search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இஸ்ரேல் ராணுவம்"

    • பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது.
    • அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பெண் குண்டு பாய்ந்து இறந்தார்.

    வாஷிங்டன்:

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் பெய்டா பகுதியில் யூத குடியிருப்புகள் விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

    அப்போது இஸ்ரேல் ராணுவ வீரா்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஐசெனுா் எஸ்கி (26) என்ற அமெரிக்க பெண் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா்.

    சமூக செயற்பாட்டாளரான ஐசெனுா் எஸ்கி துருக்கி குடியுரிமையும் பெற்றவர். சர்வதேச ஒற்றுமை இயக்கத்தில் உறுப்பினராக இருந்தார்.

    இந்நிலையில், இச்சம்பவத்துக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு.

    அமெரிக்க குடிமகன் ஒருவரின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் கவலை அடைந்துள்ளோம். நாங்கள் இஸ்ரேல் அரசாங்கத்தை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களைக் கேட்டுள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    இதேபோல் துருக்கி அரசும் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரை பகுதியிலுள்ள ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் கடந்த 10 நாளாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டிருந்த இஸ்ரேல் படையினா் அங்கிருந்து வெளியேறினர்.

    • ஜெனின் மற்றும் துல்காரெம் நகரில் சோதனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல், மேற்கொண்டு ஏதும் தெரிவிக்கவில்லை.
    • காசாவில் போர் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசாவின் மேற்குக் கரையை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளது. காசாவின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று திடீரென மேற்குக் கரை மூழுவதும் பலத்த சோதனையில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சோதனையின்போது 9 பேர் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஜெனின் நகரை சுற்றி வளைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். அதில் இருந்து தினந்தோறும் என்ற அடிப்படையில் இஸ்ரேல் சோதனை மேற்கொண்டு வருகிறது.

    இந்த சோதனையின்போது அங்குள்ள போராளிக் குழுக்கள் இஸ்ரேல் ராணுவத்தை எதிர்த்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஜெனின் நகர் ஆளுநர், கமல் அபு அல்-ரப் மருத்துவமனைகளுக்கு செல்லும் மற்றும் வெளியேறும் பாதைகளை இஸ்ரேல் படைகள் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஜெனின் மற்றும் துல்காரெம் நகரில் சோதனையில் ஈடுபட்டதை உறுதிப்படுத்திய இஸ்ரேல், மேற்கொண்டு ஏதும் தெரிவிக்கவில்லை.

    காசாவில் போர் தொடங்கியதில் இருந்து மேற்குக் கரையில் 600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளுடன் அடிக்கடி துப்பாக்கிச் சண்டையை தூண்டும் இத்தகைய தாக்குதல்களின் போது பெரும்பாலானோர் இறந்துள்ளனர்.

    • இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
    • கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் காசாவில் இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் எச்ரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.

    • இஸ்ரேல் - ஹமாஸ் சண்டையில் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர்.
    • பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் ஓயாது என்று சபதம் ஏற்றுள்ள இஸ்ரேல் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

    இந்த சண்டையில் பெண்கள், குழந்தைகள் உள்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிருக்கு பயந்து எகிப்து எல்லையில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த பகுதியையும் இஸ்ரேல் ராணுவத்தினர் விட்டு வைக்கவில்லை.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தின் ஜெனின் நகரில் காயமடைந்த பாலஸ்தீனியர் ஒருவரை கைது செய்த இஸ்ரேல் ராணுவம், அவரை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டி வைத்து இழுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.

    இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "மனிதர்களை கேடயமாக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் விசாரணை நடத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.
    • ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம்.

    ஹமாஸ் அமைப்பை அகற்றுவது செய்ய முடியாத காரியம் என்று இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஹமாஸ் அமைப்பை அழிக்கும் முடிவில் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக பேரழிவு ஏற்பட்டுள்ள போதிலும், ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

    ஹமாஸ் உடனான போர் குறித்து பேசிய இஸ்ரேல் மூத்த செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "ஹமாஸ் அமைப்பை அழிப்பது, மக்களின் கண்களில் மண் வீசுவதற்கு சமம். இறுதியில் சரியான மாற்று வழியை வழங்காத பட்சத்தில், ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம். ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனை ஒழிக்கவே முடியாது," என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கள் பெரும் பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹமாஸ்-ஐ முழுமையாக ஒழித்துக் கட்டும் வரை எங்களின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்தார்.

    "பிரதமர் நேதன்யாகு தலைமையில் கூடிய அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மந்திரிசபை கூட்டத்தில் ஹமாஸ் ராணுவம் மற்றும் நிர்வாக அமைப்பு கொண்ட கட்டமைப்பை முழுமையாக ஒழித்துக் கட்டுவது தான் இந்த போரின் மிகமுக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இஸ்ரேலிய பாதுகாப்பு படை இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பை சித்தாந்த முறையில்தான் ஹகாரி குறிப்பிட்டார், அவர் தெரிவித்த கருத்துக்கள் தெளிவாகவே இருந்தது என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    • காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.

    இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.

    • ரஃபாவின் மத்திய பகுதியில் ஹமாஸ் சுரங்கங்களை அழிக்கப்பட்டது.
    • ஹமாஸ் ஆயுத கிடங்கு நகர் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்குப் பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.

    கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி படைகளை நகர்த்தி வந்தது. தற்போது ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் சீர்குலைத்துள்ளது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் தொடுத்ததன் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்தது.

    எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 10 லட்சம் பேர்) வசித்து வருகிறார்கள். இதனால் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என உலக நாடுகள் ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றமும் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தடைவிதித்தது, ஆனால் முழு அளவில் தரைவழி தாக்குதல் நடத்தமாட்டோம் ஒரு குறிப்பிட்ட அளவில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கடந்த வார இறுதியில் தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இதனால் ரஃபா நகர் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் யோசிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஃபாவின் மத்திய பகுதியில் ராணுவம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஃபாவின் மத்திய பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்தோம். ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள் மற்றும் ஆயுத கிடங்கு நகரை அகற்றியுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் கடந்த 6-ந்தேதி ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. எகிப்து எல்லையுடன் உள்ள கிழக்கு மாவட்டங்கள் மீது தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றன. தற்போது மேற்கு மாவட்டமான டெல் அல்-சுல்தானில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது.

    இங்கு இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ்க்கும் இடையில் கடுமையான சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியள்ளது.

    மத்திய ரஃபாவின் எந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

    • நிவாரணப் பொருட்கள் வாங்க கூடியிருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு.
    • இந்த துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பட்டினியால் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான் உதவிப் பொருட்கள் அங்குள்ள மக்களுக்க சென்றடையும் நிலை உள்ளது.

    இந்த நிலையில்தான் காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கான நின்றிருந்த இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி மக்கள் வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தாக்குதல் மிரட்டல் என நம்பியதாகவும் கூறி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதா இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் காசாவில் அமெரிக்க ராணுவம வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • லாரிகளில் உணவுப் பொருட்கள் கொண்டு சென்றதும் மக்கள் முற்றுகையிட்டதாக தகவல்.
    • கூட்ட நெரிசல் காரணமாக அச்சுறுத்தல் இருந்ததாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது- இஸ்ரேல் ராணுவம்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

    இஸ்ரேலுக்கு நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் காசாவில் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இதனிடையே போரின் விளைவால் காசா மக்கள் தொகையில் கால்வாசி பேர் பஞ்சத்தின் விளிம்பில் இருப்பதாகவும், பல லட்சம் மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பரிதவித்து வருவதாகவும் ஐ.நா. கவலை தெரிவித்தது.

    இதனால் குறைவான அளவில் கிடைக்கும் நிவாரண பொருட்களை பெற மக்கள் முண்டியடிப்பதாகவும், ஒரு சில இடங்களில் மக்கள் நிவாரண பொருட்களை கொள்ளையடித்து செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில் காசாவின் மேற்கு பகுதியில் உள்ள நபுல்சி ரவுண்டாபவுட் என்ற இடத்திற்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வருவதாக வந்த தகவலின் பேரில் அவற்றை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

    நிவாரண பொருட்களை கொண்டு வரும் லாரிகளை அவர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். நிவாரணப் பொருட்கள் வந்த லாரிகளுடன் இஸ்ரேல் ராணுவ வாகனங்களும் வந்தன. லாரி அப்பகுதிக்கு வந்ததும், மக்கள் லாரியை முற்றுகையிட்டு பொருட்களை வாங்க முண்டியடித்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிலர் சிக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது.

    இதனால் இஸ்ரேல் ராணுவம் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. அப்போது இஸ்ரேல் ராணுவம் திடீரென மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் 104 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் ராணுவம் "நிவாரணப் பொருட்கள் வாங்குவதற்கான மக்கள் முண்டியடித்தனர். அப்போது அருகில் இருந்து இஸ்ரேல் ராணுவ வாகனத்தை நோக்கி வந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தும் விடுப்பதாக நம்பப்பட்டது. இதனால் தங்களை காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தினர்" எனத் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே காசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கான உபகரணங்கள் இன்றி தள்ளாடி வரும் நிலையில் தற்போதைய இந்த கொடூர சம்பவத்தால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், கழுதை வண்டியில் பலியானவர்களின் உடல்கள் கொண்டு செல்லப்படும் பரிதாப நிலையை காண முடிந்தது.

    இதற்கிடையே அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் உடனடி போர் நிறுத்தம் தேவை. பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    காசாவில் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் இது ஒரு படுகொலை என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    • காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து பதுங்கி வருகின்றனர்.
    • ஹமாஸ் அமைப்பின் இந்த சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.

    டெல் அவிவ்:

    காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.

    காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.

    காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.

    இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

    • தெற்கு காசாவில் உள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது.
    • கடும் வான்வழி தாக்குதலுக்கு மத்தியில் பிணைக்கைதிகளை மீட்டுள்ளது.

    இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த 3 மாதத்துக்கும் மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது.

    நேற்று தெற்கு காசா எல்லையில் அமைந்துள்ள ரபா பகுதியில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.

    வான்வழியாக சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. இதில் 7 பேர் இறந்து விட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

    ரபா நகரில் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் படையினர் நடத்திய சோதனையில் அங்குள்ள ஒரு வீட்டில் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருந்த 2 பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    அதில் ஒருவரது பெயர் பெர்ணாண்டோ சைமன் (வயது 60) மற்றொருவர் பெயர் லூயிஸ்ஹர்க் (70). தற்போது 2 பேரும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    • ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
    • 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலால் சுமார் 85 சதவீத மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாமில் தங்கியுள்ளனர்.

    வடக்கு காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் தங்க இடமின்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்திய போதிலும், போர் நிறுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதேவேளையில் காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இஸ்ரேலுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை தாக்குதல் தொடரும். இன்னும் மாதம் கணக்கில் போர் நீடிக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

      இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    சுமார் ஒரு வாரம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். ஒரு பிணைக்கைதிக்கு 3 பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.

    ×