search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுர குமார திசநாயகே"

    • தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது.
    • 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

    கொழும்பு:

    இலங்கையில் அதிபராக உள்ள ரணில் விக்ரம சிங்கேவின் பதவி காலம் முடிவடைவதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.

    இதற்காக 13,421 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இலங்கையில் 1.70 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் தேர்தலில் 75 சதவீத வாக்குகள் பதிவானது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்ததும் பதிவான வாக்கு சீட்டுகள், ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    அதன்பின் சில மணி நேரங்களுக்குள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் வாக்குப் பெட்டிகளின் வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட்டன. விடிய, விடிய வாக்குகள் எண்ணும் பணி நடந்தது.

    தேர்தலில் 50 சதவீத வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இலங்கையில் முன்னுரிமை வாக்கு என்ற முறை பின்பற்றப்படுகிறது.

    ஒரே வாக்குச்சீட்டில் 1, 2, 3 என மூன்று வேட்பாளர்களுக்கு, தங்கள் வாக்கை, வாக்காளர்கள் அளிக்க வேண்டும். வாக்குச்சீட்டில் 'ஒன்று' என்று குறிப்பிடப்பட்டுள்ள வேட்பாளர், அந்த வாக்காளரின் முதல் முன்னுரிமையைப் பெற்றவர் ஆகிறார்.

    இரண்டு, மூன்று என அடுத்தடுத்த இடங்களில் குறிப்பிடப்பட்ட வேட்பாளர்கள், அந்தந்த வாக்காளர்களின் அடுத்தடுத்த முன்னுரிமைகளை பெறுவார். 1-ம் எண் கொண்ட முன்னுரிமை கொண்ட வாக்குகளை, 50 சதவீதத்துக்கும் அதிகமாக பெறும் வேட்பாளர் அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

    ஒருவேளை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை என்றால் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஏற்கனவே நடந்த வாக்கு எண்ணிக்கையில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டுமே, அடுத்த சுற்றுக்கு செல்வார்கள்.

    இந்த இரண்டாம் சுற்றில், வாக்குச்சீட்டுகளில் 2 மற்றும் 3 -ம் எண்ணாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். இதில் இரண்டு வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள், மொத்த வாக்குகளுடன் சேர்த்து கணக்கிடப்படும்.

    அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே, நமல் ராஜபக்சே உள்பட38 பேர் களத்தில் இருந்தனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயகே முன்னிலை வகித்தார். மொத்தமுள்ள 22 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் அனுர குமார திசநாயகே தொடர்ந்து முன்னிலை வகித்தார்.


    தமிழர் பகுதிகளில் ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஆனால் ஓட்டு மொத்தமாக அனுர குமார திசாநாயகே முன்னிலையில் இருந்தார்.

    அம்பாந்தோட்டை, காலே, கொழும்பு, மாத்தறை, கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை, கம்ப ஹா, கேகாலை, ரத்தினபுரி, மொனராகலை, மாத்தளை, பொலன்னறுவை, திகாமடுல்ல, நுவற-எலியா, புத்தளம், திரிகோணமலை ஆகிய மாவட்டங்களில் முன்னிலை வகித்த அனுர குமார திசநாயகே அங்கு 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெற்றார்.

    இன்று காலை 7 மணி நிலவரப்படி எண்ணி முடிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அனுர குமார திசாநாயகே 50 சதவீதத்துக்கு மேலாக வாக்குகள் பெற்றதாக தகவல் வெளியானது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில் அனுர குமார திசா நாயகே வாக்கு சதவீதம் திடீரென குறைந்தது.

    2-வது இடத்தில் சஜித் பிரேமதாசாவின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் 2 சதவீதமாக இருந்தது. பின்னர் அனுர குமார திசா நாயகேவின் வாக்குகள் எண்ணிக்கை அதிகரித்த தால் அவர் சதவீதம் உயர்ந்தது.

    மதியம் 12 மணி நிலவரப்படி அவர் 40.07 சதவீத (23 லட்சத்து 82 ஆயிரத்து 208 வாக்குகள்) பெற்றிருந்தார்.

    2-வது இடத்தில் சஜித் பிரேமதாச (33.38 சதவீதம்), 3-வது இடத்தில் ரணில் விக்ரமசிங்கே (17.41 சதவீதம்) பிடித்தார். தமிழ் பொது வேட்பாளர் அரிய நேத்திரன் பாக்கிய செல்வம் 3.45 சதவீத வாக்குகளும், நமல் ராஜபக்சே 2.29 சதவீத வாக்குகளும் பெற்றனர்.

    ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அனுர குமார திசாநாயகே 50 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒருவேளை முதல் சுற்றில் 50 சதவீத வாக்கு களை எந்த வேட்பாளரும் பெறாதபட்சத்தில் 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேம தாசா ஆகியோருக்கு விழுந்த வாக்குகள் எண்ணப்படும்.

    இதற்கிைடையே அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயகே வெற்றி பெற்று இருப்பதாக அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது. அவர் இன்று மாலை அதிபராக பதவி ஏற்பார் என்றும் அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

    ஐக்கிய தேசிய கட்சி தலைவரான ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக களம் இறங்கினார். இலங்கை பொருளாதார நெருக்கடியால் சீர்குலைந்த சமயத்தில் அதிபராக பதவியேற்ற அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். பின்னர் இலங்கை பொரு ளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டது.

    இதனால் நம்பிக்கையுடன் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே படுதோல்வியை சந்தித்துள்ளார். அவரை யும், சஜித் பிரேமதாசாவையும் பின்னுக்கு தள்ளி அனுர குமார திசநாயகே இலங்கை அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.

    2022-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சி யால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார்.

    அதன்பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் அதன் முடிவுகள் உலக அளவில் கவனம் ஈர்த்தன என்பது குறிப் பிடத்தக்கது.

    ×