என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லையப்பர்"

    • பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர்.
    • ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெரிய சபாபதி சன்னதியில் தினமும் காலை திருவெண்பாவை பாடல்கள் பாடப்பெற்று நடன தீபாராதனை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதற்காக தாமிர சபை மண்டபத்தில் நேற்று இரவு சுவாமி எழுந்தருளிய நிலையில், அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் நடன தீபாராதனை நடைபெற்றது.

    இந்த ஆருத்ரா தரிசனத்தை காண்பதற்காக பக்தர்கள் விடிய, விடிய நெல்லையப்பர் கோவில் வளாகத்தில் கூடியிருந்தனர். தொடர்ந்து அதிகாலையில் அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்தனர். அங்கு வேத மந்திரங்கள் முழங்க, சுவாமியின் நடன தீபாராதானை காட்சியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    • சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
    • பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தை மாதம் கரிநாளில் நெல்லையப்பர், வெள்ளிக் குதிரை வாகனத்தில் பரிவேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    இவ்வாறு நெல்லையப்பர் குதிரையில் வேட்டைக்கு செல்லும் போது, காந்திமதி அம்பாள், "கரிநாளில் வேட்டைக்கு செல்லக் கூடாது" எனத் தடுக்கிறார். ஆனால் தடையை மீறி, நெல்லையப்பர் பரி வேட்டைக்கு சென்றுவிடுகிறார். இதனால் கோபம் அடைந்த அம்பாள், நெல்லையப்பர் வேட்டை முடித்து திரும்பும் போது, கோவில் கதவை மூடியதாகவும், அதன் பின் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட, "திருமுருகன் பூண்டி பதிகம்" பாடிய பின் கோவில் நடை திறந்துள்ளதாக நிகழ்வு அமைந்துள்ளது.

    அதன்படி நேற்று மதியம் 12 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் இருந்து சுவாமி நெல்லையப்பர், சந்திரசேகரர் உற்சவ மூர்த்தியாக வெள்ளிக் குதிரை வாகனத்தில், கண்ணப்ப நாயனாருடன், கோவிலில் இருந்து புறப்பட்டு பழைய பேட்டையில் அமைந்துள்ள பரிவேட்டை மண்டபத்தில் எழுந்தருளினர்.

    அங்கு சுவாமிருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமி கோவிலுக்கு திரும்பினார்.

    சுவாமி கோவிலுக்கு வந்த போது, அம்பாளின் ஊடலினால், சுவாமி சன்னதி கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன்பின் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச்செய்த "பதிகம்" பாடி, ஊடல் தீர்த்து வைத்தப் பின், கோவில் கதவு திறந்து சுவாமி கோவிலுக்குள் நுழைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தை அமாவாசையையொட்டி இன்று பத்ர தீபம் ஏற்றப்படுகிறது.
    • 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று பத்ர தீப (10 ஆயிரம் தீபம்) திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பத்ர தீப திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்ர வழிபாடு மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், திருமூல மகாலிங்கம், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.

    நேற்று மாலை 6.45 மணிக்கு சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் மேளதாளம் முழங்க மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு அந்த தீபத்திலிருந்து தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தங்க விளக்குக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 8 மணிக்கு பால்குட ஊர்வலமும், 11 மணிக்கு ஊஞ்சல்மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள், உற்சவர்கள் எழுந்தருளளும், 308 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கோவில் மேல் பிரகாரத்தில் மகேசுவர பூஜை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

    இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வருகின்றனர். அதை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்கள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பத்ர தீப விழாவையொட்டி நெல்லையப்பர் கோவில் நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    • 29-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடக்கிறது.
    • 4-ந்தேதி தாமிரபரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.
    • 6-ந்தேதி சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    4-ம் நாளான 29-ந் தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா வருதலும் நடைபெறுகிறது.

    வருகிற 4-ந் தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வரலாற்று சிறப்புமிக்க நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடக்கிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

    தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விசேஷ தீபாராதனைக்கு பின்னர் மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்கள்.

    5-ந் தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் திருநடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளி தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் முக்கிய நிகழ்வாக தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விஸ்வரூப பூஜைகள் நடந்தது. பின்னர் சாமி சன்னதியின் முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு மஞ்சள் பொடி, பால், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த திருவிழா 12 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான நெல்லுக்கு வேலியிடுதல் வைபவம் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. அடுத்த மாதம் 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி, 5-ந்தேதி சவுந்தர சபாவில் நடராஜ பெருமான் திருநடன காட்சி, 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்பத் திருவிழா நடக்கிறது.

    பணகுடி ராமலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜை செய்து கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்துக்கும், நந்திக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழா நாட்களில் கும்பாபிஷேக பூஜை, சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடக்கிறது. 9-ம் திருவிழாவான வருகிற 3-ந்தேதி தேரோட்ட திருவிழாவும், 10-ம் திருவிழா அன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது.

    • மங்கள இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது.
    • சிறப்பு தீபாராதனையும் நடந்தது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும். விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது.

    29-ந்தேதி நெல்லுக்கு வேலியிட்ட விழாவும், 4-ந் தேதி சுவாமி -அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் தாமிரபரணி தைப்பூச மண்டபத்திற்கு எழுந்தருளி தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடந்தது. நேற்று முன்தினம் சவுந்தர சபா மண்டபத்தில் நடராஜர் திருநடன நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று தெப்பத்திருவிழா டவுன் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் சொக்கப்பனை முக்கு அருகில் சந்திரபுஷ்கரணி என்ற வெளித்தெப்பக்குளத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தெப்பகுளம் அருகே அமைந்துள்ள மீனாட்சி -சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு நேற்று மதியம் 1 மணிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி தெப்பத்தில் 11 முறை வலம் வந்தனர். 11 முறை வலம் வரும் போதும் ஒவ்வொரு முறையும் மங்கள இசை, வேத மந்திரம், பதிகம் உள்ளிட்டவைகள் பாடப்பட்டது. அப்போது சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • 29-ந்தேதி வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 4-ந்தேதி செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனையை தொடர்ந்து கொடிபட்டம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கொடிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதனை தொடர்ந்து சுவாமி சன்னதி உள்பிரகார தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    கொடிமரத்திற்கு மஞ்சள், வாசனை பொடி, பால், தயிர், இளநீர், அன்னம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் சிறப்பு வழிபாடு நடக்கிறது. 4-ம் திருநாளான வருகிற 29-ந் தேதி வேணுவனநாதர் தோன்றி வரலாறு வாசித்தல் நிகழ்ச்சியும், இரவு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான அடுத்த மாதம் 4-ந் தேதி இரவு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திரம் செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற்பார்வையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    • உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடக்கிறது. உடையவர் லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது.

    4-ம் திருவிழாவான நேற்று சுவாமி மூங்கில் காடான வேணுவனத்தில், வேணுவனநாதர் சுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதாவது பாண்டிய மன்னனின் அரண்மனைக்கு வேணுவனம் என்று அழைக்கப்பட்ட நெல்லையில் உள்ள மூங்கில் காட்டை கடந்து தினமும் பால் கொண்டு செல்வதை ராமகோன் என்பவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி அவர் இந்த வேணுவனத்தை தாண்டி செல்லும்போது குறிப்பிட்ட இடத்தில் மூங்கில் மரத்தால் கால் இடறி விழுந்து பால் கொட்டியது. இதை அவர் மன்னனிடம் தெரிவிக்கவே அந்த இடத்தில் வளர்ந்திருந்த மூங்கில் மரத்தை வெட்ட மன்னன் உத்தரவிட்டான்.

    இதைத்தொடர்ந்து மன்னனின் வேலையாட்கள் அந்த மூங்கில் மரத்தை வெட்டி அகற்றினர் அப்போது மூங்கில் மரத்திலிருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் மூங்கில் மரம் இருந்த பகுதியை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் தென்பட்டது. இதை காணும் பாக்கியம் பெற்ற ராமகோன், முற்றும் கண்ட ராமகோன் என்று அழைக்கப்பட்டார். இதையடுத்து பாண்டிய மன்னனின் முயற்சியால் வேணுவனநாதர் பெயருடன் நெல்லையப்பருக்கு மூலஸ்தான கோவில் அமைக்கப்பட்டது.

    இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர திருவிழாவில் 4-ம் நாள் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நெல்லையப்பர் கோவிலில் நடந்த திருவிளையாடல் நிகழ்ச்சியில், ராமகோன் பால் கொண்டு செல்வது, அவர் கால் இடறி விழுவது, தாமிரசபையின் உள்பிரகாரத்தில் உள்ள மூங்கில் மரத்தில் வெள்ளி கோடரியால் வெட்டுவது, மூங்கிலில் இருந்து ரத்தம் சொரிவது போன்று நிகழ்வு பக்தர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து மாலை 6 மணிக்கு உடையவர் லிங்கபூஜையும், 8 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    • சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
    • தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்-அஸ்திரதேவி தீர்த்தவாரி நடந்தது.

    பாண்டியர்கால சிவாலயங்களில் மிகவும் பழமை வாய்ந்தது நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

    இந்த திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. 29-ந் தேதி வேணுவனத்தில் நெல்லையப்பர் தோன்றிய புராண வைபவ நிகழ்ச்சி நடந்தது. அன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடந்தது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் உள்ள உடையவர் லிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான செங்கோல் வழங்கும் விழா நெல்லையப்பர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், பாண்டியராஜா ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து நெல்லையப்பர் கோவிலில் உள்ள தெப்பக்குளத்தில் அஸ்திரதேவர்-அஸ்திரதேவி தீர்த்தவாரி நடந்தது.

    இரவில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து மேளதாளம் முழங்க கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணிக்கு செங்கோலும், தக்கார் கவிதாவிற்கு சுவாமி பாதமும் வழங்கினர். தொடர்ந்து அவர்கள் நெல்லையப்பர் கோவில் உட்பிரகாரத்தை சுற்றி வந்தனர். அப்போது தக்கார் சுவாமி பாதத்தை தலையில் சுமந்த படி வந்தார். முடிவில் செங்கோலை செயல் அலுவலரும், சுவாமி பாதத்தை தக்காரும் அம்பாள் எழுந்தருளிய ஆயிரம்கால் மண்டபத்தில் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அதேபோல் குறுக்குத்துறை முருகன் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக சண்முகர் வைர கிரீடம், வைர வேலுடனும், வள்ளி, தெய்வானை தங்க கிரீடங்களுடன் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்த சண்முகர், வள்ளி, தெய்வானையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • ஜூலை 2-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • தேர் அலங்காரம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பிள்ளையார் தேர், முருகர் தேர், நெல்லையப்பர் தேர், காந்திமதி அம்பாள் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என 5 தேர் ஒரே நாளில் ஓடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். நெல்லையப்பர் கோவில் ஆனி பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற ஜூலை 2-ந்தேதி சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    இந்த தேரோட்டத்திற்கு தேர் அலங்காரம் செய்யும் பணி மற்றும் தடி புதுப்பித்து தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மரத்தடிகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து அதை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

    • ஆனிப்பெருந்திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தேரோட்டம் 2-ந் தேதி நடைபெறுகிறது.

    நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு தோறும் ஆனிப்பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனிப்பெருந்திருவிழா வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தேர்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அம்பாள் தேர் சாரம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சுவாமி தேர் சீராக ஓடுவதற்கு தேவையான அடிப்படை வேலைகள் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் தேர்களை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீர் டேங்கர் லாரியுடன் வந்தனர். அவர்கள் விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தம் செய்தனர். இதை தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.திருவிழா, தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • இந்த திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் 2-ந்தேதி நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் உள்ள சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. முன்னொரு காலத்தில் வேத சர்மா இறைவனுக்கு திருவமுது படைக்க காயப்போட்டிருந்த நெல், மழையினால் நனையாதபடி வேலியிட்டு காத்ததால் இறைவன் நெல்வேலி நாதா் என சிறப்பு பெயா் பெற்று ஊருக்கு திருநெல்வேலி என பெயா் ஏற்பட்டது.

    புண்ணிய திருத்தலத்தலமான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி பெருந்தோ்த் திருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான 517-வது ஆனிபெருந்தேர்த் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் தங்க பல்லக்கில் அஸ்திரதேவா் புறப்பட்டு அங்கூர விநாயகா் கோவிலில் பிடிமண் எடுத்து வந்து கோவிலில் வைத்து அங்குரார்பணம் என்னும் முளைப்பாலிகை இடுதல் நடைபெற்றது.

    நேற்று மாலையில் கொடிப்பட்டம் ரதவீதிகளில் சுற்றிவர, ஆனிப் பெருந்திரு விழாவின் பூர்வாங்க பூஜைகளில் நடைபெற்று கோவில் பெரிய கொடிமரம், பஞ்ச மூர்த்திகள் உள்ளிட்ட பிற மூர்த்திகள் ஆகியோருக்கு காப்புக்கட்டுதலுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    திருவிழாவின் தொடக்கமாக இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், காலை சந்தி பூஜைகள் நடைபெற்றது. கொடிமரம் அருகில் அஸ்திர தேவா் மற்றும் கலசங்களுக்கு மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றது. சுவாமி-அம்பாள் ஆலய பிரதான கொடிமரத்திற்கு அருகில் எழுந்தருள கொடிப்பட்டத்திற்கு பூஜைகள் நடைபெற்று காலை 7.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடா்ந்து கொடி மரத்திற்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேத விற்பனா்கள் நான்கு வேதம் கூற ஓதுவா மூர்த்திகள் பஞ்சபுராணம் பாட கொடிமரத்திற்கு நட்சத்திர ஆரத்தி, கோபுர ஆரத்தி, சோடச உபசாரனைகள் நடைபெற்றது. இதில் துணை மேயர் ராஜூ, கவுன்சிலர்கள் கிட்டு, உலகநாதன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி-அம்பாள் காலை, மாலை ஆகிய 2 வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி கொடுத்து ரதவீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெறும். கோவில் கலையரங்கத்தில் தினமும் மாலை சமய சொற்பொழிவு, கர்நாடக இன்னிசை, ஆன்மீக கருத்தரங்கம், பக்தி இன்னிசை கச்சேரி, புராண நாடகம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியாக, ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட பெரிய தேரான நெல்லையப்பர் தேர் உட்பட 5 தேர் ஓடும் தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மேற் பார்வையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    ×