என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tourists"

    • விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    • நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக வந்த நிலையில் இன்றும் அதே அளவு தண்ணீர் நீடித்து வந்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். குடும்பத்துடன் பூங்காவில் அமர்ந்து மீன் குழம்புடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். சாலை யோரம் இருந்த கடைகளில் பொறித்து வைத்த மீன்களையும் ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

    ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் மசாஜ் தொழிலாளர்கள், மீன் சமையலா்கள், பரிசல் ஓட்டிகள் உள்ளிட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    • கோடைகாலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
    • மவுண்ட் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    குன்னூர்:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இயற்கை காட்சிகளையும், குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காகவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக கோடைகாலத்தில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்த கோடைகாலம் தொடங்கியதையொட்டி கடந்த சில நாட்களாகவே நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தற்போது தமிழ்புத்தாண்டு, வார விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    ஊட்டி தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளாகவே காணப்பட்டனர்.

    இதனால் நீலகிரிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை, ஊட்டி, கூடலூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து வாகனங்கள் அதிகளவில் வந்தன.

    இதனால் குன்னூர்-ஊட்டி சாலையில் உள்ள காட்டேரி, லெவல் கிராஸ், மவுண்ட் ரோடு, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதை காணமுடிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்தனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

    • வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிறு 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
    • சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு

    ஊட்டி:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

    வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

    மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.

    மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது.

    மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.

    மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது.

    அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர்.
    • சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமான காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டிருந்தனர். அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் வந்து காத்து இருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் படகு துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.

    அதேபோல் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் பாறையில் இருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

    தற்போது கோடையை மிஞ்சும் வகையில் வெயில் கொளுத்துவதால் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு உற்சாகம் அடைகின்றனர். மேலும் மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுவதால் வெயில் வெப்பத்தை தணிக்கும் வகையில் இரவு 9 மணி வரை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிக ரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் ஏரியில் படகு சவாரி செய்து மகிழந்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    இதனால் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கணிசமாக காணப்படும். வார இறுதி நாட்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும்.தற்போது வார விடுமுறை தினங்க ளான சனி மற்றும் ஞாயிற்று க்கிழமை யையொட்டி நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

    சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் குவிந்து பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.

    ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே ஊட்டி ஏரியில் படகு இல்லம் அமைந்துள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    அவர்கள் தங்கள் குடும்பத்துடன் ஏரியில் படகு சவாரி செய்து மகிழந்தனர்.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக ஊட்டி சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததுடன் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    • வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
    • பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள இயற்கை அழகினை கண்டு ரசிக்கவும், சுற்றுலா தலங்களை பார்வையிடவும் தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளிமாவட்ட ங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை குறைந்துள்ள நிலையில் கடந்த சில நாள்களாக பகலில் வெயிலும், இரவு நேரத்தில் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. மேலும் அதிகாலையில் கடுங்குளிரும் வாட்டுகிறது.

    இந்த குளு,குளு சீசனை அனுபவிக்க வார இறுதி நாட்களில் ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். ஊட்டி, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடா் சாரல் மழையும் பெய்தது.

    ஊட்டிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மழையையும் பொருட்படுத்தாமல், மழையில் நனைந்தபடி தாவரவியல் பூங்கா,

    ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். மேலும் ஊட்டியில் நிலவிய கால நிலையையும் வெகுவாக ரசித்தனா்.

    வார விடுமுறை என்பதால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

    • சுற்றுலா பயணியர் அணையின் மதகுப்பகுதிக்கும் நீர் தேக்கத்திற்கும் சென்று செல்பி எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
    • விபரீத செயல்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    உடுமலை : 

    உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அமராவதி அணை. இது சுற்றுலாத்தலமாக உள்ளது. இந்த அணையை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் அணையின் மதகுப்பகுதிக்கும் நீர் தேக்கத்திற்கும் சென்று செல்பி எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

    தற்போது அணை நிரம்பியுள்ள நிலையில் மேல் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேறும் போகும்போது சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்களும் அமராவதி அணை பகுதியில் குவிகின்றனர்.

    இதில் சிலர் கல்லாபுரம் ரோட்டில் உள்ள பாலத்திலேயே நின்று அணையின் அழகை ரசிக்கின்றனர். ஆனால் பலர் அத்துமீறி அணை மதகு கீழ்ஷட்டர் தடுப்புச் சுவர் ஆகிய பகுதிகளுக்கு சென்று செல்பி எடுத்து செல்கின்றனர்.

    இந்த விபரீத செயல்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் அணைப்பகுதியில் கண்காணிப்பு பணியாளர்கள் நியமித்து இதுபோன்ற அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருவியில் தண்ணீர் மிதமாகப் பாய்வதால் மதியம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை விலக்கப்பட்டது.
    • பள்ளி, கல்லூரி விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து உற்சாகமாய் சென்றனர்.

    குமரி:

    மலையோரப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணையின் நீர்வரத்து அதிகரித்ததால் கடந்த 6-ம் தேதி ஆயிரம் கன அடி உபரி நீர் மறுகால்வழியாக திறந்து விடப்பட்டது.

    இந்த உபரி நீரும், கோதையாற்று தண்ணீரும் சேர்ந்ததால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழைய் பெய்யாவிட்டாலும் அருவியில் தண்ணீர்வரத்து குறையவில்லை. இதனால் நேற்று வரை திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

    இதனால் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமுடன் திரும்பிச்சென்றனர்.

    இந்நிலையில் பேச்சிப்பாறை அணையில் தண்ணீர்வரத்து குறைந்ததால் உபரிநீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் இயல்பு நிலைக்கு வந்தது. தற்போது தண்ணீர் மிதமாகப் பாய்வதால் இன்று மதியம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை விலக்கப்பட்டது. இன்று பள்ளி, கல்லூரி விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்து அருவியில் குளித்து உற்சாகமாய் சென்றனர்.

    மேலும், அவ்வப்போது பெய்துவரும் சாரல் மழையால் திற்பரப்பில் குளு குளு சீசன் நிலவியது.

    • மலை ரெயிலுக்காக சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
    • ரெயிலில் பயணிப்பது குதூகலமாக உள்ளது என்றனர்.

    குன்னூர்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரெயிலில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீர்வீழ்ச்சிகள், குகைகள், அடர்ந்த வனப்பகுதிகள், வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். இதனால் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மலை ரெயிலில் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் பனிமூட்டம் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இந்தநிலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் குன்னூர் ரெயில் நிலையத்தில் மலை ரெயிலுக்காக சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். அவர்கள் குளிரை போக்க கம்பளி ஆடைகளை அணிந்தபடியும், மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடியும் வந்தனர். பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு மலை ரெயில் வந்தது. அந்த ரெயிலில் ஏறி சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, மாறுபட்ட காலநிலையில் மலை ரெயிலில் பயணிப்பது குதூகலமாக உள்ளது என்றனர்.

    • கடும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது.
    • சுற்றுலாத்தலங்களை குடை பிடித்தவாறு குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு, தொடா் சாரல் மழையும் கடும் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவுகிறது. மேலும் அதிகாலையில் கடுங்குளிரும் வாட்டுகிறது.

    இந்த குளு,குளு சீசனை அனுபவிக்க வார இறுதி நாட்களில் தினந்தோறும் வெளி மாநிலங்கள், வெளிமாவ ட்டங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் அதிகள வில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    நேற்று விடுமுறை என்பதால் இங்குள்ள முக்கியச் சுற்றுலாத்தலங்களை குடை பிடித்தவாறு குடும்பத்துடன் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனா். நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களான தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்ட பெட்டா, படகு இல்லம், டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் பெய்த சாரல் மழையின் காரணமாக குளிா்ந்த காலநிலை நிலவியது. இந்த குளிா்ந்த கால நிலையை சுற்றுலாப் பயணிகள் அனுபவித்ததோடு, சாரல் மழையில் குடையைப் பிடித்தவாறு முக்கிய இடங்களை குடும்பத்துடன் கண்டு ரசித்தனா்.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
    • வெறும் அறிக்கை அளவிலேயே சுற்றுலாவுக்கான திட்டங்கள் உள்ளன.

    உடுமலை :

    மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை உடுமலை பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்த இரு முக்கிய சுற்றுலா தலங்களிலும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் வெறும் அறிக்கை அளவிலேயே சுற்றுலாவுக்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஆண்டு முழுவதும் சீராக விழும் தண்ணீரில் குளிக்கவும், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அணைகளின் அழகை ரசிக்கவும் முதலை பண்ணையை பார்வையிடவும் மக்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதி, அணைகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவும், கோடை விடுமுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.அரசு நடத்தும் கோடை விழா வாயிலாக மாநிலத்தின் பல்வேறு பகுதி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். வருவாயில் இரு பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளலாம்.குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.

    இதனால் கேரள மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை திருமூர்த்திமலைக்கு எளிதாக ஈர்க்க முடியும்.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும் டாலர் சிட்டியில் உழைக்கும் மக்களுக்காக கிரீன் சிட்டி சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் சில ஆண்டுகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது. விழாவுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அவ்விழாவும் தற்போது நடத்தப்படுவதில்லை. இந்தாண்டு பள்ளி விடுமுறை நாட்களை மையமாக வைத்து கோடை விழா நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.இவ்விழாவை நடத்தியாவது திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறை செயல்பட்டு வருகிறது என மக்களுக்கு தெரியப்படுத்தலாம்.

    அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் முதலை பண்ணை பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த முதலை பண்ணையில் முதலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முதலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரவழைக்கப்பட்டு, முதலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த விழாவுக்கு வரவேற்பும் கிடைத்தது. எனவே இந்த விழாவை மீண்டும் நடத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

    • வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது
    • வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது.

    கூடலூர்,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனை கண்டு ரசிக்க வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் முதுமலைக்கு வருகின்றனர். இந்தநிலையில் மசினகுடியில் இருந்து மாயாருக்கு செல்லும் சாலையில் சுற்றுலா பயணிகள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புலி ஒன்று சாலையை கடந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    ×