search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் மீட்பு குழு"

    • கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
    • பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

    இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.

    பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

    மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.

    விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

    இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.

    உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
    • பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    பெங்களூரு:

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதற்கிடையே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.

    இன்று 2-வது நாளாக பெங்களூரு, குடகு, ஹாசன் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. யஷ்வந்த்பூர், வசந்தநகர், சாந்தி நகர், ஹெப்பாலா, சதாசிவநகர், ராஜாஜிநகர், விஜயநகர், பனசங்கர், மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது .

    பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள நெலமங்களா பகுதியிலும், பீன்யா, தாசரஹள்ளி, பாகல்குண்டே, ஷெட்டி ஹள்ளி மல்லசந்திரா உள்ளிட்ட பல இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

    குறிப்பாக குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் மொத்தம் 28 தாலுகாக்களில் மலைகளில் இருந்து பாறைகள் பெயர்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இது தொடர்பாக பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறையில் 32 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணியாளர்கள் உடனடியாக 18 இடங்களில் மரங்களை அகற்றினர்.

    தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் 6 மாவட்டங்களில் பருவமழை பேரிடர்களை தடுக்க வருவாய் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறையின், பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.

    • 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைப்பு.
    • நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் தயார்.

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளது.

    நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், குமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் முகாமிட்டுள்ளனர்.

    நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

    ×