search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூதுவளை"

    • நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான்.
    • நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும்.

    நமது வீடுகளில் செடி வளர்ப்பது என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு செயல் ஆகும். அதுவும் பெண்களுக்கு மிகவும் பிடித்த செயலாகும். நம் பாட்டி காலத்தில் வீடுகளில் மூலிகை செடிகளை வளர்ப்பது வழக்கம். ஆனால் நாம் அழகு சார்ந்த செடிகளையே தற்போது வளர்க்கிறோம். முன்பெல்லாம் உடல் நிலை சரியில்லை என்றால் வீட்டிலேயே மூலிகை செடிகளை வைத்து கசாயம் வைத்தோ அல்லது பத்து போட்டோ சரிசெய்து விடுவார்கள்.

    ஆனால் விஞ்ஞானம் வளர வளர அனைவரும் ஆங்கில மருத்துவ முறையை பின்பற்ற தொடங்கிவிட்டோம். இப்போதும் ஒரு சில மூலிகைகளை வைத்து நமது வீடுகளிலேயே சளி, இருமல், காய்ச்சல், அடிப்பட்ட காயங்களுக்கு மருந்து என நாமே சில விஷயங்களை செய்யலாம். அப்படி எந்த மூலிகை செடிகள் நமது வீட்டில் வளர்க்கலாம் என்பதை பார்போம் வாங்க...

    நொச்சி

    நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும்.

    ஆடாதொடை: பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.

    தூதுவளை

    தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும்.

    கற்பூரவல்லி

    கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


    அருகம்புல்

    அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.

    நிலவேம்பு

    நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.

    நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும்.


    சோற்றுக் கற்றாழை

    கற்றாழையில் உள்ள நுங்கு போன்ற சதையை எடுத்து சுத்தமான தண்ணீரில் அலசி சமமான அளவில் பனங்கற்கண்டினை சேர்த்து காலை, மாலை இருவேளைகளில் சாப்பிட்டால் அந்த பிரச்னைகள் பறந்துப் போகும். செரிமான சக்தியை அதிகரித்து பசியை தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

    மஞ்சள் கரிசாலாங்கண்ணி

    இது தலை முடிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.

    துளசி

    துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.

    • கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.
    • தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.

    தற்போது பருவநிலை மாறுபாடு காரணமாக பலரும் சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு போன்ற காரணங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்த தூதுவளை மிளகு ரசம் கைகொடுக்கும். அதை எப்படி வைப்பது என்று பார்க்கலாமா....

    தேவையான பொருட்கள்:

    தூதுவளை - 1 கப்

    சின்ன வெங்காயம் - 10

    பூண்டு - 8 பல்

    மிளகு - 1 டீஸ்பூன்

    சிரகம் - 1 டீஸ்பூன்

    புளி - ஒரு நெல்லிகாய் அளவு

    பெருங்காயத்தூள் - சிறிதளவு

    வரமிளகாய் - 3

    கடுகு - 1/2 ஸ்ஸ்பூன்

    தக்காளி - 4

    க.எண்ணெய் - 2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    கறிவேப்பிலை - தேவையான அளவு

    கொத்தமல்லி - ஒரு கைபிடி

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள தூதுவளையை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி, கொதிக்கும்போது புளி கரைசலையும், அரைத்த தக்காளி விழுதையும் சேர்த்து கலந்துவிடுங்கள். அதோடு மஞ்சள் தூள், இடித்த பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும்.

    பின்னர் தூதுவளையை மிக்சியில் அரைத்து சேர்க்கவும். இறுதியாக, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.

    பின் தாளிக்க கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து பின் அதை அந்தக் கலவையில் கொட்டுங்கள். இறுதியாக மிளகு தூள், கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியம் தரும், சளி, இருமலை, காய்ச்சல், உடல் சோர்வை துரத்தும் தூதுவளை மிளகு ரசம் தயார்.

    • சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு.
    • `பயோ கெமிஸ்ட்ரி’ துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன்.

    வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் ஒருசில மூலிகைப் பொருட்களைக் கொண்டே புற்று நோயை குணப்படுத்த முடியும் என்ற ஆராய்ச்சியை முன்னெடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார், யாமினி சுதாலட்சுமி. சென்னை பல்கலைக்கழகத்தில் மெடிக்கல் பயோ கெமிஸ்ட்ரி துறையின் உதவி பேராசிரியராகவும், கல்விப் பணியோடு சேர்த்து புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளராகவும் செயல்படும் யாமினி, தன்னுடைய ஆராய்ச்சி தகவல்களை பிரான்ஸ், இலங்கை... உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த சர்வதேச கருத்தரங்குகளிலும் சமர்ப்பித்திருக்கிறார்.

    மஞ்சள் போன்ற எளிமையான பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலேயே புற்றுநோய்க்கான மருந்து தயாரிப்பதில் ஆர்வமாக இருப்பதால், இவரது ஆராய்ச்சியை மருத்துவ உலகமும் அங்கீகரித்து, ஊக்கப்படுத்துகிறது. கிட்டத்தட்ட ஆராய்ச்சி பணிகள் முடிந்துவிட்ட நிலையில், இறுதிக்கட்ட சோதனைகளில் தீவிரமாக இருக்கும் யாமினியை, சென்னை பல்கலைக்கழக தரமணி வளாகத்தில் சந்தித்தோம். அவர் பகிர்ந்து கொண்டவை....

    ''சிறுவயதில் இருந்தே, அறிவியல் ஆராய்ச்சிகளில் தீராத காதல் உண்டு. மருத்துவம் படிக்கக் கிடைத்த வாய்ப்பைகூட, ஆராய்ச்சி பணிகளுக்காக விட்டுக்கொடுத்துவிட்டேன். அதேசமயம், ஆராய்ச்சி பணிகளுக்கு உகந்ததாக இருக்கும், `பயோ கெமிஸ்ட்ரி' துறையை தேர்ந்தெடுத்து, அதில் பட்டம் பெற்றேன். 1986-ம் ஆண்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றேன். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், முதுகலைப் பட்டமும் (1988), எம்.பில். பட்டமும் (1992) பெற்றேன்.

    இதைத்தொடர்ந்து, சில மத்திய-மாநில அரசுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டிருந்ததால், நீண்ட இடைவெளிக்கு பிறகே 2002-ம் ஆண்டு, பி.எச்.டி. பட்டம் பெற முடிந்தது. தூதுவளையின் மூலமாக பாதிப்பிற்குள்ளான கல்லீரலை குணப்படுத்தமுடியும் என்பதை, எலி சோதனைகள் மூலமாக நிரூபித்ததன் பயனாக, எனக்கு பி.எச்.டி பட்டம் கிடைத்தது. அதுதான், என்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம்'' என்று தன்னுடைய ஆரம்ப வாழ்க்கையை விளக்கியவர், பி.எச்.டி.பட்டம் பெற்ற பிறகும், பயோ இன்பர்மேட்டிக்ஸ் மற்றும் கிளினிக்கல் சயின்ஸ் ஆகியவற்றைக் கற்றறிந்து, தன்னை அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கு தயார்படுத்தினார்.

    ''என்னுடைய வாழ்க்கையில் ஆராய்ச்சிகளும், கல்விப் பணிகளும் பின்னிப்பிணைந்தவை. கிட்டத்தட்ட 35 வருடங்களாக, கல்விப்பணியில் இருந்துகொண்டே, பல ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், நான் மேற்கொண்ட ஆராய்ச்சி பணிகளுக்காக, கல்விப் பணியைக் கைவிடும் சூழல்கள் வந்திருக்கின்றன. இருப்பினும், இன்று வரை ஆராய்ச்சியுடன் கூடிய கல்விப் பணியில் நீடித்துக்கொண்டிருக்கிறேன்.

    நிறைய கல்லூரிகளில் பயோ கெமிஸ்ட்ரி துறையின் தலைவராக பணியாற்றி இருக்கிறேன். பயோ இன்பர்மேட்டிக் என்ற துறை, தமிழகத்திற்குள் அறிமுகமானபோது, அதை பல கல்லூரிகளில் முறைப்படுத்தப்பட்ட துறையாக உருவாக்கி, அதன்மீது மாணவர்களுக்கான கவனத்தை ஈர்த்திருக்கிறேன். அந்தவகையில் இப்போது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பணிக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்திருக்கிறேன்'' என்றவர், உயிரி வேதியியல் துறையில், நிறையப் புதுமைகளை செய்திருக்கிறார்.

    ''தூதுவளை சளி பிரச்சினைக்கு சிறந்த மருந்து என்பது நமக்கு தெரிந்த பொதுவான விஷயம். ஆனால் அந்த தூதுவளையில், நம் கல்லீரலை பாதுகாக்கும் சக்தியும், பாதிப்படைந்த கல்லீரலை குணமாக்கும் சக்தியும் அதிகமாக இருக்கிறது. இதுதான் என்னுடைய பி.எச்.டி ஆராய்ச்சி என்றாலும், இதன்மூலமாக கிடைத்த ஊக்கம், என்னை மூலிகைகள், வீட்டில் பயன்படும் இயல்பான பொருட்களை ஆராய வழிவகுத்தது. அதன் காரணமாக, கிருமிநாசினி என அறியப்படும் மஞ்சளை, புற்று நோய் காரணிகளை கட்டுப்படுத்தும் மருந்தாக மாற்றும் ஆராய்ச்சியில் இறங்கினேன்.

    எதிர்பார்த்தபடியே, மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, பாதிப்பை வெகு விரைவாகக் குறைக்கிறது. இந்தக் குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாகக் கட்டுப்படுத்துகிறது.

    ஆராய்ச்சி பணிகள் 60 சதவிகிதம் முடிவடைந்த நிலையில், இனி சோதனை மருந்து உருவாக்கம், சோதனை ஆராய்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது, முழுமையாக வெற்றிபெற்றால், இப்போது சந்தையில் கிடைக்கும் புற்றுநோய் மருந்துகளை விட மிக மிகக்குறைந்த விலையில் விற்கமுடியும். புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவு, 5 பங்கில் ஒரு பங்காக சுருங்கிவிடும்' என்று புது நம்பிக்கை கொடுக்கும் யாமினியின் ஆராய்ச்சியை, சர்வதேச ஆராய்ச்சியாளர்களும் அங்கீகரித்து, முழுமைபெற பல்வேறு வழிகளில் உதவி செய்கிறார்கள்.

    `தூதுவளை, மஞ்சள்... தொடர்ந்து இயல்பாக வீட்டுச் சமையலில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், ஓமம், பட்டை போன்ற மூலிகைப் பொருட்கள், சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மூலிகைகள்... ஆகியவற்றை பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை மருந்தாக உருமாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறேன். ஆராய்ச்சிகளை வெறும் காகித அளவில் மட்டுமின்றி, அதை முழுமைப்படுத்தி, அதற்கான பேட்டன்ட் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கி உள்ளேன்.

    ஜெர்மனி, பிரான்ஸ், துபாய், ஆஸ்திரேலியா, ஹாங்காங், இலங்கை, பாங்காக்... ஆகிய இடங்களில் அரங்கேறிய பல்வேறு அறிவியல் கருத்தரங்குகளில் பங்கேற்று, ஆராய்ச்சி தகவல்களை பகிர்ந்திருக்கிறேன். இதில் பிரான்ஸ் சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற 400 தலைப்புகளில், என்னுடைய ஆய்வு முதலிடம் பெற்றது சிறப்புக்குரியது. இதன்மூலம் கிடைத்த அங்கீகாரத்தினால் பல நாடுகளுக்கு, சிறப்பு பேச்சாளராகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன்.

    வெளிநாடுகளில் மட்டுமின்றி, இந்தியாவின் பல பகுதிகளையும், என்னுடைய ஆராய்ச்சிகளால் கடந்திருக்கிறேன்'' என்றவர், அறிவியல் ஆராய்ச்சிகள் சம்பந்தப்பட்ட பல அமைப்புகள், குழுக்கள் மற்றும் வாரியங்களில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிப்பதுடன், மாணவ-மாணவிகளுக்கு ஆராய்ச்சி துறையில் ஆர்வம் ஏற்பட பல்வேறு வழிகாட்டுதல்களையும் வழங்குகிறார்.

    `உயிரி வேதியியல் என்ற துறை, மிகவும் வித்தியாசமானது. சுவாரசியமான பல ஆராய்ச்சிகளைக் கொண்டது. எல்லா துறைகளுக்கும் மூலகாரணமாக திகழ்கிறது. முன்பைவிட, இப்போது உலகளவில் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது. உலகளவிலும், மத்திய-மாநில அளவிலும் நிதி உதவியுடன் கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த துறையின் மகத்துவத்தை, மாணவர்கள் மத்தியில் பிரபலப்படுத்தி, எல்லா மாணவர்களையும் ஆராய்ச்சியாளராக மாற்றுவதே என்னுடைய லட்சியம். மேலும், சமூகத்திற்குப் பயன்படக்கூடிய பல்வேறு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டிய கடமையும் எனக்கு இருக்கிறது. இவ்விரண்டையும் சிறப்பாக மேற்கொள்வேன்' என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் விடைபெற்றார்.

    மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி, புற்றுநோய் பாதிப்பை வெகு விரைவாக குறைக்கிறது. இந்த குர்குமின் வேதிப்பொருட்களை, நானோ டெக்னாலஜி முறையில் பலப்படுத்தும்போது, இதன் வீரியம் அதிகமாகி, புற்றுநோய் காரணிகளை வெகு விரைவாக கட்டுப்படுத்துகிறது.

    • தோல் பராமரிப்பிற்கு ஆவாரை ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்
    • பெண்களுக்கான தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வளரிளம் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமின் தொடக்கத்தில் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவ அலுவலர் வசந்தகுமார் குடற்புழு வினால் ஏற்படும் நிலை குலைவு பற்றியும், உடலுக்குள் செல்கின்ற நோய் கிருமிகள் பற்றியும் விளக்கம் அளித்தார்.

    எலும்புகள் பலம்பெற பிரண்டை, சுவாசக் கோளாறு நீங்க தூதுவளை, தோல் பராமரிப்பிற்கு ஆவாரை ஆகியவற்றை நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    சித்த மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, வளர் இளம் பெண்களுக்கான உணவு முறைகள் பற்றியும், சிவப்பு அரிசி புட்டு, உளுத்தங்களி, திணை, எள்ளு, சுண்டைவற்றல், வெந்தயம், வெண்பூசணி, அத்திப்பழம், கருவேப்பிலை நெல்லிக்காய் போன்றவற்றை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    எண்ணையில் பொரித்த பண்டங்களை தவிர்ப்பது நல்லது என்றும் தெரிவித்தார்.

    மாணவர், பெண்க ளுக்கான தனிப்பட்ட ஆலோ சனைகள் மற்றும் பரிசோ தனைகளை மருத்துவ குழுவினர் வழங்கினர்.

    ஹார்மோன்கள் சுரப்பு பற்றிய தெளிவை பெண்கள் அறிந்திருக்க வேண்டும் என்று மருந்தாளுநர் ராணி, ஆரோக்கியமான மனநிலை பற்றி யோகா பயிற்றுநர் சுமதி, உடற்பயிற்சிகளின் தேவைகள் பற்றி யோகா பயிற்றுநர் சக்திவேல் ஆகியோர் விளக்கி கூறினர்.

    முகாமை தலைமை ஆசிரியர் சுதர்சனன் தொடங்கி வைத்தார்.

    முடிவில் பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கி ணைப்பாளர் தமிழாசிரியர் தமிழ்க் காவலன் நன்றி கூறினார்.

    ×