search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிசிடிவி கேமிரா"

    • 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.
    • சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட தங்க சாலை வீதி மற்றும் சருகு மாரியம்மன் கோவில் வீதி, அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

    இந்த குடியிருப்பு பகுதிகளில் சில தினங்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் பு.புளியம்பட்டி பகுதியில் ஒரு பெண் வந்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. 11-வது வார்டு சருகு மாரியம்மன் கோவில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் இந்த காட்சி பதிவாகியுள்ளது.

    இதே போல் நகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு தங்கசாலை வீதியில் உள்ள வீடுகளிலும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் டார்ச் லைட் அடித்து பார்ப்பதாகவும் வந்து பார்த்தால் அவர்கள் ஓடி விடுவதாகவும், மர்ம நபர்கள் பகல் நேரங்களில் நோட்டம் விடுவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

    இந்த பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ள சுமார் 6 அடிக்கு மேல் இருக்கும் பெண் முகத்தை முழுவதும் துணியால் மறைத்து மாஸ்க் அணிந்து புடவை கட்டி உள்ளார். இதை பார்த்தால் அவர் ஆணா, பெண்ணா என்று தெரியவில்லை. மர்ம நபர்கள் பெண்களைப் போல் வேடமிட்டு வருவதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மேலும் புளியம்பட்டி நகர குடியிருப்பு பகுதிகளில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடி வருவது அதிகரித்துள்ளதாக மக்கள் அச்சத்துடன் கூறுகின்றனர்.இதனால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவங்களில் நடக்க வாய்ப்புள்ளது.

    எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளித்து பயமின்றி இருக்க புளியம்பட்டி நகர பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். வீதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    மேலும் நள்ளிரவில் மர்ம நபர்கள் நடமாடி வருவதையும் மற்றும் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதை சிசிடிவி கேமராவில் பார்ப்பதற்கு நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் வெளிச்சம் இல்லாத இடங்களில் தெரு விளக்குகளை அமைக்க வேண்டும். பல பகுதிகளில் எரியாத தெரு விளக்குகளை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.
    • அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே அந்தியூர் ரோட்டில் உள்ள குறிச்சி பிரிவில் தனியார் பேக்கரி கடை உள்ளது. நள்ளிரவில் இந்தக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாவில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் பேக்கரி திண்பொருள்களை மர்ம நபர்கள் அள்ளி சென்றுள்ளனர்.

    கடையின் எதிரே மற்றொரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவையும் உடைத்து சென்றுள்ளனர்.

    தொடர்ந்து அந்தியூர் ரோட்டில் மறவன் குட்டை மேட்டில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்து ரூ.3ஆயிரம் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்திருந்த போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் இருந்த பதிவை பார்த்த பொழுது அதில் 3 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வந்து பூட்டை உடைத்து கடைக்குள் செல்வது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை கரிய காளியம்மன் கோவில் அருகில் உள்ள ஆதிபராசக்தி கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் அங்கிருந்த உண்டியலை திருடிச் சென்று அதில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு உண்டியலை காட்டில் வீசி சென்றுள்ளனர்.

    இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தியூர் ரோட்டில் பட்டஞ்சாவடியில் உள்ள ஒரு கடையிலும், அம்மா பேட்டையில் உள்ள ஒரு பத்திர எழுத்தர் கடையிலும் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

    அம்மாபேட்டை பகுதியில் முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்து திருடும் கும்பலால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    • புதிய வீட்டில் நடந்துவந்த தரை ஓடுகளை செப்பனிடும் பணியை பார்வையிடுவதற்காக சென்றார்.
    • தீவைப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெக்கல் அருகே உள்ள தச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது34). கூட்டுறவு நகர்ப்புற சங்கத்தின் எழுத்தராக பணிபுரிந்து வரும் அவர், இளைஞர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான இருந்து வருகிறார்.

    மேலும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். சுஜித்குமார் தச்சங்காட்டில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கு அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவைடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

    அந்த பணிகளும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்பதால், வருகிற ஓணம் விடுமுறையில் புதிய வீட்டுக்கு புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் புதிய வீட்டில் நடந்துவந்த தரை ஓடுகளை செப்பனிடும் பணியை பார்வையிடுவதற்காக சென்றார்.

    அப்போது அவரது வீட்டின் கதவுகள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்த சில பொருட்களும் எரிந்து கிடந்தன. வீட்டினுள் அலமாரி உள்ளிட்ட சில பொருட்கள் அடித்து உடைக்கப்பட்டிருந்தன.

    யாரோ மர்மநபர்கள், சுஜித்குமாரின் வீட்டு கதவுகளுக்கு தீவைத்தது மட்டுமின்றி, அலமாரி உள்ளிட்டவைகளை அடித்து உடைத்துள்ளனர். ஆனால் யார் இந்த செயலில் ஈடுபட்டார்கள்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். பின்பு தீவைப்பு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஜித்குமாரின் புதிய வீட்டுக்கு தீவைத்தது யார்? என்பதை கண்டறிய அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகியிருந்த வீடியோ பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் அதிகாலை 2 மணியளவில் சுஜித்குமாரின் வீட்டுக்கு அருகே இரு மோட்டார் சைக்கிள்களும், அதிகாலை 4 மணியளவில் ஒரு காரும் சென்றது பதிவாகியிருந்தது. அதில் சென்ற நபர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    ஆகவே அந்த வாகனங்க ளில் சென்றவர்கள் யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் காசர்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.
    • வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ், பைக் மூலம் வந்து செல்கின்றனர்.

    பக்தர்கள் நேர்த்திக்கடனாக மலைபாதையில் நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு கர்னூலை சேர்ந்த குடும்பத்தினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் அலிப்பிரி நடைபாதையில் நடந்து சென்றனர்.

    அப்போது-7வது மைலில் சென்றபோது திடீரென வனப்பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை பாய்ந்து சிறுவன் கவுசிக்கை கவ்வி இழுத்துச் சென்றது.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் நடந்து சென்ற பக்தர்கள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்களுடன் சேர்ந்து சிறுத்தையை விரட்டிச் சென்றனர்.

    பொதுமக்கள் விரட்டி வருவதை கண்ட சிறுத்தை சிறுவனை கீழே போட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. சிறுத்தை தாக்கியதில் கவுசிக் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ஸ்வின்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வனத்துறையினர் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் விரைந்து வந்தனர். சிறுத்தை தப்பி சென்ற பாதையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் வனப்பகுதிக்குள் தப்பி சென்ற சிறுத்தையை பிடித்து வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சிறுத்தை நடமாடிய பகுதிகளில் கூண்டு வைக்க உள்ளதாக தெரிவித்தனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிப்பிரி நடைபாதை அடர்ந்த வனப் பகுதியாக உள்ளது.

    இதனால் வனப்பகுதியில் உள்ள சிறுத்தை,யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வந்து பக்தர்களை தாக்கி விட்டு செல்கிறது.

    அலிப்பிரி நடைபாதையில் வனவிலங்குகள் வராமல் தடுப்பது குறித்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அலிப்பிரி நடைபாதையில் சிறுத்தைகள் அடிக்கடி புகுந்து பக்தர்களை தாக்கும் சம்பவத்தால் பக்தர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

    ×