என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thangam Thennarasu"

    • நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர்
    • இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விருதுநகரில் இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் "கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் நிச்சயம் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என்றார்.

    கடந்த 29ஆம் தேதி சட்டசபையில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிதாக விண்ணப்பிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரூ.21 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது" என்றார் எனத் தெரிவித்திருந்தார்.

    • மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
    • பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.

    டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!

    பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரூ.2000 கோடியில் தரமான லேப்டாபை வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்கு தக்க விளக்கம்.
    • கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் திமுக அரசின் தரம் பற்றி.

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்த துறையையும் விட்டுவிடாத all-round TNBudget2025 என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை வழங்கியிருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்.

    கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!

    யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை ஆளுநரிடம் கோரிக்கை மனுவாக அளித்ததாக அமைச்சர் விமர்சனம்
    • பாஜக தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்குகிறது

    சென்னை:

    தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட 10 பக்க மனுவை கவர்னரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக தெரிவித்தார். கமிஷன், கலெக்சன், கரெப்சன் தான் திராவிட மாடலாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.

    இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரை சந்தித்து, பொய்களின் ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துரைகள் நிரம்பிய புழுகுமூட்டைகளை கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்திருக்கிறார்.

    அதிமுகவை யார் கைப்பற்றுவது என்று அவர்களுக்கிடையே ஒரு பெரிய யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. அதில் தான் வெற்றி பெற வேண்டி தன் எஜமானர்களை சந்தித்துவிட்டு அதே கையோடு இப்போது தான் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்பு திடீரென வந்தவுடன் ஆளுநரை சந்தித்திருக்கிறார்.

    அந்த அறிக்கையில் அவர் சொன்னதாக பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். கோவை கேஸ் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் அக்டோபர் 23ம் தேதி நடந்தது. கனியாமுர் பள்ளி சம்பவம் ஜூலை 17ல் நடந்தது. கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் நவம்பர் 15ல் நடந்தது. இவ்வாறு பல்வேறு காலகட்டங்களில் பல மாத இடைவெளியில் இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், திடீரென ஞானோதயம் வந்தவராக, இன்று ஆளுநரிடம் கூறியிருப்பதற்கு என்ன உண்மையான காரணம்? என்ன என்று தெரியவில்லை.

    ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தை தன்னுடன் இணைத்து வைத்து அப்போதைய ஆளுநர் சமரச உடன்படிக்கை உருவாக்கியதுபோல், இப்போது இருக்கக்கூடிய உள்கட்சி போட்டா போட்டி காட்டா குஸ்தியில் தனக்கு ஒரு சாதகமான நிலையை உருவாக்குவதற்கு ஆளுநரிடம் போய் முறையிட்டாரா? என்ற சந்தேகம் எனக்கு வலுவாக எழுகிறது.

    இன்னொரு பக்கம், தினமும் ஒரு அறிக்கையை வெளியிட்டு ஊடக வெளிச்சத்தை உருவாக்கி அதன் வாயிலாக நாங்கள்தான் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி என்கிற தோற்றத்தை தொடர்ச்ச்சியாக எழுப்பி அதை நிலைநிறுத்தக்கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டிருக்கிறபோது, பாஜகவுக்கு பதிலடி கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் என்ற நினைப்போடு மட்டும் ஆளுநரை சந்தித்திருப்பது ஏன்? இப்போதாவது இந்த விழிப்பு வந்திருக்கிறதே?

    அவர்கள் யாரை கொழுகொம்பாக நம்பி பற்றியிருக்கிறார்களோ, அவர்களே அவர்களுக்கு சத்ருவாக உள்ளே இருக்கிறார்கள் என்ற ஞானோதயம் இப்போதாவது அவருக்கு வந்திருக்கிறதே என எண்ணுகிறேன்.

    ஒருவேளை, பாஜகவில் இப்போது உள்ள உட்கட்சி பிரச்சனையை திசைதிருப்புவதற்காக எடப்பாடி பழனிசாமி ஒரு கருவியாக மாறி ஆளுநரை சந்தித்து நாடகத்தை நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.
    • தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம்.

    விருதுநகர் :

    விருதுநகர் மாவட்டம மல்லாங்கிணற்றில் கூட்டுறவுத்துறை சார்பில் சுயஉதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதிய கடன்கள் வழங்கும் விழா அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

    இதில் 179 மகளிர் குழுக்களை சேர்ந்த 1777 பேருக்கான கடன்தொகை ரூ.3 கோடியே 5 ஆயிரம் மதிப்பிலான கடன் தள்ளுபடி சான்றிதழை சுயஉதவி குழு பெண்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மகளிருக்கான உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், இதே போன்று, இன்னும் 3 அல்லது 4 மாதத்தில் வழங்கக்கூடிய நாள் வரும். இந்த மண்ணில் பெண்ணாக பிறந்ததற்காக உரிமைத்தொகை ரூ.1,000 இன்னும் மூன்றே மாதத்தில் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    பொருளாதாரத்தில் இந்தியாவில் 2-வது இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

    தமிழ்நாட்டிற்கு முதுகெலும்பாக இருக்கக்கூடியது விவசாயம். எனவே விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார்.
    • ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை.

    ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பாரதம் ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்று அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவு மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

     

    ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டிக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சரான தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

    அதில், "கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை பார்க்கும் போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்திருப்பது போல் தெரிகிறது. ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை."

    "ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் அவர் செய்து கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம். எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார் ஆளுநர்."

    "மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால், வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது." என்று தெரிவித்தார்.

    • அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை என்ஜினீயர்கள், மேற்பார்வை என்ஜினீயர்களுடன் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
    • மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு மின் பராமரிப்பு பணிகள், பழுதடைந்த மற்றும் சாய்வான மின்கம்பங்களை மாற்றுதல், மின்பாதைகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல், புதிதாக நிறுவப்பட வேண்டிய பில்லர் பெட்டிகள், மழைக்காலத்தின்போது தண்ணீர் தேங்குவதன் பொருட்டு பில்லர் பெட்டிகளை உயர்த்துதல், மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல் உள்ளிட்ட மின் வினியோக தொடர்பான பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு அனைத்து தலைமை என்ஜினீயர்கள் மற்றும் மேற்பார்வை என்ஜினீயர்களுடன் சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி அதற்கான காரணத்தை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

    தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரியான உயரத்தில் மாற்றியமைக்க புதிய மின்கம்பங்கள் நிறுவுதல், மின்பகிர்மான பெட்டி பராமரிப்பு, மரக்கிளைகளை அகற்றுதல் ஆகிய பணிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மின் பராமரிப்பு பணிகளை உரிய முறையில் முன் அறிவிப்பு செய்து அதிகநேரம் மின்தடை ஏற்படாமல் மேற்கொள்ள கேட்டுக்கொண்டார்.

    மின் இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்யும்போது, கட்டணம் செலுத்திய அன்றே பெயர் மாற்றம் வழங்க சிறப்பு பெயர் மாற்ற முகாமை அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் 24-ந் தேதி முதல் நடத்திட உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குனர் விசு மஹாஜன், மேலாண்மை இயக்குனர் (மின் தொடரமைப்பு கழகம்) மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது.

    சென்னை:

    தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி பேசப்பட்டது.

    மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, மணிப்பூர் விவகாரம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு அது தொடர்பான தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் ஆகும்.

    பல்வேறு துறைகளில் உள்ள பயனாளிகளுக்கு இது சென்று சேரும். தொழிலாளர் நல வாரியம், கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனாளிகள் பலன் பெறுவார்கள். கைம்பெண் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் 24-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    ரேசன் கடைகள் ஒரு அலகுகளாக வைத்துக்கொண்டு முதல் கட்டமாக 21,031 முகாம்கள், 2-வது கட்டமாக 14,194 என 35 ஆயிரத்து 925 முகாம்கள் ஆகஸ்டு மாதத்துக்குள் 3 கட்டங்களாக நடத்தப்படும்.

    விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சுமார் 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முகாம்கள் சுமூகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மணிப்பூர் விவகாரம் பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

    இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

    • என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது.
    • அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியது கண்டனத்திற்குரியது.

    மதுரை:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட் நிலத்தில் முதற்கட்ட பணியை என்எல்சி நிறுவனம் தொடங்கி உள்ளது. கால்வாய் அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில் என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது. அதை செய்தால்தான் சுரங்கத்தின் மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும். அப்போது தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும்.

    எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நில உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்பட்டபிறகும் சிலர் நிலத்தை வழங்காமல் உள்ளனர். திடீரென இந்த முடிவை நிர்வாகம் எடுக்கவில்லை. விவசாயிகளிடம் ஏற்கனவே டிசம்பர் மாதத்திறகு பிறகு நிலத்தில் பயிர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பயிர்களை சாகுபடி செய்தனர்.

    அறவழியில் போராடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு வன்முறையை தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது.
    • நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லையில் மாவட்ட அளவில் சிறப்பு கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். விழாவில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் மாபெரும் கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,500 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.56 கோடிக்கு கடன் வழங்கப்படுகிறது.

    இதன் மூலம் மாணவர்கள், தொழிலாளர்கள், சிறு-குறு தொழில் நிறுவனங்கள், பெண்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என ஏராளமானவர்கள் பயன் பெறுகின்றனர். இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கடன் வழங்குதல் என்பது மிகப் பெரிய அங்கமாக உள்ளது. இதன் மூலம் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்க முடியும்.

    தமிழ்நாட்டில் ஏழை-எளிய மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . ரூ.3½ லட்சம் கோடி பட்ஜெட் போடும் நம் மாநிலத்தில் ரூ.7 லட்சம் கோடி கடன் வழங்குவது என்பது பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்சியை எட்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து 6,500 பயனாளிகளுக்கு ரூ.156 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கினார். மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்களையும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் கிரகாம்பெல், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது.
    • பாஜக ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது என்றார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:

    ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது.

    பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது.

    2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது ரூ.2.08 லட்சம் கோடி.

    உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி.

    உத்தர பிரதேசம், பீகாருக்கு 200 சதவீதம் பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது.

    நிதிப்பகிர்வில் ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன்.
    • எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

    கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன்படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

    மாற்றுத் திறனாளிகள் மீது அன்பும், அக்கறையும், மதிப்பும் எப்போதும் உடையவன் என்ற வகையில், எவ்வித உள் நோக்கமுமின்றி பேட்டியின் ஊடே வெளிப்பட்டதொரு சொல் எனினும், மனம் புண்பட்டிருக்கும் அவர்களது உணர்வினை முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். எனது மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ×