search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட் முறைகேடு"

    • இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.
    • நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தருமபுரியைச் சேர்ந்த மாணவிக்கு ஜம்மு-காஷ்மீரில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவி தருமபுரியிலிருந்து சென்னை வந்து விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டு சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாணவிக்கு வடகோடியில் தேர்வு மையம் ஒதுக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    பல முறை சுட்டிக்காட்டியும் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்வதில் நிகழ்ந்த தவறுகளையே சரி செய்ய முடியாத தேசிய தேர்வு வாரியம், முதுநிலை நீட் தேர்வை எவ்வாறு சரியாக நடத்தும்? என்ற வினா எழுகிறது.

    இளநிலை நீட் தேர்வாக இருந்தாலும், முதுநிலை நீட் தேர்வாக இருந்தாலும் வினாத்தாள் கசிவு, தேர்வு மைய ஒதுக்கீட்டில் குழப்பம், தேர்வுகளில் முறைகேடு என பல புகார்கள் தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கின்றன. அதனால், நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட்ட நிலையில் அத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
    • முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை.

    இளநிலை நீட் தேர்வு கடந்த மே மாதம் நடத்தி முடிக்கப்பட்டு, தேர்வு முடிவு ஜூன் மாதம் 4-ம் தேதி வெளியானது. தேர்வு நடந்ததில் இருந்து தேர்வு முடிவு வெளியானது வரை வினாத்தாள் கசிவு, மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி என பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தன.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு வழியாக இளநிலை நீட் தேர்வு முடிவு மீண்டும் வெளியிடப்பட்டு, தற்போது கலந்தாய்வுக்கான பணிகள் தொடங்கியுள்ளது.

    குளறுபடி என்ற வார்த்தை வந்ததில் இருந்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று அரசியல் கட்சி தலைவர்களின் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.

    இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுவதாக இருந்தது.

    இளநிலை நீட் தேர்வு விவகாரம் அப்போது விஸ்வரூபம் எடுத்திருந்ததால், தேர்வு நடைபெறுவதற்கு முந்தையநாள் இரவு அந்த தேர்வை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒத்திவைத்தது.

    அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு வருகிற 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத இருக்கின்றனர்.

    இதற்கிடையில் 'டெலிகிராம்' என்ற சமூகவலைதளப் பக்கத்தில் ''PG Neet leaked Materials'' என்ற குழுவில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் வேண்டுமா?, ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் வாங்க முன்வந்தால் ஒரு விலை எனவும், அதற்கு பிறகு வாங்கினால் வேறொரு விலை எனவும் தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

    அதாவது, ஒரு வினாத்தாள் வாங்க ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகும் எனவும், குழுவில் உள்ளவர்கள் 60 சதவீதம் பணத்தை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இளநிலை 'நீட்' தேர்வு விவகாரத்துக்கு சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட்டு முற்றுப்புள்ளி வைத்து, அடுத்தகட்ட பாதைக்கு வழிகாட்டியது. இந்த சூழலில், தற்போது முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கிடைப்பதாக சமூகவலைதளங்களில் பரவும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முதுநிலை நீட் தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கணிசமான தொகைக்கு வினாத்தாள் வழங்குகிறோம் என முதுநிலை நீட் தேர்வு ஆர்வலர்களை சில வஞ்சகர்கள் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசில் புகாரும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வினாத்தாள் வழங்குவதாக சொல்லப்படும் டெலிகிராம் குழுவில் முதுநிலை நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இருப்பதாக கூறி தவறான பாதைகளில் வழி நடத்த முயற்சி செய்கிறார்கள்.

    முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. சமூக வலைதளங்களில் வினாத்தாள் கசிவு என்று பரவும் தகவல்கள் போலியானது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுவது, உண்மைகளை சரிபார்க்காமல் வதந்திகளை வெளியிடுவது, பரப்புவதை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் சரியாக கையாளும்.

    தேர்வுக்கான வினாத்தாளை வழங்குவதாக ஏஜெண்டுகள், மோசடியாளர்கள் செல்போன் அழைப்பு, மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், சமூக வலைதளங்கள் மூலம் அணுகினால் https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணையதளத்திலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையும் அணுகலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
    • செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    2024 நீட் முறைகேடு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு, பல்கலைக்கழக நுழைவுத்தேர்வான CUET, பொறியியல் படிப்புகளுக்கான JEE தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது.

    கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசால் உருவாக்கப்பட்ட இந்த தேசிய தேர்வு முகமை அமைப்பு இதுவரை நடத்திய தேர்வுகளிலிருந்து கட்டணம் மூலமாக ரூ.3,512.98 கோடி  வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த புதன்கிழமை மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் இந்த தகவலைத் தெரிவித்திருந்தார்.

    குறிப்பாகக் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட CUET பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் பிறகு தேசிய தேர்வு முகமையின் வருமானம் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021-22 ஆண்டில் ரூ. 490 கோடி ஈட்டிய நிலையில் 2022-23 ஆண்டு காலத்தில் ரூ.873 கோடி ஈடுபட்டுள்ளது.

    இந்நிலையில் தேசிய தேர்வு முகமை மாணவர்களின் எதிர்காலத்தை வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழியாக மாற்றியுள்ளது என காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், நீட் தேர்வு ஊழலின் மையமாகத் தேசியத் தேர்வு முகமை உள்ளது. அது, மத்திய கல்வி அமைச்சகத்தின் ஒரு அங்கம். ஆனால், தனது பணிகளை தனியார் வியாபாரிகளிடம் ஒப்படைத்துச் செயல்படுகிறது. தேசிய தேர்வு முகமையானது தற்போது, மெகா மோசடிகள் நடைபெற்ற மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்குத் தலைமை தாங்கிய ஒருவரின் தலைமையில் உள்ளது.


     


    மாணவர்களிடமிருந்து ரூ.3,512.98 கோடி வசூலித்துள்ள NTA, தேர்வுகளை நடத்துவதற்காக ரூ.3,064.77 கோடி செலவழித்தது போக கடந்த 6 ஆண்டுகளில் ரூ.448 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

    ஆனால் இந்த லாபத்தைத் தேசிய தேர்வு முகமை, தானாகவே தேர்வு நடத்தும் அளவுக்கு அதன் திறமையை மேம்படுத்தப் பயன்படுத்தவில்லை. எனவே, மில்லியன் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை வருவாய் ஈட்டும் நடவடிக்கையாக மோடி அரசு சீரழித்து இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். 

    • நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • வினாத்தாள்களை மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடந்தது. இந்த தேர்வில் பீகார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆள்மாறாட்டம் உள்ளிட்டவை நடந்ததாகவும் சர்ச்சையானது. இது தொடர்பாக மாணவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பியது.

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீட் தேர்வில் ஒட்டுமொத்த விதிமுறைகளை மீறும் வகையில் முறைகேடு நடைபெறவில்லை. 20 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த நிலையில் நீட் மறு தேர்வு நடத்தாதது ஏன்? என்பது குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரிவான விளக்கத்தை கொடுத்தனர்.

    மேலும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக கூடுதல் வழிகாட்டுதல்களை நிபுணர் குழுவினருக்கு நீதிபதிகள் வலியுறுத்தினர். அதன்படி,

    நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு போன்றவற்றை தடுக்க சைபர் செக்யூரிட்டி நவீன தொழில் நுட்பத்துடன், இணைய பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    வினாத்தாள்களை தயாரிப்பது முதல் சரிபார்ப்பது வரை கடும் பரிசோதனைகளை உறுதி செய்ய வேண்டும். வினாத்தாள் கையாளுதல், சேமித்தலை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.

    வினாத்தாள்களை அந்தந்த மையங்களுக்கு எடுத்து செல்ல நன்கு பூட்டப்பட்ட பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத்த வேண்டும்.

    வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தேசிய தேர்வு முகமை சரி செய்ய வேண்டும். கல்வி அமைச்சகம் ஒரு மாதத்தில் நடைமுறைபடுத்தப்படும் திட்டத்தை உருவாக்கி 2 வாரங்களுக்கு பிறகு அந்த முடிவை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

    தேர்வு சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு 2024-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் தனது பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் நீட் தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
    • ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது.

    புதுடெல்லி:

    இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்த 'நீட்' தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பீகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றது தெரிந்தது.

    இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டன.

    அதைத்தொடர்ந்து 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கில் ஏராளமானோரை சிபிஐ கைது செய்தது. அவர்களில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர்.
    • திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபக்கில் உள்ள ஒயாசிஸ் பள்ளியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் மையக் கண்காணிப்பாளர் ஆகியோரின் உடந்தையுடன் நீட் தேர்வு வினாத்தாள் திருடப்பட்டது. அவர்கள், அதிநவீன கருவிகளைப் பயன்படுத்தி டிரங்கைத் திறந்து வினாத்தாளை திருடினர்.

    திருடப்பட்ட வினாத்தாள், அதே நாளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பணம் செலுத்திய குறிப்பிட்ட சில மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய தேர்வு முகமையின் தலைவர் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்.
    • தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      புதுடெல்லி:

      நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தேசிய தேர்வு முகமை சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்நிலையில், நேற்று மக்களவை கேள்வி நேரத்தின்போது, தேசிய தேர்வு முகமையில் நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர்? என்று திமுக எம்பி கனிமொழி கருணாநிதி கேட்டார்.

      அதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுகந்த மஜும்தார் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

      தேசிய தேர்வு முகமையின் தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார். அங்கு தற்போது அயற்பணியில் 22 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 39 பேரும், வெளியில் இருந்து 132 பேரும் பணியாற்றுகிறார்கள்.

      ஆனால் போட்டித்தேர்வுகளின் தீவிரத்தன்மையை கருத்தில்கொண்டு, வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட மையப்பணிகளை வெளி ஊழியர்களுக்கு அளிப்பது இல்லை.

      இவ்வாறு அவர் கூறினார்.

    • நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது.
    • பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டை தொடர்ந்து தேர்வு மையங்கள் மற்றும் நகரங்கள் வாரியாக முடிவுகளை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து இந்தியாவில் 4750 மையங்கள், 571 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 14 மையங்கள் வாரியான முடிவுகளை இணைய தளத்தில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

    நாடு முழுவதும் தேர்வு எழுதிய 23 லட்சத்து 33,162 பேரில், 2,321 மாணவர்கள் 700 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 30 ஆயிரத்து 204 பேர் 650 மதிப்பெண்களுக்கு மேலாகவும், 81 ஆயிரத்து 550 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் எடுத்து உள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள சிகார் மையத்தில் 4297 பேர் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 2037 பேர் 650-க்கு மேல் மதிப்பெண்ணும் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதே நேரத்தில் நீட் தேர்வு எழுதிய 2250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட பெறவில்லை. 9,400-க்கும் அதிக மானவர்கள் நெகடிவ் மதிப்பெண் பெற்றனர். ஒரு மதிப்பெண் கூட பெறாததற்கு எந்த கேள்விகளுக்கும் பதில் அளிக்கவில்லை என்று அர்த்தமல்ல. சில கேள்விகளுக்கு சரியான பதிலும், சில கேள்விகளுக்கு தவறான பதிலும் அளித்து இருக்கலாம். சரியான பதிலுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டு, தவறான பதிலுக்கு மதிப்பெண் குறைக்கப்படுவதே எந்த மதிப்பெண்ணும் பெறாததற்கு காரணமாகும்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையில் நீதிபதிகள் கே.பி, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை இன்று மீண்டும் வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டதாவது;-

    நீட் தேர்வு வினாத்தாளை தேசிய தேர்வு முகமை ஏப்ரல் 24-ந்தேதி அனுப்பியுள்ளது. ஆனால் மே 3-ந் தேதி தான் வங்கி லாக்கருக்கு சென்றுள்ளது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில் தான் வினாத்தாள் இருந்துள்ளது.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவருடைய கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றார்.

    அப்போது முக்கிய பிரச்சனையை விவாதிக்குமாறு தலைமை நீதிபதி தெரிவித்தார். மேலும் பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    • நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில் நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.
    • 'பணம் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம்'

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்த காரசாமான விவாதம் நடந்து வருகிறது.

    அந்த வகையில் பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மொத்த நாட்டுக்கும் நீட் தேர்வு மட்டுமன்றி நாட்டில்  நடக்கும் முக்கியமான தேர்வுகள் நடத்தப்படும் முறையில் தீவிரமான பிரச்சனை உள்ளது தெரிகிறது.

    அமைச்சர் [மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்] இந்த பிரச்சனைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டிவருகிறார். அவருக்கு இந்த விவகாரத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்ற அடிப்படையான புரிதல் இல்லை.

    நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்று கவலையுடன் உள்ளனர், இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கியுள்ளனர்.

    நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக பணமும் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் தற்போது கருதுகின்றனர். அதையே எதிர்தரப்பில் உள்ள நாங்களும்  கருதுகிறோம் என்று பேசியுள்ளார். முன்னதாக இந்த வருட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, அதிக மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

    • 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு அம்மாணவியை சிபிஐ கைது செய்தது.
    • பாட்னாவில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவ மாணவர்களையும் பங்கஜ் குமார் தேர்வு செய்துள்ளார்.

    ராஞ்சி:

    இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு கடந்த மே 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. பீகாரிலும், ஜார்கண்டிலும் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை எழுந்தது.

    நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்துள்ளது.

    ஹசாரிபாக்கில், தேசிய தேர்வு முகமை கட்டுப்பாட்டில் இருந்த நீட் தேர்வு வினாத்தாளை திருடியதாக ஜாம்ஷெட்பூர் தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவன சிவில் என்ஜினீயர் பங்கஜ் குமாரை கைது செய்துள்ளது. அவருக்கு உதவி செய்த ராஜு சிங் என்பவரும், சுரேந்தர் சர்மா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பாட்னா எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேரையும் சிபிஐ கைது செய்துள்ளது. அவர்கள் 4 நாட்கள் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியும் சிபிஐ வளையத்தில் சிக்கினார். அவர் அங்குள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கிறார்.

    கடந்த 17-ம் தேதி கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட சிபிஐ அதிகாரிகள், அம்மாணவியை விசாரிக்க வேண்டும் என்று கூறினர். நிர்வாகம் அனுமதி அளித்தநிலையில், மாணவியிடம் 17 மற்றும் 18-ம் தேதிகளில் விசாரணை நடத்தினர்.

    2 நாட்கள் விசாரணைக்கு பிறகு நேற்று அம்மாணவியை சிபிஐ கைது செய்தது. அவர் பெயர் சுரபி குமாரி.

    பங்கஜ் குமார் திருடி எடுத்து வந்த வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு சரியான விடையை குறித்துக்கொடுக்க சுரபி குமாரியையும், பாட்னாவில் கைது செய்யப்பட்ட 4 மருத்துவ மாணவர்களையும் பங்கஜ் குமார் தேர்வு செய்துள்ளார்.

    அவர்கள் குறித்துக்கொடுத்த விடைகளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கொடுத்து பணம் சம்பாதிப்பதே பங்கஜ் குமாரின் திட்டம்.

    கைது குறித்து மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

    இவ்வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
    • விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. நாடு முழுவதும் உள்ள 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில் சுமார் 23 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது.

    இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டன. அதன்படி நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங் ஆகிய இருவரையும் கடந்த 16-ந் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களையும் சேர்த்து நீட் முறைகேடு விவகாரத்தில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் விவகாரத்தில் பாட்னா எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை சேர்ந்த 4 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கு தொடர்பு இருப்பது சி.பி.ஐ.க்கு தெரியவந்தது.

    இதையடுத்து மருத்துவ மாணவர்களின் தங்கியிருந்த விடுதிக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் சந்தன் சிங், ராகுல் அனந்த், குமார் ஷனு மற்றும் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வரும் கரண் ஜெயின் ஆகிய 4 மாணவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதி அறையை சீல்வைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களுக்கு சொந்தமான லேப்டாப் மற்றும் செல்போன்களை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு மாணவர்கள் 4 பேரையும் ரகசியமான இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையின் முடிவில் 4 மாணவர்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    • பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.
    • முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.

    பாட்னா:

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதி நடந்தது. தேர்வு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது.

    அதே போல் ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடைபெற்றது தெரிந்தது. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் மத்திய கல்வி அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டன.

    அதன்பேரில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, வழக்குகளில் தொடர்புடையவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது.

    அந்த வகையில் இந்த வழக்குகளில் ஏற்கனவே பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 12 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

    இந்த நிலையில் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக முக்கிய குற்றவாளி ஒருவர் உள்பட மேலும் 2 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஜார்கண்டின் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள்களை திருடி கசியவிட்ட முக்கிய குற்றவாளியான என்ஜினீயர் பங்கஜ் குமார் என்கிற ஆதித்யாவை கைது செய்துள்ளோம்.

    ஜார்கண்டின் பொகாரோ நகரை சேர்ந்த குமார், பீகாரின் பாட்னாவில் கைது செய்யப்பட்டார். அதே போல் வினாத்தாள்களை திருடி கசியவிடுவதில் குமாருக்கு உதவியாக இருந்த ராஜூ சிங்கை ஹசாரிபாக்கில் கைது செய்தோம்" என கூறினார்.

    ×