என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summer heat"

    • ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கண்ட வானிலை முன்னறிவிப்பை சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொழிலாளர் துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வெப்ப அலையின் தாக்கத்தால் தொழிலாளர்களும், ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம். பணியிடங்களில் போதிய குடிநீர் வசதிகள் இருப்பது அவசியம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான உபகரணங்களையும், ஐஸ் பேக்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

    சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும். தரமான குளிர்ந்த நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் அசவுகரியமாக உணர்ந்தால், வேலையை மெதுவாக செய்ய அனுமதிக்க வேண்டும். ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்க வேண்டும். குளிர்ச்சியான நேரத்தில் கடினமான வேலைகளை செய்யும்வகையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    வெயிலால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை தணிக்கும் வழிகளையும் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கல் சூளை தொழிலாளர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 9 மணிக்கே இளநீர் விற்பனை துவங்கி விடுகிறது.
    • குடும்பத்தினருக்கும் சேர்த்து பலர் வாங்கி செல்வதால் அரை பழம், முழு பழம் அப்படியே விற்று தீருகிறது.

    திருப்பூர்:

    அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் திருப்பூரில் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து கொண்டே இருப்பதால், உடல் சூட்டை தணிக்க கூடிய இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி, உடுமலை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆட்டோக்களில் வியாபாரிகள் பலர் இளநீரை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    சிறிய ரகம் 15 ரூபாய், நடுத்தரம் 20 முதல் 25 ரூபாய், டி.ஜே., எனப்படும் பெரிய ரகம் 35 முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது. வழக்கமான நாட்களில் மதியம் தான் இளநீர் விற்பனை சுறுசுறுப்பாக இருக்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காலை 9 மணிக்கே இளநீர் விற்பனை துவங்கி விடுகிறது. மாலை 5 மணி வரை நடக்கிறது.

    இளநீருக்கு அடுத்து வெயிலுக்கு அதிகம் விற்பனையாவது தர்பூசணி. சேலம், விருத்தாச்சலம் பகுதியில் இருந்து தர்பூசணி லாரிகளில் வந்து குவிவதால் ஒரு பீஸ் 10 ரூபாய், கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குடும்பத்தினருக்கும் சேர்த்து பலர் வாங்கி செல்வதால் அரை பழம், முழு பழம் அப்படியே விற்று தீருகிறது.

    பகலில் மட்டுமின்றி இரவிலும் இப்பழத்தை விரும்பி வீட்டுக்கு வாங்கிச் செல்வோர் பலர் இருப்பதால் இரவு 9மணி வரை பழங்களை விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள்.நம்பியூர், புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து நுங்கு விற்பனைக்கு வருகிறது. குறைந்தளவே வருவதால் சீக்கிரம் விற்று விடுகிறது. 10 ரூபாய், 20 மற்றும் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    வணிக கடைகள், சமூக நல பொது அமைப்புகள் சார்பில் நீர்மோர் வழங்குவதால் மோர் விற்பனையில் வியாபாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. கம்மங்கூழ் விற்பனையே செய்கின்றனர். சிறிய சொம்பில் ஒரு சொம்பு 20 ரூபாய், பார்சல் 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    தள்ளுவண்டி கடைகளில் விற்பனை என்றாலும், ஆண்டு முழுவதும் விற்பனை என்பதால் கம்மங்கூழை தேடிச் சென்று குடிப்பவர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பழத்தை விட ஜூஸ் தயாரித்து அதனை 20 ரூபாய், 30 ரூபாய், 50 ரூபாய்க்கு பழக்கடைகள் விற்பனை செய்கின்றனர்.  

    • கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கறிக்கோழிகளின் எடை குறைகிறது.
    • பத்தாயிரம் கோழிகள் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பண்ணைக்கு தினசரி 3 ஆயிரம் லிட்டர் வரை தேவை.

    பல்லடம் :

    கோடை வெயிலின் தாக்கம் காரணமாக கறிக்கோழிகளுக்கு கூடுதல் தண்ணீர் வழங்குவதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இது குறித்து பல்லடம் பகுதி பண்ணையாளர்கள் கூறியதாவது :- கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் கறிக்கோழிகளின் எடை குறைகிறது. வெப்பத்திலிருந்து கறிக்கோழிகளை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். மேற்கூரைகளில் தென்னங்கீற்றுகள் பரப்பி வைத்தல், ஸ்பிரிங்லர் முறையில் தண்ணீர் தெளித்தல், பண்ணைக்குள் மின் விசிறி ஓட வைத்தல் என பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன.

    இரண்டு கிலோ எடை கொண்ட கோழி, 300 மீட்டர் வரை தண்ணீர் குடிக்கும். கோடை காலம் என்பதால், அரை லிட்டர் மேல் தண்ணீர் எடுத்துக் கொள்கின்றன. பத்தாயிரம் கோழிகள் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு பண்ணைக்கு தினசரி 3 ஆயிரம் லிட்டர் வரை தேவை. தற்போது கோடை என்பதால் 5 ஆயிரம் லிட்டராக இது அதிகரித்துள்ளது.தற்போது கொள்முதல் விலை கிலோ 107 ரூபாயாக உள்ளது. தண்ணீர் லிட்டர் 11 பைசா என்ற கணக்கில் விலைக்கு வாங்கி பயன்படுத்தப்படுகிறது. தண்ணீருக்கு கூடுதலாக செலவாவதால் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கோடைவெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம்நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்புவழிமுறைகளை பின்பற்றிடவும் கலெக்டர் வினீத் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உடலின் நீர்ச்சத்து குறையாமல்பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போதுகுடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் . ஒ.ஆர்.எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர்,மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். வெளிர் நிறமுள்ள,காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும்.

    பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணவேண்டும். முடிந்தவரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நல்ல காற்றோட்டமான வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும்போது குடை கொண்டு செல்ல வேண்டும். நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகளை விட்டு செல்ல கூடாது. பருக இளநீர்போன்ற திரவங்களை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான வெப்பம் தொடர்பானநோய்களை கண்டறிய வேண்டும்.குழந்தைகளின் சிறுநீரை சோதித்துப்பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர்நீரிழப்பை குறிக்கலாம். மழலைப்பள்ளிகளை கோடைகாலம் முடியும் வரை செயல்படுத்தவேண்டாம். முதியவர்களுக்கான வழிமுறைகள் தனியேவசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறைசரிபார்த்து கொள்ளவேண்டும்.

    முதியவர்களின்அருகாமையில் தொலைபேசி உள்ளதா என உறுதிப்படுத்திக்கொள்ளவும். வெப்பஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால் அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில்குளிக்கவைக்க வேண்டும்.போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.100 நாட்கள் பணியின் போது நற்பகல் 12.00 மணிக்குமேல் பணி செய்யாமல் இருப்பதுபோன்றவையும் ஆகும்.

    கால்நடைகளை நிழல் தரும்கூரை அடியில் கட்டவும், போதிய வசதி செய்து கொடுக்கவும். அவசியமாக போதுமானஅளவு தண்ணீர் கொடுக்கவேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்டவெளியில்போட வேண்டாம். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம்.பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர்கொடுக்க வேண்டும். செல்லப்பிராணிகள் வெயில் காலங்களில் வாகனங்களில் தனியேவிட்டு செல்லக் கூடாது.

    மேலும் பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில்துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடிவீடுகளிலும், கூரை வீடுகளிலும்உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால்கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் மாடி வீடுகளில் மேல்கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள்சூடாகி மின் விசிறி, டியூப் லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.

    எனவே கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில்வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நிலஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ்சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது. விறகு அடுப்புகளை பயன்படுத்தியபிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது.
    • பகல் பொழுது முடிய தொடங்கியதும், அடுத்த ஆயுதமாக அனல் காற்று வீச தொடங்கியது.

    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவாகி வாட்டி வதைத்தது.

    மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி சென்னைவாசிகளுக்கு எப்போதுமே தவிப்புக்கு மட்டும் பஞ்சம் இல்லை. அந்தவகையில் கோடை வெயில் தொடங்கிய காலத்தில் இருந்தே சென்னை மக்களின் தவிப்பு தொடங்கியது. இதற்கிடையில் 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்தரி வெயில்' காலம் தொடங்கியது. ஏற்கனவே கொளுத்தி எடுக்கும் வெயிலின் நடுவே கத்தரி வெயிலின் கொடூரம் எப்படி இருக்குமோ... என்று பயந்த மக்களுக்கு, கோடை மழை கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது.

    அந்த ஆறுதலும் நீடிக்காத வகையில், வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை விட இனி வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மக்களுக்கு அதுவும் குறிப்பாக சென்னைவாசிகளுக்கு கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்தவகையிலேயே சில நாட்களாகவே சென்னையில் வெயிலின் உக்கிரம் கொடூரமாக இருந்து வருகிறது.

    சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது. பங்குனி வெயில் பல்லை காட்டி அடிச்சுட்டு இருக்கு என்று படத்தில் நடிகர் வடிவேல் சொல்வது போல, சித்திரை வெயில் சென்னையை சிதறடித்துவிட்டது என்றே சொல்லலாம். காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து கொண்டே இருந்தது.

    பகல் 12 மணிக்கு மேல் வெயில் பட்டையை கிளப்பியது. தரையில் விழுந்த வெயிலின் கீற்று கண் கூசும் அளவு பிரகாசித்தது. இதனால் சாலையில் செல்வோர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவருமே வெயிலில் குளித்தபடி பயணத்தை தொடர்ந்தனர். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல, எங்கேயாவது மர நிழல் இருக்குமா, சற்று இளைப்பாறலாமா? என்று அலை பாய்ந்து கொண்டிருந்தனர். அதேவேளை சாலையோரம் இருந்த ஜூஸ் கடைகள், இளநீர், சர்பத் கடைகள், பதனீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

    விடுமுறை நாட்கள் என்றாலே, வெளியே குடும்பத்துடன் குதூகலமாக 'ரவுண்ட்' செல்லும் சென்னைவாசிகள், நேற்று பகலில் வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஏராளமான வீடுகளில் பகலிலும் நேற்று ஏ.சி. எந்திரம் ஓடிக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. பகல் பொழுது முடிய தொடங்கியதும், அடுத்த ஆயுதமாக அனல் காற்று வீச தொடங்கியது. இதனால் மதியம் 3 மணிக்கு மேல் அனல் காற்றுடன் கூடிய ஊமை வெயில் மக்களை வாட்டியது. மாலை 6 மணி கடந்தும் இதே நிலைமை தொடர்ந்ததால், ஒட்டுமொத்தமாக சென்னைவாசிகள் தவித்து போய்விட்டார்கள்.

    அதேவேளை கடற்கரைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டு குளிர்ந்த காற்றை எதிர்கொண்டனர். இப்போதே வெயில் இப்படி இருக்கிறதே, போக போக எப்படியெல்லாம் வாட்டி வதைக்க போகிறதோ... என சூரியனை திட்டி வருகிறார்கள்.

    • கொளுத்தும் கோடை வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
    • கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.

    மதுரை

    கோடைகாலத்தை யொட்டி அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். தற்போது அக்னி நட்சத்திரம் காலம் என்பதால் மதுரையில் வெயில் உக்கிரம் அதிகமாக உள்ளது.

    சித்திரை திருவிழாவின் போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால் தற்போது மழை பெய்வது நின்று விட்டதால் மீண்டும் வெயில் உச்சத்தை எட்டியுள்ளது.

    நேற்று மதுரையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்தது. இந்த வெப்பத்தை தாங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் தாகத்தை தணிக்க தர்பூசணி மற்றும் பழ ஜூஸ், குளிர்பானங்கள் ஆகிய வற்றை குடிக்கின்றனர். இதனால் அவைகளின் விற்பனை பல மடங்காக அதிகரித்துள்ளது.

    இருசக்கர வாகனங்களில் நீண்ட தூரம் செல்பவர்கள் சாலை யோரங்களில் கோடை காலத்தையொட்டி விற்பனை செய்யப்படும் மோர், இளநீர், கரும்பு சாறு ஆகியவைகளை வாங்கி அருந்தி செல்கின்றனர்.

    பஸ் மற்றும் ரெயில்களில் பகலில் பயணம் செய்யும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். பலர் பகல் நேரங்களில் வீடுகளி லேயே முடங்கியுள்ளனர். காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் வருகின்றனர்.

    இந்த கோடை வெயிலில் சாலை யோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மற்றும் கட்டிட தொழிலா ளர்கள் மிகவும் பாதிக்கப்படு கின்றனர். அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வந்த பின்னரே வெயிலின் தாக்கம் குறையும் என்று மக்கள் கருதுகின்றனர்.

    மதுரையில் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பலர் கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள தொப்பி அணிந்தும், குடைகளை பிடித்துச் சென்றும் வருகின்றனர்.

    • சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது.
    • இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும்.

    சென்னை :

    தமிழகம் முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதேவேளை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வாட்டி வதைப்பதால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். இதற்கிடையே 'நானும் இருக்கிறேன் பார்' என்று உருவான 'மோக்கா' புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது.

    சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. ஓட்டலில் அடுப்பு அருகே நின்று சமைக்கும் 'மாஸ்டர்' போலவே, மக்கள் அனைவருமே அனல் தாக்கத்தில் இருப்பது போல உணர்ந்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் -105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    கோவை - 96.8 டிகிரி - (36 செல்சியஸ்)

    குன்னூர் - 77 டிகிரி - (25 செல்சியஸ்)

    கடலூர் - 102.92 டிகிரி - (39.4செல்சியஸ்)

    தர்மபுரி - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    ஈரோடு - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.12 டிகிரி - (33.4 செல்சியஸ்)

    கரூர் - 104.9 டிகிரி - (40.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 73.58 டிகிரி - (23.1 செல்சியஸ்)

    மதுரை - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

    நாகை - 100.04 டிகிரி - (37.8 செல்சியஸ்)

    நாமக்கல் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.02 டிகிரி - (38.9 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    சேலம் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    திருச்சி - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

    திருத்தணி - 105.8 டிகிரி - (41 செல்சியஸ்)

    தொண்டி - 94.64 டிகிரி - (34.8 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.2 டிகிரி - (34 செல்சியஸ்)

    ஊட்டி - 78.62 டிகிரி - (25.9 செல்சியஸ்)

    வால்பாறை - 83.3 டிகிரி - (28.5 செல்சியஸ்)

    வேலூர் - 108.14 டிகிரி - (42.3 செல்சியஸ்)

    தமிழகத்தில் இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், 'இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்' என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

    'மோக்கா' புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மழை ஆறுதலை கொடுக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதாவது 16-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரமடைந்து வருகிறது.
    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமே கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது.

    தொடக்கத்திலேயே வீறு கொண்டு வெப்பத்தை கக்கிய நிலையில், இதையே தாங்க முடியவில்லையே? மே மாதத்தில் எப்படி தாக்கு பிடிக்க போகிறோமோ? என்றுமக்கள் பேசும் அளவுக்கு அப்போது இருந்தது.

    மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து கோடை மழையும் தமிழ்நாட்டில் பெய்யத்தொடங்கியது. சில இடங்களில் கனமழையும் பதிவானது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

    ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கோடை மழை தயவு காட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இது கோடை காலமா? அல்லது மழை காலமா? என்று யோசிக்கும் அளவுக்கு மழை பதிவானதை பார்க்க முடிந்தது. இதனால் கோடை காலத்தில் பதிவாகும் இயல்பான அளவை விட 88 சதவீதம் அதிகமாக இதுவரை மழை பெய்திருக்கிறது.

    இந்த தொடர் மழை காரணமாக, கடந்த 4-ந் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் தெரியாமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்று பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் கோரத்தாண்டவம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதுவும் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

    பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கும் முடியாமல், வீடுகளில் இருக்கலாம் என்று நினைத்தால் வெப்பக்காற்றாலும், புழுக்கத்தாலும் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏதோ அனல் அதிகம் நிறைந்த அடுப்புக்கு அருகில் இருந்தால் எப்படி இருக்குமோ? அதே போல் பகல் நேரங்களில் வியர்வை சொட்ட சொட்ட வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், பகல் நேரத்தில்தான் அப்படி என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்வதாகவும், அதிகாலை 3 மணிக்கு மேல் தான் ஓரளவுக்கு குளிர்ச்சியை உணர முடிவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

    ஏ.சி. இருக்கும் வீடுகளில் கூட வெயிலினால் ஏற்படும் உஷ்ணத்தால், கூடுதலாக மின்விசிறிகளையும் இயக்க வேண்டியிருப்பதாக சொல்கின்றனர். பணியின் நிமித்தமாக வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் வெயிலின் உக்கிரத்தால் வாடிவதங்கினா். இதனால் சாலையோர குளிர்பான கடைகள், இளநீர், கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்பட பழ ஜூஸ் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.86 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 107.96 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 107.24 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 19 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதுதவிர புதுச்சேரியில் 106.16 டிகிரியும், காரைக்காலில் 100.94 டிகிரியும் வெயில் பதிவானது.

    சென்னையில் நேற்று பதிவான 109 டிகிரி தான் இதுவரை பதிவானதிலே அதிகமானது என்று பேசப்பட்ட நிலையில், இதற்கு முன்பும் இதைவிட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு 113 டிகிரியும், 2012-ம் ஆண்டு மே மாதம் 110 டிகிரியும் வெயில் பதிவாகியிருப்பதாகவும், 109 டிகிரியை பொறுத்தவரையில் கடந்த 2008-ம் ஆண்டும், அதற்கு பிறகு கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதியும், 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதியும் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பிறகு, நடப்பாண்டில் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், பதிவான அதிகபட்ச வெயில் அளவாக இது பார்க்கப்படுகிறது

    வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் ஏற்படும் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இருப்பினும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவுக்கு குடிக்க வேண்டும் என்றும், வெளிர்நிற, இலகுரக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    வெளியில் செல்ல அவசியம் இருந்தால் குடை, தொப்பி எடுத்து செல்லவும், கூடுமான வரையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, வடித்த கஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்கவும் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.

    • கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • நேற்று சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை

    சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் கரையை கடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ந் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது.

    இன்று (நேற்று) பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது.

    இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர்.
    • சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கத்தில் லீத் கேஸ்டல் தெருவில் நேற்றிரவு மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர்.

    உடலில் காயங்கள் எதுவும் இல்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் வேறு பாதிப்பு காரணமாக உயிர் இழந்ததா என்று ஆய்வு செய்ய வேளச்சேரி வனத்துறை அலுவலகத்திற்கு இறந்து போன மயிலை கொண்டு சென்றனர்.

    • அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது.
    • சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவானது.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் உக்கிரமாகி வருகிறது. அதிலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 19 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    அதிலும் சென்னை மீனம்பாக்கத்தில் 109 டிகிரி நடப்பு ஆண்டில் அதிகபட்ச வெப்பநிலையாக பதிவானது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    5-வது நாளாக நேற்றும் சில இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. 13 இடங்களில் 100 டிகிரியை வெயில் அளவு கடந்து இருந்த நிலையில், அதிகபட்சமாக வேலூரில் 106.88 டிகிரி பதிவானது.

    ஊட்டி, தூத்துக்குடி, சென்னை நுங்கம்பாக்கத்தை தவிர மற்ற இடங்களில் இயல்பான அளவைவிட 1 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதிகமாக கரூரில் 5.2 டிகிரி வெயில் இயல்பை காட்டிலும் அதிகமாக கொளுத்தியது.

    இந்த நிலையில் இன்றும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மேலும் தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் - -98.78 டிகிரி(37.1 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - -102.92 டிகிரி(39.4 செல்சியஸ்)

    கோவை - 98.96 டிகிரி (37.2 செல்சியஸ்)

    கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)

    தர்மபுரி - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)

    ஈரோடு - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 94.64 டிகிரி (34.8 செல்சியஸ்)

    கரூர் - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)

    மதுரை நகரம் - 104.72 டிகிரி (40.4 செல்சியஸ்)

    மதுரை விமான நிலையம்-104 டிகிரி(40 செல்சியஸ்)

    நாகை - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)

    நாமக்கல் - 98.6 டிகிரி (37.7 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 105.26 டிகிரி (40.7 செல்சியஸ்)

    சேலம் - 99.86 டிகிரி (37.7 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)

    திருச்சி - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)

    திருத்தணி - 106.7 டிகிரி (41.5 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.2 டிகிரி (34 செல்சியஸ்)

    ஊட்டி - 69.26 டிகிரி (20.7 செல்சியஸ்)

    வால்பாறை - 83.3 டிகிரி (28.5 செல்சியஸ்)

    வேலூர் - 106.88 டிகிரி (41.6 செல்சியஸ்)

    • கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
    • வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.

    தஞ்சாவூர் :

    தமிழகத்தில் வெயில் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. அக்னி நட்சத்திர தொடக்க காலத்தில் வெயிலின் தாக்கம் இன்றி சில நாட்கள் மழை பெய்தது. அதன் பின்னர் வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 102 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. நேற்று 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பகல் நேரத்தில் மனிதர்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை காணப்பட்டது..

    வெயில் கொடுமையில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்வதற்காக பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், நுங்கு, கூழ், மோர் போன்றவற்றை அதிக அளவில் வாங்கி பருகி வருகிறார்கள். வெயிலில் செல்வோர் தலையில் முக்காடு போட்டபடியும், குடைபிடித்தவாறும் சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் வெயில் கொடுமையை சமாளிக்க வாலிபர் ஒருவர் நேற்று ஸ்கூட்டரின் முன்பகுதியில் தண்ணீர் நிரம்பிய வாளியை வைத்துக்கொண்டு, வாகனத்தில் சென்றவாறே தண்ணீரை எடுத்து தனது தலையில் ஊற்றியபடி சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

    தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளில் அவர் இது போன்று தலையில் தண்ணீர் ஊற்றியபடியே இருசக்கர வாகனத்தில் சென்றதையும், அதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சிரித்தபடியே சென்றதையும் அதில் காண முடிந்தது.

    ×