search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்கள் பலி"

    • மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர்.
    • தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார்.

    மதுரை:

    மதுரை சிலைமான் அருகே புளியங்குளம் பகுதியில் தனியார் பள்ளி கட்டுமான பணிகள் நடக்கின்றன. இங்கு டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணிக்காக உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூர் பகுதியை சேர்ந்த மதுசூதனன் பிராஜாப்தி (வயது 30), கியானந்த பிரதாப் கவுத் (22) உள்ளிட்ட 6 தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தங்கி வேலை செய்தனர்.

    இந்தநிலையில் மதுசூதனன் பிராஜாப்தி மற்றும் கியானந்த பிரதாப் கவுத் ஆகியோர் நேற்று விடுமுறையில் இருந்தனர். இதனால், அவர்கள் புளியங்குளம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில், மதுரையில் இருந்து மானாமதுரை வரை தண்டவாள ஆய்வுக்காக ரெயில் என்ஜினின் சோதனை ஓட்டம் இயக்கப்பட்டுள்ளது.

    தண்டவாளத்தில் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்ததை அறிந்த என்ஜின் டிரைவர், ஒலி எழுப்பியுள்ளார். அதற்குள் அவர்கள் இருவர் மீதும் ரெயில் என்ஜின் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதனையடுத்து என்ஜின் டிரைவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள், என்ஜின் மோதி இறந்தவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    • ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
    • தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர்:

    ஓசூர் அருகேயுள்ள கர்நாடக மாநில எல்லையான ஆனேகள் பகுதியில் உள்ள சிகாரிபாலிய பகுதியில் சீனிவாஸ் என்பவருக்கு சொந்தமான தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட பலர் பணிபுரிந்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று அந்த தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் சந்தன் ரஜ் பன்சிங் (வயது31) மற்றும் பிந்டு ரஜ் பன்சிங் (22) ஆகிய இருவரும் தண்ணீர் தொட்டியில் இறங்கி ஆசிட் ஊற்றி தண்ணீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் கூச்சலிட்டனர்.

    அதனை கேட்ட தொழிற்சாலையின் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ் மற்றும் தொழிலாளிகள் தண்ணீர் தொட்டிக்கு சென்று பார்த்த போது இவரும் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.

    அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஹெப்பாகுடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    விரைந்த வந்த போலீசார் 2 உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்களான சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் சக தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×