என் மலர்
நீங்கள் தேடியது "பேரிடர் மீட்பு குழு"
- 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைப்பு.
- நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் தயார்.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியால் பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில், நெல்லை, குமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு குழுவுக்கு 30 வீரர்கள் என்ற அடிப்படையில் 300 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் முகாமிட்டுள்ளது.
நெல்லையில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், குமரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும் முகாமிட்டுள்ளனர்.
நீலகிரியில் 90 வீரர்கள் கொண்ட 3 குழுக்களும், கோவையில் 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.
அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாநில பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.
- நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
- பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன.
பெங்களூரு:
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதற்கிடையே கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத ஆரம்பத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி நேற்று முதல் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
இன்று 2-வது நாளாக பெங்களூரு, குடகு, ஹாசன் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. யஷ்வந்த்பூர், வசந்தநகர், சாந்தி நகர், ஹெப்பாலா, சதாசிவநகர், ராஜாஜிநகர், விஜயநகர், பனசங்கர், மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது .
பெங்களூரு ஊரக மாவட்டத்தில் உள்ள நெலமங்களா பகுதியிலும், பீன்யா, தாசரஹள்ளி, பாகல்குண்டே, ஷெட்டி ஹள்ளி மல்லசந்திரா உள்ளிட்ட பல இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களில் மொத்தம் 28 தாலுகாக்களில் மலைகளில் இருந்து பாறைகள் பெயர்ந்து சாலைகளில் விழுந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளில் 32 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இது தொடர்பாக பிபிஎம்பி கட்டுப்பாட்டு அறையில் 32 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணியாளர்கள் உடனடியாக 18 இடங்களில் மரங்களை அகற்றினர்.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுமோ என்ற அச்சம் நிலவுகிறது. கடலோர மற்றும் மலைப் பகுதிகளில் 6 மாவட்டங்களில் பருவமழை பேரிடர்களை தடுக்க வருவாய் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறையின், பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழிகாட்டுதல்களை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது.
- கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.
விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.
உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
- 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.
அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.

தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.
மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.
போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.
அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-
மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.
இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.
மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த 30-ந் தேதி தாக்கிய பெஞ்ஜல் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 50 செ.மீ. மழை கொட்டியது. இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், துணை மின்நிலையங்கள், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. ரூ.600 கோடி அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்டமாக கணக்கிடப் பட்டுள்ளது.
புயலுக்கு பின் புதுச்சேரி நகர பகுதி ஓரிரு நாளில் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால் கிராமங்களில் அணைகள் திறப்பால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீள வில்லை.
இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் வருகிற 16-ந் தேதி வரை புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை 7 மணி முதல் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று 2-வது நாளாக புதுச்சேரி முழுவதும் அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது.
விமான நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, திண்டிவனம் புறவழி சாலை, ஆரோவில் பகுதி களில் கனமழை பெய்தது. நகர பகுதியான லேசான மழைபெய்தது. பேரிடர் மேலாண்மை துறை கேட்டு கொண்டதற்கிணங்க அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் பாதுகாப்பு குழு புதுச்சேரிக்கு மீண்டும் வந்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தர விட்டார். இதனால் இன்று காலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. பஸ்களில் கூட்டம் இல்லை
மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் பாகூர் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆறு, ஏரி, குளம் உட்பட நீர் நிலைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மழையால் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரையோர புதுச்சேரி கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் ஆழ் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையும் எச்சரித்துள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம், புதுச்சேரியில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத் திலும், இடை யிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும். எனவே புதுச்சேரி மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
புதுச்சேரி கடற்பகுதியில் பாதுகாப்பாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள வேண்டும். இந்த வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும். மீனவர்கள் தொடர்ந்து வானிலை எச்சரிக்கைகளை கவனிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல வெள்ளம் வரும் வரை காத்திருக்காமல், அருகில் இருக்கும் நிவாரண முகாம்களில் தங்க வரும்படி கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்.