என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திடக்கழிவு மேலாண்மை"

    • திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சோலார் அருகே உள்ள 46 புதூர் ஊராட்சி பிரியா பாறை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 96 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த 2007-ல் அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் சுகாதார இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை திறந்து வைத்தார்.

    இதனையடுத்து 46 புதூர் பஞ்சாயத்து முழுவதும் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தில் கொட்டப்பட்டு, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த பகுதி ஊராட்சிக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சனை இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வந்தனர்.

    இந்நிலையில் குப்பை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடிக்க பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ேநற்று மாலை 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    அப்போது நீதிமன்ற அட்வகேட் கமிஷனரிடம் ஊராட்சிக்கு வேறு பகுதியில் இடம் கொடுத்து விட்டு தற்பொழுது இயங்கும் திடக்கழிவு கூடாரத்தை இடித்து அகற்றுங்கள் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் ஊராட்சிக்கு வேறு எங்கும் குப்பை கொட்ட இடம் இல்லாததால் அதே இடத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    தவிர தற்பொழுது இயங்கும் கூடாரத்தை இடித்து அகற்றினால் ஊராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி, குப்பை கள் அகற்ற முடியாமல் குப்பை காடாக மாறிவிடும். நோய் தொற்று அதிகரிக்கும். சுகாதாரம் சீர்குலைந்து விடும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் பொதுமக்களின் கருத்தை ஆய்வு செய்வதாக தெரிவித்து சென்றார். இதனால் 46 புதூர் ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.

    • எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது.
    • திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, மேற்கு ரோட்டரி மற்றும் துப்புரவாளன் அமைப்பு ஆகியன இணைந்து திடக்கழிவு மேலாண்மை கருத்தரங்கம் மற்றும் விழிப்புணர்வு குறும்பட வெளியீடு ஆகிய நிகழ்ச்சியை நடத்தின. துப்புரவாளன் அமைப்பு இயக்குநர் மோகன் வரவேற்றார். அமைப்பாளர் பத்மநாபன் அதன் நோக்கம் குறித்து பேசினார்.

    மாநகராட்சி பகுதியில் நிலவும் குப்பை மற்றும் அவற்றை முறையாக மாற்று வழியில் பயன்படுத்துவதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை வெளியிட்டு மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    எங்களை உறங்க விடாமல் செய்யும் மிகப் பெரிய பிரச்சினையாக திருப்பூரில் குப்பை பிரச்னை உள்ளது. நகரின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சேகரமாகும் குப்பை தான் காரணமாக உள்ளது.திடக்கழிவு மேலாண்மையை மக்கள் இயக்கமாக கொண்டு செல்கிறோம். இதில் தன்னார்வ அமைப்புகள் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. இவற்றுடன் மக்கள் ஒத்துழைப்பையும் அளித்தால் நிச்சயம் இந்த சவாலை எதிர் கொண்டு சமாளித்து வெற்றி பெற முடியும்.

    குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கினால், அவற்றை மறு சுழற்சி முறையில், நுண்ணுயிர் உரம், மின்சாரம், இயற்கை எரிவாயு, கட்டுமானப் பொருள் என பல விதங்களில் பயன்படுத்த முடியும். தற்போது 4 வார்டுகளில் செகன்டரி பாயின்ட் என்ற குப்பை குவியும் பகுதி இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது. விரைவில் 60 வார்டுகளிலும் இது நடைமுறைக்கு வரும்.

    வீடுகளில் சேகரமாகும் குப்பை 800 மெட்ரிக் டன் அளவும், தொழிற்சாலை கழிவு மேலும் 600மெட்ரிக் டன். மாதம் சராசரியாக 30 ஆயிரம் மெட்ரிக் டன் சேகரமாகிறது. குப்பைகளை தரம் பிரித்தாலும் அவை ஒன்றாகவே பாறைக்குழிகளில் கொண்டு சேர்க்கப்படுகிறது. நிர்வாகத்துக்கு அதிக செலவும் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பேசு கையில், 'திருப்பூரைப் பொறுத்தவரை வீடு, கடை, ஓட்டல், தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள் என அனைத்து விதமான கழிவுகளும் ஒன்று சேர்ந்து சேகரமாகிறது. இதைப் பிரித்து முறையாக மாற்று முறையில் பயன்படுத்தினால் அதை பலன் தரும் விதமாக கையாள முடியும்' என்றார்.துணை மேயர் பாலசுப்ரமணியம், வெற்றி அமைப்பு தலைவர் சிவராம், மேற்கு ரோட்டரி சங்க தலைவர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் பேசினர். திடக்கழிவு மேலாண்மையில் சிறப்பாக செயலாற்றிய பள்ளிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

    • திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி,2-வது வார்டு எவெரடி நகர் பகுதியில் வளமீட்பு பூங்கா என்ற பெயரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதற்காக ரூ.20 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. குடியிருப்புகள் அருகே நடைபெறும் இந்த பணிக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நிலத்தடி நீர் மாசு, தொற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதால் குப்பைகளை தரம்பிரிக்கும் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பணி நடைபெறும் இடம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக பொதுமக்களுடன் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேரூராட்சித் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் துணைத் தலைவர் அலெக்சாண்டர், ஜெகன் நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள், குப்பைகளை தரம்பிரிக்கும் மையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியிருப்பு பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரியும் கடும்வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பாலசம் அகடமி இணைந்து, திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நிகழ்ச்சி விஜயலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பல்ராம் மெமோரியல் டிரஸ்ட் பொருளாளர் சுந்தர் தலைமை தாங்கினார்.

    பேரூராட்சி தலைவர் லதாநரசிம்மன், துணை தலைவர் தீபிகாமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு திட்டக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    முன்னதாக மகளிர் குழுவினர் அமைத்திருந்த பிளாஸ்டிக் கழிவு பொருட்களில் தயாரித்த பொம்மைகள், மற்றும் மக்கும் குப்பைகள்,மறுசூழற்சி குப்பைகள்,மக்காத மற்றும் மறுசுழற்சி செய்யமுடியாத பொருட்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்டார்.

    இதில் வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ், திடக்கழிவு மேலாண்மை வல்லுநர் ராஜசேகர், மற்றும் வார்டு கவுன்சிலர்கள் காவேரி ப்பாக்கம், பனப்பாக்கம், நெமிலி, தக்கோலம், அம்மூர், திமிரி, விளாம்பாக்கம், கலவை உள்ளிட்ட 8 பேரூராட்சிகளை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூரில் திடக்கழிவு மேலாண்மை கலை நிகழ்ச்சி நடந்தது.
    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு படியம், தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குனர் கனகராஜ் அறிவுரைப்படியும், மதுக்கூர் பேரூராட்சி செயல் அலுவலர் தகவலின் படியும் மதுக்கூர் பஸ் நிலையத்தில் கலைமகள் நாடக சபா மூலம் திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்ச்சி கலை நிகழ்ச்சிகள் ஆடல், பாடல், கரகாட்டம் மேளதாளங்கள் முழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை, பன்றி காய்ச்சல் ஒழிப்பு, டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது, பிளாஸ்டிக் பொருட்களை தடுப்பது, மஞ்சள் பையை பயன்படுத்துவது, மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு பற்றிய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் ஆடல், பாடல் மூலம் நடைபெற்றது. 

    ஆடல் பாடல் மேளதாளங்கள் முழங்க மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பொதுமக்கள் தனித்தனியாக பிரித்து எடுத்து சேகரித்தால் வரும் துப்புரவு பணியாளருக்கு எளிமையாக இருக்கும் என்றும் மேலும் குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்ட வேண்டுமென்றும் கழிவு நீர் வாய்க்காலில் கொட்ட கூடாது என்றும் அவ்வாறு  கொட்டுவதால் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் பல்வேறு வகையில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது மழைநீர் சேகரிப்பு என கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×