என் மலர்
நீங்கள் தேடியது "TN budget"
- விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
- மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.
அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேசுவார்கள். அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.
- ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.
- மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக, ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து, நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.
இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கான மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் வழங்கப்படும். மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
- தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
- 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
* அறமே ஆட்சியின் அடித்தளமாக கொண்ட திராவிட மாடல் அரசு எல்லோர்க்கும் எல்லாம் என்ற கொள்கையில் செயல்படுகிறது.
* கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரே ஆண்டில் உத்தரபிரதேசத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
* மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் அதிகம் இடம்பெறும்.
* தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தின் அனைத்து பகுதி மக்களுக்கானதாக உள்ளது.
* தமிழ்நாடு அரசு பழங்குடி மக்கள் பேசும் மொழிக்கும் உரிய கவனம் கொடுப்பதாக உள்ளது.
* மத்திய அரசு நமது உயிரினும் மேலான தமிழ் மொரியை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நோக்குகிறது.
* நாட்டிலேயே அதிகளவில் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* 4 ஆண்டுகளில் 10, 649 புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டு தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது.
* தி.மு.க. ஆட்சியில் 32 சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
* 4 ஆண்டுகளில் மட்டும் 42 அரசினர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது.
* மத்திய அரசு நிதி வழங்காத நிலையிலும், சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு மாநில அரசே நிதி ஒதுக்கி பணி மேற்கொண்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று வலியுறுத்திய பிறகுதான் மத்தி அரசு நிதி வழங்கியது.
* கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ரூ. 19,608 கோடிதான் ஒதுக்கீடு செய்துள்ளது.
* உலகில் உள்ள பல நாடுகள் செமிகண்டர் துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
* செமி கண்டக்டர் துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக அமைய வேண்டும் என்பதற்காக கோவை மண்டலம் மேலும் செழுமை அடையும் என நம்புகிறேன் என்றார்.
- திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை:
தமிழக சட்டசபை கடந்த 14-ந்தேதி பட்ஜெட் உரையுடன் தொடங்கியது. மறுநாள் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீது தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து இன்றும் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அவை தொடங்கியதும், கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் விவரம்:-
ரேசன் கடை புகார் பெட்டி மூலம் எத்தனை புகார்கள் வந்துள்ளன, மக்களுக்கு தெரியுமாறு புகார் பெட்டி வைக்க வேண்டும் என உறுப்பினர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், தி.மு.க. ஆட்சியில் ரேசன் கடைகளில் புகார் பதிவேடுகள் மூலம் 97,535, புகார் பெட்டி மூலம் 875 புகார்கள் வந்துள்ளன. புகார் பதிவேடு பெட்டிகளை மக்களுக்கு தெரியும் வகையில் வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்றார். மேலும், ரேசன் கடைகளில் கைரேகை வைப்பத்தில் சிக்கல் இருந்தால், புகாரை உடனுக்குடன் சரிசெய்கிறோம். மேலும் ரேசன் கடைகளில் Brod Band சேவைகளை தடையின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவு கூறினார்.
மேலும், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேசன் கடைகளில் 6,218 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என அசோக்குமார் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.
திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என எம்.எல்.ஏ. விஜயகுமார் கேள்வி எழுப்பினார். திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதனிடையே, மதுரை திருமங்கலத்தில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டித் தரப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அரூர் செட்டிப்பட்டி ஊராட்சியில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
- தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது.
- தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்றது ஏன்? என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தே.மு.தி.க. முதல் தேர்தல் அறிக்கை (2006) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 19 வருடங்கள் ஆகிறது. இதில் உள்ள நிறைய விஷயங்களை இந்த முறை பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தே.மு.தி.க சார்பாக பட்ஜெட்டை வரவேற்பதாக கூறினோம்.
முதியோர் இல்லம், காலை சிற்றுண்டி திட்டம் ஆகிய திட்டங்களை தே.மு.தி.க. வலியுறுத்தி இருந்தது.
தே.மு.தி.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இருந்ததால் அதை வரவேற்றோம்.
விவசாயிகளை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வது, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், முதியோர்கள் இல்லம், வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்ததால் பட்ஜெட்டை வரவேற்றோம் என்று கூறினார்.
- சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
- வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கல் செய்து ஒவ்வொரு துறையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வாசித்தார்.
இதைத் தொடர்ந்து 2025-26 வேளாண் பட்ஜெட் கடந்த சனிக்கிழமை (மார்ச் 15) தாக்கல் செய்யப்பட்டது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை வாசித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், சபாநாயகர் மீது அ.தி.மு.க. சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதும் இன்று விவாதம் நடைபெறுகிறது.
- டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்.
- பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில்,
வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவித்தொகை அதிகரிப்பு,
முதலமைச்சரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள்,
புதிய தொழில்நுட்பங்கள்,
சிறு குறு விவசாயிகள் நலன்,
மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டம்,
டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்குச் சிறப்புத் தொகுப்புத் திட்டம்,
வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதியுதவி
எனப் பல்வேறு முத்தான திட்டங்களுடன் 45,661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறை அதிகாரிகள் அனைவர்க்கும் வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
- இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
- திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம்.
கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?
பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?
நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை என்று கூறியுள்ளார்.
- நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
- 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது.
தமிழக சட்டசபையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 17-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது. 21-ந்தேதி சட்ட மசோதாக்கள் தாக்கல், நிறைவேற்றம் நடக்க உள்ளது.
- டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன.
- செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையானது வெற்றுக் காகிதம் போல் உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்திற்கு பட்ஜெட்டுக்கு பதிலாக வெற்றுக் காகிதத்தை தாக்கல் செய்துவிட்டு போயிருக்கலாம். தமிழக அரசின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை நெருங்குகிறது.
தமிழ்நாட்டை விட குஜராத் உள் கட்டமைப்புக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநில உள்கட்டமைப்பை மேம்படுத்த தமிழக அரசு கடன் வாங்கவில்லை.
அரசு ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் கொடுக்க கூடி தமிழக அரசிடம் நிதி இல்லை.
1.62 லட்சம் கோடி கடன் வாங்குவது தான் முன்மாதிரி மாநிலமா ? மதுபான போக்குவரத்து தொடர்பாக ரூ.100 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது.
சத்தீஸ்கரில் நடைபெற்றது போல தமிழ்நாட்டிலும் டாஸ்மாக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாடலில் முறைகேடு நடந்திருந்தாலும் அங்கு நடைபெற்றதைவிட முறைகேடு அதிகம்.
டாஸ்மாக்கில் 40 சதவீத மதுபானங்கள் கணக்கில் வராமலே விற்பனை செய்யப்பட்டுள்ன. செந்தில் பாலாஜி ஜாமினை ரத்து செய்வதற்கு அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசு பதில் சொல்லும் வரை பாஜக தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும். அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கும் வரை பாஜக போராட்டத்தை தொடரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 2152 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை.
- இந்த நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாயை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது என பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ப.சிதம்பரம் "மத்திய அரசுக்கு இப்பொழுதாவது வெட்கம் வந்து, அவர்கள் நிதியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக,
2025-2026ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது" எனக் கூறினார்.
- விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.
- சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் புதிதாக 9 இடங்களில் தொழிற்பேட்டை அமைக்கப்படும்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் 15 நாட்கள் வரை பணப்பலன்.
பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்தைப் பெண்கள் பெயரில் பதிவு செய்தால் பதிவுத் தொகையில் சலுகை என்பது போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறோம்.
அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைக்கு வருமா என்ற பலமான கேள்வி எழாமல் இல்லை. காரணம், இந்த விளம்பர மாடல் அரசின் கடந்த கால வெற்று விளம்பர அறிவிப்புகளே.
புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிக் கல்வியின் தரத்தை நிலைநிறுத்த என்ன முன்னெடுப்புகளை எடுக்கப் போகின்றீர்கள்?
அடிப்படையான சாலை வசதிகளைக் கவனிக்காமல் அன்புச் சோலை போன்ற போலி அக்கறை காட்டும் வெற்று அறிவிப்பு ஏன்?
கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படுவது போல. பள்ளி மாணவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லையே ஏன்?
ஆசிரியப் பணி இடங்கள் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு, வெற்றிடங்களை நிஜமாகவே நிரப்பும் அறிவிப்பா? இல்லை. வழக்கம் போலான விளம்பர மாடல் அரசின் வெற்று அறிவிப்பா? என்பது போகப் போகத்தான் தெரியும்.
அண்ணா பல்கலையைத் தரவரிசையில் மேம்படுத்தும் அறிவிப்பெல்லாம் இருக்கட்டும். முதலில், அண்ணா பல்கலையில் பயிலும் மாணவிகளுக்கு முறையான பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்.
3 பாதிக்கப்படாத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பு குறித்து இந்த நிதி நிலை அறிக்கையில் விளக்கப்படவே இல்லை.
மாறாக, மக்கள் நலன் சார்ந்த எந்த விளக்கமும் இல்லாமல் பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பு, பரந்தூர் பகுதி விவசாயப் பெருங்குடி மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே இருக்கும்.
விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. தேர்தல் வாக்குறுதியான கேஸ் மானியம் ரூ.100 வழங்கப்படும் என்பது என்ன ஆனது என்று தெரியவில்லை. அதே போல, பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, வாக்குறுதியில் சொன்னது போல முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
மேலும், ரேஷனில் சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளும் என்ன ஆயின என்றே தெரியவில்லை.
பொதுமக்களை வெகுவாகப் பாதிக்கும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படும் மின்சாரக் கட்டணம், மாதம்தோறும் செலுத்தக்கூடியதாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனதோ? வெற்று விளம்பர அரசுக்கே வெளிச்சம்.
அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் குடியிருப்புகள் கட்டுவது இருக்கட்டும். அரசு ஊழியர்களின் லட்சக்கணக்கான குடும்பங்கள் நலன் சார்ந்த ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் முக்கியக் கோரிக்கையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்துவது. பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை.
இந்த நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையாக ஏதேதோ அறிவிப்புகள் என்று போலித்தனமே அதிகம் உள்ளது. ஆனால், சாதாரண நிலையில் இருக்கும் பொதுமக்கள் நேரடியாகப் பலன் அடையும் அறிவிப்புகள் ஏதும் அற்றதாகவே இருக்கிறது.
விளம்பர மாடல் அரசின் மறைமுக முதலாளியாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்ஜெட்டில், டெல்லியில் இருந்துகொண்டு தமிழ்நாட்டையே மறந்து ஒதுக்கியது.
இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. இதுதான் இவர்கள் இருவரும் ஒரே மனநிலை கொண்ட உறவுக்காரர்கள் என்பதற்கான உறுதிப்பாடு ஆகும்.
மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, வெற்றுக் காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே இந்த பட்ஜெட் அறிவிப்பு, இந்த ஏமாற்று வேலைகளுக்கு எல்லாம் மக்கள் கொடுக்கும் மிகப் பெரிய பதிலடியாக 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இருக்கும். இதை இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு விரைவில் உணரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.