search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழில் பெயர் பலகை"

    • அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும்.
    • தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதை முழுமையாக செயல் படுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஏற்கனவே ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்த போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு முன்பு அபராதம் 50 ரூபாய் என இருந்த நிலையில் இப்போது ரூ.2000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


    இதன் பிறகு தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி கூறியதாவது:-

    அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் பிற மொழியை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அந்த பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும்.

    தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும்.

    எல்லா இடங்களிலும் தமிழ் பெயர் பலகைகள் வைக்கப்படுவதை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் எங்கு சென்றாலும் தமிழில் பெயர் பலகை வைக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி இந்த இரு துறைகளின் சார்பில் கூட்டாக மாதம் இருமுறை ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதையும் மீறி பிற மொழியில் மட்டும் பெயர்கள் இருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இப்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    மதுரை

    தமிழில் பெயர் பலகை வைக்காத கடை, நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டி ருந்தார்.

    அதன்படி சிறப்பாய்வு மேற்கொள்ள மதுரை பெருமண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் வழிகாட்டுதல் வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டலத்திற் குட்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சிறப் பாய்வு மேற்கொள்ளப் பட்டது.

    இதில் மொத்தம் 275 கடைகள், நிறுவனங்கள் உணவு நிறுவ னங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு தமிழில் பெயர் பலகை வைக்காத 127 கடை, நிறுவனங்கள் உரிமை யாளர்கள் மீதும் மற்றும் 6 உணவு நிறுவன உரிமையா ளர்கள் மீதும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தமிழ்நாடு கடைகள் மற்றும் மற்றும் நிறுவனங்கள் விதிகள். 1948-ல் விதி 15-ன்படியும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகள் 1959-ல் விதி 42-பி-ன் படியும் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதலில் வருமாறும் ஆங்கிலம் மற்றும் இதர மொழி எழுத்துக்கள் தமிழுக்கு கீழே வருமாறும் இருக்க வேண்டும்.

    மற்ற மொழி எழுத்துக் களை விட தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரியும்படி பெரிய எழுத்தில் வருமாறும் தமிழ் சீர்திருத்த எழுத்துக்களில் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

    இதனை பின்பற்றாத கடை நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவன உரிமையா ளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்ட கடை நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் தொடர்ந்து பெயர் பலகையினை மாற்றாவிடில் 2-வது முறை முரண்பாடு கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    மேற்படி தமிழ் பெயர் பலகை குறித்து கடை நிறுவன உணவு நிறுவன வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மேலும் தற்போது நடந்த ஆய்வில் 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-ஏ-ன் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராதது தொடர்பாக ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டதில் 44 கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது.

    தமிழில் பெயர் பலகை வைக்காத கடை நிறுவ னங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் குறித்து மதுரை மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் மதுரை. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (0452 - 2604388).

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04562 - 252130). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04575 - 240521).

    ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் ராமநாதபுரம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04567 - 221833) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்

    இந்த தகவலை மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

    ×