search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டாக்டர் கொலை"

    • கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து கிளம்பிச் சென்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கு நீதி கேட்டு பயிற்சி டாக்டர்கள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பயிற்சி டாக்டர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள அரசு அழைப்பு விடுத்தது. ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

    ஆனால், நேரலை ஒளிபரப்புக்கு அரசு மறுத்ததால் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

    இதற்கிடையே முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தும் இடத்துக்கே நேரில் சென்று மம்தாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து இரவில் போராடி வரும் டாக்டர்கள், மம்தா பானர்ஜியை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால், சந்திப்பை நேரலையாக பதிவு செய்வதை ஏற்காததால் அவர்கள் மம்தா வீட்டுக்கு வெளியே மழையில் நனைந்தபடி காத்திருந்தனர்.

    தனது வீட்டு வாசல் வரை வந்த டாக்டர்கள் பிரதிநிதிகள் உள்ளே வராமல் அங்கேயே மழையில் நனைந்தபடி நின்றதைப் பார்த்த மம்தா, தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் உள்துறைச் செயலர் என அனைவரும் உங்களுக்காக காத்திருக்கிறோம்.

    நீங்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை வழங்கி உள்ளோம். நீங்கள் என்னுடன் பேச விரும்பவில்லை என்றால் தயவு செய்து உள்ளே வாருங்கள். தேநீர் அருந்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

    நமது சந்திப்பை நிச்சயம் வீடியோ பதிவு செய்ய நான் உறுதியளிக்கிறேன், பாதுகாப்பு காரணங்ளால் நேரலை செய்ய முடியாது என்றார்.

    வீடியோ பதிவு செய்வதை ஏற்காததால் பயிற்சி டாக்டர்கள் தேனீர் அருந்த மறுத்து அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதைத்தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட தொடர்ந்து முட்டுக்கட்டை நிலவுகிறது.

    • 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை.
    • முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் இளம் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமையால் கொல்லப்பட்டார்.

    இந்த கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது நிதி முறைகேடு வழக்கு உள்ளது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    இதன் தொடர்ச்சியாக ஆர்.ஜி.கர் மருத்துவமனைக்கு மருந்துகள் வினியோகம் செய்தவர் வீடு உள்ளிட்ட 2 இடங்களில் இன்று அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

    • ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இளம் பயிற்சி பெண் டாக்டர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்தே கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 8-ந்தேதி அன்று இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது தான் அவர் மிகவும் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டதும் ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் தங்கி இருந்த அறைக்குள் புகுந்த மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

    பெண் டாக்டரை கற்பழித்துக் கொன்ற நபர் சைக்கோ போல செயல் பட்டிருப்பதும் டாக்டர்களின் அறிக்கை மூலமாக தெரிய வந்துள்ளது.

    பெண் டாக்டரின் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் ராய் என்கிற வாலிபரை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெண் டாக்டரை கற்பழித்து கொன்றதாக சஞ்சய் ராய் மீது குற்றம் சாட்டப்பட்டு கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் பயன்படுத்திய செல் போனை ஆய்வு செய்த போலீசார் அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இணைய தளங்களிலும் சஞ்சய் ராய் ஆபாச வீடியோக்கள் அடிக்கடி தேடிப் பார்த்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இப்படி ஆபாச படங்களை அடிக்கடி பார்த்து, பார்த்தே சஞ்சய் ராய் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் அளவுக்கு கொடூரமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    பெண் டாக்டர் கொல்லப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் சக டாக்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக நுழைந்தது எப்படி? என்பது பற்றியும் பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளது.

    சஞ்சய் ராய் ஆஸ்பத்திரி வளாகத்தில் 'சிவிக் போலீஸ்' என்று அழைக்கப்படும் காவல்துறைக்கு உதவிகளை செய்யும் அங்கீகரிக்கப்பட்ட நபராக வேலை செய்து வந்துள்ளார். இதன் காரணமாகவே அவர் ஆஸ்பத்திரிக்குள் எளிதாக சென்று வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

    பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட அன்று அதிகாலை 4 மணி அளவில் சஞ்சய் ராய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்துள்ளார். ஆஸ்பத்திரி வளாகத்தில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சஞ்சய் ராயின் உருவம் பதிவாகி இருந்தது.

    சஞ்சய் ராய் புளூடூத் ஒன்றை பயன்படுத்தி பேசி வந்துள்ளார். ஆஸ்பத்திரிக்குள் நுழையும் போது அவரது காதில் புளூடூத் இருந்துள்ளது. பெண் டாக்டரை கொலை செய்துவிட்டு தப்பி வெளியேறும்போது புளூடூத் இல்லை. இதுபற்றி சஞ்சய்ராயிடம் போலீசார் கேட்டபோது அவசரம் அவசரமாக வெளியேறியதில் புளூடூத் பயன்படுத்த வில்லை என்று தெரிவித்துள்ளார்.

    பெண் டாக்டர் கொலை வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவு கோர்ட்டில் வழக்கு விரைந்து முடிக்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் கூறும்போது, பெண் டாக்டர் கொலை சம்பவம் நடைபெற்ற அன்று இரவு பணியில் உடனிருந்த டாக்டர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி சஞ்சய் ராயை கைது செய்துள்ளோம். கொடூரமான குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி தருவோம் என்று தெரிவித்துள்ளார்..

    • விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
    • இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

    கொல்லம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ் (23). இன்று அதிகாலையில் அவர் பணியில் இருந்தபோது, சந்தீப் என்ற நபருக்கு காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்காக போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

    குடும்பத்தினருடன் ஏற்பட்ட சண்டையின்போது சந்தீப்புக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு டாக்டர் வந்தனா சிகிச்சை அளித்தபோது திடீரென ஆவேசமாக எழுந்த சந்தீப், ரகளையில் ஈடுபட்டுள்ளார். கத்தரிக்கோலை எடுத்து அங்கிருந்தவர்களை தாக்கி உள்ளார்.

    இதில் டாக்டர் வந்தனா, போலீஸ்காரர்கள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் டாக்டர் வந்தனா தாஸ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டாக்டரின் மரணம் குறித்து பல்வேறு தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் போதையில் இருந்துள்ளார்.

    மருத்துவர் உயிரிழப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கல் தெரிவித்ததுடன், இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்திய மருத்துவ சங்கம், மற்றும் கேரள அரசு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர்கள் இன்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    ஊடக தகவல்களின் அடிப்படையில் தாமாக முன்வந்து விசாரணை நடத்திய கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம், இது தொடர்பாக 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்லம் மாவட்ட காவல்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது.

    • கடந்த வாரம் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருப்பதை கண்டு பிரதீபா அதிர்ச்சி அடைந்தார்.
    • பிரதீபாவின் தாயாரின் படங்களும் அதில் இருந்தன. விகாசின் லேப்டாப்பை பிரதீபா பயன்படுத்திய போது இதை கண்டுபிடித்தார்.

    சென்னை:

    சென்னையை சேர்ந்தவர் டாக்டர் விகாஷ் (வயது27). இவர் உக்ரைனில் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு சென்னையில் டாக்டராக பணியாற்றி வந்தார்.

    இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உயர்படிப்புக்காக பெங்களூர் சென்றார். அங்கிருந்து உயர் படிப்பை தொடர்ந்த அவர் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கும் நிறுவனத்திலும் பணியாற்றினார்.

    இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பிரதீபா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். பெங்களூரில் வசித்து வரும் பிரதீபா எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியில் கட்டிட கலைஞராக பணியாற்றி வந்தார்.

    விகாசும், பிரதீபாவும் சில மாதங்கள் நண்பர்களாக பழகினர். அதன் பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர்.

    அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவருக்கும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர். இதையடுத்து இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி இருப்பதை கண்டு பிரதீபா அதிர்ச்சி அடைந்தார். பிரதீபாவின் தாயாரின் படங்களும் அதில் இருந்தன. விகாசின் லேப்டாப்பை பிரதீபா பயன்படுத்திய போது இதை கண்டுபிடித்தார்.

    அந்த படங்களை விகாஷ் தமிழகத்தில் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு பகிர்ந்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதீபா, அவரிடம் சண்டை போட்டு தட்டிக்கேட்டார்.

    அப்போது விகாஷ், 'நான் தான் போலி கணக்கு தொடங்கி விளையாட்டுக்காக அதை பகிர்ந்தேன். திருமணம் செய்யப்போவதால் 2 வருடம் உறவில் இருந்ததாக வேடிக்கையாக வெளியிட்டேன்' என்று சாதாரணமாக பதில் அளித்தார். விகாசின் இந்த செயலால் பிரதீபா ஆத்திரம் அடைந்தார்.

    தான் காதலனால் ஏமாற்றப்பட்டது குறித்து பிரதீபா தனது சக நண்பர்கள் சுஷீல், கவுதம், சூர்யா ஆகியோரிடம் தெரிவித்தார். விகாசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று உதவி கேட்டார்.

    இந்த நிலையில் பிரதீபா கடந்த 10-ந்தேதி விகாசை அழைத்துக்கொண்டு பெங்களூர் மைக்கோ லே அவுட் பகுதியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றார். அங்கு பிரதீபாவின் நண்பர்கள் சுஷீல், கவுதம், சூர்யா ஆகியோர் இருந்தனர். அங்கு நண்பர்கள் மது அருந்தினர். பின்னர் பிரதீபாவின் அந்தரங்க படத்தை வெளியிட்டது தொடர்பாக விகாசிடம் பிரதீபாவின் நண்பர்கள் தட்டிக் கேட்டனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பிரதீபா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தரை துடைக்கும் மாப் கட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றால் விகாசின் முகத்தில் சுமார் அரைமணிநேரம் கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த விகாஷ் மயங்கி விழுந்தார். பின்னர் பிரதீபா அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

    மர்மநபர்கள் யாரோ விகாசை தாக்கிவிட்டு சென்றிருக்கலாம் என்று பிரதீபா போலீசாரிடமும், விகாஷ் குடும்ப உறுப்பினர்களிடமும் தெரிவித்தார். பிரதீபா, விகாசை திருமணம் செய்யப்போகிற பெண் என்பதால் போலீசாருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விகாஷ் கடந்த 14-ந்தேதி உயிரிழந்தார். இதையடுத்து விகாசின் சகோதரர் விஜய் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பிரதீபாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் போலீசாரிடம் அளித்த தகவல்களும் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. இதையடுத்து பிரதீபாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது நடந்த தகவல்கள் அனைத்தையும் பிரதீபா போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து விகாசை அடித்து கொலை செய்ததாக அவரது காதலி பிரதீபா, நண்பர்கள் சுஷில், கவுதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சூர்யா தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×