என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anbumani ramadoss"

    • மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான்.
    • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 120 போ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

    இந்நிலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. குறிப்பாக தமிழக அரசுக்கு இது மிகப்பெரிய அவமானம். இந்த பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது அனைவரும் அறிந்ததே ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியது யார்?"

    என்னைப் பொறுத்தவரை மாநில அரசின் சிபிசிஐடி விசாரணை அறிவிப்பு வெறும் கண்துடைப்பு தான். இதற்கு முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    இந்த பகுதியில் உள்ள இரண்டு எம்.எல்.ஏ.க்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சட்டவிரோத மதுபான விற்பனையில் சங்கராபுரம் எம்.எல்.ஏ. உதயசூரியன் இருப்பதால் அவர் இந்த சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களை பாதுகாத்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவராக பலி எண்ணிக்கை 60 ஆக உயரும் என்று நினைக்கிறேன். நோயாளிகளை காப்பாற்ற மாற்று மருந்து இல்லை. எஸ்பி மற்றும் கலெக்டர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.

    • தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது.
    • ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் வறண்ட மாவட்டமாகவும், வேலை வாய்ப்பற்ற பின்தங்கிய மாவட்டமாகவும் திகழும் தருமபுரி மாவட்டத்தை வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்ற தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பத்தாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதை செயல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தருமபுரி மாவட்ட மக்கள்நலன் காக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், தாமதமும் கண்டிக்கத்தக்கவை.

    தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4.50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், அதில் 1.96 லட்சம் ஹெக்டேர், அதாவது 43.52 சதவீதம் நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை. மீதமுள்ள 56.48 சதவீதம் நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. அதனால், தருமபுரி மாவட்ட வேளாண் குடும்பங்கள் நிலம் இருந்தும் பாசன ஆதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதனால், தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு, 3 லட்சத்துக்கும் கூடுதலான மக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை தேடிச் சென்றுள்ளனர்.

    தருமபுரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1200 அடிக்கும் கீழ் சென்று விட்டதால், வேளாண்மைக்கு புத்துயிரூட்டுவது சாத்தியமற்றதாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கும் நிலையில், அந்த அணைகளில் மட்டுமின்றி, 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகளிலும் நிரப்பி ஆண்டு முழுவதும் உழவு செய்வதை உறுதிப்படுத்துவதற்கான உன்னத திட்டம் தான் தருமபுரி-காவிரி உபரி நீர் திட்டம் ஆகும்.

    இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.

    ஒட்டுமொத்த மாவட்டமும் பயன் பெறும் தருமபுரி-காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.650 கோடியை செலவழிக்க அரசு மறுக்கிறது.

    தருமபுரி மாவட்டம் வறட்சி மாவட்டமாகவே தொடர்வதை அனுமதிக்க முடியாது. தருமபுரி மாவட்டத்தின் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் வேண்டுகோளையும் ஏற்று, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4-ந் தேதி வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை நாள் கடையடைப்பு போராட்டம் நடத்த பா.ம.க. அழைப்பு விடுத்திருக்கிறது. தருமபுரி மாவட்டத்தின் வளமான எதிர்காலத்திற்காக நடத்தப்படும் இந்த அறவழிப் போராட்டத்திற்கு வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் முழு ஆதரவு கொடுத்து, தருமபுரி-காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் எனக் கோருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
    • கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி அவரின் உருவசிலைக்கு டாக்டர் ராமதாஸ் மரியாதை செலுத்தி அவரின் கனவை நனவாக்க உறுதியேற்றுள்ளோம். அவரின் கொள்கையை முழுமையாக ஏற்ற கட்சி பா.ம.க. அவரின் வழியில் வந்த கட்சிகள் கொள்கைகளை பேசிக்கொண்டுள்ளனர்.

    பெரியார் சமூகநீதிக்கான இந்திய அளவிலான அடையாள சின்னம். சமூகநீதிக்கான அநீதிகளை ஆளும் தி.மு.க.செய்து வருகிறது. தமிழகத்தில் சாதியை வைத்தே அடக்குமுறைகள் ஏற்பட்டது. இதை தெரிந்து கொள்ள கூட முதலமைச்சருக்கு ஆர்வமில்லை. சாதிவாரி கணக்கெடுப்புக்காக 45 ஆண்டுகளாக பா.ம.க. போராடிவருகிறது.

    பீகாரில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பு நடத்த ஊராட்சி மன்ற தலைவருக்குகூட அதிகாரம் உள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இது தொடர்பாக கணக்கு கேட்டால் அரசிடம் தரவுகள் இல்லை..

    1987-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு பின் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை பெற்றோம். 114 சமூகம் 6.7 விழுக்காடு, வன்னியர் சமூகம் 14.1 விழுக்காடு ஆகும். இது தொடர்பாக சமீபத்தில் அரசு வெளியிட்டது பொய்கணக்குதான். கருணாநிதி இருந்திருந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து இருப்பார். தியாகிகள் தினமான இன்று நாங்கள் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறோம்.

    அரசில் உள்ள 53 துறைகளில் ஒரு செயலாளர்கூட வன்னியர் கிடையாது. எதிலும் பிரதிநிதித்துவம் இல்லை. 23 வன்னியர்கள், 21 பட்டியல் இன எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலும் இரு சமூகத்திலும் தலா 3 அமைச்சர்கள் உள்ளனர். மற்ற சமூக எம்.எல்.ஏ.க்களில் ஒவ்வொரு சமூகத்திலும் எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதை எண்ணி பார்க்கவேண்டும். அடையாள அரசியல் செய்யவேண்டும். இன்று பெரியார் பிறந்தநாளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டாஸ்மாக்குக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு கலைஞர் விருது அளிக்கப்பட்டதோ என அவர் கேள்வி எழுப்பினார்.

    • ஜூன் மாதம் நடத்தப்படுவதாக இருந்த மாநிலத் தகுதித் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 107 நாட்களாகி விட்டன.
    • மாநிலத் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் சங்கிலித் தொடர் போன்று ஒன்றன்பின் ஒன்றாக பல பாதிப்புகள் ஏற்படும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் கடந்த ஜூன் 7, 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படுவதாக இருந்து, தொழில்நுட்பக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்ட மாநிலத் தகுதித் தேர்வுகளை மீண்டும் நடத்துவதற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்காக காத்திருப்போரின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

    கடந்த 6 ஆண்டுகளாக தகுதித் தேர்வுகள் நடத்தப்படாததாலும், ஜூன் மாதம் நடத்தப்படவிருந்த தகுதித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாலும், கடந்த 6 ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதி பெற்றவர்கள் இந்த தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்பதால் போட்டித் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு விட்டன. தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இத்தேர்வுகளை நடத்த வாய்ப்பில்லை. இடைப்பட்ட காலத்தில், அரசு கல்லூரிகளில் மேலும் பல நூறு உதவிப்பேராசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள். அதனால், அரசு கல்லூரிகளில் கல்வித்தரம் மேலும், மேலும் சீரழியும். ஆனால், இதுகுறித்த எந்த அக்கறையும், கவலையும் தமிழக அரசுக்கு இல்லை.

    ஜூன் மாதம் நடத்தப்படுவதாக இருந்த மாநிலத் தகுதித் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு 107 நாட்களாகி விட்டன. இவ்வளவு நாட்களாகியும் தொழில்நுட்பக் குளறுபடிகளை ஒரு பல்கலைக்கழகத்தால் சரி செய்ய முடியவில்லை என்றால், அது பல்கலைக்கழகமாக இருக்கவே தகுதியில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதை தாமதப்படுத்தவே மாநிலத் தகுதித் தேர்வை அரசும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையும் தாமதப்படுத்துவதாக தெரிகிறது. இது உதவிப் பேராசிரியர் பணிக்கு காத்திருப்போருக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும்.

    மாநிலத் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் சங்கிலித் தொடர் போன்று ஒன்றன்பின் ஒன்றாக பல பாதிப்புகள் ஏற்படும். பின்னர் அரசே நினைத்தாலும் அந்த பாதிப்புகளை சரி செய்ய முடியாது. எனவே, மாநிலத் தகுதித் தேர்வுகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியிட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் முடிவுகளை அறிவிக்க மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதைத் தொடர்ந்து அக்டோபர் மாத இறுதிக்குள் உதவிப் பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வை நடத்தி, நவம்பர் மாதத்தில் முடிவுகளை அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர்.
    • தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தொழில் திட்டங்களின் எண்ணிக்கை 500 சதவீத உயர்த்திக் கூறுகிறார் அமைச்சர். அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை 1000 சதவீதத்துக்கும் கூடுதலாக உயர்த்திக் கூறுகிறார் தொழில்துறை அமைச்சர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தொழில் முதலீடுகளைக் கொண்டு தமிழ்நாட்டை வளர்க்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை; மாறாக, பொய் முதலீடுகளைக் கொண்டு தங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்வதில் மட்டும் தான் தி.மு.க. அரசு தீவிரம் காட்டுகிறது. இந்த பொய்களை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள்.

    எனவே, தமிழக அரசு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்து இருந்தால் அது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் படுதோல்வி அடைந்து விட்டதை ஒப்புக்கொண்டு மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
    • வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மீனவர்கள் நலனுக்கான இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் வரும் 29-ந் தேதி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடந்து கைது செய்யப்படுவது, சிறையில் அடைக்கப்படுவது, அபராதம் விதிக்கப்படுவது உள்ளிட்ட அத்துமீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும், அதில் தமிழக அரசின் மீன்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்பதும் வரவேற்கத்தக்கவை.

    கடைசியாக 2022-ம் ஆண்டில் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் நடைபெற்றிருந்த நிலையில், இரு ஆண்டுகளுக்குப்பின் இந்தக் கூட்டம் நடைபெறுவது மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது.

    இந்திய, இலங்கைக் கூட்டுப் பணிக்குழுவின் கூட்டம் கூடிக் கலையும் கூட்டமாக அமைந்து விடக் கூடாது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பு மிகவும் குறுகியதாக உள்ள நிலையில், அந்த எதார்த்தத்தை உணர்ந்து கொண்டு இரு தரப்பு மீனவர்களும் சிக்கலின்றி மீன் பிடிக்க என்ன வழி? என்பதை இரு நாட்டு அதிகாரிகளும் ஆராய வேண்டும்.

    மீனவர் சிக்கலுக்கு ஒரே நாளில் தீர்வு காண முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும் கூட, இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண எத்தகைய அணுகு முறைகளை கடைபிடிப்பது, எந்தெந்த நிலைகளில் பேச்சுகளை நடத்துவது என்பது குறித்த தெளிவானத் திட்டம் இந்தக் கூட்டத்தில் வகுக்கப்பட வேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் திட்டத்தை இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல.
    • போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இரு மாதங்களுக்கு பதிலாக மாதம் ஒருமுறை மின்சாரப் பயன்பாட்டை கணக்கெடுக்கும் முறையை அறிமுகம் செய்வோம் என தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், அதன்பின் மூன்றரை ஆண்டுகள் ஆகியும் அந்த வாக்குறுதியை செயல்படுத்தவில்லை.

    அதுகுறித்து கேட்கும் போதெல்லாம், மாதந்தோறும் மின்சாரப் பயன்பாட்டை கணக்கிட போதிய பணியாளர்கள் இல்லை என்று கூறி வந்தது. ப்ரீபெய்ட் மீட்டர் முறை கொண்டு வரப்பட்டால், மின்சாரப் பயன்பாட்டைக் கணக்கிட பணியாளர்கள் தேவையில்லை. அதனால் மாதந்தோறும் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு மட்டுமே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதனடிப்படையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என்பதால் ஒவ்வொரு இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.6,000 வரை மிச்சமாகும்.

    எனவே, ப்ரீபெய்ட் மீட்டர் முறையை தமிழக அரசு எதிர்ப்பது நியாயமல்ல. போஸ்ட் பெய்ட் மீட்டர் முறை, ப்ரீபெய்ட் மீட்டர் முறை ஆகிய இரு முறைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்கு எது தேவையோ, அதை அவர்கள் தேர்வு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ப்ரீபெய்ட் மீட்டரைப் பயன்படுத்தி, மாதாந்திர மின்கணக்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
    • மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மூன்று விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

    மீனவர்கள் 23 பேரையும் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், இந்திய-இலங்கை கூட்டுப் பணிக்குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் இரு நாட்டு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுகளை விரைந்து நடத்த மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கல்வி வளராமல் எந்த மாநிலமும், நாடும் வளர முடியாது.
    • பள்ளிக்கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளில் காலியாக உள்ள 497 காப்பாளர் பணியிடங்களை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக கிடக்கும் நிலையில், எஞ்சியிருக்கும் ஆசிரியர்களையும் விடுதிகளுக்கு விற்பனை செய்ய கல்வித்துறை துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

    பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை விடுதி காப்பாளர்களாக இன்னொரு துறைக்கு அனுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும், இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் அதிக எண்ணிக்கையில் காலியாக இருக்கும் நிலையில் 497 ஆசிரியர்களை காப்பாளர் பணிக்கு அனுப்பினால் பள்ளிக் கல்வித்துறையில் கற்பித்தல் பணிகள் முற்றிலுமாக முடங்கிவிடும். அது விரும்பத்தக்கதல்ல.

    அ.தி.மு.க. ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39சதவீதம் ஆக குறைந்து விட்டது. பள்ளிக்கல்வித்துறையின் சீரழிவுகளுக்கு அத்துறைக்கு அரசு போதிய நிதி ஒதுக்காததே காரணமாகும்.

    கல்வி வளராமல் எந்த மாநிலமும், நாடும் வளர முடியாது. இதை உணர்ந்து கொண்டு கல்வி வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதன் ஒரு கட்டமாக விடுதிக் காப்பாளர் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பும் முடிவைக் கைவிட வேண்டும். பள்ளிக்கல்வித் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மும்மடங்கு அதிகரித்து, அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தி.மு.க. 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.
    • அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.

    சென்னை:

    சென்னை கொரட்டூரில், ஜெமினி ரோட்டரி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று விளையாடி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக பேட்மிட்டன் சங்க தலைவராக 7 ஆண்டுகள் இருக்கிறேன். நான் வருவதற்கு முன்பு சிபாரிசு மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நான் வந்த பிறகு திறமையின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வெளிப்படையாக வீரர்களின் திறமைகளை தெரிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதனால் இன்று சர்வதேச அளவில் பேட்மிட்டன் போட்டியில் தமிழக வீரர்கள் உள்ளனர்.

    தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்ததை தற்போது வரை நிறைவேற்றவில்லை. தமிழக அரசின் நிர்வாக சிக்கல்கள் பல உள்ளது. 57 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். சென்னையின் நிலைமை மாறவில்லை.

    தி.மு.க. 520 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் 490 வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை.

    அரசு மருத்துவர்கள் ஆனாலும் சரி தனியார் மருத்துவர்கள் ஆனாலும் சரி அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மருத்துவர்களின் சேவை மக்களை காப்பது தான். சிகிச்சை கொடுக்காமல் மருத்துவர்கள் மெத்தனமாக இருக்க மாட்டார்கள். உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் எல்லா மருத்துவர்களும் நினைப்பார்கள். அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை வழங்கவில்லை என்பது தவறு.

    தமிழ்நாட்டில் 2026-ல் கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த கூட்டணியில் பா.ம.க. இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    • எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தைக்கு அருகில் 233 ஏக்கர் நிலப்பரப்பில் ஆன்மிகம் மற்றும் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இத்திட்டத்திற்கு மீனவ மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்தும் கூட அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆன்மிக மையம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறையும், சுற்றுலாத்துறையும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

    ஆன்மிக மையம் அமைக்கவோ, கலாச்சார மையம் அமைக்கவோ பாட்டாளி மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு, அந்த மையங்களை அமைக்க வேண்டுமா? என்பது தான் எனது வினா.

    ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடத்தை தான் மீனவர்கள் அவர்களின் படகுகளை நிறுத்துவது, வலைகள் மற்றும் மீன்களை காய வைப்பது போன்றவற்றுக்காக பயன்படுத்தி வந்தனர். இப்போது அங்கு ஆன்மிக மையம் அமைக்கப்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

    திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாச்சார மையம் அமைக்கும் திட்டம் மீனவர்களை மட்டுமின்றி, பேரிடர்களுக்கும் வழி வகுக்கும். ஆன்மிக மையம் அமைக்கப்படுவதற்கு அருகில் உள்ள ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் இயற்கையான மணல் மேடுகள் உள்ளன.

    அவை சுனாமி அலைகளைக் கூட தடுக்கும் வல்லமை பெற்றவை. இந்தத் திட்டத்திற்காக அவை அகற்றப்படும் என்று கூறப்படும் நிலையில், சுனாமியிலிருந்து திருவிடந்தை உள்ளிட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு கிடைக்காது. அந்தப் பகுதி தான் நிலத்தடி நீர்வளத்தை சேமிக்கும் தளங்களைக் கொண்டிருக்கிறது. இயற்கையையும், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து விட்டு ஆன்மிக , கலாச்சார மையம் அமைக்க வேண்டுமா? என தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.

    ஆன்மிக, கலாச்சார மையம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பதில் காட்டப்பட்ட அசாத்திய வேகம் பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்திற்கான மாநில அளவிலான சுற்றுச்சூழல் அனுமதி ஒரே நாளில் வழங்கப்பட்டதாகவும், அதுகுறித்த கூட்டத்தில் மீனவ சமுதாய பிரதிநிதிகள் ஒருவர் கூட அழைக்கப்படவில்லை என்றும் மீனவ அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் மக்களை பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது; உள்ளூர் மக்களால் வரவேற்கப்படும் வகையில் இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளையும் பெறாத ஆன்மிக, கலாச்சார மையத்தை திருவிடந்தை பகுதியில் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
    • ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தின் முதல் தொகுப்பிற்கான ஒப்பந்தத்தை அதானி குழும நிறுவனத்திற்கு தமிழ்நாடு மின்வாரியம் வழங்கக் கூடும் என்று வெளியாகி உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட காலத்திற்கும் இன்றைக்கும் இடையிலான சூழல்கள் மிகப்பெரிய அளவில் மாறியிருக்கும் நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் குறிப்பிடப்பட்ட விலையில் ஸ்மார்ட் மீட்டர்களை வாங்கக்கூடாது.

    அதானி குழும நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அதற்கு ஒப்பந்தம் வழங்கப்படலாம் என்பதை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சரியான முடிவு தானே என்று தோன்றலாம். ஆனால், ஸ்மார்ட் மீட்டர் குறித்த முழுமையான விவரங்களை நன்றாக அறிந்தவர்களுக்குத் தான் இதன் பின்னணியில் உள்ள குறைகள் தெரியும். ஸ்மார்ட் மீட்டர்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை புதிய தத்துவமாகும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதானி குழுமம் ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு எவ்வளவு விலை குறிப்பிட்டிருக்கிறது என்பது தொடர்பான விவரங்கள் துல்லியமாக வெளியாகவில்லை.

    ஸ்மார்ட் மீட்டர்களை பராமரிப்பதற்கான காலம் 7 ஆண்டுகளா அல்லது 10 ஆண்டுகளா? என்பதை தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஒருவேளை ஒப்பந்தக்காலம் 7 ஆண்டுகளாக இருந்து, ஒரு மீட்டருக்கு வசூலிக்கப்படவிருக்கும் தொகை ரூ.125 என்று வைத்துக் கொண்டால், தமிழ்நாடு மின்சார வாரியத்தால் முன்பணமாக வழங்கப்பட்ட தொகை இல்லாமல், ஒவ்வொரு மீட்டருக்கும் கூடுதலாக ரூ.10,500 வசூலிக்கப்படும். அதுவே ஒப்பந்தக்காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், ரூ.15,000 ஆகும். மாதாந்திர தொகையை குறைப்பது குறித்து அதானி குழுமத்துடன் பேச்சு நடத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்படி 10 சதவீதம் குறைக்கப்பட்டாலும் கூட, அதானி குழுமத்திற்கு செலுத்தப்படும் தொகை மிகவும் அதிகமாகவே இருக்கும். இதை நேரடியாக நுகர்வோரிடமிருந்து மின் வாரியம் வசூலிக்காவிட்டாலும், கட்டண உயர்வு உள்ளிட்ட மறைமுக வழிகளில் வசூலித்து விடும்.

    ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தும் திட்டத்தை மின்சார வாரியமே செயல்படுத்துவதில் என்ன சிக்கல்? என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு மத்திய அரசின் சார்பில் சராசரியாக ரூ.900 மானியம் வழங்கப்படும் நிலையில், அத்துடன், ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள மீட்டருக்கான கட்டணத்தையும் சேர்த்து கழித்து விட்டால், ஒவ்வொரு ஸ்மார்ட் மீட்டருக்கும் நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை ரூ.2000 முதல் ரூ.2500 என்ற அளவில் தான் இருக்கும்.

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் ஒரு வகையான சீர்திருத்தம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அதையே காரணம் காட்டி, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்தி, பராமரிப்பதில் அதானி போன்ற பெரு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதையும், அதற்கு தமிழக அரசு துணை போவதையும் அனுமதிக்க முடியாது.

    எனவே, ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கோரப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் மின்வாரியம் ரத்து செய்ய வேண்டும். மின்வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்து மின் இணைப்புகளுக்கு பொருத்த வேண்டும்.

    அதற்கு மாறாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து தமிழக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×