என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே பணி"

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
    • தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    திருப்பதி:

    ரெயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான தேர்வு நேற்று முதல் 2 நாட்கள் நடைபெற இருந்தது.

    இந்த தேர்வுக்காக தமிழகத்தில் இருந்து சுமார் 50,000 இளைஞர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 6000 பேருக்கு தமிழகத்திற்கு வெளியே வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.

    சென்னை மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு ஐதராபாத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ரெயில் மற்றும் பஸ்களில் பலர் மணி நேரம் பயணம் செய்து தேர்வு மையத்திற்கு சென்றனர்.

    ஆனால் திடீரென தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வு எழுத சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தேர்வு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்து அவர்களால் அங்குள்ள அதிகாரியிடம் கூட கேட்க முடியவில்லை.

    அங்கிருந்து அதிகாரிகள் பலரும் தெலுங்கில் பேசினர். இதனால் தமிழக வாலிபர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டனர். தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.

    இது குறித்து மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில்:-

    தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6000 பேருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வருவதற்காக நாங்கள் பஸ்களில் பல மணி நேரம் தூக்கத்தை இழந்து பயணம் செய்து இங்கு வந்தோம்.

    தேர்வு மையத்தை கண்டுபிடிக்க முடியாமல் ஒரு வழியாக ஆட்டோ மூலம் தேர்வு வந்தடைந்தோம். ஆனால் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவித்து விட்டனர்.

    தமிழகத்திலேயே இது போன்று ரத்து செய்யப்பட்டிருந்தால் நிம்மதியுடன் வீடு திரும்பி இருப்போம்.

    தற்போது நீண்ட தூரம் பயணம் செய்திருப்பதால் மீண்டும் வீடு திரும்பவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அவர்களுக்கு பண விரயமும் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற 6 ஆயிரம் பேரும் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
    • எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதுரை:

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை-பகவதிபுரம், இடமன்-புனலூர் இடையேயான ரெயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன. இந்த மின்மாயமக்கபட்ட ரெயில் தண்டவாளத்தில் இன்று காலை மின்சார அதிவேக ரெயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

    தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா தலைமையில் மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சோதனை ஓட்டத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    விருதுநகரில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட ஆய்வு ரெயில், மதியம் புனலூருக்கு சென்றது. அடுத்தபடியாக புனலூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் அதிவேக என்ஜின் ரயில், 4.35 மணிக்கு எடமன் செல்லும். இதனைத் தொடர்ந்து பகவதிபுரத்தில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்படும் அதிவேக ரயில், இரவு 8.30 மணிக்கு விருதுநகர் வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    விருதுநகர்-தென்காசி-செங்கோட்டை பிரிவில் ஒட்டுமொத்தமாக 140.89 கி.மீ. தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 129.99 கி.மீ. தொலைவிற்கு மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த பிரிவில் 8 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதற்காக மின்சார நுகர்வு விருதுநகர், வஞ்சி மணியாச்சி துணை மின் நிலையங்களில் இருந்து பெறப்படுகிறது. இது தவிர சோழபுரம், செங்கோட்டையில் மேலும் 2 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

    அடுத்தபடியாக திருத்தங்கல்-பாம்பு கோவில் சந்தை பிரிவில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய பகுதிகளில் துணை செக்சன் போஸ்டர்கள் அமைக்கப்பட உள்ளது.

    விருதுநகரில் உள்ள ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போ, ராஜபாளையத்தில் புதிதாக அமைய உள்ள டிப்போ ஆகியவை மேற்கண்ட பிரிவின் மின்சார பராமரிப்பு தேவையை பூர்த்தி செய்யும். விருதுநகரில் உள்ள டவர் வேகன் சைடிங்குடன், புதிதாக ராஜ பாளையத்தில் டவர் வேகன் சைடிங் வருகிறது.

    செங்கோட்டை-பகவதிபுரம் மற்றும் எடமன்-புனலூர் பிரிவில் ஒட்டு மொத்தமாக 16.71 கி.மீ தொலைவுக்கு ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 14.70 கி.மீ. ரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் பாதையில் 2 பிளாக் ஸ்டேசன்கள் உள்ளன. இதற்காக தென்மலையில் செக்ஷனிங் போஸ்டர்கள் உள்ளன.

    அடுத்தபடியாக புதிய ஆரியங்காவு, எடமன், பகவதிபுரம் ஆகிய இடங்களில் துணை செக்ஷனிங் போஸ்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றுக்கான மின்சார பராமரிப்பு தேவையை விருதுநகர், ராஜபாளையத்தின் ஓவர் ஹெட் எலக்ட்ரிக் டிராக்ஷன் டிப்போக்கள் பூர்த்தி செய்யும். விருதுநகரில் ஏற்கனவே டவர் வேகன் சைடிங் உள்ளது. இதுதவிர ராஜபாளையத்தில் புதிய டவர் வேகன் சைடிங்கும் அமைய உள்ளது. எடமன்-பகவதிபுரம் இடையே 34.677 கி.மீ. தொலைவுக்கான மின்மயமாக்கல் பணிகள் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புனலூர்-கொல்லம் இடையே ஏற்கனவே மின் மயமாக்கல் முடிக்கப்பட்டு, அங்கு கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் தொடங்கி உள்ளது.

    • போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான ராசிபுரம் பிரிவு ரோட்டில் இருந்து மல்லியகரை வரை சாலை விரிவாக்கப் பணி கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    இதேபோல் நரசிங்கபுரம் பழைய வீட்டு வசதி வாரியம் அருகே ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிக்கு நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி (25) மேற்பார்வையாளராக இருந்தார். இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரமூர்த்தி, மேம்பாலம் கட்ட பள்ளம் தோண்டிய மண் மீது நடந்து சென்றபோது சறுக்கி விழுந்தார்.

    அப்போது இதை கவனிக்காமல் டிரைவர் சக்திவேல் என்பவர் பொக்லைன் எந்திரத்தை பின்னால் இயக்கினார். இதில் ஈஸ்வரமூர்த்தி மீது பொக்லைன் எந்திரம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் நகர போலீசார் ஈஸ்வரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தர்மபுரியை சேர்ந்த டிரைவர் சக்திவேலை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த மேற்பார்வையாளர் பொக்லைன் எந்திரம் ஏறியதில் உடல் நசுங்கி பலியான சம்பவம் சக ஊழியர்கள், அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    • பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது.

    சென்னை:

    இந்திய ரெயில்வே துறை, நாடு முழுவதும் உள்ள 32 ஆயிரத்து 428 காலிப்பணியிடங்களை ரெயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப உள்ளது. அதில் தமிழகத்திற்கு உட்பட்ட தென்னக ரெயில்வேயில் மட்டும் 2,694 பணியிடங்கள் உள்ளன. அதற்கான அறிவிப்பு https://www.rrbchennai.gov. in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. படித்து இருந்தால் போதுமானது.

    விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு ஆரம்ப சம்பளம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் பெண்கள், முன்னாள் படைவீரர்கள், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வருகிற 22-ந்தேதி கடைசிநாளாகும்.

    • 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது.
    • மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்தது. ரெயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள், இந்த தேர்வை எழுதி பதவி உயர்வு பெற முடியும். இந்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவில் முதல் சராய் பகுதியில் 3 இடங்களில் அவர்கள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 17 பேர், கையால் எழுதப்பட்ட ரெயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ரெயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பணம் கட்டி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வினாத்தாள் நகல்களுடன் கையும், களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக மேலும் 9 ரெயில்வே அதிகாரிகள் பிடிபட்டனர். அவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இவர்தான் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரி ஆவார். அவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த தொகை வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரியவந்துள்ளது.

    பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளும், நேற்று நடந்த அசல் தேர்வு வினாத்தாள் கேள்விகளும் பொருத்தமாக இருப்பது ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது. இதை புகாரில் முக்கிய சான்றாக இணைத்து உள்ளனர்.

    இந்த மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

    ×