என் மலர்
நீங்கள் தேடியது "ஆவின் பால்"
- ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும்.
- ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.
சென்னை:
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு பதிலாக மாற்றுவழியில் பால் வழங்குவதற்கு தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் முடிவு செய்து இருக்கிறது. இதுதொடர்பான தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கு விசாரணையின்போது இந்த தகவலை ஆவின் நிறுவனம் பதிவு செய்து இருக்கிறது.
இந்த நிலையில் மாற்றுவழி என்பது கண்ணாடி பாட்டில் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுமா? அல்லது வேறு ஏதாவது முறையில் வழங்கப்படுமா? என்பதை ஆவின் நிறுவனம் வெளிப்படையாக இன்னும் அறிவிக்கவில்லை.
ஆனால் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில் இவை இரண்டையும் மாற்றுவழியாக கொண்டாலும் கூட அது சாத்தியப்படாது என்பதுதான் பால் முகவர்கள், வியாபாரிகள் தரப்பு வாதமாக இருக்கிறது.
அப்படி இதை ஒரு மாற்றுவழியாக எடுத்துக்கொண்டாலும் கூட, நுகர்வோரின் பட்ஜெட்டில் இது பாதிப்பை ஏற்படுத்தும். முகவர்கள், வியாபாரிகளை எடுத்துக்கொண்டால், கண்ணாடி பாட்டில், பிளாஸ்டிக் பாட்டில் ஆகியவற்றை சரியாக பராமரித்து மீண்டும் பயன்படுத்தும் அளவுக்கு கொண்டு வருவது என்பது சிரமத்தை கொடுக்கும்.

அதேநேரம், ஒரு குளிர்சாதனப் பெட்டிகளில் 40 முதல் 50 பாக்கெட்டுகள் பால் வைக்க முடியும் என்றால், பாட்டிலில் கொண்டுவந்தால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, குறைந்த எண்ணிக்கையில்தான் பால் வாங்கி வைப்பார்கள். இதனால் விற்பனையும் குறையும். தட்டுப்பாடும் ஏற்படும். அதேபோல், பால் நிறுவனங்கள் கண்ணாடி பாட்டில், மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை மீண்டும் சுத்தமாக பயன்பாட்டுக்கு கொண்டுவருமா? என்பதும் கேள்விக்குறிதான்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கை என்றாலும், இதுபோன்ற பல்வேறு சிக்கல்கள், சிரமங்கள் இருப்பதால் மாற்றுவழி வெற்றி பெறுமா? என்பது 100 சதவீதம் சந்தேகம்தான் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி தெரிவித்தார்.
ஏற்கனவே ஆவின் நிறுவனம் தரப்பில் கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் 1½ லிட்டர் டப்பாவில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.120. இதுவே பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் இதே பாலின் விலை ரூ.90. டப்பாவில் அடைத்து விற்கப்படும் சமன்படுத்தப்பட்ட 1½ லிட்டர் பாலின் விலை ரூ.110. இதுவே பாக்கெட்டுகளில் ரூ.68-க்கு கிடைக்கிறது. நுகர்வோருக்கு பால் விலை அதிகரிக்கும் என்பதை சுட்டிக்காட்டும் ஒரு உதாரணமாக இது சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் ஆவின் நிறுவனம் இன்னும் 2 வாரத்தில் நிரந்தர தீர்வை அறிவித்து, அதன் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து நடைமுறைக்கு கொண்டு வந்தால் மக்களின் அன்றாட பட்ஜெட்டில் கூடுதல் செலவையே கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. மாற்றுவழி நடைமுறைக்கு வந்தால் தற்போதைய அரை லிட்டர் பால் பாக்கெட்டின் விலையில் இருந்து குறைந்தது ரூ.5 முதல் ரூ.10 வரை அதிகரிக்கும் என்றே பால் முகவர்கள், வியாபாரிகள் கூறுகின்றனர்.
- ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுகிறது.
- கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சென்னை:
ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது.
ஆவின் நிறுவனம் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
கடந்த 19.08.2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.32 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.41 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், நுகர்வோர்களின் நலன் கருதி கடந்த 16.5.2021 முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமாகும்.
இச்சூழ்நிலையில் இடுபொருட்கள் விலையேற்றம், உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி, பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி, ரூ.32-லிருந்து ரூ.35 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்த்தி ரூ.41-லிருந்து ரூ.44 ஆகவும் வழங்கப்படும்.
நவம்பர் 5-ம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும். இந்தக் கொள்முதல் விலை உயர்வால் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்துவந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆவினில் தயாராகும் 60 லட்சம் பாக்கெட் பாலில் 10 லட்சம் பாக்கெட் பால்தான் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ஆகும்.
- 6 லட்சம் லிட்டர் பால்தான் அதிக கொழுப்பு உடைய பால் ஆக விற்பனைக்கு வருகிறது.
சென்னை:
ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பால் கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலையை மட்டும் உயர்த்தியது ஏன்? என்பது பற்றி பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-
ஆவின் நிறுவனத்தில் வினியோகிக்கப்படும் நீல நிற மற்றும் பச்சை நிற பாக்கெட் பால் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பழைய விலைக்கே கிடைக்கும்.
நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு பாக்கெட்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு விலை ஏற்றாமல் பழைய விலைக்கு அதாவது லிட்டர் ஒன்றுக்கு ரூ.46-க்கே வழங்குகிறோம்.
சில்லரை விற்பனையில் மட்டும் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை (கொழுப்பு சத்து அதிகம் கொண்டது) லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ஆக மாற்றி அமைத்துள்ளோம்.
தனியார் பால் பாக்கெட் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பால் பாக்கெட்டில் அதிக கொழுப்பு சத்து கொண்ட பால் லிட்டருக்கு ரூ.70-க்கு விற்கிறார்கள். ஆவினில் இப்போதுதான் ரூ.60 ஆக மாற்றி அமைத்து உள்ளோம்.
தமிழ்நாட்டில் அதிக கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை டீ கடை, ஓட்டலில்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். தயிர் தயாரிக்கவும் இதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
கமர்சியல் பயன்பாட்டுக்கு முழுமையாக இந்த பால் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் ரூ.48-ல் இருந்து ரூ.60 ஆக விலையை மாற்றி அமைத்துள்ளோம். இதே வெளிமாநில தனியார் பால் ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
ஆவினில் தயாராகும் 60 லட்சம் பாக்கெட் பாலில் 10 லட்சம் பாக்கெட் பால்தான் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ஆகும். அதாவது 6 லட்சம் லிட்டர் பால்தான் அதிக கொழுப்பு உடைய பால் ஆக விற்பனைக்கு வருகிறது.
வீடுகளில் நீல நிற, பச்சை நிற பால் பாக்கெட் தான் அதிகமாக வாங்குவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 50 லட்சம் பாக்கெட் பால் இதில் விற்பனையாகிறது.
பொதுமக்கள் நலன் கருதி பால் விலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருந்தார்.
இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.
- பால் விலை உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.
- சில்லரை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு நிறம்) லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 ஆக மாற்றி அமைக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை ஏற்றம் நாளை (சனிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்த 3.11.2022 நாளிட்ட செய்திக்குறிப்பினை தொடர்ந்து, 5.11.2022 முதல் பசும் பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 32-லிருந்து, ரூ. 35 ஆகவும், எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ. 41-லிருந்து ரூ. 44 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
இருப்பினும் விற்பனை விலையை பொறுத்தவரையில் நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும். தற்போதுள்ள நிறைகொழுப்பு பால் (ஆரஞ்சு நிறம்) மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்ற மின்றி லிட்டர் ஒன்றுக்கு ரூ. 46-க்கே புதுப்பிக்கப்படும். சில்லரை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை (ஆரஞ்சு நிறம்) லிட்டர் ஒன்றுக்கு ரூ. 60 ஆக நாளை (5.11.2022) முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த விலை மாற்றம் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்காக ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைபடுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த விலை மாற்றத்திற்கு பின்னரும் ஆவின் நிறை கொழுப்பு பால் (அட்டை) தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 24 குறைவு, சில்லரை விலையில் விற்கப்படும் நிறை கொழுப்பு பால் தனியார் பாலின் விலையை ஒப்பிடுகையில் ரூ. 10 குறைவு.
உற்பத்தியாளர்களின் நலன் கருதி இந்த விலை மாற்றம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நுகர்வோர்களும், சில்லரை விற்பனையாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் எப்போதும் போல் ஆவின் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடைகளில் ½ லிட்டர் ஆரஞ்சு நிற பாக்கெட் பால் ரூ.24-ல் இருந்து ரூ.30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் நிறைய பேர் அதனை வாங்குவதை குறைத்து வருகிறார்கள்.
- வழக்கத்தை விட பச்சை நிற பாக்கெட் தேவை ஓரிரு நாட்களாக அதிகரித்து வருகிறது.
சென்னை:
ஆவின் பால் பல்வேறு தரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. தனியாரை விட ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.20 வரை குறைவாக இருப்பதால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஆரஞ்சு பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.12 உயர்த்தப்பட்டது. அதிக கொழுப்பு சத்துள்ள ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது.
ஆவின் பால் வினியோகஸ்தர்கள் மற்றும் பார்லர்களில் ஆரஞ்சு அரைலிட்டர் பால் தற்போது ரூ.30-க்கு விற்கப்படுகிறது. மளிகை, மற்றும் பெட்டிக்கடைகளில் அவற்றின் விலை ரூ.31, ரூ.32 என விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஆவின் பச்சை நிற பால் அரைலிட்டர் ரூ.22க்கு கிடைக்கிறது. ஆவின் வினியோகஸ்தர்கள் தவிர பிற இடங்களில் ரூ.23, ரூ.24-க்கு விற்கப்படுகிறது.
ஆரஞ்சு பால் விலை லிட்டருக்கு ரூ.12 ஆவின் உயர்த்திய நிலையில் கடைகளில் கூடுதலாக 2 ரூபாய் சேர்த்து விற்கப்படுகிறது. இதனால் இதுவரையில் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்கியவர்கள் ஆவின் பச்சை நிறத்திற்கு மாறினார்கள்.
அரை லிட்டருக்கு 8 ரூபாய் வித்தியாசம் இருப்ப தால் சாமான்ய மக்கள் பச்சை நிற பால் பாக்கெட்டை தற்போது அதிகளவில் வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் கடைகளில் பச்சை நிற பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மளிகை கடைகள், பெட்டி கடைகள் உள்ளிட்ட பால் வியாபாரம் செய்யக்கூடிய இடங்களில் ஆவின் பச்சை நிற பால் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன.
இதுகுறித்து கொடுங்கையூர் மூலச்சத்திரத்தில் உள்ள மளிகை கடை வியாபாரி அன்பு கூறியதாவது:-
வழக்கமாக ஆரஞ்சு, பச்சை நிற பால் பாக்கெட்கள் தான் அதிகளவில் விற்பனையாகும். தற்போது ஆரஞ்சு பால் விலை உயர்த்தப்பட்டதால் நிறைய பேர் அதனை வாங்குவதை குறைத்து வருகிறார்கள். அதற்கு பதிலாக பச்சை நிற பால் பாக்கெட் கேட்கிறார்கள். வழக்கத்தை விட பச்சை நிற பாக்கெட் தேவை ஓரிரு நாட்களாக அதிகரித்து வருகிறது.
ஆனால் அதற்கேற்ப பச்சை நிற பாக்கெட் சப்ளை இல்லை. குறைந்த அளவில் தான் வருகின்றன. பச்சை பாக்கெட் இல்லாததால் ஆரஞ்சு பாக்கெட்டை வாங்கி செல்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபற்றி ஆவின் அதிகாரிகளிடம் கேட்டபோது, ஆரஞ்சு, பச்சை, நீலம் பாக்கெட் உற்பத்தியை குறைக்கவில்லை. இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அளவில் தான் செய்யப்படுகிறது. பச்சை நிற பாக்கெட்டிற்கு தேவை அதிகரித்தால் அதனை ஆய்வு செய்து உற்பத்தியை அதிகரிப்போம். அதற்கு சில நாட்கள் ஆகும் என்றனர்.
- கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.
- ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறி உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் ஆவின் பால் அதிகம் விற்பனையாகி வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மேலும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 26 லட்சம் லிட்டர் விற்பனை நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக 3 லட்சம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளது.
அதாவது தினமும் 29 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை நடைபெற்று வருவதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்
தற்போது ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை உயர்ந்ததால் பெரும்பாலானோர் பச்சை நிற பால் பாக்கெட்டிற்கு மாறியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
- பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை கவர் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆரஞ்சு கவர் பால் விலை உயர்த்தப்பட்டது தான். பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும்.
வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை கவர் பால் வினியோகத்தை குறைந்தது 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு கவர் பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது
- ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
மதுரை:
மதுரையில் சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினமும் ஆவின் பால் பாக்கெட்டுகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இதற்காக மதுரையில் 47 ஆவின் பாலகங்கள், 390 டெப்போக்கள் மூலம் இந்த ஆவின் பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படு கின்றன.
இதற்காக மதுரை கே.கே. நகரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் அதிகாலையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பால் பாக்கெட்டுகளை வாகனங்களில் ஏற்றி சம்பந்தப்பட்ட பால் பூத்துகள் மற்றும் ஆவின் பாலகங்களுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
ஆனால் கடந்த சில வாரங்களாக ஆவின் பால் விநியோகத்தில் அடிக்கடி காலதாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பால் விநியோக முகவர்கள் ஆவின் நிறுவனத்தில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளையும் முற்றுகையிட்டு தாமதம் இன்றி பால் விநியோகத்தை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனாலும் இந்த பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இன்று காலை வழக்கம் போல 5 மணிக்கு சப்ளை செய்ய வேண்டிய ஆவின் பால் பாக்கெட் சுமார் 2 மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு மேல் பால் பூத்துகளுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்ட முகவர்கள் பால் பாக்கெட்டுகளை வாங்க தயக்கம் காட்டினர். காரணம் 7 மணிக்கு மேல் பால் பாக்கெட் விற்பனை வழக்கம் போல இருக்காது என்பதால் முகவர்கள் ஆவின் ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
தினமும் ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 392 லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு மதுரை மக்களுக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலதாமதம் காரணமாக இந்த விற்பனை பெருமளவில் சரிவை சந்தித்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆவின் தரப்பில் விசாரித்தபோது அங்கு பால் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், வாகனங்களில் அனுப்பி வைக்கவும் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வராதாலும், பலர் விடுமுறையில் இருப்பதாலும் பால் பாக்கெட் குறிப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்வதில் பிரச்சனை எழுந்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக ஆவின் அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்து காலதாமதம் இன்றி பால் பாக்கெட்டுகளை விநியோகத்திற்கு அனுப்பினால் தான் மதுரை ஆவின் தனது விற்பனை இலக்கை தொடர்ந்து சரி கட்ட முடியும் என்று பாதிக்கப்பட்ட முகவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
- ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு வகையான பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ.2,900-ல் இருந்து ரூ.3,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் நெய் பாட்டில் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆகவும் உயர்ந்து உள்ளது. அதாவது லிட்டருக்கு 50 ரூபாய் உயர்ந்து உள்ளது. மேலும் 500 மி.லி. நெய் ரூ.290-ல் இருந்து ரூ.315 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
200 மி.லி. நெய் ரூ.130-ல் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70-ல் இருந்து ரூ.75 ஆகவும் உயர்ந்துள்ளது. பிரீமியம் நெய் 1 லிட்டர் ரூ.630-ல் இருந்து ரூ.680 ஆகவும் பிரீமியம் நெய் 500 மி.லி. ரூ.340-ல் இருந்து ரூ.365 ஆகவும் உயர்ந்துள்ளது.
15 மி.லி. பாக்கெட் நெய் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆகி உள்ளது. 100 மி.லி. பாக்கெட் நெய் ரூ.65-ல் இருந்து ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. 15 கிலோ நெய் டின் ரூ.9,680-ல் இருந்து ரூ.10,725 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதல் விற்பனைக்கு வருகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 2-வது முறையாக நெய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 1 லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
- போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி நந்தனம் ஆவின் தலைமை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தமிழக அரசு பால் கொள்முதலுக்கு மேலும் கூடுதல் விலை அறிவிக்க கோரி நடந்த போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் கே.முகமது அலி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சண்முகம், பெருமாள், முனுசாமி முன்னிலை வகித்தனர். இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது மாநில தலைவர் கே.முகமது அலி கூறியதாவது:-
தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டிற்குப் பிறகு பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை.பாலுக்கு 1 லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி அறிவிக்க கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 1 லிட்டருக்கு ரூ.3 மட்டும் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
இது எங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தொடங்கி உள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் ஏராளமானோர் பங்கேற்று உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, 225-க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் மோர், லஸ்ஸி, ஐஸ்கிரீம், நெய், இனிப்பு வகைகள் ஆகியவற்றை எல்லா தரப்பினரும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் வரும் கோடைகாலத்தில் ஐஸ்கிரீம், மோர், லஸ்ஸி ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய ஆலைகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தள்ளுவண்டி, பேட்டரி தள்ளுவண்டி மூலமாக விற்பனை செய்ய ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து ஆவின் நிர்வாக மேலாண்மை இயக்குனர் ந.சுப்பையன் கூறியதாவது:-
தள்ளுவண்டிகள் மூலமாக ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக விற்பனையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம், புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம்.
மக்கள் இருக்கும் இடத்துக்கு நேரடியாக சென்று அவர்கள் விரும்பும் ஆவின் பொருட்களை வழங்க திட்டமிட்டு உள்ளோம். முதற்கட்டமாக சென்னை மற்றும் புறநகரைச் சேர்ந்த 100 புதிய தொழில் முனைவோருக்கு வாய்ப்பு வழங்க உள்ளோம். இந்த வாகனம் மூலமாக ஆவின் ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய விரும்புவோர் ஆவின் நிர்வாகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆவின் ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை தள்ளுவண்டிகள் மூலமாக விற்பனை செய்ய விரும்புவோர், சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். விற்பனைக்கு எடுக்கும் பொருட்களின் மதிப்பை முன்பணமாக செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனையாளர்கள் ரூ.10 ஆயிரம் காப்புத்தொகை செலுத்த வேண்டும். மாதம் ரூ.30 ஆயிரத்துக்கு குறையாமல் ஐஸ்கிரீம் எடுத்து, விற்பனை செய்ய வேண்டும். விற்பனையாளர்களுக்கு லாபம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வழங்கப்படும். வங்கி கணக்கு மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் 2 அரசு அலுவலர்களால் சான்று அளிக்கப்பட்ட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஐஸ்கிரீம் விற்பனை செய்ய தேர்ந்தெடுக்கப்படும் பகுதிகள் மற்றும் இடங்கள் விண்ணப்பத்தில் முன்னதாகவே குறிப்பிட்டு அளிக்கப்பட வேண்டும்.
- கடந்த ஆண்டில் ரூ.70 லட்சம் லாபம்
- சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் போது ஒரு சில குழுக்களுக்கு தள்ளுபடி
நாகர்கோவில், பிப்.16-
குமரி மாவட்ட பஞ்சா யத்து கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் மெர்லியன்ட் தாஸ் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சிவக்குமார், கவுன்சிலர்கள் நீலபெருமாள், ஜான்சிலின் விஜிலா உள்பட கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைவர் மெர்லியன்ட்தாஸ் பேசிய தாவது:-
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கம் மூலமாக இதுவரை எவ்வளவு கடன் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் உரத் தட்டுப்பாடு உள் ளது. அதை சமாளிக்க என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யும் போது ஒரு சில குழுக்களுக்கு தள்ளுபடி செய்யப்பட வில்லை. குழந்தை தொழி லாளர்கள் குமரி மாவட் டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவ டிக்கை எடுத்து உள்ளார்கள். செங்கல்சூளைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாக புகார்கள் வருகிறது. ஆவின் பாலகங்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படு கிறது. தக்கலை, குலசேகரம், மார்த்தாண்டம், களியக்காவிளை பஸ் நிலையங்களில் ஆவின் பாலகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவ தும் பல்வேறு இடங்களில் நாய் தொல்லை உள்ளது.இதனால் விபத்துகளில் உயிரிழப்புகள் கூட நடந்துள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி னார்.
அதிகாரிகள் பேசிய தாவது:-
குமரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.440 கோடி பயிர் கடன் வழங்க நிர்ணயிக்கப்பட்டது. அதில் கடந்த ஜனவரி மாதம் வரை ரூ.160 கோடிக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீதமுள்ள நிர்ணயிக்கப்பட்ட பயிர் கடன் தொகை முழுமையாக வழங்கப்படும். பொது சேவை மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பட்டா, சிட்டா உள்ளிட்டவை செய்து கொடுக்கப்படுகிறது. குமரி மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை.
ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் யூரியா தட்டுப்பாடு உள்ளது. அந்த யூரியா தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் நபர்களுக்கு ரூ.363 கோடியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது 200 பேருக்கு தள்ளுபடி பட்டியல் தயார் செய்யப்பட்ட அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கூட்டு றவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கை முறையாக மற்றும் தகுதியின் அடிப்படையில் நடந்து வருகிறது. ஒரு சில இடங்களில் இது தொடர்பான புகார்கள் இருக்கின்றன. அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செண்பகராமன்புதூர் பகுதியில் உள்ள செங்கல் சூளை உள்பட பல கடை களிலும் குழந்தை தொழி லாளர்கள் உள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்து உள்ளோம். குழந்தை தொழிலாளர்கள் அங்கு வேலை பார்க்கவில்லை.
குமரி மாவட்டத்தில் தினமும் 21 ஆயிரம் லிட்டர் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து 6000 லிட்டர் பால் கிடைக்கப்பெற்ற நிலையில் திண்டுக்கலில் இருந்து 15,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பாலகங்களில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினை பொறுத்தமட்டில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் உழவர் சந்தை, கலெக்டர் அலுவலகம் உட்பட 9 இடங்களில் ஆவின் கட்டுப்பாட்டில் பாலங்களும் 26 தனியார் பாலங்களும் செயல் பட்டு வருகிறது. கடந்த 2021- 22 ம் ஆண்டில் ரூ.70 லட்சம் லாபம் கிடைத்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் செயல்பட்ட ஆவின் பாலகம் கொரோனா காலத்தில் மூடப்பட்டது. மீண்டும் அங்கு ஆவின் பாலகம் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.