என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பக்கிங்காம் கால்வாய்"

    • சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் இணைப்பு சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது.
    • பாலம் கட்டினால் 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல தேவையில்லை.

    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூரில் இருந்து மணலி செல்லும் இணைப்பு சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஓடுகிறது.

    இந்த கால்வாயின் மேலே கடந்த 2016-ம் ஆண்டு ரூ.54 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.

    ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த பாலம் கட்டுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

    பாலம் அமைக்கும் பகுதியில் மண் தரையானது மிகவும் பலவீனமாக காணப்பட்டது. மேலும் கால்வாயை அகலப்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டது.

    மேலும் இந்த பகுதியில் சி.பி.சி.எல். நிறுவனத்தின் குழாய் செல்கிறது. இதனால் அடித்தள பகுதியை அமைப்பதில் தடங்கல் ஏற்பட்டது.

    இதனால் இந்த பாலம் கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதை பாலப் பணிகள் நடைபெறாததால் திருவொற்றியூரில் இருந்து மணலி செல்பவர்கள் சர்வீஸ் சாலை வழியாகவே சென்றனர்.

    இதனால் அவர்கள் மணலி, பொன்னேரி ஆகிய இடங்களுக்கு செல்ல சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டி இருந்தது. மேலும் பஸ்கள், வாகனங்கள் சுற்றிச் சென்று வந்ததால் சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக மாறியது.

    எனவே அந்த வழியாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அதன்பிறகு பொது மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த பாலம் கட்டினால் 6 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல தேவையில்லை.

    அரை கிலோ மீட்டர் பயணித்தால் போதும் என்பதால் பாலம் கட்டும் பணிகளை முடிக்குமாறு பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பாலம் பணிகள் நடைபெறும் பகுதியில் சி.பி.சி.எல். குழாய் செல்லும் இடத்தில் 2 கல்வெட்டுக்களை சி.பி.சி.எல். நிறுவனம் அமைக்க வேண்டும்.

    இதற்கான தொகை ரூ.2½ கோடியை சமீபத்தில் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாலம் கட்டுமான பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மீண்டும் தொடங்க உள்ளது. இதை விரைவில் கட்டி முடித்து வருகிற ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும்.
    • நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

    சென்னை:

    சென்னை நகரில் பாயும் முக்கிய ஆறுகளாக கூவம், அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளன. தற்போது இந்த ஆறுகளின் தண்ணீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

    இதனை சரி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர் நிலைகளும் பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது தெரிய வந்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் அடையாற்றில் 23 இடங்களிலும், கூவம் ஆற்றில் 18 இடங்களிலும் பக்கிங்காம் கால்வாயிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது.

    இதில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எதிலும் கரைந்த ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் இந்த நீரில் எந்த வகை உயிரினங்களும் வாழ தகுதி இல்லாதவையாக மாறி இருக்கிறது.

    ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும். இதேபோல் ரசாயன ஆக்சிஜன் 30 வரை இருக்கலாம்.

    சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் 20-க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால் நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 56-க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூவம் மற்றும் பெருங்குடியில் இருந்து அடையாற்றில் கலக்கிறது.

    இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

    தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதிபடுத்தி உள்ளது.

    நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இனி அரசால் எதுவும் செய்ய முடியாது' என்றார்.

    • கரையோரத்தில் சிற்பக்கூடங்கள், வீடுகள், பட்டறைகள், இறால் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • மழைக்காலத்தில் நீர்வரத்து பாதிக்கப்பட்டு குப்பைகள் ஒதுங்கி மாசடைந்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    கோவளம் அடுத்த முட்டுக்காடு முதல் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.

    இதன் கரையோரத்தில் சிற்பக்கூடங்கள், வீடுகள், பட்டறைகள், இறால் மீன் பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் நீர்வரத்து பாதிக்கப்பட்டு குப்பைகள் ஒதுங்கி மாசடைந்து வருகிறது.

    இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின்படி பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவிட்டு, மேலும் ஆக்கிரமிக்காத வகையில் எல்லை கற்களை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரி திலிப்குமார் தலைமையில் நில அளவினர் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை அளவிட்டு, எல்லை நிர்ணயம் செய்வதற்காக கல் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குப்பைகள் ஒதுங்கி சுற்றுச்சூழல் மாசடைந்து வந்தது.
    • ஆக்ரமிக்காத வகையில் எல்லை கற்களை நடவேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.
    கோவளம் அடுத்த முட்டுக்காடு முதல் மரக்காணம் வரையிலான பக்கிங்காம் கால்வாய் கரையோர பகுதிகளை ஆக்ரமித்து சிற்பக் கூடங்கள், வீடுகள், பட்டறைகள், ஈரால் மீன் பண்ணைகள் அமைத்து ஆக்ரமிப்பாளர்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இதனால் மழைக்காலத்தில் நீர் வரத்து பாதிக்கப்பட்டது. குப்பைகள் ஒதுங்கி சுற்றுச்சூழல் மாசடைந்து வந்தது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் ஆக்ரமிப்புகளை அகற்றி முறையாக அளவிட்டு, மேலும் ஆக்ரமிக்காத வகையில் எல்லை கற்களை நடவேண்டும் என தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

    இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரி திலிப்குமார் தலைமையில் நில அளவினர் குழுவினர் பக்கிங்காம் கால்வாயை அளவிட்டு எல்லை நிர்ணயம் செய்வதற்காக எல்லை கல் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பு அகற்றம்.
    • பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    அடையாறில் கூவம் ஆறு கலக்கும் முகத்துவார பகுதியில் இருந்து முட்டுக்காடு படகு இல்லம் வரை சுமார் 22 கி.மீட்டர் தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாய் உள்ளது.

    இந்த கால்வாய் கரைகளை ஆக்கிரமித்து இரு புறமும் ஏராளமான வீடுகள், கட்டுமானங்கள் உள்ளன. இதனால் கால்வாயின் அகலம் சுருங்கி வந்தது. மழை, வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதி மன்றம் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற சம்பந்தப் பட்ட அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி அதன் கரைகளை விரிவாக்கம் செய்து அதன் கரையோரங்களை அழகுபடுத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதில் நீர்வளத்துறை, வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதைத்தொடர்ந்து பக்கிங்காம் கால்வாயில் முதல்கட்டமாக 2.7 கி.மீட்டர் தூரத்துக்கு கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற உள்ளது.

    கூவம் ஆற்றின் முகத்துவார பகுதியில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட உள்ளது. இதனால் சுமார் 1,200 குடும்பத்தினர் வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.

    இதையடுத்து அவர்களுக்கு குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

    சென்னையில் உள்ள முக்கிய நீர்வழிப் பாதையான பக்கிங்காம் கால்வாயை மீட்டு அதன் கட்டமைப்பை மேம்படுத்தி கரையோரங்களை அழகுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த கால்வாயை பொழுது போக்கு இடமாக மாற்றவும் அரசு முடிவு செய்து இருக்கிறது.

    இதைத்தொடர்ந்து பங்கிங்காம் கால்வாய் கரையோரத்தில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன. முதல் கட்டமாக, கூவம் ஆற்றின் முகத்துவாரத்தில் இருந்து ஆர்.கே.சாலை பாலம் வரை 2.7 கி.மீ. தூரத்துக்கு மறு சீரமைக்கப்பட உள்ளது. இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் முக்கியமாக கால்வாயின் எல்லையை நிர்ணயிப்பதும், கரைகளை பலப்படுத்துவதும் ஆகும்.

    இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள திரவியவதி நதியின் மறுசீரமைப்புத் திட்டம், ஒடிசாவில் உள்ள தாலடண்டா கால்வாய் மறு சீரமைப்பு மற்றும் குஜராத்தில் உள்ள சபர்மதி நதி முகப்பு மேம்பாடு போன்ற வெற்றிகரமான மறுசீரமைப்பு திட்டங்களை நீர்வளத்துறை யினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அங்கு செயல்படுத்தப் பட்டதை போல் பங்கிங்காம் கால்வாயிலும் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் பல்வேறு உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கூடுதலாக, கால்வாய் பகுதியில் கழிவுநீர் வெளி யேறும் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. பக்கிங்காம் கால்வாயில் உள்நாட்டு நீர்வழிப் பாதையை கடந்த 2016-ம் ஆண்டு இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையம் கைவிட்டது. பக்கிங்காம் கால்வாயின் மறுசீரமைப்பு, பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். இதனால் நீரின் தரம் மற்றும் சுற்றுச் சூழல் மாற்றம் அடையும். மறுசீரமைப்பு திட்டம் இன்னும் திட்டமிடுதல் கட்டத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
    • பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர்.

    சென்னை:

    சென்னையில் பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக பக்கிங்காம் கால்வாயில் நீர்வழிப்பாதையில் கரையோரம் வசிப்பவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான முதல்கட்ட திட்ட அறிக்கையை நீர்வளத் துறையினர் தயாரித்து உள்ளனர்.

    இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக சிவானந்தா சாலை-டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலை இடையே 2.9 கி.மீட்டர் தூரத்திற்கு பக்கிங்காம் கால்வாயை சீரமைக்க முடிவு செய்து ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    இதேபோல் நீர்வளத் துறையின் 2023-24 ம் ஆண்டின் கொள்கை குறிப்பின்படி பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதனுடன் தொடர்புடைய கால்வாய், அடையாறு கூவம் ஆறுகளில் பாயும் வடிகால் வாய்களில் சீரமைப்பு மற்றும் விரிவான மறுசீரமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இதற்கு ரூ.1,281 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் நீர்வழிப்பாதையை தூர் வாரி சீரமைத்தல், படகு போக்குவரத்து மையம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற இருக்கின்றன.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிக்கும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் கால்வாய் கரையோரத்தை சீரமைக்கும் பணி தொடங்குவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

    மேலும் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் காலி செய்யும் போது அவர்களுக்கு அதே பகுதியில் மாற்று இடம் கொடுத்து குடியமர்த்த வேண்டும் அல்லது ஏற்கனவே வசித்த இடத்தில் இருந்து 5 கி.மீட்டர் தூரத்திற்குள் குடிய மர்த்த வேண்டும் என்பது பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

    ஆனால் கால்வாய் கரையோரம் வசிப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அவர்களுக்கு மாற்று இடம் அருகில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதன் காரணமாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் அப்புறப்படுத்துவது தொடர்பாக என்ன மாதிரியான முடிவு எடுப்பது என்று அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.

    பக்கிங்காம் கால்வாய் கரையோரம் உள்ள முக்கிய இடங்களான விக்டோரியா ஹாஸ்டல், சிவராஜபுரம், சுங்குவார் தெரு, மட்டன் குப்பம், ரோட்டரி நகர், நீலம்பாஷா தர்கா உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகிறார்கள். இந்த இடமாற்றம் அவர்களை கவலை அடையச் செய்து உள்ளது. இதுவரை எத்தனை குடும்பங்கள் இதில் பாதிக்கப்பட உள்ளது என்று உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

    கடந்த 2020-ம் ஆண்டு அரசின் அறிவிப்பின்படி 15 ஆயிரம் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. கடந்த 2020-21- ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கொள்கை குறிப்பில் இந்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 564 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் பற்றி பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு பணியை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினர். ஆனால் இதற்கு அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பயோமெட்ரிக் கணக்கெடுப்புக்கு தகவல்கள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து இந்த கணக்கெடுப்பும் இப்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது "மறு குடியமர்த்தலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் எங்கே? என்று அதிகாரிகள் இதுவரை தெரிவிக்கவில்லை. நாங்கள் தற்போது வசிக்கும் இடம் அருகே அல்லது 5 கி. மீட்டர் தூரதிற்குள் குடியமர்த்த வேண்டும். அப்படியானால்தான் எங்களது வாழ்வாதாரம் பாதிக்காது" என்றனர்.

    லாக் நகரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறும் போது, "எனது குடும்பம் பல தலைமுறைகளாக இங்கு வசிக்கிறது. எனக்கும் எனது மனைவிக்கும் வாழ் வாதாரம் இந்த பகுதியை சுற்றியே உள்ளது. குழந்தைகள் அருகில் உள்ள பள்ளியில் படிக்கிறார்கள். நாங்கள் எப்படி நீண்ட தூரத்திற்கு செல்ல முடியும். மேலும் மறு குடியமர்த்துதல் தொடர்பாக அதிகாரிகள் இதுவரை எந்த தெளிவான முடிவும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை" என்றனர். சிவராஜபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவர் கூறும் போது, "பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க அருகிலேயே அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. ஆனால் அது வேறு துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். மறுகுடியமர்த்தும் இடங்கள் எர்ணாவூர் மற்றும் கார்கில் நகர் என்று தெரிகிறது. அங்கு நாங்கள் செல்ல நிர்பந்திக்கப்படலாம் என்பதால் பயப்படுகிறோம்" என்றார்.

    அப்பகுதியை சேர்ந்த மற்றொருவர் கூறும்போது, "மறுகுடியமர்த்தலுக்கு தேவையான இடத்தை முடிவு செய்ய குடும்பங்களின் எண்ணிக்கை மட்டும் போதுமானது. ஆனால் பயோமெட்ரிக் பதிவு மற்றும் படிவங்களில் கையெழுத்திட ஏன் வற்புறுத்த வேண்டும் மறுகுடியமர்த்தலுக்கான இடங்கள் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் தெரிவிக்காத நிலையில் இது சந்தேகத்தை எழுப்பி உள்ளது" என்றார்.

    இதற்கிடையே பக்கிங்காம் கால்வாய் கரை யோரத்தில் வசிப்பவர்கள் காலி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக சென்னை மத்திய மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் செல்வம் கூறும்போது, "பரம்பரை, பரம்பரையாக பக்கிங்காம் கால்வாய் கரையோரம் வசிப்பவர்கள் இடமாற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? இது அவர்களுக்கான இடம் கிடையாதா?"

    கால்வாய் அருகில் வசிக்கும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களிடம் பயோமெட்ரிக் தகவல்களை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கி உள்ளனர். பொது மக்களும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் லாக் நகர் பகுதியில் பயோமெட்ரிக் தகவல்கள் சேகரிக்கும் பணியை அதிகாரிகள் கைவிட்டனர். காலம், காலமாக வாழும் மக்களின் வாழ்விட உரிமையை பறிக்கக் கூடாது. அவர்களை மாற்று இடத்தில் நீண்ட தூரத்தில் குடியமர்த்தும் போது வாழ்வாதாரம் பாதிக்கும்" என்றார்.

    • பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை மற்றும் சுற்று கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
    • இந்தப் பணி முறையாகவும், சரியாகவும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியத்தில் கந்தாடு ஊராட்சி உள்ளது. இங்குள்ள முதலியார்பேட்டை கிராமத்திற்கும் காக்கா பள்ளம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை மற்றும் சுற்று கரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு அரசு ரூ.161 கோடி ஒதுக்கி கடந்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.

    பக்கிங்காம் கால்வாயில் தடுப்பணை கட்டும் பணி முடிவடைந்தது. தடுப்பனையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மணலால் கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி முறையாகவும், சரியாகவும் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது, மணல் கரை அமைக்கும் பகுதியில் முதலியார்பேட்டை, பச்சைபைத்தான் கொள்ளை, புதுப்பாக்கம், திருக்கனூர் தேவிகுளம், வண்டிபாளையம், வடகரம், ஆத்திகுப்பம் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு 5 ஆயிரம் ஏக்கள் விளைநிலங்கள் உள்ளது. இந்த நிலங்களின் பாசன வசதிக்காவே அணை கட்டப்பட்டது. மேலும், பக்கிங்காம் கால்வாயின் இருபுறமும் கரை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டது.

    ஆனால் இந்த அணையை கட்டும் ஒப்பந்ததாரர்கள் பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைத்து இரண்டு புறமும் மணல் சுவர்களை அமைத்து வருகின்றனர். கால்வாயின் அகலத்தை குறைப்பதால், பருவ மழை காலத்தில் வெள்ள நீரானது, கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. மேலும், கிராமப்புறங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் கால்வாய்க்கு செல்லும் வழியையும் ஒப்பந்ததாரர்கள் அடைத்துவிட்டனர். இதனால் மழைநீர் வெளியேறவும் வழியில்லாமல் உள்ளது. விளை நிலங்களில் உள்ள பயிர்கள் மட்டுமின்றி, வீடுகளும் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி பக்கிங்காம் கால்வாயின் அகலத்தை குறைக்காமல் மணல் சுவர் அமைக்க வேண்டும். கிராமங்களில் இருந்து மழைநீர் வெளியேறும் வழியை திறந்து விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுரங்கப்பாதை தோண்டும் பணியும் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    • பறக்கும் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தையும் இணைக்க உள்ளது.

    சென்னை:

    சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி 116.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன. மாதவரம் பால்பண்ணை- சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர், கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனைவரை 26.1 கி.மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 44.6கி.மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 76 உயர்நிலைப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள்,43 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய உள்ளன. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சுரங்கப்பாதை தோண்டும் பணியும் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

    கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி பணிமனை மெட்ரோ ரெயில் வழித்தடத்தில் மயிலாப்பூர் லஸ் சந்திப்பு அருகே இரட்டை சுரங்கப்பாதையில் மிகப்பெரிய அளவில் மெட்ரோ ரெயில் நிலையம் கட்டப்பட உள்ளது. இதற்காக பறக்கும் ரெயில்நிலையம் எதிரே உள்ள பக்கிங்காம் கால்வாயில் உள்ள பாலம் இடித்து அகற்றப்பட உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்க இருக்கிறது.

    மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் 4854.4 சதுர மீட்டர் பரப்பளவில் மாதவரம் பால்பண்ணை-சிறுசேரிசிப்காட் மற்றும் கலங்கரை விளக்கம் -பூந்தமல்லி பணிமனை வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமைய இருக்கிறது. இதன் அருகே உள்ள பறக்கும் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தையும் இணைக்க உள்ளது. சிறப்பு பெற்ற கபாலீஸ்வரர் கோவிலையும் இணைப்பதால் இந்த மெட்ரோ ரெயில் நிலையம் பொதுமக்கள் அதிக அளவில்பயன்படுத்தும் இடமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சுரங்கப்பாதை பணிக்காக பக்கிங்காம் கால்வாய் இடிக்கப்படும் போது தற்காலிக மாற்று ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. எனவே மந்தவெளி மற்றும் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து லஸ் சந்திப்புக்கு செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படும். நெரிசலை தவிர்க்கும் வகையில் போக்கு வரத்தை திருப்பிவிடுவது தொடர்பாக போக்குவரத்து போலீசாருடன் மெட்ரோ ரெயில் அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகிறார்கள்.

    இது தொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறும்போது, மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் சுங்கப்பாதை பணிக்காக பங்கிங்காம் கால்வாயில் பறக்கும் ரெயில் நிலையம் எதிரே உள்ள பாலம் இடிக்கப்பட உள்ளது. சுரங்கப்பாதை ரெயில் நிலையம் அமைய உள்ள இடத்தில் பாலத்தின் தூண்கள் வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறையிடம் உரிய அனுமதி கேட்டு உள்ளோம். இந்த சுரங்கப்பாதை ரெயில் நிலையம் 35 அடி ஆழத்தில் இருக்கும். இப்பகுதியில் கடினமான பாறைகள் உள்ளதால் சுரங்கம் தோண்டும் பணி சவாலாக இருக்கும்.

    மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிக்காக தடுப்புகள் அமைப்பது இந்த மாத இறுதியில் தொடங்கும். முதல் கட்டமாக மின்சார கேபிள்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் போன்ற நிலத்தடியில் உள்ளவற்றை மாற்றுப்பாதையில் மாற்றுவது செப்டம்பர் மாதம் நடைபெறும். இதன்பின்னர் மெட்ரோ ரெயில் நிலையத்தின் வெளிப்புறச் சுவர்கள் கட்டும் பணி நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. சுரங்ப்பாதை தோண்டும்பணி அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றார்.

    • ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன.
    • 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தற்போது மரக்காணம் பகுதிகளில் விவசாய நிலங்களின் மணிலா நெல்லு, மரவள்ளிக்கிழங்கு விவசாய நிலங்களில் பயிரிட்டு உள்ளார்கள். அது தற்போது மழையினால் மூழ்கியது.

    கந்தாடு வண்டிப்பாளையம் கிளாப்பக்கம், ஓமிப்பேர், நாமக்கல் மேடுகாயல், மேலே எடசேரி, உப்பு வேலூர், கீழ்பெட்டை, அனுமந்தை, கூனிமேடு, மண்டபாய், ஆலப்பாக்கம் கலியங்குப்பம், செய்யாங்குப்பம் போன்ற கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்தது மழை தண்ணீரில் மூழ்கியது.

    அதுபோல், பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் செல்வதால் வண்டிப்பாளையம் ஆதிகுப்பம் பகுதியில் தண்ணீர் செல்வதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கிலோமீட்டர் சுற்றி புதுவைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.

    தற்போது மரக்காணம் பகுதிகளின் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது.
    • பக்கிங்காம் கால்வாய்க்கு வெள்ளப்பெருக்கு அபாயம்.

    மாமல்லபுரம்:

    ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் இருந்தே காற்றுடன் கூடிய கனமழை பெய்து வந்தது. நேற்று இரவு வீசிய பலத்த சூறாவளி காற்றில் கடற்கரை கோயில் வடபகுதி கடற்கரை ஓரம் உள்ள கூறை உணவகம் ஒன்று சரிந்து விழுந்தது அதிஷ்டவசமாக ஊழியர்கள் அங்கு தங்காததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

    பூஞ்சேரி, பொதுப்பணித்துறை சாலை, கடற்கரை சாலை, ஐந்துரதம், வெண்புருஷம், தேவநேரி, தனியார் விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.


    தகவலறிந்த தீயணைப்பு படை, பேரிடர் மீட்பு படை, பேரூராட்சி ஊழியர்கள் சம்ப இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    அண்ணாநகர், சூளைமேடு, எடையூர், வடக்கு மாமல்லபுரம், பகுதி குடியிருப்புகள் அருகே மழைநீர் தேங்கியது. தாழ்வான பகுதிகளில் உள்ள சிற்பக் கூடங்களுக்குள் மழைநீர் புகுந்தது.

    இன்று காலை காற்றும், மழையும் இன்றி இயல்பு நிலை திரும்பி உள்ளதால், வழக்கம் போல் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருகிறது. தாம்பரம், செங்கல்பட்டு, திருவான்மியூர் பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்திற்கு சென்னை மாநகர, அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு இடையூராக மரங்கள் விழுந்து உள்ளதால் பாண்டிச்சேரி வழியாக சென்னை வரும் வாகனங்கள் தற்போது குறைந்த அளவில் இயக்கப்படுவதால் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை 9 மணியில் இருந்து மின்சார சேவை வழங்கப்பட்டது. மாமல்லபுரம் நகர வீதிகளில் மரங்கள் ஒடிந்து விழுந்து குப்பைக் காடாக கிடந்த பகுதிகளை பேரூராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். காலையில் குடிநீர் தடை வராமல் இருக்க ஜெனரேட்டர் வைத்து குடிநீர் மோட்டார்கள் இயக்கப்பட்டது.

    சென்னை, புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய்க்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மழை நின்று வெயில் அடிக்க துவங்கியதால் விடுமுறை நாளான இன்று மாமல்லபுரத்திற்கு வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மீன் பிடிக்க பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.
    • மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மரக்காணம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24). விக்கரம் (23). சூர்யா (23). இதில் விக்ரம், சூர்யா ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள். லோகேஷ், சூர்யா ஆகியோர் மரக்காணத்தில் உள்ள பூக்கடையிலும், விக்ரம் முட்டை கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்த நிலையில் அண்ணன்-தம்பிகள் 3 பேர் மேலும் சிலருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க மரக்காணம்-திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.

    அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்த படி கூச்சல் போட்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பிகளான விக்ரம், சூர்யா ஆகியோர் லோகேசை காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். ஆனால் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் கால்வாயில் மூழ்கிய அண்ணன், தம்பிகள் 3 பேரையும் தேடினார்கள்.

    மீனவர்களின் பைபர் படகுகளை வரவழைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.

    அப்போது லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பலியாகி கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா, விக்ரம் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கால்வாயில் மூழ்கி பலியான லோகேஷ் உடலை பார்த்து அவரது தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மீனவர்கள் வலையில் சிக்கும் ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள்.
    • மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    பக்கிங்காம் கால்வாயில் இணையும் கடற்கரை முகத்துவார பகுதிகளில் உயிர் வாழும் ஆற்று நண்டுகள் கடலின் சீற்றம், கடல் உள்வாங்குதல் மற்றும் காலநிலை மாற்றத்தின்போது கால்வாயில் இருந்து கடலுக்குள் சென்றுவிடும். பின்னர் இந்த வகை நண்டுகள் 3 முதல் 5 மாதங்களில் ஒரு கிலோ எடைக்கு மேல் வளர்கிறது.

    இந்த வகை நண்டுகளுக்கு சிங்கப்பூர், மலேசியா, அரேபியா, போலந்து போன்ற வெளிநாடுகளில் அதிக விலை கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் வலையில் சிக்கும் இந்த ஆற்று நண்டுகள் உயிருடன் ஒரு கிலோ ரூ.1000 வரை கொடுத்து சென்னை ஏற்றுமதி வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இதனால் இந்த ஆற்று நண்டுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.

    மீனவர்கள் தங்களது வலையில் நண்டுகள் சிக்கியதும் அவற்றை காயமின்றி லாவகமாக பிடித்து அதன் கொடுக்கை கயிற்றை கொண்டு கட்டிவிடுகின்றனர். இதனால் இவ்வகை நண்டுகள் 48 மணி நேரம் வரை உயிருடன் இருப்பதாகவும், பின்னர் அதை பாதுகாப்பாக விமானத்தில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

    மாமல்லபுரம், கொக்கிலமேடு, தேவநேரி, கோவளம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களின் வலையில் இந்தவகை ஆற்று நண்டுகள் தற்போது பெருமளவில் பிடிபடுவதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×