என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைக்காலம்"

    • தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன.
    • கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது.

    தென்காசி:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் தென்காசி மாவட்டம் குற்றாலமும் ஒன்றாகும். குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கி கொண்ட பகுதியாக உள்ளது.

    இங்கு குளித்து மகிழ இயற்கையாக அமைந்த அருவிகளான மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, செண்பகாதேவி அருவி, சிற்றருவி, புலியருவி, தேனருவி என்ற பல்வேறு அருவிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பது வரலாறு.

    தென்பொதிகை சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் அருவியாக ஓடி வருவதால் அந்த நீரில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளன. இதில் நாம் குளிக்கும்போது உடலுக்கு பெருமளவிலான நன்மைகள் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறுவது உண்டு.

    இங்கு தென்மேற்கு பருவமழையின்போது ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் நிலவும். அந்த நேரங்களில் அண்டை மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். குடும்பம் குடும்பமாக வந்து தங்கியிருந்து அருவிகளில் குளிப்பார்கள்.

    தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் தண்ணீர் கொட்டும். ஒருசில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத தொடக்கத்திலே அருவிகளில் நீர் கொட்ட தொடங்கிவிடும்.

    கடந்த ஆண்டு வானிலை மாற்றம் காரணமாக அவ்வப்போது பெய்த மழையால் வருடம் முழுவதும் தண்ணீர் கொட்டியது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் குற்றாலம் நீரை நம்பி இருந்த பாசன குளங்கள் ஏராளமானவை நிரம்பின. இதனால் விவசாயம் ஓரளவு செழித்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மெயினருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு பாறைகள் மட்டுமே பாட்டு படிக்கின்றன. புலியருவி முற்றிலுமாக வறண்டுவிட்டது.

    மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் லேசாக தண்ணீர் விழுகிறது. இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் வெறிச்சோடி கிடக்கும் அருவி மற்றும் அருவிக்கரைகளை ஒருவித ஏமாற்றத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    • நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம்.
    • கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம்.

    சென்னை:

    வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வீட்டில் ஏர்கூலர், ஏ.சி. என எந்திரங்கள் வந்தாலும் இன்னும் பனை ஓலை விசிறியை மக்கள் மறக்காமல் உள்ளனர். பனை ஓலை விசிறியை வீசும்போது அதில் இருந்து ஜில்லென்று வரும் காற்று உடல் நலத்துக்கு ஏற்றது. பல இடங்களில் பனை ஓலை விசிறிகள் தயாரிக்கப்பட்டாலும் திருத்தணி பகுதியில் தயாராகும் பனை ஓலை விசிறிக்கு மவுசு அதிகம் தான். மிகவும் நேர்த்தியாக வண்ண, வண்ண கலரில் தயாரிக்கப்படும் திருத்தணி பனை ஓலை விசிறியை ஏராளமானோர் கேட்டு வாங்கி செல்கிறார்கள்.

    திருத்தணியை அடுத்த கே.ஜி. கண்டிகை அருகே உள்ள சிறுகுமி கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தயாரிக்கும் பனை ஓலை விசிறிகள் அதிக அளவில் சென்னைக்கு விற்பனைக்கு வருகிறது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விற்பனை செய்ய மொத்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சிறுகுமி கிராமத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம், குடும்பமாக பனை ஓலை விசிறி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பனை ஓலை தயாரிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஒரு விசிறி ரூ.15 முதல் ரூ.30 வரை விற்பனை செய்கின்றனர்.

    இது குறித்து விசிறி தயாரிக்கும் 70 வயதான ருக்குமானந்தன் கூறியதாவது:

    நாங்கள் பரம்பரை பரம்பரையாக பனை ஓலை விசிறி தயாரித்து வருகிறோம். தற்போது இளைய தலைமுறைகள் படித்து பட்டம் பெற்று வேலைக்கு சென்று விட்டனர். இதனால் இந்த தொழிலில் குறைவானவர்களே இன்னும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வசந்தி :

    எங்களுக்கு இந்த தொழிலைவிட்டால் வேறு எதுவும் தெரியாது. ஒரு நாளைக்கு 40 முதல் 50 விசிறிகள் வரை செய்கின்றோம். குறைந்த வருமானம் தான் கிடைக்கிறது. எனினும் நாங்கள் தொடர்ந்து செய்து வந்த தொழிலை விட மனது வரவில்லை.

    சோமநாதன்:

    தற்போது கோடைக் காலம் ஆரம்பம் என்பதால் பனை ஓலை விசிறி தயாரிக்கும் பணியில் குடும்பத்தோடு ஈடுபட்டுள்ளோம். வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பனை ஓலை விசிறி வியாபாரம் சூடுபிடிக்கும்.தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்களும் பனை ஓலை விசிறிகளை அதிக அளவில் வாங்கி உபயோகிக்கின்றனர்.கோடை காலம் தொடங்க உள்ளதால் பனை ஓலை அதிக அளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம். குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் இதற்கு உதவி செய்து பனை ஓலை விசிறி தயாரிப்பார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது.
    • ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு ஏற்கனவே வருகிற 24-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடத்த கல்வித்துறை திட்டமிட்டது. இப்போது தொடர்ந்து கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    போலீஸ், எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்துவது என்று ஆலோசித்து முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    அதன்படி 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 11-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடத்தி முடிக்கப்படும்.

    வரும் 20-ந் தேதியுடன் முடிகிறது. கோடை விடுமுறை 20-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை அளிக்கப்படுகிறது. ஜூன் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படும். முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்.

    கல்லூரிகளை பொறுத்தவரையில் இன்னும் ஆலோசனை செய்யவில்லை. சிறுவர்கள் என்பதால் முதலில் அவர்களுக்கு தேர்வு நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கல்லூரிகளுக்கு மருத்துவத்துறை ஒப்புதல் கேட்டு அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

    • ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
    • பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவு.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வெயில் காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் குறிப்பாக, ஒடிசா மாநிலம் பரிபாடாவில் அதிகபட்ச வெப்பநிலை 41.6 டிகிரி செல்சியஸ் ஆகவும், மாநில தலைநகர் புவனேஸ்வரில் அதிகபட்ச வெப்பநிலை 40.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில், ஒடிசா மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகளை ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 16 வரை மூடுமாறு நிர்வாகத்திற்கு அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் சீரான குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் சீராக வழங்கிட அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். தீவிரமான வெப்ப அலை நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கன்வாடிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 12 ஆம் வகுப்பு வரை, நாளை முதல் ஏப்ரல் 16 வரை மூடப்படும் என்று முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவித்துள்ளார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது.
    • கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் கூட வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. சில மாவட்டங்களில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.

    சென்னையில் வெயில் தற்போது வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. பிற்பகல் 4 மணிக்கு கூட வெயிலின் உஷ்ணம் தாக்கி வருகிறது.

    வெப்ப அலை கொஞ்சம் கொஞ்சமாக வீசி வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்காத நிலையில் ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து வெப்பம் அதிகரித்தது. 15-ந்தேதிக்கு பிறகு சராசரி வெப்பநிலை உயரும் என்று வானிலை ஆய்வாளர்கள் நம்புவதால் வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.

    கிழக்குப்பகுதியில் இருந்து வரும் ஈரப்பதம் காரணமாக வெப்பம் அதிகரித்து உடலில் வியர்வை அதிகளவில் வெளியேறும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    கீழ்த்திசை காற்று இல்லாததால் வருகிற நாட்கள் வெப்பமாகவும், வறண்டதாகவும் இருக்கும். பருவத்திற்கு இயல்பான வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி வரை திடீரென உயரலாம் என்று கூறியுள்ளனர்.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறுகையில், `அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை இருக்கும். 15-ந்தேதிக்கு பிறகு வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். இது பருவத்திற்கு இயல்பானது.

    ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடை காலத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை சாதாரணமாக இருந்து இயல்பை விட குறைவாக இருக்கும். நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் இந்த மாதத்தில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 36.4 டிகிரி செல்சியஸ் ஆகும்' என்றார்.

    கடந்த திங்கட்கிழமையை விட நேற்று சென்னையில் வெப்பம் அதிகரித்தது. ராயலசீமா மற்றும் தெலுங்கானா வரை வறண்ட வானிலை நிலவுகிறது. வடகிழக்கு காற்று நுழைவதால் அடுத்த 4, 5 நாட்கள் வெப்ப நிலை படிப்படியாக உயரும் என்று தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் கூறினார்.

    • கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும்.
    • டி.ஜி.பி. அலுவலகத்தில் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.

    சென்னை:

    கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகிறது. இதனால் வெப்பத்தின் பிடியில் இருந்து தப்பிக்க மனிதர்களே வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கோடை காலத்தில் எப்போதுமே விலங்குகள், பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் பறவைகளுக்கு தண்ணீர் வைத்து வருகிறார்கள்.

    வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்து பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் எனக்கருதி தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து போலீஸ் நிலைய வளாகங்களிலும் சிறிய சிமெண்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீரை நிரப்பி வைத்து அதன் தாகத்தை தணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

    அதன் ஒரு பகுதியாக டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர் 2 இடங்களில் குடிநீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி பறவைகளின் தாகத்தை தீர்க்க மனிதாபிமான நடவடிக்கை மேற்கொண்டார்.

    விலங்குகள் நல உரிமைகள் ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக காவல்துறை பறவைகளை பாதுகாக்க இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறியதாவது:-

    அனைத்து உயிர்களையும் முடிந்தவரை பாதுகாக்க உதவி செய்வது முக்கியமாகும். கொரோனா காலத்தில் தீயணைப்பு நிலையங்களில் தண்ணீர் கிண்ணம் வைக்கப்பட்டதால் அதன் மூலம் பறவைகள் தாகத்தை தணித்துக் கொண்டது. அந்த பணி திருப்தியளித்தது.

    போலீஸ் நிலையங்களில் உள்ள மரங்கள், பறவைகளுக்கு வீடுகளாக அமைந்தது. தொடர்ந்து பறவைகளை வெப்பத்தில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம். உதவி செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் பகலில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள்.

    சென்னை:

    நாடு முழுவதும் கோடை வெயில் கடந்த 2 மாதமாகவே கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி எடுக்கிறது.

    தமிழகத்தில் கடந்த மாதமே பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது.

    இந்த நிலையில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் 9 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார் ஆகிய 3 மாநிலங்களிலும் வெப்ப அலை கடுமையாகும் என்று கூறியுள்ளது.

    இந்த 3 மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்த 3 மாநிலங்களில் உள்ள பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக வெளியே வருபவர்கள் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்த தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த வெயிலில் நின்று அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு வெப்ப நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

    மகாராஷ்டிரத்தில் திறந்தவெளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 13 பேர் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பலியானார்கள்.

    எனவே பகலில் வெயிலில் வெளியே செல்லக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சிக்கிம், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் வெப்ப அலைகள் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்த வெப்ப அலைகளால் கைக்குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோய் இருப்பவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    எனவே அவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் பரிந்துரைத்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை கோடை வெயில் 113 டிகிரியை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் பூபால் பள்ளி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 112.28 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

    அதற்கு அடுத்தபடியாக பீகார் மாநிலம் பாட்னா விமான நிலையத்தில் 111 டிகிரி வெயில் பதிவானது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தான் பூர் பகுதியில் 110.13 டிகிரி வெயில் வாட்டி எடுத்தது. பீகார் மாநிலம் சுபால் பகுதியில் 108.32 டிகிரி வெயில் பதிவானது.

    உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், ஜான்சி, கான்பூர் மற்றும் ஆக்ரா, பீகார் மாநிலம் கிழக்கு சம்பரன், பஞ்சாப் மாநிலம் பதிண்டா ஆகிய பகுதிகளில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது.

    வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. திரிபுராவில் பள்ளி நேரம் அதிகாலைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

    தமிழகத்தை பொருத்தவரை நேற்று 13 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. இதில் ஈரோட்டில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் வறுத்தெடுத்தது. பரமத்திவேலூரில் 105.44 டிகிரியும், சேலத்தில் 105.08 டிகிரியும், திருப்பத்தூர், மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் 103.64 டிகிரியும், திருச்சியில் 103.46 டிகிரி வெயிலும், திருத்தணி, நாமக்கல் ஆகிய இடங்களில் 103.10 டிகிரி வெயிலும், மதுரை விமான நிலையம், தருமபுரி ஆகிய இடங்களில் 102.2 டிகிரி வெயிலும், சென்னையில் 101.60 டிகிரி வெயிலும், கோவையில் 101.3 டிகிரி வெயிலும், தஞ்சாவூரில் 100.40 டிகிரி வெயிலும் பதிவானது.

    தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்திய நிலையில் பகலில் அனல்காற்று வீசியதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் பகல் வேளைகளில் வெளியே செல்வதை பெரும்பாலானோர் தவிர்க்கிறார்கள். உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை குடித்து தாகத்தை தவிர்த்தனர்.

    அடுத்த மாதம் (மே) அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில் வெயில் மேலும் அதிகரிக்கும்.

    • ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.
    • சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வெயில் அளவு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் சில ஊர்களில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டி விட்டது. மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு வெயில் அளவு இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மேற்கண்ட வானிலை முன்னறிவிப்பை சுட்டிக்காட்டி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து மாநில, யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு மத்திய தொழிலாளர் துறை செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வெப்ப அலையின் தாக்கத்தால் தொழிலாளர்களும், ஊழியர்களும் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னேற்பாடுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். இதுதொடர்பாக கட்டுமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் பணி நேரத்தை மாற்றி அமைக்கலாம். பணியிடங்களில் போதிய குடிநீர் வசதிகள் இருப்பது அவசியம். கட்டுமான தொழிலாளர்களுக்கு வெயிலால் ஏற்படும் நோய்களை தடுப்பதற்கான உபகரணங்களையும், ஐஸ் பேக்குகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஊழியர்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய சுகாதார அமைச்சகம் பிறப்பித்த சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்.

    சுரங்கங்களில் பணியாற்றுவோருக்கு ஓய்வெடுக்கும் பகுதிகளை உருவாக்க வேண்டும். தரமான குளிர்ந்த நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும்.

    தொழிலாளர்கள் அசவுகரியமாக உணர்ந்தால், வேலையை மெதுவாக செய்ய அனுமதிக்க வேண்டும். ஓய்வு எடுக்க நேரம் ஒதுக்க வேண்டும். குளிர்ச்சியான நேரத்தில் கடினமான வேலைகளை செய்யும்வகையில் பணி நேரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

    வெயிலால் ஏற்படும் ஆபத்துகளையும், அவற்றை தணிக்கும் வழிகளையும் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். செங்கல் சூளை தொழிலாளர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது.
    • பகல் பொழுது முடிய தொடங்கியதும், அடுத்த ஆயுதமாக அனல் காற்று வீச தொடங்கியது.

    சென்னை:

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 10 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தியது. சென்னையில் 105.26 டிகிரி வெயில் பதிவாகி வாட்டி வதைத்தது.

    மழையானாலும் சரி, வெயிலானாலும் சரி சென்னைவாசிகளுக்கு எப்போதுமே தவிப்புக்கு மட்டும் பஞ்சம் இல்லை. அந்தவகையில் கோடை வெயில் தொடங்கிய காலத்தில் இருந்தே சென்னை மக்களின் தவிப்பு தொடங்கியது. இதற்கிடையில் 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் 'கத்தரி வெயில்' காலம் தொடங்கியது. ஏற்கனவே கொளுத்தி எடுக்கும் வெயிலின் நடுவே கத்தரி வெயிலின் கொடூரம் எப்படி இருக்குமோ... என்று பயந்த மக்களுக்கு, கோடை மழை கொஞ்சம் ஆறுதலை ஏற்படுத்தியது.

    அந்த ஆறுதலும் நீடிக்காத வகையில், வங்கக்கடலில் உருவான 'மோக்கா' புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பை விட இனி வரக்கூடிய நாட்களில் வெப்பத்தின் தாக்கம் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மக்களுக்கு அதுவும் குறிப்பாக சென்னைவாசிகளுக்கு கூடுதல் கலக்கத்தை ஏற்படுத்தியது. அந்தவகையிலேயே சில நாட்களாகவே சென்னையில் வெயிலின் உக்கிரம் கொடூரமாக இருந்து வருகிறது.

    சென்னையில் நேற்று வெயில் வறுத்து எடுத்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை அமைந்தது. பங்குனி வெயில் பல்லை காட்டி அடிச்சுட்டு இருக்கு என்று படத்தில் நடிகர் வடிவேல் சொல்வது போல, சித்திரை வெயில் சென்னையை சிதறடித்துவிட்டது என்றே சொல்லலாம். காலை 9 மணி முதலே வெயிலின் தாக்கம் மோசமாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரித்து கொண்டே இருந்தது.

    பகல் 12 மணிக்கு மேல் வெயில் பட்டையை கிளப்பியது. தரையில் விழுந்த வெயிலின் கீற்று கண் கூசும் அளவு பிரகாசித்தது. இதனால் சாலையில் செல்வோர், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவருமே வெயிலில் குளித்தபடி பயணத்தை தொடர்ந்தனர். நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல, எங்கேயாவது மர நிழல் இருக்குமா, சற்று இளைப்பாறலாமா? என்று அலை பாய்ந்து கொண்டிருந்தனர். அதேவேளை சாலையோரம் இருந்த ஜூஸ் கடைகள், இளநீர், சர்பத் கடைகள், பதனீர் கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்திருந்ததையும் பார்க்க முடிந்தது.

    விடுமுறை நாட்கள் என்றாலே, வெளியே குடும்பத்துடன் குதூகலமாக 'ரவுண்ட்' செல்லும் சென்னைவாசிகள், நேற்று பகலில் வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஏராளமான வீடுகளில் பகலிலும் நேற்று ஏ.சி. எந்திரம் ஓடிக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது. பகல் பொழுது முடிய தொடங்கியதும், அடுத்த ஆயுதமாக அனல் காற்று வீச தொடங்கியது. இதனால் மதியம் 3 மணிக்கு மேல் அனல் காற்றுடன் கூடிய ஊமை வெயில் மக்களை வாட்டியது. மாலை 6 மணி கடந்தும் இதே நிலைமை தொடர்ந்ததால், ஒட்டுமொத்தமாக சென்னைவாசிகள் தவித்து போய்விட்டார்கள்.

    அதேவேளை கடற்கரைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைகடலென திரண்டு குளிர்ந்த காற்றை எதிர்கொண்டனர். இப்போதே வெயில் இப்படி இருக்கிறதே, போக போக எப்படியெல்லாம் வாட்டி வதைக்க போகிறதோ... என சூரியனை திட்டி வருகிறார்கள்.

    • சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது.
    • இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும்.

    சென்னை :

    தமிழகம் முழுவதுமே கோடை வெப்பம் சுட்டெரித்து வருகிறது. அதேவேளை 'அக்னி நட்சத்திரம்' என்று அழைக்கப்படும் கத்தரி வெயிலும் தனது கோர முகத்தை காட்டி வாட்டி வதைப்பதால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். இதற்கிடையே 'நானும் இருக்கிறேன் பார்' என்று உருவான 'மோக்கா' புயல், வெப்பத்தை ஏற்படுத்தி சென்றிருக்கிறது.

    சென்னை நகரமே அனல் பூமியாக மாறியிருக்கிறது. வெயிலின் தாக்கம் காலை முதலே காணப்படுகிறது. ஓட்டலில் அடுப்பு அருகே நின்று சமைக்கும் 'மாஸ்டர்' போலவே, மக்கள் அனைவருமே அனல் தாக்கத்தில் இருப்பது போல உணர்ந்து வருகிறார்கள்.

    தமிழகத்தில் சென்னை, மதுரை, கடலூர், ஈரோடு, கரூர், நாகை, நாமக்கல், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, சேலம், தஞ்சை, திருச்சி, திருத்தணி, வேலூர் ஆகிய 14 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி சதம் அடித்தது. அதிகபட்சமாக வேலூரில் 108.14 டிகிரி வெயில் பதிவானது.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களில் பதிவான வெயில் நிலவரம் வருமாறு:-

    சென்னை நுங்கம்பாக்கம் -105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    சென்னை மீனம்பாக்கம் - 105.44 டிகிரி - (40.8 செல்சியஸ்)

    கோவை - 96.8 டிகிரி - (36 செல்சியஸ்)

    குன்னூர் - 77 டிகிரி - (25 செல்சியஸ்)

    கடலூர் - 102.92 டிகிரி - (39.4செல்சியஸ்)

    தர்மபுரி - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    ஈரோடு - 103.64 டிகிரி - (39.8 செல்சியஸ்)

    கன்னியாகுமரி - 92.12 டிகிரி - (33.4 செல்சியஸ்)

    கரூர் - 104.9 டிகிரி - (40.5 செல்சியஸ்)

    கொடைக்கானல் - 73.58 டிகிரி - (23.1 செல்சியஸ்)

    மதுரை - 103.28 டிகிரி - (39.6 செல்சியஸ்)

    நாகை - 100.04 டிகிரி - (37.8 செல்சியஸ்)

    நாமக்கல் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    பாளையங்கோட்டை - 102.02 டிகிரி - (38.9 செல்சியஸ்)

    பரங்கிப்பேட்டை - 104.36 டிகிரி - (40.2 செல்சியஸ்)

    சேலம் - 100.4 டிகிரி - (38 செல்சியஸ்)

    தஞ்சை - 102.2 டிகிரி - (39 செல்சியஸ்)

    திருப்பத்தூர் - 98.96 டிகிரி - (37.2 செல்சியஸ்)

    திருச்சி - 103.1 டிகிரி - (39.5 செல்சியஸ்)

    திருத்தணி - 105.8 டிகிரி - (41 செல்சியஸ்)

    தொண்டி - 94.64 டிகிரி - (34.8 செல்சியஸ்)

    தூத்துக்குடி - 93.2 டிகிரி - (34 செல்சியஸ்)

    ஊட்டி - 78.62 டிகிரி - (25.9 செல்சியஸ்)

    வால்பாறை - 83.3 டிகிரி - (28.5 செல்சியஸ்)

    வேலூர் - 108.14 டிகிரி - (42.3 செல்சியஸ்)

    தமிழகத்தில் இன்றும் அனேக இடங்களில் வெயில் சுட்டெரிக்கும் என்றும், 'இயல்பை விட 3 டிகிரி வரை வெப்பம் உயரும்' என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

    'மோக்கா' புயல் கரையைக் கடந்தாலும், மேற்கு திசை காற்றும் மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 16, 17-ந் தேதிகளில் (இன்றும், நாளையும்) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், 18, 19-ந் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மழை ஆறுதலை கொடுக்கும் வகையில் இன்னொரு அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது. அதாவது 16-ந் தேதி (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் உக்கிரமடைந்து வருகிறது.
    • பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    சென்னை :

    தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதமே கோடை வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது.

    தொடக்கத்திலேயே வீறு கொண்டு வெப்பத்தை கக்கிய நிலையில், இதையே தாங்க முடியவில்லையே? மே மாதத்தில் எப்படி தாக்கு பிடிக்க போகிறோமோ? என்றுமக்கள் பேசும் அளவுக்கு அப்போது இருந்தது.

    மார்ச் மாதம் 15-ந் தேதியில் இருந்து கோடை மழையும் தமிழ்நாட்டில் பெய்யத்தொடங்கியது. சில இடங்களில் கனமழையும் பதிவானது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு பிறகு மீண்டும் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

    ஏப்ரல் 22-ந் தேதிக்கு பிறகு மீண்டும் கோடை மழை தயவு காட்டியது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இது கோடை காலமா? அல்லது மழை காலமா? என்று யோசிக்கும் அளவுக்கு மழை பதிவானதை பார்க்க முடிந்தது. இதனால் கோடை காலத்தில் பதிவாகும் இயல்பான அளவை விட 88 சதவீதம் அதிகமாக இதுவரை மழை பெய்திருக்கிறது.

    இந்த தொடர் மழை காரணமாக, கடந்த 4-ந் தேதி முதல் கத்தரி வெயில் தொடங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் தெரியாமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்று பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் கோரத்தாண்டவம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதுவும் கடந்த 3 நாட்களாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

    பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கும் முடியாமல், வீடுகளில் இருக்கலாம் என்று நினைத்தால் வெப்பக்காற்றாலும், புழுக்கத்தாலும் தவிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    ஏதோ அனல் அதிகம் நிறைந்த அடுப்புக்கு அருகில் இருந்தால் எப்படி இருக்குமோ? அதே போல் பகல் நேரங்களில் வியர்வை சொட்ட சொட்ட வீடுகளில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும், பகல் நேரத்தில்தான் அப்படி என்றால், இரவிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று இருக்கத்தான் செய்வதாகவும், அதிகாலை 3 மணிக்கு மேல் தான் ஓரளவுக்கு குளிர்ச்சியை உணர முடிவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

    ஏ.சி. இருக்கும் வீடுகளில் கூட வெயிலினால் ஏற்படும் உஷ்ணத்தால், கூடுதலாக மின்விசிறிகளையும் இயக்க வேண்டியிருப்பதாக சொல்கின்றனர். பணியின் நிமித்தமாக வாகனங்களில் சென்றவர்களும், நடந்து சென்றவர்களும் வெயிலின் உக்கிரத்தால் வாடிவதங்கினா். இதனால் சாலையோர குளிர்பான கடைகள், இளநீர், கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்பட பழ ஜூஸ் விற்பனை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் உக்கிரமாக இருந்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 108.86 டிகிரி வெயில் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக வேலூரில் 107.96 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 107.24 டிகிரியும் வெப்பம் பதிவாகி இருந்தது. தமிழ்நாட்டில் நேற்று மொத்தம் 19 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. இதுதவிர புதுச்சேரியில் 106.16 டிகிரியும், காரைக்காலில் 100.94 டிகிரியும் வெயில் பதிவானது.

    சென்னையில் நேற்று பதிவான 109 டிகிரி தான் இதுவரை பதிவானதிலே அதிகமானது என்று பேசப்பட்ட நிலையில், இதற்கு முன்பும் இதைவிட அதிகமாக வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு 113 டிகிரியும், 2012-ம் ஆண்டு மே மாதம் 110 டிகிரியும் வெயில் பதிவாகியிருப்பதாகவும், 109 டிகிரியை பொறுத்தவரையில் கடந்த 2008-ம் ஆண்டும், அதற்கு பிறகு கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதியும், 2017-ம் ஆண்டு மே மாதம் 19-ந் தேதியும் பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பிறகு, நடப்பாண்டில் கத்தரி வெயில் தொடங்கிய பின்னர், பதிவான அதிகபட்ச வெயில் அளவாக இது பார்க்கப்படுகிறது

    வெயிலின் தாக்கம் இனி வரக்கூடிய நாட்களிலும் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியமான சூழல் ஏற்படும் என்றும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இருப்பினும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீரை முடிந்தளவுக்கு குடிக்க வேண்டும் என்றும், வெளிர்நிற, இலகுரக பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    வெளியில் செல்ல அவசியம் இருந்தால் குடை, தொப்பி எடுத்து செல்லவும், கூடுமான வரையில் வீட்டில் தயாரிக்கப்பட்ட லஸ்ஸி, வடித்த கஞ்சி, எலுமிச்சை தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்கவும் அறிவுரை வழங்கியிருக்கின்றனர்.

    • கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • நேற்று சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவானது.

    சென்னை

    சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வங்க கடலில் கடந்த வாரம் உருவான மோக்கா புயல், கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் கரையை கடந்தது. இதனால் சென்னை கடல் பகுதிகளில் அந்த 2 நாட்கள் கடல் காற்று இல்லாமல் போய்விட்டது. கடந்த 15-ந் தேதி (நேற்று முன்தினம்) கடல் காற்று பிற்பகல் 12.45 மணிக்கு தான் சற்று வீசத்தொடங்கியது.

    இன்று (நேற்று) பிற்பகல் 1.15 மணிக்கு பிறகுதான் வீச ஆரம்பித்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் அதிகமாக உணரப்பட்டு இருக்கிறது.

    இனி வரக்கூடிய 2 நாட்களுக்கும் இப்படித்தான் இருக்கும். கடல் காற்று ஓரளவுக்கு வீசத்தொடங்கியதும், வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×