என் மலர்
நீங்கள் தேடியது "tag 223415"
- டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை.
- ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
திருப்பூர்:
நெல் விவசாயிகள் நலன் கருதி கடந்த ஆண்டு மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு, 72 ரூபாய் உயர்த்தியது. இந்தாண்டு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இதனால் நடப்பாண்டு கொள்முதல் விலையை 100 ரூபாயாக உயர்த்தியுள்ளது. மாநில அரசின் ஊக்கத்தொகை 75 ரூபாயுடன் சேர்த்து சன்ன ரக நெல்லுக்கு 2,160 ரூபாயும் மோட்டாரக நெல்லுக்கு 2,115 ரூபாயும் கிடைக்கிறது.
இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க செயல் தலைவர் வெற்றி கூறியதாவது :-
மத்திய அரசு 2014 தேர்தல் அறிக்கையில் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி உற்பத்தி செலவுடன்50 சதவீதம் உயர்த்தப்படும் என்று அறிவித்தது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். டீசல் மற்றும் கூலி உயர்வு அதிகரித்துள்ளதால் லாபம் இல்லை. குவின்டாலுக்கு100 ரூபாய் உயர்வால் பலன் இல்லை. இது மகிழ்ச்சி அளிக்கவில்லை.
பி.ஏ.பி., பாசன சபை தலைவர் கோபால் கூறுகையில், கொள்முதல் விலை உயர்வு போதாது. நடவு, உழவு, பூச்சி மருந்து, களை எடுப்பு, விதை என அனைத்தும் உயர்ந்துள்ளது. இது பயன் தரக்கூடியதாக இல்லை. ஒரு குவின்டாலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தால்தான் கட்டுப்படியாகும்.
உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றியசெயலாளர் நடராஜ் கூறுகையில்,
இந்த விலை போதாது. ஐந்து சதவீதம் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. ஆனால், உற்பத்தி செலவு தாறுமாறாக உயர்ந்துள்ளது. விவசாயம் அழிவை நோக்கிச் செல்கிறது. அதை காப்பாற்ற வேண்டுமானால் 1,000 ரூபாய் உயர்த்தித் தரவேண்டும். ஒரு குவின்டால் நெல் 3,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.
- ஊத்துக்குளி வட்டார 3 ஆவது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.
- மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
திருப்பூர்:
மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைக்கான சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் ஊத்துக்குளி வட்டார 3 வது மாநாடு தனியாா் உணவகத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு அச்சங்கத்தின் வட்டார அமைப்பாளா் ஆா்.மணியன் தலைமை வகித்தாா்.இதில்தமிழக அரசு மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும்.
விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் ஸ்மாா்ட் அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை வழங்குவதுடன், முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்.வீடில்லாத அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- மண்மங்கலம் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்து
கரூர்
கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மண்மங்கலம் வட்டக கிளை சார்பில் 5-வது வட்ட பேரவை கூட்டம் அண்மையில் புகழூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கரூரை அடுத்துள்ள மண்மங்கலம் தேசி நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழூர் வட்டம் மூலிமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும். என்.புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய சமையல் கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- வெட்டும் கரும்புக்கு முன்பணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பது வழக்கம்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெட்டும் கரும்புக்கு விவசாயிகளுக்கு முனபணமாக அக்டோபர் மாததத்தில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பது வழக்கம். கரும்பு விவசாயிகள் இந்த தொகையை வைத்துதான் முன்பணம் கொடுத்து கரும்பு வெட்ட ஆட்களை தக்க வைப்பார்கள். ஆனால் 2022-23-ம் ஆண்டுக்கு இதுவரை சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு முன்பணம் வழங்கவில்லை. இதனால் கரும்பு வெட்டும் ஆட்களுக்கு முன்பணம் கொடுப்பதில் விவசாயிகளுக்கு தாமதம் ஏற்படுகிறது. கரும்பு வெட்டும் ஆட்களும் வேறு ஆலைக்கு ஒப்புதல் ஆகிவிட்டால் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டுவதில் இன்னும் தாமதம் ஏற்படும். எனவே பெரும்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு இந்த மாதத்திலேயே முன்பணம் கொடுக்க வேண்டும் என்று ஆலையின் தலைமை நிர்வாகிக்கு விவசாயிகளும், கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பேராவூரணி பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
- திருச்சி வழியாக திருப்பூர், கோயம்புத்தூர் ஈரோடு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் மாணவ, மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
அதேபோல திருப்பூர், கோயம்புத்தூர் பகுதியில் உள்ள நூற்பாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் விழாக் காலங்களில் சொந்த ஊர்களுக்கு வரவும் மீண்டும் திரும்பி பணி செய்யும் இடங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்வதற்கும் புதுக்கோட்டை, திருச்சி பேருந்துகளில் மாறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
விழாக்காலங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட நேரங்களில் செல்ல முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது போல் திருச்சி வழியாக திருப்பூர், கோயம்புத்தூர் ஈரோடு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர்.
- அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
நாகப்பட்டினம்:
கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப் பேரலையால், நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் வாழ்ந்து வந்த 400 இஸ்லாமிய குடும்பங்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தெத்தி ஊராட்சி பகுதியில் அரசு இடம் ஒதுக்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடியமர்த்தப்பட்டனர்.
அப்பகுதியில் இறப்பு ஏற்பட்டால், நல்லடக்கம் செய்ய நாகூருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது என்றும், எனவே தெத்தி பகுதியிலேயே அடக்கத்தலம் அமைத்துத் தர வேண்டுமென்றும், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, தெத்தி பகுதியில் முஹையதீன் அப்துல் காதர் மரைக்காயர் டிரஸ்டுக்கு சொந்தமான வக்பு இடத்திலிருந்து, 44.43 சென்ட் பரப்பளவு இடம் அடக்கத் தலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
15 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியுள்ளதாக, தெத்தி பகுதி மக்கள் எம்.எல்.ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.
- சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயிலை மீண்டும் ரயில்வே இயக்க எடுக்க வேண்டும்.
- விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் பேராவூரணி - சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும்.
பேராவூரணி:
விரைவு ரயில்கள் பேராவூரணி ரயில் நிலையத்தில் நின்று செல்லவும், ஏற்கனவே பேராவூரணி வழித்தடத்தில் தினசரி இயக்கப்பட்ட சென்னை - ராமேஸ்வரம் விரைவு ரயிலை மீண்டும் தொடர்ந்து இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, சுதந்திரப் போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் நலப்பிரிவு மாநிலச் செயலாளர் சமூக ஆர்வலர் எஸ்.ஏ.தெட்சணாமூர்த்தி, தென்னக ரயில்வே திருச்சி கோட்ட மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, பேராவூரணி தாலுகா தலைநகரமாகவும், சட்டமன்றத் தொகுதி தலைமை இடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது.
இப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் விவசாயம், மீன், கருவாடு, உப்பு, தேங்காய் ஏற்றுமதி தொழில், வேலை, கல்வி, மருத்துவம், ஆன்மீகம் என பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வெளியூர் சென்று வருகின்றனர்.
பேராவூரணி ரயில் நிலையம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரயில் நிலையம். சென்னை, மதுரை, ராமேஸ்வரம் செல்வதற்கும் பேராவூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி பகுதி மக்கள் ரயில் போக்குவரத்தை பெரிதும் நம்பி உள்ளனர்.
இந்த வழித்தடத்தில் ஏற்கனவே தினசரி விரைவு ரயில் ராமேஸ்வரம் - சென்னைக்கு இயக்கப்ப ட்டது. தற்போது, சிறப்பு ரயில் மட்டுமே அவ்வப்போது இயக்கப்படுகிறது.
எனவே, இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் பயன்படும் வகையில், பேராவூரணி வழியாக சென்னைக்கு தினசரி விரைவு ரயில் இரு வழிகளிலும் இயக்க வேண்டும்.
மேலும், தற்போது இயக்கப்பட்டு வரும் செகந்திராபாத் - எர்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் உள்ளிட்ட விரைவு ரயில்கள், பேராவூரணி ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்லவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மனுவின் நகல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ச.சு.பழனி மாணிக்கம் (தஞ்சாவூர்), சு.திருநாவுக்கரசர் (திருச்சி) கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), சட்டமன்ற உறுப்பினர்கள் என்.அசோக்குமார் (பேரா வூரணி), டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி) மாங்குடி (காரைக்குடி) ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
- சின்டெக்ஸ் தொட்டியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதி
கரூர்
கரூர், அண்ணா வளைவு பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது, மழை காரணமாக, நிலத்தடி நீர் உயர்ந்துள்ள நிலையில், போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டியை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏமாற்றுகிறது.
- விவசாயிகள் நாமம் போட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
தஞ்சாவூர்:
யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி. ஆகிய உரங்களின் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும், கூட்டுறவு சொசைட்டியில் காலதாமதப்படுத்தாமல் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும், 2021-22-ம் ஆண்டிற்கான விட்டுப் போன நெல் சாகுபடி விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ் தொகையை கால தாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் என்பதை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் வழங்காமல் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏமாற்றுகிறது என்பதை உணர்த்தும் வகையில் விவசாயிகள் நாமம் போட்டு கோஷமிட்டனர்.
இதற்கு மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
மாநில செயலாளர் உலகநாதன், அரவிந்தசாமி, துரைராஜ், ஜெகதீஷ், பவுன்ராஜ், ஜெயபால், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பப்பட்டன.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வீடு இல்லாத மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அரியலூர், திருமானூர், செந்துறை ஒன்றியங்களில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு குடிமனைப்பட்டாவும், இலவச வீட்டு மனையும் வழங்கிட வேண்டும். அரசு தரிசு புறம்போக்கு மடம், கோயிலுக்கு சொந்தமான இடங்களை வகை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் வீடுகளை இடித்து தள்ளிய தமிழக அரசு, தரிசு புறம்போக்கு இடங்களை கண்டறிந்து ஏழை, ஏளிய மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் பட்டா வழங்கி, வீடு கட்டி கொடுக்க வேண்டும். இலவச வீட்டு மனை வேண்டி கடந்த 1995-2002 வரை மனு அளித்த மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றிய செயலர் அருணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், கந்தசாமி, திருமானூர் ஒன்றிய செயலர் புனிதன், செந்துறை வட்டச் செயலர் அர்ச்சுணன், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
- சிக்னல் விளக்குகள் சீரமைக்கப்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
கரூர்
கரூர், ஆண்டாங்கோவில் பிரிவில் சேதமடைந்த சிக்னல் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர், ஆண்டாங்கோவில் பிரிவில், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண, சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. தற்போது, அவை சேதமடைந்து சிக்னல் விளக்குகள் எரிவதில்லை. இதனால், வர்த்தக நிறுவனங்கள், உழவர் சந்தை உள்ள ஆண்டாங்கோவில் பிரிவில், அடிக்கடி வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. எனவே, சேதமடைந்த சிக்னல் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.