search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எச்ஐவி ஊசி"

    • திருமணத்தின் போது, ​​விலையுயர்ந்த கார், நகைகளை தந்தை வரதட்சணையாக கொடுத்துள்ளார்.
    • தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

    வரதட்சணை கொண்டு வராத மருமகளுக்கு (30 வயது) மாமியார் (56வயது)  எச்.ஐ.வி. வைரஸ் ஊசியை செலுத்திய கொடூரம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தின் பிரன் காலியர் காவல் நிலையத்தில் உள்ள ஜஸ்ஸா வாலா கிராமத்தில் வசிக்கும் அபிஷேக் என்பவருடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கடந்த பிப்ரவரி 15, 2023 அன்று திருமணம் நடந்துள்ளது.

    திருமணத்தின் போது, விலையுயர்ந்த கார், மகள் தனது மாமியார் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை பெண்ணின் தந்தை வரதட்சணையாக கொடுத்திருந்தார். திருமணத்திற்கு சுமார் ரூ.45 லட்சம் செலவிடப்பட்டது.

    இதற்குப் பிறகு, மீண்டும் ரூ.10 லட்சம் ரொக்கமும், மற்றொரு பெரிய எஸ்யூவி காரும் வரதட்சணையாக கேட்டு மருமகளை மாமியார் நச்சரித்து வந்துள்ளார். இந்த விஷயம் பஞ்சாயத்தில் பேசி தீர்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னும் மாமியார் அந்த பெண்ணை விடுவதாக இல்லை. தொடர்ந்து மருமகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார்.

    இதன் உச்சமாக மருமகளுக்கு எச்.ஐ.வி தொற்று சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி செலுத்தி நோய்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளார். இதன் காரணமாக அவரது உடல்நிலை வேகமாக மோசமடையத் தொடங்கியது.

    பின்னர் மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றும் அவர்கள் அலட்சியம் காட்டி உள்ளனர்.

    எனவே இதுதொடர்பாக பெண்ணும் அவரது தந்தையும் சஹாரன்பூர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். பெண்ணின் மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் மாமியார், கணவர் உள்ளிட்ட உறவினர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரப் பிரதேச காவல்துறைக்கு உத்தரவிட்டது.

    இதனையடுத்து காங்கோ காவல்நிலையத்தில் பெண்ணின் கணவர், 2 மைத்துனர்கள் மற்றும் மாமியார் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 307 (கொலை முயற்சி), 498A (கணவர் அல்லது அவரது உறவினர்களால் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 328 (விஷம் மூலம் காயப்படுத்துதல்) மற்றும் தொடர்புடைய வரதட்சணை பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
    • மருத்துவ பரிசோதனையில் மாதவிக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியை சேர்ந்தவர் சரண் (வயது 35) இவரும் மாதவி (32) என்பவருக்கும் சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் சரணுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள சரண் முடிவு செய்தார்.

    இதற்கு மாதவி இடையூறாக இருப்பார் என்பதால் அவருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட வைக்க வேண்டும் என முடிவு செய்தார்.

    மாதவியிடம் என்னுடைய தம்பிகளுக்கு ஆண் குழந்தைகள் உள்ளனர். நமக்கு பெண் குழந்தை மட்டுமே உள்ளது. நாம் இறந்தால் மகன் தான் இறுதி சடங்கு செய்ய வேண்டும்.

    எனவே நமக்கு ஆண் குழந்தை வேண்டும் என கூறினார். இதற்காக மங்களகிரியை சேர்ந்த டாக்டர் ஒருவர் உதவியுடன் சத்து மருந்து கிடைப்பதாக கூறி அழைத்துச் சென்றார்.

    அங்கு வைத்து மாதவிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தினார். அதற்குப் பிறகு மாதவி உடல் சோர்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் அவருக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் மாதவி அதிர்ச்சி அடைந்தார்.

    கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் என்னை ஏமாற்றி என்னுடைய கணவர் எச்ஐவி தொற்று ஊசியை எனக்கு செலுத்தியுள்ளார் என மாதவி தாடே பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சரணை கைது செய்தனர்.

    இதற்கு உடந்தையாக இருந்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×