என் மலர்
நீங்கள் தேடியது "முதலீட்டாளர்கள் மாநாடு"
- உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது.
- இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
லக்னோ :
உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்களின் அதிபர்கள் கலந்து கொண்டு உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர்.
இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் இந்த மாநாட்டில் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரூ.33.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டு உள்ளன. இது மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவும்.
இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் முதலீட்டுக்கு பாதுகாப்பான இடமாக மாநிலம் உருவாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் முன்பெல்லாம் தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் மட்டுமே முதலீடுகள் குவிந்தன. ஆனால் இந்த மாநாட்டின் மூலம் மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீட்டு திட்டங்கள் கிடைத்து உள்ளன.
இந்த முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில மந்திரிகளும், அதிகாரிகளும் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவார்கள். 'சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம்' என்ற பிரதமர் மோடியின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் மாநில அரசு பணியாற்றி வருகிறது.
தொழில்முனைவோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலை முதல் களத்தில் தங்கள் முதலீட்டை வழங்குவது வரை அவர்களுக்கு உதவுவதற்காக 'ஊக்குவிப்பு கண்காணிப்பு அமைப்பு' போன்ற வெளிப்படையான ஒற்றைச் சாளர அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இத்தகைய சிறந்த சட்டம்-ஒழுங்கு நிலவரம், முதலீட்டாளர்களை இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கிறது. புதிய இந்தியாவின் ஒரு வளர்ந்த மாநிலமாக உத்தரபிரதேசத்தை மாற்ற மாநில அரசு உறுதிபூண்டுள்ளது
இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.
- உயர்மட்ட குழு ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது.
- சுமார் 5 ஆயிரம் பிரதிநிதிகள் சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
இந்திய அளவில் பொருளாதாரத்தில் 2-வது பெரிய மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் வகையில் இலக்கு நிர்ணயித்து மாநில பொருளாதாரத்தை வலுவடைய செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறார்.
இதற்காக வெளிநாட்டு முதலீடுகளை பெரிய அளவில் ஈர்த்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வைப்பதுடன் இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடவும் திட்டமிட்டு வருகிறது.
இதற்காக உலக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே அமைச்சர் தங்கம்தென்னரசு தலைமையில் உயர்மட்ட குழு ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், தைவான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மே 23-ந்தேதி முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கவும், புதிய முதலீடு களை ஈர்க்கும் விதமாகவும் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று வந்தார். அவருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உயர் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.
இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் 3,233 கோடி ரூபாய் அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் வருகிற ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான சின்னத்தை (லோகோ) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்துவதற்கு பூர்வாங்க ஏற்பாடுகள் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்த மாநாட்டுக்காக 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதில் பல நாடுகள் மாநாட் டில் பங்கேற்க சம்மதம் தெரிவித்து வருகின்றன.
இதன் மூலம் இந்த நாடுகளில் இருந்து சுமார் 5 ஆயிரம் பிரதிநிதிகள் சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளதால் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக வரவேற்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
- அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.
தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "திராவிட மாடல் அரசு ஒரு டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டும் நோக்கில் 2024-ம் ஆண்டு தொடக்கத்திலேயே உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. இதைத் தொடர்ந்து, எட்டு நாட்கள் பயணமாக ஸ்பெயின் செல்கிறேன். அடுத்த மாதம் 7-ம் தேதி காலை சென்னை திரும்புகிறேன்."
"கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றிருந்தேன். அந்த பயணத்தின் போது 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதேபோல கடந்த வருடம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் பயணத்தின் போது 1,342 கோடி ரூபாய்க்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது."
"ஸ்பெயின் நாட்டிலும் முதலீட்டாளர் மாநாடு நடக்க இருக்கிறது. இதில் ஸ்பெயின் முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. வெளிநாட்டு பயணங்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் முதலீடுகளை ஈர்க்க முடியும் என நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.
- ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
- பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார்.
சென்னை:
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாட்கள் அரசு முறைப்பயணமாக ஸ்பெயின் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.
ஸ்பெயினில் இன்று நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார்.
- சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட முதலமைச்சர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
- முதலமைச்சருடன் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.
ஸ்பெயின்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 8 நாள் பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். சென்னையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட அவர் துபாய் வழியாக ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட் சென்றடைந்தார்.
அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில் துறை செயலாளர் அருண்ராய் உள்ளிட்டோரும் சென்று உள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் ஸ்பெயின் நாட்டுக்கான இந்திய தூதர் கே.பட்நாயக் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
இதை தொடர்ந்து இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார்.
- மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
- தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது.
ஸ்பெயின்:
ஸ்பெயின் நாடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். அவர் பேச்சு விவரம் வருமாறு:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இருக்கும் தமிழ்நாடு என்ற மிக முக்கியமான மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக நான் இருக்கிறேன்.
எங்களது கட்சி 75 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆறு முறை அந்த மாநிலத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. திருவள்ளுவரை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் தமிழ் மொழியில்தான் திருக்குறளை எழுதினார். அவரது திருக்குறள் உலகின் 200 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய பெருமையும் பாரம்பரியமும் கொண்ட மாநிலத்தில் இருந்து நான் வந்துள்ளேன்.
கால்பந்து விளையாட்டில் புகழ் பெற்ற நாடு ஸ்பெயின். ஸ்பெயினை நான் இன்னும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்த வரையில் கலைகளின் நாடாகக் காட்சியளிக்கிறது. உங்களது கலை உணர்வு ஒவ்வொரு கட்டிடத்திலும், தெருக்களிலும், ஒவ்வொரு மூலையிலும் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு 'பார்ச்சூன் 500' நிறுவனங்கள் மற்றும் 20 'பார்ச்சூன் 2000' நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல, இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த இரண்டு பொருளாதாரங்களுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.
கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கி டீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் எங்கள் நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, உங்களுடைய முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.
இதற்கு முன்பு ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளேன். தொடர்ச்சியாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல இருக்கிறேன். கடந்த ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் நாங்கள் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்து இருந்தன.
மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் எங்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள்.
* மிகப் பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன.
* 130க்கும் மேற்பட்ட "ஃபார்ச்சூன் 500" நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளதே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று. இதன் தொடர்ச்சியாக ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றது.
இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில் நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற் கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங் கள் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு, பல்வேறு தொழில் கொள்கைளின் கீழ் உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம். இவை குறித்து மாண்புமிகு தொழில்துறை அமைச்சரும், அலுவலகர்களும் விரிவாக உங்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தங்களது முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டி கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.
அந்நாட்டின் தலைநகர் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் துவங்க உகந்த சூழல் நிலவுவதாகவும், தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கூறினார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற முதலீட்டாளர்கள் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார்.
தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும், தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் ஸ்பெய்ன் நாட்டின் தொழில்துறையினருக்கும் அங்குச் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கும் எடுத்துரைத்தேன்.
— M.K.Stalin (@mkstalin) January 30, 2024
எனது #UAE, ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், இம்மாதம் நாம் நடத்திய #GIM2024… pic.twitter.com/LgUBqCXwGp
இந்த நிலையில் இன்று ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அவருக்கு அதிகாரிகள் தொழில் நுட்பங்கள் பற்றி விளக்கி கூறினார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
- ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது.
- முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு தொழில்துறை குழுமங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் 29-ந்தேதியன்று தொழில் முதலீட்டு மாநாட்டில் கலந்துரையாடினார்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று (30-ந்தேதி) ஸ்பெயின் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார்கள். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டில் முதலீடுகள் செய்திட வலியுறுத்தினார்.
ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரபேல் மேத்யோ, மேனூல் மன்ஜன் வில்டா (சி.இ.ஓ, வாட்டர் டிவிஷன்) ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
இத்துறையின் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக விளக்கினார். இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் இத்துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லஸ் விளாகியூஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்கள்.

இச்சந்திப்பின்போது, ரோக்கா நிறுவனம், தற்போது தமிழ்நாட்டில் பெருந்துறையிலும், ராணிப்பேட்டையிலும் செயல்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் இந்த நிறுவனத்தின் விற்பனையை மேலும் உயர்த்திடவும், சர்வதேச ஏற்றுமதிக்காகவும், இதன் விரிவாக்கத்தையும் புதிய தொழில் அலகுகளையும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இத்துறையில் முதலீடு செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தமிழ்நாட்டில் நிலவி வரும் சாதகமான சூழல் பற்றி விளக்கினார்.
இந்த கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலையை நிறுவிடவும், ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் ரோக்கா நிறுவனம் முன் வந்துள்ளது. இதனால் 200 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
இச்சந்திப்புகளின்போது, கேய்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு உடனிருந்தார்.
இதனை அடுத்து, வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டு ஆலோசனைகளை மேற் கொள்ள உள்ளார்.
- சிகாகோவில் தமிழர்களை சந்தித்து பேச ஏற்பாடு.
- 29-ந்தேதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பு.
சென்னை:
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கிய பங்களிக்கிற மாநிலமாகவும் தமிழ்நாட்டை உயர்த்திடும் பெரும் லட்சிய இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.
இதற்காக அவர் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார்.

அந்த வகையில் ஏற்னவே முதற்கட்டமாக முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு ரூ.2,80,600 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.
இரண்டாம் கட்டமாக ஐக்கிய அரபு நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துகிற வகையில் 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
3-ம் கட்டமாக 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது.
இந்த மாநாடு மூலம் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளும், 14 லட்சத்து 54 ஆயிரத்து 712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 13 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டது.
4-ம் கட்டமாக 27.1.2024 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறை அமைச்சக அதிகாரிகள் தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
இதன் பயனாக ரூ.3,440 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 21-ந்தேதி தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1,7,616 கோடி முதலீட்டில் 64,968 பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க கூடிய 19 தொழில் திட்டங்களை தொடங்கி வைத்து ரூ.51,157 கோடி முதலீட்டில் அமைய உள்ள 28 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க நாளை இரவு அமெரிக்கா செல்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டு 28-ந்தேதி சான்பிரான்சிஸ்கோ நகரை சென்றடைகிறார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அமெர்ரிக்காவுக்கான இந்திய தூதர் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து 29-ந்தேதி சான்பிரான்சிஸ் கோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
அதைத் தொடர்ந்து 31-ந்தேதி புலம் பெயர்ந்த இந்தியர்களுடனான சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார். சிகாகோவில் அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து பேசுவதற்கும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அமெரிக்காவில் பல்வேறு நாட்டு தொழில் அதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சுமார் 30 இடங்களுக்கு சென்று முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடுவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இதில் அமெரிக்காவில் முன்னணி 500 நிறுவனங்களின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து அடுத்த மாதம் 14-ந்தேதி (செப்டம்பர்) சென்னை திரும்புவார் என தெரிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அமெரிக்கா செல்வதை யொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பே தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்று விட்டார்.
சிகாகோவில் அமெரிக்க தமிழர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதையொட்டி அது குறித்து சிகாகோவில் அமெரிக்க தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதேபோல் அங்கு நடைபெற உள்ள மற்ற நிகழ்ச்சிகள் குறித்தும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.
- திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
- தாமதமாக வந்ததற்கான காரணத்தை கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் போபாலில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று காலை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
இதையடுத்து, மாநாட்டில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் தாமதமாக வந்ததற்கு தன்னை மன்னிக்குமாறு கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கி கூறினார்.
அப்போது பேசிய அவர், "இங்கு வந்ததும் மாநிலத்தில் தேர்வுகள் நடைபெற இருப்பதும், மாணவர்கள் அதில் பங்கேற்க செல்லும் நேரமும், நான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரும் நேரமும் ஒன்றாக இருந்தது. ஒரே நேரமாக இருப்பதால், நாம் வெளியே வந்தால், போக்குவரத்து மாற்றங்களால் மாணவரகள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படலாம்.
இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவது என முடிவு செய்தேன். இதனால் தான் நான் இங்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. தாமதமானதால் ஏற்பட்ட இடையூறுக்கு மீண்டும் உங்கள் அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.
- சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏராளமான தொழில் அதிபர்கள் வந்திருந்தனர்.
- இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சென்னை:
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு முதலீட்டு மாநாடு என்ற பெயரில் அவ்வப்போது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார்.
தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளும் தமிழகத்தில் நிறைந்து உள்ளதாகவும், எனவே தொழில் அதிபர்கள் தாராளமாக இங்கு வந்து தொழில் முதலீடு செய்யலாம் என்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கும் மார்ச் மாதம் நேரில் சென்று தொழில் அதிபர்களை சந்தித்து ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.
தமிழ்நாட்டில் லுலு நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் அப்போது கையெழுத்தானது.
அதில் 2500 கோடி ரூபாய் முதலீடுகளில் 2 வணிக வளாகங்கள் மற்றும் 1000 கோடி ரூபாய் முதலீடுகளில் ஒரு ஏற்றுமதி சார்ந்த உணவு பதப்படுத்தும் திட்டமும் தமிழ்நாட்டில் கொண்டு வரப்படும் என்று லுலு நிறுவனம் அறிவித்தது.
அதன்படி வணிக வளாகங்கள் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனை தொடர்ந்து சர்வதேச முதலீடுகளை மேலும் ஈர்க்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் லண்டன் செல்லவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதனிடையே தொழில் செய்ய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. இது மட்டுமின்றி தொழில் சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மை மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாட்டுக்கும் இடம் கிடைத்துள்ளது.
தி.மு.க. அரசு அமைந்து ஓராண்டு நிறைவு பெற்று உள்ள நிலையில் இதுவரை ரூ.2 லட்சத்துக்கு 20 ஆயிரம் கோடிக்கு தொழில் முதலீடுகள் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும், இதன்மூலம் 2.26 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.
இந்த சூழலில் மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சென்னையில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு ஏராளமான தொழில் அதிபர்கள் வந்திருந்தனர்.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதாகவும், சாலை வசதி, ஏற்றுமதி, இறக்குமதிக்கான வசதிகள், குடிநீர், மின்சார வசதி உள்ளதாகவும் தெரிவித்த அவர், தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு உடனே அனுமதி கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு முன்னின்று செய்து தரும் என்று கூறினார்.
அதன்பிறகு புதிய தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. மொத்தம் 60 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டன.
இதன்மூலம் புதிதாக 1.25 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்துக்கு வரும் நிலையில் 74,898 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகி உள்ளது.
அது மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் ரூ.1,494 கோடி முதலீட்டில் முடிவுற்ற 12 நிறுவனங்களின் புதிய திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும் ரூ.22,252 கோடி முதலீட்டில் அமைய உள்ள 21 தொழில் நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன்மூலமும் 24,754 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவன இயக்குனர் பூஜா குல்கர்னி உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு உயிர் அறிவியல் கொள்கை-2022, தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கொள்கை 2022, தமிழ்நாடு டெக்ஸ்பீரியன்ஸ் இணையம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட்டன.