search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவ மழை"

    • பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டிய நிலையில், பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

    இதனால் மாநகரின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை, டவுன் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பரவலாக பெய்தது.

    மாவட்டத்தில் சேரன்மகா தேவி, கன்னடியன் கால்வாய் பகுதிகளில் மட்டும் சாரல் அடித்தது. களக்காடு, மூலக்கரைப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    மேலும் இதமான காற்றும் வீசியது. இதனால் குளிர்ச்சி யான சூழ்நிலை நிலவியது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. பிற்பகலில் தொடங்கி இரவிலும் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 18 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 9 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 3.8 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    மழை காரணமாக 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரு அடி உயர்ந்து 88.50 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 98 அடியாக இருந்த நிலையில் இன்று 2 அடி உயர்ந்து 100 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1,258 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 804 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 77.49 அடி நீர் இருப்பு உள்ளது. அந்த அணையில் 3.8 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்றும் காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கார் சாகுபடிக்கான பணியில் அவர்கள் ஆர்வமுடன் இறங்கி உள்ளனர்.

    மேலும் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணி முத்தாறு அருவி, களக்காடு தலையணை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால், அதில் குளிக்க சுற்றுலாp பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தமிழகத்தில் அதிக மழை பொழியும் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலையில் கனமழை பெய்துள்ளது. அங்குள்ள ஊத்து எஸ்டேட்டில் இன்று காலை வரை 6.8 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. நாலுமுக்கில் 6.6 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 56 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை யில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தென்காசி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கும் பெரும்பாலான அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக ராமநதி அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. நேற்று 66 அடியாக இருந்த நிலையில், இன்று 69 அடியாக அதிகரித்துள்ளது.

    அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 71 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 30 அடியை கடந்துள்ளது. 36 அடி கொண்ட குண்டாறு அணை நீர்மட்டம் 33 அடியை எட்டியுள்ளது. இதனால் இன்னும் ஒருசில நாட்களில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக அடவிநயினாரில் 23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடனா மற்றும் ராமநதியில் தலா 10 மில்லிமீட்டரும், கருப்பாநதியில் 21 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீர் சாரல் மழை பெய்தது. இரவிலும் விட்டு விட்டு சாரல் அடித்தது. செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 4.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதே நேரம் அவ்வப்போது லேசான மேகமூட்டமும், காற்றும் வெயிலை தணித்து வந்தது. அதன்படி நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென மேகங்கள் திரண்டு பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த மழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

    • இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.
    • சென்னையில் 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிவருவதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.

    இந்த வாளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ராணிப்பேட்டை, வேலூரில் கனமழை வாய்ப்பு இருக்கிறது.

    அதேபோல 5-ந்தேதியை பொறுத்தவரைக்கும் தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்லில் ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில பகுதிகளில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியதன் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த தென்மேற்கு பருவ மழையின் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையும், கடலோர மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    தென்மேற்கு பருவ மழை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை உள்ள காலம், இந்த காலங்களில் தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும், இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் இன்னும் கூடுதலாக மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    5 சதவீதம் குறைவு

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஜுன் 1-ந் தேதி முதல் நேற்றைய தேதியான செப்டம்பர் 8-ந் தேதி வரை 289.1 மி.மீ. மழை பெய்யும், ஆனால் இந்தாண்டு 274.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 15 மில்லி மீட்டர் குறைவாக பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் குறைவாகும், இன்னும் தென் மேற்கு பருவ மழை காலம் முடிய இன்னும் 21 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் கூடுதல் மழை பெய்தால் வழக்கத்தை விட மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • வடகிழக்கு பருவமழைகளின் போதே நீர் வரத்து கிடைக்கிறது.
    • காய்கறி சாகுபடி பரப்பு கூடுதலானது.

    மடத்துக்குளம் : 

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு முக்கியமாக பருவமழை அவசியமானதாக உள்ளது.உடுமலை பகுதியிலுள்ள அணைகள், குளங்கள் உட்பட நீராதாரங்களுக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளின் போதே நீர் வரத்து கிடைக்கிறது.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததுடன் பாசனத்துக்கும் போதுமான தண்ணீர், திருமூர்த்தி, அமராவதி அணைகளில் இருந்து வழங்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பரவலாக அதிகரித்து காய்கறி சாகுபடி பரப்பு கூடுதலானது.

    இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் சில நாட்கள் மட்டும் மழை பெய்தது.சமவெளி பகுதியில் மழைப்பொழிவு இல்லை.இதனால் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பருவமழை தாமதித்தாலும் ஜூன் மாதத்தில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மாறி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறண்ட காற்றும், அதிவேகமாக வீசி வருகிறது.கிராம குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயமும், கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளைநிலங்களில் கோடை உழவு செய்து சாகுபடிக்கு தயார் செய்தோம். ஆனால் மழை தாமதித்து வருகிறது. தற்போது வீசி வரும் வறட்சியான காற்றால் விளைநிலங்களில் ஈரப்பதம் வேகமாக வற்றி விடுகிறது.தென்னை சாகுபடியில் பாசன மேலாண்மையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காய்கறி சாகுபடியிலும் பல்வேறு நோய்த்தாக்குதல் பரவி வருகிறது. விரைவில் பருவமழை துவங்கி தீவிரமடையும் என எதிர்பார்த்துள்ளோம்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.  

    • வருகிற 8ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    அதன்படி வருகிற 8-ந் தேதி, அதாவது நாளை தென்மேற்கு பருவ மழை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் பிபோர்ஜோய் என்ற புயல் உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது மேலும் ஒருவாரம் தாமதமாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    ×