என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஏஓ"

    • மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியில் கிராம நிர்வாக அதிகாரியாக பேராச்சி செல்வி (வயது 35) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று பணியில் இருந்தபோது அங்குள்ள மறுகால்தலை பரும்பு பகுதியில் அனுமதியின்றி சிலர் சரள் மண் எடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    உடனே அவர் வருவாய்த்துறை ஊழியர்களுடன் அங்கு சென்றார். அப்போது மண் கடத்தும் கும்பலுக்கும், பேராச்சி செல்விக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

    ஒரு கட்டத்தில் மண் கடத்தல் கும்பல் வி.ஏ.ஓ.வை கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்து அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துள்ளனர். இதுகுறித்து பேராச்சி செல்வி சீவலப்பேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலறிந்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அங்கு மண் அள்ளிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சீவலப்பேரியை சேர்ந்த செல்லத்துரை மகன் முருகேஷ் (30), அவினாப்பேரியை சேர்ந்த உலகநாதன் மகன் செல்லத்துரை (32) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் மண் கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. மற்றும் டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    இச்சம்பவம் குறித்து கிராம நிர்வாக அதிகாரி பேராச்சி செல்வி கொடுத்த புகாரின்பேரில் கொலை மிரட்டல் மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஷ், செல்லத்துரையை கைது செய்தனர்.

    • 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
    • பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 85 வயது முதல் 99 வயது வரையிலான முதியவர்கள் 23 ஆயிரத்து 100 பேரும், 100 வயதை கடந்தவர்கள் 795 பேரும் உள்ளனர்.

    இதில் 85 வயது கடந்த முதியவர்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதனடிப்படையில் நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியவர்கள் வீடுகளிலேயே இருந்தவாறு வாக்களிக்கும் வகையிலான 12டி விண்ணப்பம் வாக்குச்சாவடி அலுவலர்களால் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் மேலப் பாளையம் சிவராஜபுரம் பகுதியில் வசிக்கும் 90 வயது மூதாட்டியான வள்ளியம்மாளிடம் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அனந்த ராமகிருஷ்ணன், வீட்டில் இருந்து வாக்களிக்கும் வகையிலான விண்ணப்பத்தை வழங்கி உள்ளார்.

    அப்போது ஓட்டு கேட்டு வேட்பாளர்கள் தான் யாரோ வந்திருக்கிறார்கள் என்று நினைத்த மூதாட்டி வள்ளியம்மாள், அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு என் ஓட்டு உனக்குதான் பா, உனக்குத்தான் என் ஓட்டு என்று கூறியுள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலகலவென சிரித்து விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • சுனில் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் அங்கன்வாடிகளில் பணி வாங்கி தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் வரை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண்கள் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதுதொடர்பாக ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பாடந்தொரை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த சுனில் என்பவர் தான் பெண்களிடம் பணம் பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவர் மீது கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.

    இதையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலி பணி ஆணை தொடர்பாக நடுவட்டம் இன்ஸ்பெக்டர் ராம்பதி, கூடலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் ஆகியோர் நேற்று சுனிலை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், பாடந்தொரை கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த சுனில், சேரம்பாடியை சேர்ந்த சரண்யா என்ற பிரேமா, ஊட்டியை சேர்ந்த நான்சி ஆகிய 2 பெண்களிடம் போலியான அட்டை வழங்கியும், அவர்கள் மூலமாக அங்கன்வாடியில் வேலை வாங்கி தருவதாக கூறி 32 பெண்களிடம் தலா ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார்.

    மேலும் கிராம நிர்வாக அலுவலரின் சீல் வைத்த பணி நியமன ஆணையையும் அவர் வழங்கியுள்ளார்.

    இதில் சந்தேகம் அடைந்த பெண்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த பணி நியமன ஆணை போலியானவை என்று தெரியவந்துள்ளது.

    இதனை தொடர்ந்தே பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பின்னர் அவரை பந்தலூர் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    அப்போது நீதிபதி சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் சுனிலை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

    ×