என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹனி டிராப்"

    • இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறினார்.

    அழகான பெண்களை பேச வைத்து படுக்கையில் நெருக்கமாக இருக்க வைத்து பின்னர் அதனை வீடியோ, புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி பணம் பறிப்பது ஹனி டிராப் என அழைக்கப்படுகிறது. கர்நாடகாவில் தனக்கு எதிராக ஹனி டிராப் வலை வீசப்பட்டு தோல்வி அடைந்தாக அம்மாநில அமைச்சர் கே.என். ராஜண்ணா தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கர்நாடக மாநிலத்தில் கிட்டத்தட்ட 48 அரசியல் தலைவர்களுக்கு எதிராக ஹனி டிராப் மோசடிக்கு இலக்காகி இருப்பதாக அம்மாநில கூட்டுறவத் துறை அமைச்சர் கே.என். ராஜண்ணா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அமைச்சர் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    கர்நாட மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல், கூட்டுறவுத் துறை அமைச்சரை ஹனி டிராப் வலையில் வீழ்த்த முயற்சி செய்யப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இது குறித்து பேசிய அமைச்சர் ராஜண்ணா, "பலர் கர்நாடகா சிடி மற்றும் பென் டிரைவ் ஆலையாக மாறிவிட்டதாக கூறுகின்றனர். இது மிகமுக்கிய பிரச்சனை. தும்குருவை சேர்ந்த அமைச்சர் ஹனி டிராப்பில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தும்குருவை சேர்ந்தவர்கள் நானும், பரமேஷ்வராவும் தான். இது தொடர்பாக நான் குற்றச்சாட்டு சமர்பிக்க இருக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்," என்று கூறினார்.

    தொடர்ந்து பேசிய அவர், ஹனி டிராப் விவகாரத்தில் கிட்டத்தட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த 48 பேர் சிக்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமின்றி தேசிய அளவில் நீள்கிறது. நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இதில் சிக்கியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தான் இங்கு விளக்கம் அளிக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சருக்கு இது தொடர்பாக தான் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் யார் யார் என்பது வெளிவரட்டும். பொதுமக்கள் இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    • ரவீந்திர குமார்,பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் ரகசியங்களை பகிர்ந்தார்.
    • ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர்.

    பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் உத்தரப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆக்ரா அருகே ஃபிரோசாபாத்தில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணிபுரியும் ரவீந்திர குமார் பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் முக்கியமான ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    பாகிஸ்தான் உளவாளிகள் இந்திய அரசு ஊழியர்களிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறுவதாக பயங்கரவாத தடுப்பு படையினருக்கு அண்மையில் தகவல் கிடைத்தது.

    இதற்காக, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளிகள் போலி சமூக ஊடக கணக்குகளை தொடங்கி இந்திய அரசு ஊழியர்களை குறிவைத்து நண்பர்கள் ஆக்குகின்றனர். பணம் அல்லது பெண் மூலம் காதல் வலையில் வீழ்த்தி (ஹனி டிராப்) அவர்களை கவர்ந்திழுத்து இதில் சிக்க வைக்கிறார்கள் என்று தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில்தான் ரவீந்திர குமார் சிக்கினார்.

    ரவீந்திர குமார், பேஸ்புக்கில் நேஹா சர்மா என்ற போலி பெயர் கொண்ட பெண்ணுடன் நட்பு கொண்டார். இவர் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உளவாளி. இருவருக்கும் இடையே வாட்ஸ்அப் சாட்கள், ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகள் நடந்துள்ளன.

    படிப்படியாக, நேஹா சர்மா ரவீந்தரை காதல் வலையில் சிக்க வைத்து, ஆயுதத் தொழிற்சாலையின் ரகசியத் தகவல்களைக் கேட்கத் தொடங்கியுள்ளாள். அவள் மீது கொண்ட ஆசை காரணமாக, ரவீந்திரன் தொழிற்சாலையின் ரகசிய ஆவணங்களை அவருக்கு அனுப்பினார்.

    தற்போது கைதுசெய்யப்பட்ட ரவீந்திர குமாரின் தொலைபேசியிலிருந்து பல ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டன.

    அவற்றில் தொழிற்சாலையில் ட்ரோன்கள் மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான உற்பத்தி அறிக்கைகள், இந்திய இராணுவத்திற்கும் ஆலை அதிகாரிகளுக்கும் இடையிலான விவாதங்கள் அடங்கிய ரகசிய சந்திப்பு கோப்புகள், அரசு தொழிற்சாலைகளின் பங்கு பட்டியல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களின் அங்கீகரிக்கப்படாத நகல்கள் ஆகியவை அதில் அடங்கும்.

    தனியுரிமைச் சட்டம் 1923 மற்றும் பிற பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ரவீந்தர் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மேலும் விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் ரவீந்திர குமாரின் கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.
    • வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருவனந்தபுரம்:

    ஹனி டிராப் என்பது ஒருவரை கவர்ந்து மயக்கி அவரின் ரகசிய தகவல்களை அறிந்துகொள்வதே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த முறை வழக்கு விசாரணைக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் நவீன காலத்தில் இந்த முறையை சில மோசடி ஆசாமிகள் கடைபிடித்தது பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதாவது, யாராவது ஒரு நபரின் பலவீனத்தை தெரிந்துகொண்டு, அதன்மூலம் அவரை ஆசை வார்த்தைகள் மூலம் மயக்கி, அவரிடமிருந்து பணம் மற்றும் பொருட்களை அபகரித்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகளவில் நடக்கிறது.

    இந்நிலையில் கேரளாவில் அதேபோன்று ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதுவும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான யூ-டியூப்பரிடமே ஒரு கும்பல் ஹனி டிராப் முறையில் கார் மற்றும் பணத்தை பறித்த சம்பவம் நடந்துள்ளது.

    அந்த கும்பலை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மாஞ்சேரி பகுதியை சேர்ந்த பெண் யூ-டியூப்பர் ஒருவர் குடும்ப ஆலோசகராக இருக்கிறார். அது தொடர்பான வீடியோக்களை யூ-டியூப்களில் வெளியிட்டு வந்திருக்கிறார். அதில் தனது தொடர்பு எண்ணையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யூ-டியூப்பரின் செல்போனுக்கு இடுக்கி பகுதியை சேர்ந்த அக்க்ஷயா என்பவர் போன் செய்துள்ளார். அப்போது தனக்கு கவுன்சிலிங் தேவை என்று பெண் யூ-டியூப்பரிடம் தெரிவித்து கூத்தாட்டுக்குளத்தில் உள்ள ஒரு அறைக்கு அழைத்திருக்கிறார்.

    அதன்படி பெண் யூ-டியூப்பரும் அந்த அறைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு அங்க அக்ஷயா மட்டுமின்றி, இடுக்கி சந்தன்பாறையை சேர்ந்த அதிரா(28) என்ற இளம்பெண்ணும், வட்டப்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ்(28), கொல்லம் கைதோடு பகுதியை சேர்ந்த அல்அமீன்(23) என்ற 2 வாலிபர்களும் இருந்துள்ளனர்.

    அவர்கள் பெண் யூ-டியூப்பருக்கு குடிக்க ஜூஸ் கொடுத்துள்ளனர். அதனை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கினார். அதனை பயன்படுத்தி பெண் யூ-டியூப்பரை அவர்கள் நிர்வாணப்படுத்தி படம் எடுத்துள்ளனர். பின்பு சிறிதுநேரம் கழித்து பெண் யூ-டியூப்பர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

    அப்போது அவர்கள் 4 பேரும் தங்களிடம் இருந்த நிர்வாண படத்தை காண்பித்து பணம் தருமாறும், இல்லையென்றால் அந்த நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் யூ-டியூப்பர், 14 ஆயிரம் ரூபாயை கூகுள்-பே மூலம் அனுப்பியிருக்கிறார்.

    அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், பெண் யூ-டியூப்பரின் ரூ2.5 லட்சம் மதிப்புள்ள காரையும் பறித்துக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் யு-டியூப்பர், கூத்தாட்டுக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    பெண் யூ-டியூப்பரிடம் பணம் மற்றும் காரை பறித்தவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்களது இருப்பிடத்தை செல்போன் டவர் மூலம் கண்டறிந்த போலீசார், அங்கு சென்று அக்ஷயா, அதிரா, அபிலாஷ், அல்அமீன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் இதுபோன்று வேறு யாரிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.
    • ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இளைஞர்களை குறிவைத்து ஹனி ட்ராப் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

    28 வயதான ஜாய் ஜமீமா என்ற பெண் இன்ஸ்டாகிராம் மூலம் பணக்கார இளைஞர்களை குறிவைத்து பணம் பறித்துள்ளார்.

    பணக்கார இளைஞர்களிடம் இன்ஸ்டாகிராமில் பேசி பழகி வீட்டுக்கு வரவைத்து போதை வஸ்து கொடுத்து, ஆடைகள் இன்றி புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இப்பெண்ணை கைது செய்துள்ளனர்.கைதான ஜாய் ஜமீமாவிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகாரளிக்க முன்வர போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

    • லல்லு என்ற 50 வயது முதியவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.
    • முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    உத்திரபிரதேச மாநிலத்தில் 'பிளைண்ட் டேட்டிங்' சென்ற 50 வயது முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரை சேர்ந்த லல்லு என்ற 50 வயது முதியவருக்கு ஒரு பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. தன்னிடம் செல்போனில் பேசிய பெண்ணை சந்திப்பதற்காக அந்த முதியவர் ஜான்சி நகருக்கு டேட்டிங் சென்றுள்ளார்.

    அந்த இடத்தில அந்த முதியவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து அவரது குடும்பத்தினரிடம் ரூ.3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் முன்பணமாக ரூ.1 லட்சத்தை கடத்தகாரர்களிடம் அவரது குடும்பத்தினர் கடத்தல்காரர்களிடம் கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து, லல்லுவின் மகன் போலீசில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய ஆப்ரேசன் நடத்திய போலீசார் கடத்தல்காரர்களிடம் இருந்து லல்லுவை மீட்டனர்.

    லல்லு கடத்தப்பட்ட வழக்கில் ஒரு பெண் பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பெண்களை பயன்படுத்தி 'ஹனிட்ராப்' முறையில் ஏற்கனவே பலரை இந்த கும்பல் கடத்தியுள்ளது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×