என் மலர்
சென்னை விமான நிலையம் செய்திகள் | Chennai Airport News in Tamil
- பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- பஸ்களை திருப்புவதற்கும், பஸ் நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களில் செல்ல விரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் நடந்து ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது பொருட்கள், பெரிய பைகளுடன் வரும் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதால் பலரும் கால்டாக்ஸியை நாடுகின்றனர்.
எனவே விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மாநகர பஸ்களை அனுமதித்து இதற்காக தனியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பஸ்கள் விரைவில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகர பஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பயணிகளின் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். விமான அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மாநகர பஸ்கள் விமான நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்கு தயாராக உள்ளோம். ஆனால் பஸ்களை திருப்புவதற்கும், பஸ்நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன. இது சரிசெய்த பின்னர் மாநகர பஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் என்றனர்.
- சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை விமானநிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உள்பட உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி சுங்க இலாகா முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, கூடுதல் துணை கமிஷனர் பெரியண்ணன், சுங்க இலாகா துணை கமிஷனர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 கமிஷனராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை விமானநிலையத்தின் புதிய சுங்க இலாகா முதன்மை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று டெல்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா. பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வமான உத்தரவை மத்திய அரசின் துணை செயலாளர் ஷீரேஷ் குமார் கவுதம் பிறப்பித்துள்ளார்.
- வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வெளிநாட்டில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது சூடான் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர் நூதன முறையில் பசை வடிவிலான தங்கத்தையும், தங்கக் கட்டியும் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அந்த பயணியிடம் இருந்து ரூ.82.41 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயணி உடலில் மறைத்து எடுத்து வரப்பட்ட பசை வடிவ தங்கம் பறிமுதல்.
- செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சோதனை செய்தபோது, அவர் ரூ.17.15 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்க கட்டியை உலோகத் தகடுகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அவரது பைகளிலிருந்து 15 செல்பேசிகளும் 9000 சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ. 3.15 லட்சம் ஆகும்.
இதே போல் அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியை சோதனை செய்தபோது ரூ. 23.38 லட்சம் மதிப்புள்ள 525 கிராம் எடையுள்ள தங்கத்தை பசை வடிவில் அவரது உடலில் மறைத்து எடுத்து வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட இந்த இரு வேறு சோதனைகளில் மொத்தம் ரூ.40.53 லட்சம் மதிப்புள்ள 910 கிராம் தங்கம், 3.15 லட்சம் மதிப்புள்ள செல்பேசிகள் மற்றும் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாலங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
- நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனம்பாக்கம்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் பன்னாட்டு நவீன முனையத்தில் விமானங்களில் பயணிகள் ஏறி செல்லவும், இறங்குவதற்காகவும் 'பேசன்ஞ்சா் போா்டிங் பிரிட்ஜ்' என்ற 15 நிரந்தர இணைப்பு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேசஞ்சா் போா்டிங் பிரிட்ஜ் விமான நிலையத்தின் நுழைவு பகுதியிலிருந்து நேரடியாக விமானத்தின் வாசலுக்கு செல்லும் விதமாக அமைக்கப்படுகின்றன. இந்த 15 பாலங்களில் 7 பாலங்கள் 47 மீட்டா்கள் நீளமுடையவையாகவும், 7 பாலங்கள் 32 மீட்டரில் இருந்து 40 மீட்டா்கள் கொண்டதாகவும், மற்றொரு பாலம் 32 மீட்டா் நீளம் உடையதாகவும் அமைய உள்ளது. முதல் கட்டத்தில் 47 மீட்டா் நீளமுடைய 7 பாலங்கள் பயன்பாட்டுக்கு வரவிருக்கின்றன.
மேலும், இந்த நவீன இணைப்பு பாலத்தில் நகரும் பாலங்கள் இரண்டு அமைகின்றன. அதில் அதிக நீளமுடைய 47 மீட்டா் கொண்ட 7 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த 7 பாலங்களும் வரும் டிசம்பர் மாதம் பயணிகளின் பயன்பாட்டிற்கு வர உள்ளன.
மற்ற 8 பாலங்கள் அடுத்த 2-வது கட்டத்தில் கட்டப்பட்டு செயல்பாட்டிற்கு வர இருக்கிறது. இந்த பாலங்கள் 'மேக் இன் இந்தியா' திட்டப்படி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதை போன்ற நவீன பாலங்கள் இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்படுகின்றன. நீளமான இந்த இணைப்பு பாலம் பயன்பாட்டிற்கு வந்த பின் சென்னை விமான நிலையத்தில் விமானங்களில் ஏறி, இறங்கும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் வருகிற 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
- மீண்டும் 5-ந்தேதி முதல் அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு தினமும் 7 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தமான் சுற்றுலா தளமாக இருப்பதால் தினந்தோறும் பெருமளவு பயணிகள் சென்று வந்தனர். அது மட்டுமின்றி அந்தமானில் தமிழ்நாடு உட்பட தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவா்கள் வசிப்பதால், அந்தமான் விமானங்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும்.
இந்தநிலையில் தற்போது அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதாலும், மேலும் அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாலும் சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் விமானங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இருந்து அந்தமானுக்கு இயக்கப்படும் ஏழு விமான சேவைகளும் வருகிற 4-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் 5-ந்தேதி முதல் அந்தமானுக்கு சென்னையில் இருந்து விமான சேவைகள் தொடங்குகிறது.
இதையடுத்து அந்தமானுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு தகவல் கொடுத்து, அவர்கள் டிக்கெட்டுகளை வேறு தேதிகளுக்கு மாற்றுதல், அல்லது முழு பணமும் திரும்ப கொடுத்தல் போன்ற முறைகளை, விமான நிறுவனங்கள் செய்து உள்ளன.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, அந்தமானில் தற்போது மோசமான வானிலை நிலவிக் கொண்டிருப்பதால், இந்த நேரத்தில் சென்னையில் இருந்து, அந்தமான் செல்லும் விமானங்கள், அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் விமான நிறுவனத்துக்கு அதிகமான நஷ்டங்கள் ஏற்படுவதோடு, பயணிகளுக்கும் விமான நிறுவனங்களுக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே தான் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டது என்றனர்.
- அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் விமான சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
- இன்று காலை முதல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
சென்னை:
சென்னையில் இருந்து அந்தமானுக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் விமான சேவை நிறுத்தப்பட்டது.
அந்தமான் விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் அங்கு மோசமான வானிலை இருந்ததால் 4 நாட்களாக விமான சேவை நடைபெறவில்லை.
இந்த நிலையில் அங்கு பராமரிப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் விமான சேவையை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதல் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
இதேபோல அந்தமானில் இருந்தும் சென்னைக்கு விமானங்கள் வரத் தொடங்கின. தினமும் 10 முதல் 14 விமானங்கள் அந்தமானுக்கு சென்று வருகின்றன.
சுற்றுலா பயணிகள், அங்கு வசிப்பவர்கள், விமான சேவை நிறுத்தப்பட்டதால் மிகவும் கஷ்டப்பட்டனர். மீண்டும் சேவை தொடங்கியதை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்தமானுக்கு பயணமானார்கள்.
- பசை வடிவிலான தங்கத்தை அபுதாபி பயணி ஒருவர் உடலில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.
- தங்கம் கடத்தல் குறித்து பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அபுதாபியில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அதில அந்த பயணி தனது உடலில் பசை வடிவிலான தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.
அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1.15 கிலோ எடை கொண்ட 24 கேரட் தங்கம் 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணி கைது செய்யப்பட்டார். இதுகுறித்த புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.
- பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
ஆலந்தூர்:
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால், சென்னை விமான நிலையத்திற்கு விமான பயணிகள், விமானங்களை இயக்கும் விமானிகள், விமான ஊழியர்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகி வருகின்றன.
சென்னையில் இருந்து பிராங்க்பர்ட் செல்லும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், பிரான்ஸ் செல்லும் ஏர் பிரான்ஸ் விமானம் மற்றும் துபாய் தோகா, சார்ஜா, கத்தார், இலங்கை, கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்பட 12 சர்வதேச விமானங்கள், மும்பை, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, விஜயவாடா, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு செல்லும் 16 உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள் 30 நிமிடங்களில் இருந்து, ஒரு மணி நேரம் வரை புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
ஆனால் சென்னைக்கு வரும் அனைத்தும் விமானங்களும் சரியான நேரத்தில் வந்து தரை இறங்குகின்றது.
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் தாமதத்திற்கு காரணம் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், விமான பணிப்பெண்கள் போன்ற ஊழியர்கள் அனைவரும் சென்னை நகரில் உள்ள ஹோட்டல்களில் இருந்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல்கள் காரணமாக அவர்கள் விமான நிலையத்துக்கு தாமதமாக வருகின்றனர். அதேபோல் விமான பயணிகள் வருகையிலும் தாமதம் ஏற்படுகின்றது. பெருமளவு பயணிகள் தாமதமாக வருவதால் விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. மேலும் தொடர்ந்து மழை பெய்வதால் பயணிகளின் உடைமைகளை விமானத்தில் கொண்டு போய் ஏற்றுவது, பயணிகளுக்கு தேவையான உணவுகளைக் கொண்டு சென்று விமானங்களில் ஏற்றுவது, விமானங்கள் பராமரிப்பு போன்ற பணிகளிலும் தாமதம் ஏற்படுகிறது.
- பாங்காங், துபாய், கொழும்பு பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
- பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு ரூ.1.45 கோடி
சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
உளவுத் தகவல் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாங்காக்கிலிருந்து வந்த வந்த பயணி ஒருவரிடம நடத்தப்பட்ட சோதனையில் அவர் மறைத்து வைத்திருந்த 474 கிராம் எடையுள்ள 9 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் துபாயிலிருந்து வந்த இந்திய ஆண் பயணிகள் நான்கு பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவர்கள் நூதனமுறையில் மறைத்து எடுத்து வந்த 1370 கிராம் எடையுள்ள 9 தங்க பொட்டலங்கள், ஆடைகள் வைக்கும் பெட்டிகளில் மறைத்து எடுத்து வந்த 680 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் மற்றும் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கொழும்பிலிருந்து வந்த பெண் பயணிகள் இருவரை சோதனை செய்த போது, அவர்களின் கைப்பைகளிலிருந்து வெள்ளி முலாம் பூசப்பட்ட 730 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் 8 பயணிகளிடம் இருந்து மொத்தமாக ரூ.1.45 கோடி மதிப்புள்ள 3.25 கிலோ கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
- தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மீனம்பாக்கம் :
நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையகம், தனியார் அமைப்புடன் இணைந்து பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வலியுறுத்தி பயணிகளுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.
- இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.
- உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
மீனம்பாக்கம் :
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், விமான நிலைய ஆணையத்துடன், மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள் இந்தியா, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் ஆகிய பெண்கள் தன்னார்வ அமைப்பு இணைந்து விழிப்புணர்வு வார விழாவை நடத்தி வருகிறது. இதுவரை 2,800 உணவு பைகளை வரிசைப்படுத்தியதே உலக சாதனையாக உள்ளது.
அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக சென்னை விமான நிலையத்தில் 3,500 பைகளில் அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கெட் மற்றும் உப்பு போன்ற மளிகை பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த பைகள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டன.
இதில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார், ஆற்காடு நவாப் முகமது ஆசிப் அலி, மத்திய தொழிற்படை போலீஸ் டி.ஐ.ஜி. ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர். 3,500 உணவு பைகளை வரிசைப்படுத்தி உலக சாதனை நிகழ்த்தியதாக இதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. உணவு பொருட்கள் அடங்கிய இந்த பைகளை, சென்னை முழுவதும் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பெண்கள் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.