search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தவாரி"

    நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 24-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடிமரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக காலை 9.15 மணி அளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு தீர்த்தபேரர் உடன் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 9.45 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் சென்றடைந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு படிப்பு கண்டருளி இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இத்துடன் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நிறைவு பெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவையொட்டி அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா, மகா சிவராத்திரி விழா போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சித்திரை மாதத்தில் இக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவ விழா கடந்த 10-ந் தேதி தொடங்கியது.

    முன்னதாக 9-ந் தேதியன்று மாலையில் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோவிலில் நேற்று முன்தினம் வரை இரவு மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மனையும், பராசக்தி அம்மனையும் படத்தில் காணலாம்.

    நேற்று சித்திரை வசந்த உற்சவம் நிறைவு விழாவையொட்டி பகல் 12.30 மணியளவில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அருணாசலேஸ்வரரும், உண்ணாமலை அம்மனும் சிறப்பு அலங்காரத்திலும், பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் தனித்தனி வாகனத்தில் அய்யங்குளத்திற்கு மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். பின்னர் அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    தொடர்ந்து நேற்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 10 மணியளவில் கோவில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென்தமிழக குடவரை கோவிலில்களில் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றான பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பான விகாரி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மூலவர் சன்னதி அருகில் உற்சவர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளினார். காலை 10 மணியளவில் வெள்ளி பல்லக்கில் கோவிலில் இருந்து நாதஸ்வரம் முழங்க அங்குச தேவரும் அஸ்திரதேவரும் புறப்பாடாகி கோவில் எதிரே உள்ள குள படித்துறைக்கு வந்தனர். அங்கு அங்குச தேவருக்கும் அஸ்திரதேவருக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்று பால், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் கோவில் குளத்தில் சிவாச்சாரியாரால் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதியம் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. அன்னதானமும் நடந்தது.

    நேற்று பகல் முழுவதும் கோவில் நடை சாத்தப்படாமல் ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். மாலை விநாயகர், சந்திரசேகரர், கவுரியம்மன், சண்டிகேசுவரர் ஆகியோர் கோவில் பிரகார வலம் வந்தனர். தமிழ் புத்தாண்டையொட்டி புத்தாண்டு பஞ்சாங்கமும் வாசிக்கப்பட்டது.

    ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் அமராவதிபுதூர் ராம.அண்ணாமலைச் செட்டியார், தேவகோட்டை எம்.நாகப்பன் செட்டியார் ஆகியோர் செய்திருந்தனர்.
    பங்குனி உத்திர விழாவையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
    கும்பகோணம் நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடிஸ்வரர் சாமி கோவில்களில் கடந்த 12-ந் தேதி பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.

    இதையொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் பலவித வாகனங்களில் சாமி, அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழி பாடுகள் தொடங்கியது.

    பின்னர் விநாயகர், சுப்ரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் சமேத நாகேஸ்வரர் மற்றும் அனந்தநிதியம்பிகை சமேத கம்பட்டவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவாக மகாமக குளத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் பகல் 12 மணியளவில் மகாமக குளக்கரையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பகல் 12.30 மணியளவில் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.இதே போல் கொட்டையூரில் உள்ள கோடிஸ்வரர் கோவிலிலும் தீர்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் அன்பில் மற்றும் உத்தமர்கோவில் சாமிகள் தீர்த்தவாரி கண்டருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான அன்பில் சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு கோவிலிருந்து சுந்தர்ராஜ பெருமாள் புறப்பட்டு உத்தமர்கோவில் மண்டபம் வந்தடைந்தார். இரவு முழுவதும் அங்கு தங்கினார்.

    பின்னர் நேற்று காலை புறப்பட்டு 10 மணிக்கு கொள்ளிடம் ஆற்றிற்கு வந்தடைந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றன. இரவு 10 மணிவரை பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு இன்று காலை (புதன்கிழமை) அன்பில் சென்றடைகிறார்.

    மாசிமகத்தை முன்னிட்டு உத்தமர் கோவில் உற்சவர் புருஷோத்தம பெருமாள் கொள்ளிடம் ஆற்றில் நேற்று காலை தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு திருவாராதனங்கள் நடைபெற்றது. அங்கு பக்தர்களுக்கு காட்சியளித்த பின் இரவு அங்கிருந்து புறப்பட்டு கோவில் சென்றடைந்தார்.

    இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உத்தமர்கோவில் புருஷோத்தம பெருமாள், அன்பில் சுந்தர்ராஜபெருமாள் சாமிகளை தரிசனம் செய்தனர்.
    மாசி மகத்தையொட்டி கடலூர் கடலில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் தினத்தை மாசி மகம் என்கிறார்கள். மாசி மகத்தில் கோவில்களில் உள்ள உற்சவ மூர்த்திகளை கடற்கரைக்கு கொண்டு சென்று தீர்த்தவாரி நடத்துவது வழக்கம்.

    தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதன்படி மாசிமகமான நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந் தது. இதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகளை வாகனங்களில் வைத்து வீதி உலாவாக மேள தாளம் முழங்க தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

    காலை 7 மணியில் இருந்தே தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சாமிகள் வீதி உலாவாக வந்து கொண்டு இருந்ததால் சில்வர் பீச்சுக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்தனர். தொடர்ந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு வந்த சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது பக்தர்களும் புனித நீராடினர். தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    உற்சவ மூர்த்திகளுக்கு தேங்காய், பழம் போன்ற பூஜைக்குரிய பொருட்களை வைத்து, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் சாமிகளை மீண்டும் வீதி உலாவாக கோவிலுக்கு கொண்டு சென்றனர்.

    தீர்த்தவாரியில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள், திருவந்திபுரம் தேவநாதசாமி, திருப்பாதிரிப்புலியூர் வரதராஜபெருமாள், வண்டிப்பாளையம் அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்டவரதராஜபெருமாள், திண்டிவனம் செண்டூர் வரதராஜபெருமாள், புதுப்பாளையம் துர்க்காளம்மன், நெல்லிக்குப்பம் வீரபத்ரசுப்பிரமணியர், தேவனாம்பட்டினம் இடிதாங்கி மாரியம்மன், தேவனாம்பட்டினம் சீனுவாசபெருமாள், நத்தப்பட்டு முத்துமாரியம்மன், செல்லாங்குப்பம் பொட்லாயி அம்மன், மார்க்கெட் காலனி சோலை வாழியம்மன், புதுச்சேரி சோரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன், பெரியகுப்பம் பெரியநாயகி அம்மன் உள்பட 90-க்கும் மேற்பட்ட கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்து கொண்டனர்.



    இதில் முதுநகர் பீமாராவ் நகர் கெங்கை மாரியம்மன் குளிர்பான பாட்டில்களாலும், நவநீதம்நகர் சோலைபுத்துமாரியம்மன், உச்சிமேடு பொட்லாயி அம்மன், ராமாபுரம் மேட்டுக்குப்பம் பொட்லாயி அம்மன் போன்ற சாமிகள் பிஸ்கெட் பாக்கெட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.

    பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்கள் சாமியை வழிபட்டு, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர், மோர் வழங்கப்பட்டது.

    முன்னதாக உற்சவ மூர்த்திகளுடன் மேளம், தாளம் முழங்க நகர முக்கிய சாலைகளில் நடனம் ஆடி வந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் சிலர் ஆட்டம், பாட்டத்துடன் வந்தனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக வந்த சிலரையும் போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.

    காசியை விட வீசம் பெரிது என்பதற்கு ஏற்ப காசியில் நீராடிய புண்ணியத்தை விருத்தகாசி என்றழைக்கப்படும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பெறலாம் என்பது நம்பிக்கை. அதன்படி புண்ணிய நதியாக விருத்தாசலம் மணிமுக்தாற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் மணிமுக்தாற்றில் நடக்கும் மாசி மகத்திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.

    அதன்படி நேற்று மாசி மகம் என்பதால் ஏராளமான மக்கள் திதி கொடுப்பதற்காக மணிமுக்தாற்றில் குவிந்தனர். அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஊற்று குழிகளில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின்னர் அனைவரும் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரியையொட்டி மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினார்கள்.
    மாசிமக திருவிழாவையொட்டி மகாமக குளத்தில் நேற்று அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர். ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா கொண்டாடப்படுகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    மாசிமக விழாவினை முன்னிட்டு கடந்த 10-ந் தேதி ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், கவுதமேஸ்வரர், வியாழசோமேஸ்வரர் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பத்து நாள் உற்சவம் நடைபெற்றது. விழாவின் 5-ம் நாள் ஓலைச்சப்பரமும், 9-ம் நாள் விழாவில் தேரோட்டமும் நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்தகலசநாதர், கம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

    பின்னர் பகல் 12 மணிக்கு அந்தந்த கோவிலின் அஸ்திரதேவர்களுக்கு 21 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதை தொடர்ந்து குளத்தின் 4 கரைகளிலும் மற்றும் குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    தீர்த்தவாரியை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணி முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடினர்.

    பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார், தீயணைப்பு வீரர் கள், அறநிலையத்துறையினர், மருத்துவ குழுவினர், வருவாய்த்துறையினர், நகராட்சியினர் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
    திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கவுதமநதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி போன்றவை முக்கியமான நிகழ்ச்சிகளாகும். மேலும் அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்வுகள் சிறப்புமிக்கது.

    தை மாதம் 5-ம் நாள் தென்பெண்ணையாற்றிலும், ரத சப்தமியன்று செய்யாற்றிலும், மாசி மகத்தன்று கவுதம நதியிலும் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    மாசி மகம் நட்சத்திர தினமான நேற்று திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் அருணா சலேஸ்வரருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை சுமார் 9 மணியளவில் சந்திர சேகரர் திருவடிவில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் அவர் கோவிலில் இருந்து பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதமநதியில் தீர்த்த வாரிக்கு சென்றார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் திருப்பணியில் பெரும் பங்காற்றியவர் வள்ளால மகாராஜா. இவர் குழந்தை பேறு இல்லாமல் தவித்தபோது, சிவபெருமானே குழந்தையாக தரிசனம் அளித்ததாக ஆன்மிக புராணங்கள் தெரிவிக்கிறது. எனவே, சுகநதி ஆற்றங்கரையோரம் நடந்த போரில் உயிரிழந்த வள்ளால மகாராஜாவுக்கு ஆண்டுதோறும் மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கவுதம நதியில் அருணாசலேஸ்வரருக்கு தீர்த்தவாரியும் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அதன்படி நேற்று தீர்த்தவாரி மற்றும் திதி அளித்தல் நிகழ்ச்சி கவுதம நதியில் நடைபெற்றது.



    கவுதமநதியில் தற்போது தண்ணீர் இல்லாததால் பெரிய தொட்டி ஒன்று கட்டப்பட்டு அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. மேலும் அதனை சுற்றி இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. தீர்த்தவாரி முடிந்தபிறகு பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வன்னிய குல சத்திரிய வள்ளால மகாராஜா மடாலய சங்கத்தலைவர் முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    மேலும் மாசி மாத பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு 11.53 தொடங்கி நேற்று இரவு 9.32 மணிக்கு நிறைவடைந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை ஏராளமான மக்கள் கிரிவலம் சென்றனர். நேற்று காலை முதல் இரவு வரை கோவிலில் கூட்டம் அலைமோதியது. பகலில் வெயில் கொளுத்தினாலும், பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது.
    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புதுவை வைத்திக்குப்பம் கடற்கரையில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நடக்கிறது. இதற்காக கடற்கரையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாக்குழு சார்பில் மேடைகள் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தீர்த்தவாரியில் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், லட்சுமி நாராயண பெருமாள், செஞ்சி ரங்கநாதர், திண்டிவனம் நல்லியகோடான் நகர் சீனிவாச பெருமாள், புதுவை மணக்குள விநாயகர், எம்.எஸ்.அக்ரகாரம் கோதண்டராமர், ராமகிருஷ்ணாநகர் ஹயக்ரீவர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கலந்துகொள்கின்றனர்.

    இந்த ஆண்டு முதல் முறையாக மேல்மலையனூர் அங்காளம்மன் தீர்த்தவாரியில் கலந்துகொள்கிறார். இதற்காக வெளியூர்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் நேற்று இரவு புதுச்சேரி வந்தன. உற்சவ மூர்த்திகளுக்கு புதுவையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும் உற்சவமூர்த்திகள் ஒருசில நாட்கள் புதுவையில் தங்கி இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்க உள்ளனர்.

    புதுவை போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா மேற்பார்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தீர்த்தவாரியை முன்னிட்டு முத்தியால்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    வைத்திக்குப்பம் பகுதியில் இன்று வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருவோர் தங்கள் வாகனங்களை பழைய சாராய ஆலை பகுதியில் நிறுத்திவிட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும். பகல் 1 மணிக்கு அஜந்தா சந்திப்பில் இருந்து முத்தியால்பேட்டை செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாசிமக தீர்த்தவாரி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்கள்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மகம் நட்சத்திரன்று மாசி மக திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டுக் கான மாசி மகத்திருவிழாவையொட்டி கும்பகோணம் மகா மகத்திருவிழா தொடர்புடைய ஆதிகும்பேஸ்வரர், காசி விசுவநாதர், வியாழசோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், கவுத மேஸ்வரர் ஆகிய 6 சிவன் கோவில்களில் மாசிமக திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதேபோல் 11-ந் தேதி வைணவ தலங்களான சக்கரபாணி சுவாமி கோவில், ராஜகோபால சுவாமி கோவில், ஆதிவராக பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    இந்த நிலையில் ஆதிகும் பேஸ்வரர் கோவிலில் நேற்று பஞ்சமூர்த்தி சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக காசி விசுவநாத சுவாமி கோவில், அபிமுகேஸ்வர சுவாமி கோவில், கவுதமேஸ்வரர் கோவில்களின் தேரோட்டம் மகாமகக்குள கரையில் நேற்று மாலை நடந்தது. இதேபோல் வியாழ சோமேஸ்வரர் கோவில் தேரோட்டமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



    மாசி மக திருவிழாவை யொட்டி இன்று காலை 7 மணிக்கு சக்கரபாணி கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    இதையடுத்து மதியம் 12 மணியளவில் மகாமகக் குளகரையில் மாசி மக தீர்த்தவாரி நடந்தது. 10 நாள் உற்சவம் நடைபெறும் சிவன் கோவில்களான கொட்டையூர் கோடீஸ்வர சுவாமி, பாணபுரீஸ்வரர் கோவில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பேஸ்வரர், நாகேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர் ஆகிய 6 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி, அம்பாள் மகாமக குளக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை யடுத்து அந்தந்த கோவில் களின் அஸ்திர தேவருக்கு அபிஷேகம், தீர்த்தவாரி நடந்தது.

    அப்போது மகாமகக் குளத்தை சுற்றிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி - அம்பாளை வழிபட்டனர்.

    முன்னதாக இன்று காலை மாசி மக தீர்த்தவாரியையொட்டி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு மகா மகக்குளக்கரையில் தர்ப்பணம் செய்து பூஜை நடத்தி வழிபட்டனர்.
    மஹோதய புண்ணிய காலத்தை முன்னிட்டு அய்யங்குளத்தில் நடந்த தீர்த்தவாரியில் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் தீபத்திருவிழா உள்பட பல்வேறு விழாக்கள் மற்றும் தீர்த்தவாரிகள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இங்கு தை அமாவாசை தினத்தில் திருவோணம் நட்சத்திர நாளில் அருணாசலேஸ்வரர் அய்யங்குளத்தில் எழுந்தருள்வார். தை அமாவாசை தினத்தில் இந்துக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபடுவர்.

    இந்த ஆண்டு தை அமாவாசையானது சோமவாரமான திங்கட்கிழமையில் வந்தது புனிதமாக கருதப்படுகிறது. இது மஹோதய புண்ணியகாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அமையும். அப்போது தீர்த்தவாரி நடைபெறும்.

    இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர் சாமியும் அம்மனும் திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளத்திற்கு எதிரே உள்ள மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து அய்யங்குளத்தில் சிவாச்சாரியர்கள் மூலம் சாமி சூலத்திற்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது சூலத்திற்கு பால், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை கண்டு தரிசனம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தனர். தீபாராதனை காண்பித்ததும் அவர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.

    அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    மேலும் அய்யங்குளத்தின் அருகில் உள்ள அங்காளம்மன், பச்சையம்மன், ரேணுகாம்பாள் ஆகிய கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலாவாக கொண்டு வரப்பட்டது.

    கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8-ந் தேதி இதேபோல் அய்யங்குளத்தில் தை அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்களின் நெருக்கடியால் 4 பேர் குளத்திற்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்து உள்ளனர். எனவே அதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க பக்தர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக அய்யங்குளத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் பக்தர்கள் செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுமட்டுமின்றி தீயணைப்பு வீரர்கள் சிறிய படகு மூலம் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அய்யங்குளத்தில் ஏராளமான மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
    திருவண்ணாமலையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசானிய குளத்தில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் விழாக்களில் தீர்த்தவாரியும் ஒன்று. ஈசானிய குளம், அய்யங் குளம், தாமரை குளம், கலசபாக்கத்தில் செய்யாறு, மணலூர்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றில் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளில் அருணாசலேஸ்வரர் கலந்து கொள்வார். அதன்படி, திருவண்ணாமலை ஈசானிய குளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.

    இதனை முன்னிட்டு காலையில் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளத்துடன் அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்திற்கு புறப்பட்டார். அங்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அருணாசலேஸ்வரர் சூலத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திரும்பினார்.

    அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்று கதையின் படி, திருவண்ணாமலை பகுதியை வல்லாள மகாராஜா என்ற மன்னர் ஆண்டு வந்தார். அருணாசலேஸ்வரரின் தீவிர பக்தரான வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. அருணாசலேஸ்வரரிடம், வல்லாள மகாராஜா தனது மனைவியுடன் தினமும் மனமுருக குழந்தை வரம் கேட்டு வேண்டி வந்து உள்ளார்.

    ஈசானிய குளத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    ஒரு நாள் வல்லாள மகாராஜாவின் கனவில் தோன்றிய அருணாசலேஸ்வரர், உனக்கு இந்த பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை. என்னையே மகனாக பாவித்து கொள். இந்த பிறவியில் நானே உனது மகன் என்று கூறி உள்ளார். அதன்படி, வல்லாள மகாராஜாவும், அருணாசலேஸ்வரரை தனது மகனாக பாவித்து சிறந்த முறையில் ஆட்சி புரிந்து வந்துள்ளார்.

    தைப்பூசத்தின் போது அருணாசலேஸ்வரர் ஈசானிய குளத்தில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்துகொண்டு விட்டு மாலையில் மேளதாளத்துடன் கோவிலுக்கு திரும்பி செல்வார். அப்போது போர்க்களத்தில் வல்லாள மகாராஜா எதிரிகளால் கொல்லப்பட்டார் என்ற தகவல் அருணாசலேஸ்வரருக்கு தெரிவிக்கப்படும். தன்னை மகனாக பாவித்த வல்லாள மகாராஜா இறந்ததை கேட்டு மேளதாளங்கள் இல்லாமல் கோவிலுக்கு அருணாசலேஸ்வரர் திரும்புவார் என்று கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை நினைவு கூறும் விதமாக நேற்று மாலை அறிவொளிப்பூங்கா அருகே தீர்த்தவாரி முடித்துவிட்டு அருணாசலேஸ்வரர் சென்ற போது பணியாளர் ஒருவர் வல்லாள மகாராஜா இறந்த செய்தியை தெரிவித்தார். இதையடுத்து மேளதாளங்களின்றி அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.
    ×