என் மலர்
நீங்கள் தேடியது "பைக் டாக்சி"
- தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா?
- நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் தனது ஓய்வு நேரங்களில் பைக் டாக்சி ஓட்டி வருகிறார்.
இந்த விடயம் கடந்த வாரத்தில் இருந்து பயங்கர வைரலாகி வந்தது. மேலும் சமூக ஊடககங்களிலும் நெட்டிசன்கள் இதுகுறித்து தீவிரமாக விவாவித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த ஊழியர் குறித்து பெண் ஒருவர் போட்ட பதவு மேலும் வைரலாகி வருகிறது.
அதாவது," அதிகமான மக்கள் கிக் வேலையை ஏற்றுக்கொள்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், தனிமை ஒரு தொற்றுநோயாக மாறி வருகிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?" என்று அந்த பெண் பதிவிட்டுள்ளார்.
மேலும் " நாம் பரபரப்பாக இருப்பதன் மூலம் ஆழமான பிரச்சினைகளை மறைக்கிறோமா?" என்றும் அவர் தனது பதிவில் வினவியிருந்தார்.
உண்மை கசக்கும் என்பதற்கிணங்க இந்த பதிவு குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் பட்டிமன்றம் நடத்தி வருகின்றனர்.

- இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- 6 வாரத்திற்கு பின் பைக் டாக்சிகள் இயக்கம் நிறுத்தப்பட்டதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்
ஓலா, ரேபிடோ, உபேர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சி சேவைகளை நிறுத்த கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு சக்கர வாகனங்களை போக்குவரத்து வாகனங்களாக அங்கீகரிப்பதற்காக 2022 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்க மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு உபர் இந்தியா மற்றும் பிற நிறுவனங்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்கள் இன்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.எம். ஷியாம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும் வரை, பைக்குகளை வணிகப் போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்தார்.
மேலும் மாநில அரசு மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் கீழ் பொருத்தமான விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் இயற்றும் வரை இந்த சேவைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைகளை 6 வாரங்களுக்குள் தடை செய்ய உத்தரவிட்ட அவர், 6 வாரத்திற்கு பின் பைக் டாக்சிகள் இயக்கம் நிறுத்தப்பட்டதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
- ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
- தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரேபிடோ, ஓலா, உபேர் உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்சி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தடையை மீறினால் ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக பைக் டாக்ஸி சேவைகளை போக்குவரத்து துறை தடை செய்துள்ளது.
வாடகை அல்லது வெகுமதி அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் மீறலாகக் கருதப்படும், தொடர்ந்து மீறினால் ஓட்டுனர் உரிமத்தையும் மூன்று மாதங்களுக்கு இழக்க நேரிடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பைக் டாக்சிகளால் வேலைவாய்ப்புகள் உருவானாலும், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரமும் செய்ய முடியாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.
- அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும்.
- ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது.
கோவை:
கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியின்போது இயற்கை எய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பண பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஓய்வு பெற்ற பணியாளர்கள் 353 பேர், விருப்ப ஓய்வு பெற்ற 68 பணியாளர்கள், இயற்கை எய்திய 53 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என மொத்தம் 518 பணியாளர்களுக்கு ரூ.145.58 கோடி மதிப்பிலான பணபலன்களை வழங்கினர்.
இதனை தொடர்ந்து கோவை மாநகரில் இயங்கும் பஸ்களில் முதல்கட்டமாக 65 பஸ்களுக்கு புவிசார் நவீன தானியங்கி (ஜி.பி.எஸ்.) அறிவிப்பான் மூலம் பஸ் நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பின்னர் கோவை மண்டலத்தில் 3 பணிமனைகள், ஈரோடு மண்டலத்தில் 3 பணிமனைகள், திருப்பூர் மண்டலத்தில 1 பணிமனை என மொத்தம் 7 பணிமனைகளில் டிரைவர்கள் மற்றும் கண்டெக்டர்கள் தங்குவதற்கு குளிர்சாத வசதியுடன் கூடிய ஓய்வு அறைகளையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர். இதனை தொடர்ந்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் அனைத்து டிரைவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறையில் 2 ஆண்டுகளுக்கான எந்த பலன்களையும் வழங்கவில்லை. அவர்கள் வழங்காமல் விட்டு சென்ற பணப்பலன்களை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் அதற்கு என நிதி ஒதுக்கி, தற்போது பணப்பலன்கள் வழங்கி உள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் போராடாமலேயே இந்த நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
கடந்த காலங்களில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்படி இருந்தது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். அப்போது சம்பள விகிதங்கள் மாற்றியமைக்கபட்டு, குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட சம்பள விகிதங்களை, தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பழையபடி, கலைஞர் வழங்கியபடி இப்போது 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கி வருகிறோம்.
அரசு போக்குவரத்து கழகம் என்பது மக்களுக்கு சேவை வழங்கும் ஒரு துறையாகும். பிற மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும் தமிழகத்தில் உயர்த்தப்படவில்லை. தனியார் துறையினர் சிலர் தங்கள் பஸ்களில் கட்டணத்தை உயர்த்துகின்றனர். இதுபற்றிய தகவல் வந்தவுடன், அதிகாரிகளை வைத்து உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஓய்வு பெற்றவர்களுக்கான பஞ்சப்படி கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் பணி நியமனம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிற பணிமனைகளிலும் பணி நியமனம் நடைபெறும்.
தமிழக முதலமைச்சர் 2 ஆயிரம் பஸ்களை வாங்குவதற்கு மாநில அரசின் நிதியை ஒதுக்கி உள்ளார். இதற்கான டெண்டர் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. இதுதவிர ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் 2,400 பஸ்கள் வாங்குவதற்கான பணியும் தொடங்கி உள்ளது. 6 மாத காலத்துக்குள் புதிய பஸ்கள் நடைமுறைக்கு வந்து விடும்.
பைக் டாக்சி என்பது தனிநபர் பயன்படுத்தும் வாகனம். அதனை வாடகைக்கு விடும் வாகனமாக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. தமிழக அரசை பொறுத்தவரை பைக் டாக்சியை பயன்படுத்தக்கூடாது. பைக் டாக்சியை வாடகைக்கு விடுவதற்கு இதுவரை எந்தவிதியும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில் பைக்டாக்சிக்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்த விவகாரத்தில் டெல்லி அரசின் கொள்கை திட்டம் ஜூலைக்குள் தயாராகிவிடும்.
- டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி :
டெல்லி அரசின் சார்பில் புதிய கொள்கை வகுக்கும் வரை ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க தடை விதிக்கக்கூடாது என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதிகள் அனிருதா போஸ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது.
இந்த விவகாரத்தில் டெல்லி அரசின் கொள்கை திட்டம் ஜூலைக்குள் தயாராகிவிடும். இதனிடையே அரசின் அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்டின் உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாது என டெல்லி அரசின் சார்பில் மூத்த வக்கீல் மணீஷ் வஷிஷ் வாதிட்டார். மோட்டார் வாகன ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி இருக்கக்கூடிய சூழலில் டெல்லி அரசு இன்னும் அதை உருவாக்கவில்லை என உபேர் நிறுவனத்தின் சார்பில் மூத்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, அரசின் உரிமம் இல்லாமல் சாலையில் வாகனங்கள் இயங்க முடியாது என கருத்து தெரிவித்ததுடன், டெல்லியில் ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க இடைக்கால தடை விதித்தது. இவற்றை இயங்க அனுமதித்த டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
- தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
- ஒருசில மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் பெண் பயணிகளின் நலனுக்காக பைக் டாக்சி வசதி செய்து கொடுக்கப்பட்டது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, பெண்கள் மட்டுமே இயக்கும் வகையில், இணைப்பு இருசக்கர வாகன (பைக் டாக்சி) வசதியை கடந்த ஏப்ரல் 13-ந் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் முதல கட்டமாக, ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூா், சைதாப்பேட்டை உள்ளிட்ட சில மெட்ரோ ரெயில் நிலையங்களில் பைக் டாக்சி சேவை தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தன.
இதற்கு, வாடகை ஆட்டோ தொழிலாளா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், தமிழகத்தில் பைக் டாக்சி இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பையடுத்து, சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வந்த பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் உள்ள ஒருசில மெட்ரோ ரெயில் நிலையங்களில் மட்டும் பெண் பயணிகளின் நலனுக்காக பைக் டாக்சி வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால், இதற்காக, குறிப்பிட்ட அந்த தனியாா் நிறுவனத்துடன், நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தடை இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்ததைத் தொடா்ந்து, மெட்ரோ ரெயில் நிலையங்களில் பைக் டாக்சி சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது எந்த ரெயில் நிலையத்திலும் இந்த சேவை இல்லை.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
- கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.
- சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செல்போனில் அழைத்த சில நிமிடங்களில் பைக் டாக்சி வந்து நிற்கிறது. அதிலும் டிரைவர்களாக பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரபல பைக் டாக்சி நிறுவனத்தின் கீழ் பெண்கள் பலர் பைக் ஓட்ட தொடங்கியுள்ளனர்.
இதன் மூலம் இவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கல்லூரி மாணவிகள் படிப்பு செலவுக்காக பகுதி நேரமாக பைக் டாக்ஸி ஓட்டுகின்றனர்.
மேலும் திருமணமான பெண்கள் கணவரின் மது பழக்கத்தால் குடும்பம் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுவதற்காகவும் பைக் டாக்ஸி ஓட்டுவதாக தெரிவித்துள்ளனர்.
பைக் டாக்சி தொழிலில் குடும்பத்தை நடத்த தேவையான வருமானம் கிடைக்கிறது. எங்கள் நிறுவனம் ஒதுக்க கூடிய வாடிக்கையாளர்களை நாங்கள் ஏற்றி சென்று விடுகிறோம்.
இதில் சில வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தகாத முறையில் நடந்து பாலியல் தொல்லை தருகிறார்கள். வேலையை சுற்றியுள்ள ரகசியம் காரணமாக இது போன்ற சம்பவங்களை போலீசில் புகார் அளிப்பது சவாலாக உள்ளது.
இது போன்ற நிலையை தடுக்க சம்பந்தப்பட்ட டாக்சி நிறுவனம் எங்களுக்கு பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக தர வேண்டும்.
மேலும் பல பெண்கள் பைக்டாக்சி ஓட்ட தயாராக இருந்தாலும் இது போன்ற இக்கட்ட சூழ்நிலையால் அவர்கள் இந்த தொழிலுக்கு வர பயப்படுகின்றனர்.
பெண்கள் ஒட்டும் பைக் டாக்ஸியில் செல்வதன் மூலம் பாதுகாப்பான சூழலை உணர முடியும் என்பதால் தற்போது பெண் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆட்டோ டிரைவர்கள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
கோவை:
கோவையில் ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கோவை உக்கடம் பஸ் நிலையம் அருகே, மாவட்ட ஆட்டோ தொழிலாளர் அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் பைக் டாக்ஸி முறையை தடை செய்ய வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டு கமிட்டி தலைவர் செல்வம், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சிவாஜி தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஏராளமான ஆட்டோ டிரைவர்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. தற்போது அமைச்சர் சிவசங்கர் பைக் டாக்ஸி ஓட்ட அனுமதி அளித்து உள்ளது மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் எங்கும் பைக் டாக்ஸி இல்லை. எனவே, பைக் டாக்ஸி இயக்கும் அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
டாக்ஸிகளுக்கு அனுமதி என்றால் ஆட்டோக்களுக்கு வெள்ளை போர்டு அனுமதி வழங்க வேண்டும். எங்களது அடுத்தகட்ட போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்த உள்ளோம். மேலும் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ள ஆட்டோ மீட்டர் கட்டணங்களையும் உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தையொட்டி, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.