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது.
    • மூத்த குடிமக்கள் பயணம் மூலம் கிடைக்கும் வருவாய் சீராக உயர்ந்து வருகிறது.

    புதுடெல்லி :

    60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரெயில்களில் 40 சதவீத கட்டண தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது.

    ரெயில்களில் பல்வேறு பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளில் மூத்த குடிமக்களுக்கான சலுகை மட்டும் 80 சதவீத இடத்தை பிடித்தது.

    இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி, மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. ரெயில் சேவை முழுமையாக சீரடைந்த போதிலும், அந்த சலுகை இன்னும் வழங்கப்படவில்லை.

    மீண்டும் கட்டண சலுகை வழங்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் பயணத்தால் கிடைத்த வருவாய் குறித்து கேள்வி கேட்டிருந்தார்.

    அதற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ரெயில்வே கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள் பயணம் மூலம் கிடைக்கும் வருவாய் சீராக உயர்ந்து வருகிறது. 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை 7 கோடியே 31 லட்சம் மூத்த குடிமக்கள், ரெயிலில் பயணம் செய்தனர்.

    அவர்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 464 கோடி வருவாய் கிடைத்தது. கட்டண சலுகையை அளித்திருந்தால், ரூ.1,500 கோடி குறைவாகத்தான் கிடைத்திருக்கும். சலுகையை ரத்து செய்ததன் மூலம், ரூ.1,500 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது.

    அதுபோல், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை ரெயில்களில் பயணித்த மூத்த குடிமக்கள் மூலம் ரூ.5 ஆயிரத்து 62 கோடி வருவாய் கிடைத்தது.

    இதில், கட்டண சலுகையை ரத்து செய்ததால் கிடைத்த ரூ.2 ஆயிரத்து 242 கோடி கூடுதல் வருவாயும் அடங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்களில் பயணம் செய்ய மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது.
    • கொரோனா காலத்தில் அவர்களுக்கான ரெயில் கட்டணச் சலுகையை ரெயில்வே நிறுத்திவிட்டது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் ரெயில்களில் பயணம் செய்வதற்கு மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டு வந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 சதவீதமும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் கொரோனா தொற்று காலத்தில் வைரஸ் தொற்றைத் தடுக்க மூத்த குடிமக்களின் பயணங்களைத் தவிர்க்கும் வகையில் அவர்களுக்கான ரெயில் கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டது.

    தற்போது கொரோனா தொற்றில் இருந்து நாடு மீண்டு வந்துவிட்ட நிலையில், மூத்த குடிமக்களுக்கு ரெயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று உரத்த குரல் எழுந்தது.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் எம்.கே.பாலகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அசனுதீன் அமானுல்லா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், அந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் அரசியல் சாசனம் பிரிவு 32-ன் கீழ் கோர்ட்டு உத்தரவு பிறப்பிப்பது பொருத்தமாக இருக்காது. மூத்த குடிமக்களின் தேவைகளையும், நிதி விளைவுகளையும் கருத்தில் கொண்டு, அரசுதான் இதில் முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

    ×