என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Travelers"

    • 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர்.
    • வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது . இங்குள்ள அறிஞர் அண்ணா பஸ் நிலைய வளாகத்தில் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான 18 வணிக வளாக கடைகள் உள்ளன.

    இந்த நிலையில் கடைகளின் உரிமம் புதுப்பிக்கவில்லை எனக்கூறி, கடந்த ஆகஸ்டு 2-ந்தேதி நகராட்சி நிர்வாகத்தினர் கடைகளுக்கு பூட்டுப் போட்டு பூட்டி சென்றனர். இதனால் கடைகள் பூட்டப்பட்டதால்,பயணிகள் குளிர்பானம், தின்பண்டம், உள்ளிட்ட பொருட்கள் வாங்க பஸ் நிலையத்திற்கு வெளியே சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பஸ் நிலையத்தில், கடைகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் வாங்கவும், குடிநீர் பாட்டில் வாங்கவும் முடியவில்லை. வெளியில் உள்ள கடைகளுக்குச் செல்வதென்றால் ரோட்டை தாண்டி போக வேண்டி உள்ளது. ரோட்டில் போக்குவரத்து அதிகம் உள்ளதால் விபத்து ஏற்படுமோ என பயமாக உள்ளது . எனவே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை திறக்க நகராட்சி நிர்வாகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில்,கடந்த ஆகஸ்டு 26 ந்தேதி பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் 86 கடைகளுக்கு ஏலம் நடைபெற்றது. இதில் 78 கடைகளின் அரசு நிர்ணய வாடகை அதிகமாக இருப்பதாக கூறி வியாபாரிகள் கடைகளை ஏலம் எடுக்க முன்வரவில்லை. மொத்தமுள்ள 86 கடைகளில் தினசரி மார்க்கெட்டில் 2 கடைகளும், பஸ் நிலையத்தில் 4 கடைகளும், மாணிக்காபுரம் சாலையில் 2 கடைகளும் உள்ளிட்ட 8 கடைகள் மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டன. மற்ற 78 கடைகள் ஏலம் எடுக்கப்படவில்லை. இதனால் பஸ்நிலையத்தில் கடைகள் திறக்கப்படவில்லை. கடந்த 30 நாட்களாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டி கிடப்பதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    • 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர்.
    • இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது.

    சேலம்:

    காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதையும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர். அவர்கள் மதகுகள் வழியாக சீறிப்பாயும் தண்ணீரை பார்த்தனர். பல ஏக்கர் பரப்பளவிலான அணை பூங்காவிலும் பொதுமக்கள் குவிந்தனர்.

    இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. அந்த வகையில் மேட்டூர் அணை பூங்காவுக்கு 20 ஆயிரத்து 656 பேரும், அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவளவிழா கோபுரத்துக்கு 2694 பேரும் வந்து சென்றனர். இதனால் நுழைவு கட்டணம் மூலம் அரசுக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைத்தது.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதலான போலீசார், அணை மற்றும் பூங்கா பகுதியில் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்தது.
    • இந்த ஆண்டு சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை போதிய அளவு இல்லாததால் அருவிகளில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது.

    இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நடத்தப்படாமல் இருந்து வந்த சாரல் திருவிழா இந்த ஆண்டு அரசு சார்பில் கோலாகலமாக நடத்தப்படும் என பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் அருவி களுக்கு தண்ணீர் வரத்து குறைய தொடங்கியுள்ளதால் சீசன் இருக்கும்பொழுதே சாரல் திருவிழா நடத்த ப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடையே எழுந்துள்ளது.

    • கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது.
    • இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தின் மூலிகை சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சென்னை, நாமக்கல், சேலம், திருச்சி, ஈரோடு, கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இந்த நிலையில் கொல்லிமலையில் நேற்று இரவு 73 மில்லிமீட்டர் அளவு கனமழை பெய்தது. இதனால் கொல்லிமலை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்தால், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் தண்ணீர் அதிகளவு கொட்டியது.

    இதன்காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஆகாய கங்கை நீர் விழ்ச்சிக்கு செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி வனச்சர கர் சுப்பராயன் கூறுகையில், ஆகாய கங்கை நீர்விழ்ச்சியில் 200 அடி உயரத்தில் இருந்து அதிக அளவில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தடை மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்றார்.

    • ஆத்தூர் அருகே உள்ள முட்டல் ஏரியில் விசைப்படகு சவாரி விரைவில் தொடங்கவுள்ளது.
    • ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் கல்வராயன் மலை அடிவாரத்தில் முட்டல் கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், வனப் பகுதியில் புள்ளிமான், காட்டெருமை, காட்டுப் பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள், பறவைகளை பார்வையிடவும், ஆைண வாரி நீர் வீழ்ச்சியை ரசிக்க ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

    மூங்கில் குடில் விடுதிகள்

    மேலும் அங்கு தங்கி பார்வையிட, சூழல் சுற்றுலா திட்டத்தில் மூங்கில் குடில் கொண்ட விடுதிகள் உள்ளன. மோட்டார் படகு பழுதானதால் 3 மாதங்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் படகை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் முட்டல் ஏரி அழகை ரசிக்க, ரூ. 7 லட்சம் ரூபாயில், ஒரே நேரத்தில் 15 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் மேற்கூரை கொண்ட விசைப்படகு, புதுச்சேரியில் இருந்து வாங்கப்பட்டுள்ளது.இந்த விசைப்படகு ஜுலை மாதத்தில் இயக்கப்பட உள்ளது.

    விசைப்படகில் என்ஜின் பொருத்தப்பட்டு அவை நிறுத்தப்படும் இடங்கள் தயார் செய்த பின் அதனை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் முட்டல் ஏரி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×