என் மலர்
நீங்கள் தேடியது "சசி தரூர்"
- கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- 1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்ததற்காக எம்.பி. சசி தரூரை காங்கிரஸ் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.
தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை என்றும், கட்சியின் கருத்துக்களைப் பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என்றும் தலைமை தரூருக்கு புத்திமதி வழங்கி உள்ளது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. தரூரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான தனிப்பட்ட முறையில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கூட்டத்தில் சசி தரூருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானுடன் இந்தியா மோதல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக சசி தரூரின் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு முரணாக அமைத்திருந்தன.
1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார். அதே வேளை தற்போதைய சூழலில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோடி இணங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
ஆனால் இந்திரா காந்தி இருந்தபோது நிலைமை வேறு, இப்போது சூழ்நிலை வேறு என்றும், அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் காங்கிரசின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சசி தரூர் ஊடகங்களிடம் கூறினார்.
மேலும் அண்மைக் காலமாகவே பிரதமர் மோடி, மற்றும் பாஜக அரசு செயல்பாடுகளை புகழும் விதமாக சசி தரூர் பேசி வருகிறார். இதன் பின்னணியிலேயே காங்கிரஸ் சசி தரூரை கண்டித்துள்ளது.
- டிரம்ப் தலையீடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
- மோதலை மேலும் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை
பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டுக டிரம்ப் தலையீடு பிரதமர் மோடியின் பலவீனத்தை குறிப்பதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ், 1971 இல் இந்திரா காந்தி இந்தோ - பாக் போரை கையாண்ட விதம் குறித்து பதிவுகளை பகிர்ந்து வருகிறது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், இந்த விவகாரத்தில் டிரம்ப் தலையீடு குறித்து விவாதிக்க பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இந்த ஒப்பீடு குறித்து திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "ஒரு இந்திய குடிமகனாக, 1971 இல் இந்திரா காந்தியின் செயல்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தற்போதைய நிலைமை 1971-ல் இருந்து வேறுபட்டது. வங்கதேசம் சுதந்திரத்திற்காக தார்மீகப் போராட்டத்தை நடத்திய நாள் அது.
வங்கதேசத்தை விடுவிப்பது இந்தியாவின் தெளிவான இலக்காக இருந்தது. இன்றைய போராட்டத்தின் குறிக்கோள், பயங்கரவாதிகளை இந்தியாவிற்கு அனுப்பியவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்பதாகும். அதற்கான விலையை அவர்கள் கொடுத்தால் போதும். அந்தப் பாடம் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. மோதலை மேலும் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.
- பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனைகளை நடத்துவது நிலைமையை மோசமாகும் செயல்
- சீனவை தவிர்த்து மேலும் பல நாடுகள் அதை எதிர்க்கும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் குறித்து விவாதிக்க நேற்று இரவு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது.
உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். பிற உறுப்பினர்கள் பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகளை கேட்டதாக தெரிகிறது.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டது குறித்து கவுன்சில் உறுப்பினர்கள் பாகிஸ்தானை விமர்சித்ததாகவும், பொறுப்பேற்கும்படி கூறியாதாகவும் கூறப்படுகிறது.
பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனைகளை நடத்துவது நிலைமையை மோசமாகும் செயல் என்று கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐநா சபையின் முன்னாள் அதிகாரியும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு தெரிந்த வரை, இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாது என்று தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தீர்மானம் ஏதேனும் நிறைவேற்றப்பட்டால் சீனா அதை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வி அடையச் செய்யும். பாகிஸ்தானை விமர்சிக்கும் தீர்மானத்தை கவுன்சில் நிறைவேற்றாது. சீனவை தவிர்த்து மேலும் பல நாடுகள் அதை எதிர்க்கும். ஐநாவில் இந்த விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் சோகமான உண்மை இதுதான்.
இரு நாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட நடவடிக்கைகளையும், முறையான கூட்டங்கள் அல்லது முறைசாரா ஆலோசனைகள் மூலம் கவுன்சில் எடுக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று சசி தரூர் விளக்கினார்.
பாதுகாப்பு கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களில் பாகிஸ்தானும் ஒன்று, நேற்று நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கலந்து கொண்டது. அதே நேரத்தில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இதைக்குறித்து பேசிய சசி தரூர், "இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தங்களுக்கு ஒரு நன்மை இருப்பதாக நினைத்திருக்கும். ஆனால் கவுன்சிலின் பல பிரதிநிதிகள் பாகிஸ்தானிடம் மிகவும் கடினமான கேள்விகளைக் கேட்டதாக தெரிகிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தாக்குதலில் தொடர்பு உள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.
- உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன்
- 77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய கூட்டத்தில் பட்ஜெட் குறித்து திருவானந்தபுர காங்கிரஸ் எம்பி சசி தரூர் விமர்சித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தில் அவையில் பேசிய அவர், நிதியமைச்சரின் பட்ஜெட் உரை, 'உங்கள் பிரேக்குகளை என்னால் சரிசெய்ய முடியாது, அதனால் நான் சத்தமாக அடிக்கும் ஹாரனை தருகிறேன் ' என்று கூறும் கேரேஜ் மெக்கானிக்கை நினைவூட்டியது. மேலும், நிதி மசோதா வரி செலுத்துவோரிடம் கூரையை சரிசெய்ய முடியவில்லை, ஆனால் நான் உங்களுக்கு ஒரு குடையை கொண்டு வந்தேன் என்று சொல்வது போல் இருந்தது.
இந்த நிதி மசோதா ஒட்டுவேலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நாட்டிற்கு தெளிவு, உறுதிப்பாடு மற்றும் தீர்க்கமான தலைமை தேவைப்படும் நேரத்தில், அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை கட்டமைப்பு சவால்களால் பாதிக்கப்பட்டுள்ளது
உலகிலேயே மிகவும் குழப்பமான மற்றும் சிக்கலான ஜிஎஸ்டி கட்டமைப்பை இந்தியா கொண்டுள்ளது என்று தரூர் கூறினார்.
நாம் அனைவரும் கோரி வரும் எளிமையான வரிக்கு பதிலாக, இந்தியாவில் குழப்பமான ஜிஎஸ்டி விகிதங்கள் உள்ளன. இதில் உலகிலேயே மிக உயர்ந்த 28 சதவீத வரி அடங்கும். இருப்பினும், வரி வருவாய் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18 சதவீதமே உள்ளது.
77 நாடுகளில் ஜிஎஸ்டி உள்ளது, ஆனால் அவை ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே விதிக்கின்றன. நமது நாட்டில் இந்த பல-விகித அமைப்பு வணிகங்களுக்கான சுமையை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
- அமெரிக்காவில் பிரதமர் மோடி டிரம்பை சந்தித்ததை பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.
- சசி தரூரின் செயல்கள் காங்கிரஸ் கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் இருந்து 4 முறை தொடர்ந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த சசிதரூர்.
மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியாக பதவி வகித்த சசி தரூர், ஐ.நா.சபையில் உயர் பதவி வகித்தவர்.
அமெரிக்காவில் பிரதமர் மோடி-டொனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல் மந்திரி பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து தள்ளியது என இவரது செயல்கள் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை கடுப்பாக்கியது.
மேலும், பிப்ரவரி 25-ம் தேதி மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சசி தரூர் இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்துவந்தார்.
இந்நிலையில், கேரள கம்யூனிஸ் கட்சியின் முதல் மந்திரி பினராயி உடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அளித்த விருந்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். விருந்து நிகழ்ச்சியின்போது சசிதரூர் பினராயைச் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துயுள்ளது.
- பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர்.
- பண்ட் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.
கிறிஸ்ட்சர்ச்:
இந்திய கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் இன்றுடன் முடிவடைகிறது. 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 2-வது ஆட்டத்தில் மழையால் பாதியில் ரத்தானது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் இன்று நடைபெறுகிறது.
இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி ஆடி வருகிறது. இந்த தொடரில் சஞ்சு சாம்சனுக்கு முதல் ஒருநாள் போட்டியில் மட்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 2வது போட்டியில் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட சரியாக ஆடாமல், ரன்களை குவிக்காமல் இருக்கிறார்.
இதையடுத்து ரசிகர்கள் அணியில் இருந்து ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளித்து விட்டு சாம்சனை அணியில் ஆட வைக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 3-வது போட்டியிலும் சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை.
இந்நிலையில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் இருந்து ரிஷப் பண்ட் ஓய்வு எடுக்க வேண்டும் என சசி தரூர் பரிந்துரைத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
பண்ட் 4-வது வரிசையில் சிறப்பாக செயல்பட்டார். எனவே அவரை ஆதரிப்பது அவசியம் என வி.வி.எஸ். லட்சுமணன் கூறுகிறார். பண்ட் ஒரு திறமையான வீரர், பார்ம் இல்லாத ஒரு நல்ல வீரர். அவர் தனது கடைசி 11 இன்னிங்ஸ்களில் 10-ல் சரியாக ஆடவில்லை.
சாம்சனின் ஒருநாள் போட்டிகளில் சராசரி 66. அவர் தனது கடைசி 5 போட்டிகளிலும் ரன்களை அடித்துள்ளார் ஆனாலும் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
- அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது
- எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும்.
புதுடெல்லி :
அதானி நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வு நிறுவனம் சமீபத்தில் மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட அறிக்கை, நாட்டையே அதிர்வில் ஆழ்த்தி உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதை மத்திய அரசு தரப்பில் ஏற்காத நிலையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று அலுவல் எதையும் நடத்த முடியாமல் முடங்கிப்போயின.
இதையொட்டி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எம்.பி., செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடு சந்தித்து வருகிற பிரச்சினைகளை விவாதிப்பதற்கான இடம்தான் பாராளுமன்றம். இதன் மூலம், எம்.பி.க்களின் அக்கறைகளைப் பற்றியும், எம்.பி.க்கள் எவற்றில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் குறித்தும் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள முடியும்.
ஆனால் துரதிரஷ்டவசமாக மத்திய அரசு இதன் நன்மையை கண்டு கொள்ள வில்லை. எனவேதான் அவர்கள் (அரசில் அங்கம் வகிக்கிறவர்கள்) விவாதங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இதன் விளைவுதான், நாம் பாராளுமன்றத்தின் 2 நாட்களை இழந்து இருக்கிறோம்.
அதானி நிறுவனங்களின் விவகாரம் அதிமுக்கியமானது, நாட்டின் மக்களைப் பாதிக்கிறது என்பதால்தான் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட்டு விரும்புகின்றன. இது போதுமான முக்கியத்துவம் வாய்ந்த விஷயம், அரசு விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நம்புகின்றன. ஆனால் தனக்கு தர்ம சங்கடமாக அமைகிற எந்தவொரு விஷயத்தையும் விவாதிக்க அரசு விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையொட்டி சசி தரூருக்கு பதில் அளிப்பதுபோல பா.ஜ.க. எம்.பி. மகேஷ் ஜேத்மலானி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் தூண்டுதலால்தான் அதானியின் நிறுவனங்களில் எல்.ஐ.சி., முதலீடு செய்தது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
இதில் மத்திய அரசு செய்வதற்கு என்ன இருக்கிறது? இதில் மத்திய அரசின் பங்களிப்பு என்ன என்பதை யாரும் கூறவில்லை. எல்.ஐ.சி. என்பது ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். அவர்கள் சில முதலீடுகளைச் செய்வது என்று தீர்மானித்து செயல்பட்டிருக்கிறார்கள்.
இந்த முதலீடுகளில் தவறுகள் நேர்ந்திருந்தால் இது பற்றி இந்திய பங்குச்சந்தை பரிமாற்ற வாரியம் (செபி) மற்றும் பாரத ரிசர்வ் வங்கிதான் விசாரிக்கும். அவர்கள் விசாரித்து அதன் அறிக்கை வரட்டும். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நியாயப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது.
- நாடு முழுவதும் சுவடு பதித்துள்ள ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான்.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, எதிர்க்கட்சிகளை ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒன்றுபடுத்தி இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் தற்போது ஒன்று சேரவும், ஒருவர் ஓட்டை மற்றவர் பிரிப்பதை நிறுத்தவும் ஒரு காரணத்தைக் கண்டுள்ளன. 2024 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறுவது மிகவும் கடினமாகி இருக்கிறது.
தங்கள் மாநிலங்களில் காங்கிரசை எதிர்த்து வந்த டெல்லியின் ஆம் ஆத்மி, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ், உத்தரபிரதேசத்தின் சமாஜ்வாடி, தெலுங்கானாவின் பாரத ராஷ்டிர சமிதி, கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகியவை ஒன்றுபட்டுள்ளன.
ஒன்றுபட்டால் வாழ்வோம், பிரிந்தால் வீழ்வோம் என்ற பழமொழியின் உண்மையை பல கட்சிகள் உணரத்தொடங்கி உள்ளன.
நாடு முழுவதும் சுவடு பதித்துள்ள ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். நாடாளுமன்ற தேர்தலில் 200 இடங்களில் காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும்தான் நேரடி போட்டி.
மற்ற எதிர்க்கட்சிகள் ஒரு மாநிலத்தில் வலுவாக இருக்கின்றன. மேலும் ஒன்றல்லது 2 மாநிலங்களில் இருக்கின்றன. இந்த சூழ்நிலைகளில், நாங்கள் உண்மையில் ஒரு மாற்றை வழங்குவதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிப்போம்.
நான் கட்சித்தலைவராக இருந்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்கு சிறிய கட்சிகளில் ஒன்றை எதிர்க்கட்சி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட ஊக்குவிப்பேன். எனது பார்வையில், ஒற்றுமைதான் முக்கியம்.
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பை அவரது பாட்டி இந்திராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு இணையாகப் பார்க்கிறீர்களா என கேட்கிறீர்கள். ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலும், பதவி பறிப்பிலும் மக்களின் அனுதாபம் கிடைத்திருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சியின் தலைவருக்கு சிறைத்தண்டனை விதித்து, நாடாளுமன்றத்தில் அவரது குரல் ஒலிப்பதை தடுப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று மக்கள் உணர்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனியார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது.
- ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும்.
மும்பை :
காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூர், மும்பையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் ஆளும் பா.ஜனதா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறியதாவது:-
ஜனநாயக நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது மிகப்பெரிய பிரச்சினையாகும். பத்திரிகையாளர்களின் சுதந்திரத்திற்கு எங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும்.
2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்றால் " இந்து பாகிஸ்தானை" அவர்கள் உருவாக்க முயற்சிப்பார்கள் என்று எச்சரித்தேன்.
2019-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே இந்த அரசு முத்தலாக் மற்றும் காஷ்மீரின் 370-வது சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தை கொண்டு வந்தது. இதனால் எனது கணிப்பு சரியாகும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றியது.
ஆனால் கொரோனா தொற்று தான் நாட்டை பலவழிகளில் காப்பாற்றியது. தொற்றுநோயை கையாளுவதற்கான அவசர தேவை காரணமாக நாடாளுமன்றம் செயல்படுவது ஸ்தம்பித்தது.
தனியார் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது. ஒவ்வொரு தன்னாட்சி நிறுவனத்திற்கும் தலைமை பதவிக்கு ஆட்களை நியமிக்கும்போது அவர்களின் அரசாங்க விசுவாசம் சோதிக்கப்படுகிறது.
சுதந்திரமான மற்றும் நேர்மையான நபர்களை நியமித்ததன் மூலம் தேர்தல் ஆணையத்தின் சுயாட்சி அதிகாரம் காப்பாற்றப்பட்ட காலம் முன்பு இருந்தது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் மற்றும் ஜே.எம். லிண்டே ஆகியோரை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- மணிப்பூரில் நடந்த கலவரத்தில் இதுவரை 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு, 53 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள மெய்டீஸ் இனத்தவர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பழங்குடி மாணவர்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
கடந்த 3-ம் தேதியன்று மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் அமைப்பின் சார்பில், மலைப்பகுதிகளில் உள்ள 7 மாவட்டங்களில் ஒற்றுமை பேரணி நடத்தினர். அப்போது அவர்களுக்கும், மெய்டீஸ் இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. வீடுகள், வாகனங்கள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
ராணுவமும், துணை ராணுவமும் குவிக்கப்பட்டனர். மொபைல் இணையதள சேவை முடக்கப்பட்டது. மணிப்பூரில் இதுவரை நடந்த கலவரங்களில் 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.
- நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது.
- ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான்.
புதுடெல்லி :
டெல்லியில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பல இடங்களுக்கு பெயர் மாற்றப்பட்டு இருப்பது குறித்து அவர் பேசினார்.
அவர் கூறும்போது, 'ஆங்கிலேயர்களின் தெளிவற்ற பெயர்களைக் கொண்ட இடங்களின் பெயரை மாற்றுவதையும், அதற்கு பதிலாக இந்தியர்களின் பெயரை சூட்டி கவுரவப்படுத்துவதையும் நான் ஆதரிக்கிறேன். ஆனால் பம்பாய், மெட்ராஸ் மற்றும் கல்கத்தா போன்ற நகரங்களின் பெயர் மாற்றம், உண்மையில் என்ன சாதித்தது என்று எனக்கு தெரியவில்லை' என கூறினார்.
டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராஜபாதையை, கடமைப்பாதை என பெயர் மாற்றியது குறித்து சசிதரூர் கூறுகையில், 'இது வெறும் அரசியல். அதற்கு மேல் எதுவும் இல்லை. ஏனெனில் ராஜ்பாத் (ராஜபாதை) என்பதே ஒரு இந்தி வார்த்தைதான். இதுபோன்ற விஷயங்கள் குறித்து பரவலாக விவாதிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.
- திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
- பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும்.
திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் தனது சக ஊழியரான பிரகாஷ் என்பவரின் 2½ வயது மகனுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியான வித்யாரம்பம் நடத்திய வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில் திருவனந்தபுரத்தை சேர்ந்த தனது சக ஊழியரின் மகனுக்கு ஒரு சடங்கு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். வித்யாரம்பம் சடங்கின்படி ஒரு குழந்தை தனது முதல் எழுத்துக்களை ஒரு தட்டில் அரிசியை நிரப்பி அதில் எழுத தொடங்கும். ஆசிரியர்கள், அறிஞர்கள் போன்றோர் குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள்.
பொதுவாக விஜயதசமி அன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். இருப்பினும் ஒவ்வொரு நாளும் கற்றல் நடத்த வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக சசிதரூர் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் சசிதரூரின் மடியில் அமர்ந்திருக்கும் சிறுவன் அனந்த பத்மநாபனுக்கு அவரது விரலால் ஓம் ஹரி ஸ்ரீ என்பதை எழுத வைப்பதுபோல் காட்சி உள்ளது.