search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடை நீட்டிப்பு"

    • இந்த அமைப்பு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
    • நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு மீதான தடையை உள்துறை அமைச்சகம் நீடித்தது.

    புதுடெல்லி:

    காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்பு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.

    பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அத்துடன், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

    இதற்கிடையே, நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடை வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    • அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.
    • மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மாஞ்சோலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த அமுதா, ஸ்டாலின் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 8,374 ஏக்கர் நிலத்தை 99 வருட குத்தகைக்கு சிங்கம்பட்டி ஜமீனிடம் இருந்து 1928-ம் ஆண்டு தனியார் நிறுவனம் பெற்றது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 700 குடும்பத்தினர் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தோம். 2028-ம் ஆண்டில் குத்தகை முடிகிறது.

    ஆனால் 4 ஆண்டுகள் முன்னதாகவே தனியார் நிறுவன குத்தகை ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதால் எங்களை அங்கிருந்து காலி செய்யுமாறு தெரிவித்தனர். பல தலைமுறைகளாக தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றிய எங்களை திடீரென காலி செய்யுறுமாறு கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச தொகை வழங்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான தொழிலாளர்களுக்கு நிலமும் இல்லை, சொந்த வீடும் இல்லை. மாஞ்சோலை எஸ்டேட் முகவரியில் மட்டுமே ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளதால், அடுத்த மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் 700 குடும்பங்களை சேர்ந்த 2,150 பேர் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறோம்.

    எனவே எங்களுக்கு தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கவும், கன்னியாகுமரி ரப்பர் தோட்ட கழகத்தில் வேலை வழங்கவும் வேண்டும். அதேபோல அங்கன்வாடி, பள்ளிகளில் சமையல் உதவியாளர், அலுவலக உதவியாளர் பணிகளை வழங்க வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த மனு மீதான விசாரணையானது உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    பல தலைமுறைகளாக மாஞ்சோலையில் வசித்து வந்த மக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது மனித தன்மையோடு அணுகப்பட வேண்டிய விஷயம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    இது தனியார் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சினை என அரசு தரப்பு கூறப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அரசின் முடிவு குறித்து அறிந்தபின் நிரந்தர தீர்வு காணலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    மாஞ்சோலை விவகாரத்தில் தேயிலை தொழிலாளர்களை தோட்டத்திலிருந்து காலி செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது நீதிபதிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • இன்றும் கடல் சீற்றம் நீடித்தே வருகிறது.
    • போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    தென் இந்திய பெருங்கடல் பகுதி யில் கடல் சீற்ற மாக காணப்படுவதால் கடற்கரை பகுதிகளுக்கு யாரும் செல்லவேண்டாம் என்று என்று இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதனால் கடந்த 4-ந் தேதி குமரி மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இன்றும் கடல் சீற்றம் நீடித்தே வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இறங்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து வருகிறது.

    இந்த தடையால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு தினமும் ஏராளமானோர் வந்து முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் இறங்கி குளிப்பது வழக்கம். மேலும் கடற்கரையில் நின்று சூரியன் உதயம் பார்ப்பது உண்டு.

    ஆனால் தற்போது அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    சங்கிலிதுறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் கடலுக்குள் இறங்கிடாத வகையில் அங்கு கயிறு கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

     அந்த பகுதியில் உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா போலீசார் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அவர்கள் கடலில் இறங்கச் செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகிறார்கள். அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று சுற்றுலா போலீசார் எச்சரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளனர்.

    இதற்கிடையில் கன்னியாகுமரியில் இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்வானது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்து உள்ள வங்க கடல் பகுதியில் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல் ஆகிய 2 கடல்களும் சீற்றமாக காணப்பட்டன.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    எனவே பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகுத் துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கடல் சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களிலும் கடல் சீற்றமாகவே காணப்பட்டது. இங்கும் ராட்சதஅலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசின.

    இருப்பினும் குறைந்த அளவு வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மேலும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை.

    • விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது.
    • மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    உள்நாட்டில் வெங்காயம் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யவும், விலையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் தடை விதித்தது. இந்த தடை வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தடையை மேலும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மார்ச் 31-ந்தேதி வரை அமலில் உள்ள வெங்காய ஏற்றுமதி தடை, அடுத்த உத்தரவு வரும் வரை மேலும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது' என குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் நட்பு நாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதி நிபந்தனைகளின் அடிப்படையில் அரசின் ஒப்புதலுடன் அனுமதிக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த 2001-ல் வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலாக தடை செய்யப்பட்டது.
    • அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 2001-ல் ஆட்சியில் இருந்தபோது சிமி அமைப்பு முதன்முதலில் தடை செய்யப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. 2014-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போதும் சிமி அமைப்பின் மீது 5 ஆண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதிலும், நாட்டில் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும் ஈடுபட்டதற்காக சிமி அமைப்பின் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

    இதுகுறித்து உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது. பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதிலும், பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களிலும் சிமி அமைப்பு ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிமி மீது விதிக்கப்பட்ட தடை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    ×