என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTV Dhinakaran"

    • மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது.
    • ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள நடராசன் நினைவிடத்தில் இன்று அவரது நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது. இதில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பங்கேற்று நடராசன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-

    சட்டப்பேரவையில் அ.தி.மு.க உறுப்பினர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவது வித்தியாசம் இல்லை. அனைவரும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட தொண்டர்கள் தான். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேலாக ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். மக்களைப் பாதிக்கும் அளவுக்கு தி.மு.க. அரசு ஏமாற்றியுள்ளது. இந்த ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை நடத்த விடாமல் தடுப்பது ஜனநாயக ரீதியாக எப்படி சரியாக இருக்கும். இந்தப் பிரச்சனையில் பா.ஜ.க.வுடன் இணைந்து கூட்டணி கட்சிகளும் கலந்து பேசி போராடவுள்ளோம். இந்த விவகாரத்தில் மாபெரும் ஊழல் வெளிப்பட போகிறது. இதில் ஆட்சியாளர்கள் சிக்கவுள்ளனர்.

    தமிழ்நாட்டின் ஜீவாதாரத்தை பாதிக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டுவது உறுதியென கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறி வருகிறார். இதனை சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறி மேகதாதுவில் அணைக்கட்டுவதை தடுப்பதற்கான முயற்சியைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை.

    மாறாக அவரது செயலுக்கு ஊக்கமளிக்கும் விதமாக சென்னையில் நடைபெற உள்ள தொகுதி சீரமைப்பு எதிர்ப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட தொண்டர்கள் முன் வர வேண்டும். இதில் யார் தலைவர் என கவுரவம் பார்ப்பது சரியாக இருக்காது. தி.மு.க.வை வீழ்த்த மக்கள் நலனில் அக்கறை உள்ள அனைத்து தொண்டர்களும் தகுதியான நபரை தலைவராகக் கொண்டு ஒன்றிணைய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    • முதல்வர் மருந்தகங்களை திறந்து பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் மருந்துகள் தட்டுப்பாடு- ஏழை, எளிய மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

    முதலமைச்சர் அறிவித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு நெருக்கடி கொடுத்து அவசரகதியில் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகங்களில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என்ற புகாரும் எழுந்துள்ளது.

    ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருந்துகளை மலிவான விலையில் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதயதெய்வம் அம்மாவால் தொடங்கப்பட்ட அம்மா மருந்தகங்களை முடக்கிவிட்டு, முதல்வர் மருந்தகங்களை திறந்து அதனையும் பயன்பாடற்ற நிலையில் வைத்திருப்பது திமுக அரசின் அப்பட்டமான காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது.

    எனவே, இனியும் அவசரகதியிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியிலும் திட்டங்களை தொடங்குவதை நிறுத்திவிட்டு அம்மா மருந்தகங்கள் போன்ற மக்களின் மகத்தான ஆதரவு பெற்ற திட்டங்களை தொடர்ந்து நடத்திட முன்வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    • மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும்.
    • மத்திய அரசை குறை கூறாமல் இழப்பீடு பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் மழை நீர் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் முன் கூட்டியே தொடங்கி விட்டார்கள். மழை காரணமாக காலதாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பித்து விட்டோம். மழை காரணமாக பணிகள் முடிக்கவில்லை என சொல்லி இருக்க வேண்டும். கண்முன்னே குழி தோண்டி வைக்கப்பட்டுள்ளது. 80 சதவீதம், 90 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது என பொய் சொல்லாமல் உண்மையை மக்களிடம் சொல்லி இருக்கலாம். செய்ய முடிந்ததை சொல்லுங்கள். மக்களை ஏமாற்றாதீர்கள்.

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை தன்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது தவறு இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆறுமுகசாமி அறிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதில் தி.மு.க.வின் செயல் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    பாராளுமன்றத் தேர்தலில் மிகப்பலம் வாய்ந்த கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளதை அவரிடம் தான் கேட்க வேண்டும். குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக திருமாவளவன் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் மக்கள் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும்.

    ஆட்டுக்கு தாடி எப்படி தேவை இல்லையோ அதுபோல்தான் கவர்னர் பதவியும் என்பது எங்களது கொள்கை. கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதை பெரிதுபடுத்த தேவையில்லை. அவர் ஒரு அதிகாரி தான்.

    மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசை குறை கூறாமல் இழப்பீடு பெற்று வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

    மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. ஆட்சியில் இருக்கும் போது இருவரும் அதிகாரத்துடன் செயல்படுகின்றனர்.

    தி.மு.க.வை வீழ்த்த கூட்டணியால்தான் முடியும். அந்தக் கூட்டணிக்கு நேசம்கரம் நீட்ட நான் தயார். கூட்டணியின் தலைமை குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்வோம். எனவே ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டணி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன.
    • இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது.

    சென்னை:

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் இப்போதே ஆயத்தமாகி விட்டன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு பேசிய அ.தி.மு.க. தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் எங்கள் கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமையேற்கும் என்பது போன்றே தங்கள் கட்சியின் கருத்தையும் வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் தீவிரமாக இப்போதே களம் இறங்கி இருப்பது உறுதியாகியுள்ளது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று பேட்டி அளித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தி.மு.க.வை வீழ்த்துவதற்காக அமைக்கப்படும் கூட்டணிக்கு நேசக்கரம் நீட்ட தயார் என்று தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக இதற்கு முன்னரும் பல முறை கருத்து தெரிவித்துள்ள தினகரன் தேசிய கட்சி ஒன்றுடன்தான் கூட்டணி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    தற்போதைய சூழலில் தேசிய கட்சியான காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இதனால் அக்கட்சியுடன் அ.ம.மு.க. கூட்டணி சேர வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் இடம்பெற தயார் என்று அறிவித்திருப்பதன் மூலம் டி.டி.வி. தினகரன் தனது நிலைப்பாடு என்ன? என்பதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் எதிர்காலத்தில் இணைய போவதையே டி.டி.வி. தினகரன் இப்படி குறிப்பிட்டிருக்கிறார் என்றே அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து டி.டி.வி. தினகரனை ஓரம் கட்டினர். இதன்பின்னர் "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" என்கிற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி நடத்தி வரும் தினகரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் ஓட்டுகளை பிரித்து அ.தி.மு.க.வின் வெற்றிக்கு வேட்டு வைத்தார்.

    தற்போதைய சூழலில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவை சரி செய்ய வேண்டுமென்றால் அதற்கு டி.டி.வி. தினகரனை அ.தி.மு.க. கூட்டணியில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும் என்றே பா.ஜனதா விரும்புகிறது.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. மேல்மட்ட தலைவர்களுடன் பாரதிய ஜனதா கட்சி ரகசிய பேச்சுவார்த்தையையும் நடத்தி உள்ளது. அப்போது டி.டி.வி. தினகரனை சேர்ப்பது தொடர்பாக இப்போதே எதையும் வெளிப்படையாக பேச வேண்டாம் என்றும் கடைசி நேரத்தில் பேசிக் கொள்ளலாம் என்றும் அ.தி.மு.க. தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட முன்னணி கட்சிகள் உள்ளன. இதுபோன்ற சூழலில் டி.டி.வி. தினகரனையும் கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் நிச்சயம் அது தி.மு.க.வை வீழ்த்துவதற்கு வலு சேர்க்கும் என்றே அ.தி.மு.க.வும் நம்புகிறது. இதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் அ.ம.மு.க. கைகோர்ப்பது கிட்டத்தட்ட உறுதி என்றே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    இதுதவிர டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளும் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியிலேயே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஐ.ஜே.கே. கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் இடம் மாறி பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதன்படி பார்த்தால் பா.ஜனதா, அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., அ.ம.மு.க., புதிய தமிழகம், ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய 7 கட்சிகளும் ஒரே அணியில் நின்று தி.மு.க.வை எதிர்க்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர மேலும் பல அமைப்புகளும் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்தே எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி வியூகத்தை வகுத்துள்ளதாகவும் இந்த கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியை நிச்சயம் வீழ்த்தும் என்றும் அ.தி.மு.க.வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.ம.மு.க. சுதந்திரமாக இயங்கக் கூடிய இயக்கம். நாங்கள் மற்றவர்களுடன் கூட்டணி தான் போக முடியும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். மெகா கூட்டணி பற்றிய பேச்சு வந்துள்ளதால் அதில் சேர தயார் என்றேன். எனவே பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியில் அ.ம.மு.க. சேரும்.

    ஜெயலலிதாவின் தொண்டர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் ஓரணியில் திரண்டு தி.மு.க. அணியை எதிர்க்க வேண்டும்.

    அடுத்தவர்களை தரம் தாழ்த்தி பேசுபவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் ஜெயலலிதாவின் தொண்டர் இல்லை என்பதை காண்பிக்கிறார். நான் அரைக்கால் சதவீதம் கூட எடப்பாடி பழனிசாமியுடன் செல்வேன் என்று எங்கும் சொல்லவில்லை.

    நீங்கள் அ.தி.மு.க. கூட்டணியுடன் செல்வீர்களா என்று பத்திரிக்கையாளர்கள் திரும்ப திரும்ப கேட்கிறார்கள். அ.தி.மு.க. என்பது இன்று செயல்படாத கட்சியாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்.

    ஒரு கட்சி பெரிய கட்சியாக இருந்தாலும் சரி, சின்ன கட்சியாக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் வரும்போது கட்சி வேட்பாளர்களுக்கு சின்னம் கொடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். அங்கு அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

    2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனியாக போட்யிட்டோம். பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியாததாலேயே தோல்வியை சந்தித்தோம். தேர்தல் பின்னடைவுக்கு அதுவும் ஒரு காரணம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. ஒரு அணியை போல செயல்படும். இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அ.ம.மு.க. தமிழ்நாட்டில், சிறப்பாக பணியாற்றும். எங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

    ஏற்கனவே தேர்தலில் நாங்கள் பின்னடைவை சந்தித்ததால் வருங்காலத்தில் நாங்கள் தேர்தலில் பின்னடைவை தான் சந்திப்போம் என்று யாராவது நினைத்தால் அது அவர்களின் எண்ணம். எங்கள் இயக்கம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

    ஜெயலலிதா தலைவராக இருந்த அ.தி.மு.க.வில் இன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 2 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஒரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றொரு மாவட்ட செயலாளரை நியமித்துள்ளார்.

    அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை நீதிமன்றம் போய் முடிவு செய்யும் இடத்தில் அந்த கட்சி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது.

    சென்னை :

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாள் டிசம்பர் 5-ந் தேதி வருகிறது. அன்றைய தினம் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதன் பின்னர் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. இதற்கு உரிய அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கும்படி மனு கொடுத்துள்ளோம். உரிய பாதுகாப்பும், அனுமதியும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அண்மை காலமாக அரசு ஆஸ்பத்திரிகளில் கவனக்குறைவான சிகிச்சையால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அதிக மயக்க மருந்து கொடுத்ததன் காரணமாக குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இதுபோல குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் குழந்தை ஒன்று இறந்துள்ளது. பிரியா என்ற மாணவி இறந்தது அனைவருக்கும் தெரியும்.

    ஆட்சியாளர்கள் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சி என்ற முறையில் இதை எடுத்து சொல்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் போன்றோர் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரப்போவதாக, பேச்சு அடிபடுகிறதே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, 'இதற்கு பதில் அளித்து, அளித்து புளித்து போய் விட்டது. அது முடிந்து போன கதை. அது தொடரும் கதை அல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமியே, கூறி விட்டார்' என்று ஜெயக்குமார் உறுதியாக பதில் அளித்தார்.

    • பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர்.
    • தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள்.

    மதுரை:

    மதுரையில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்க அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று காலை மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத ரோடுகளுக்கு கூட போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர். தி.மு.க. என்றாலே ஊழல் என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. ஒரு கட்சி என்பது அனைத்து மதத்துக்கும் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற கட்சி என்று தி.மு.க. கூறிக்கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறது.

    தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. எனவே பொதுமக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023-ம் ஆண்டில் அ.ம.மு.க.வின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான், அவர்களுடன் சிலர் இருந்தனர்.

    அ.தி.மு.க. செயல்படாமல் இருப்பதற்கு மேற்கண்ட 2 பேர் மட்டும்தான் காரணம். தமிழகத்தில் அ.ம.மு.க. எதற்காக தொடங்கப்பட்டது? என்பதை மேற்கண்ட 2 பேரும் புரிய வைத்து உள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். சசிகலா ஏன் மவுனமாக உள்ளார்? என்பது பற்றி, நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் எங்கிருந்தாலும் ஒரு அணியில் சேர வேண்டும்.
    • தேசிய கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்ததால்தான் திமுகவை வீழ்த்த முடியும்.

    அதிமுகவில் அணிகள் மீண்டும் ஒன்றிணைவது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது: எடப்பாடி தலைமையில் நாங்கள் இணையவே மாட்டோம் என்று நான் பல முறை தெரிவித்துள்ளேன். ஆனால் அதே நேரத்தில் நான் திரும்பவும் சொல்கிறேன்.

    அம்மாவின் (ஜெயலலிதாவின்) உண்மை தொண்டர்களாக இன்றும் நினைப்பவர்கள், அவர்கள் எங்கிருந்தாலும், எல்லோரும் ஒரு அணியில் சேர வேண்டும். நம்மோடு கூட்டணிக்கு வருகிற கட்சிகள் மற்றும் தேசிய கட்சியுடன் சேர்ந்து (பாராளுமன்ற) தேர்தலை சந்தித்ததால்தான் திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து.
    • தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று தனது 60-வது பிறந்தநாளை தஞ்சையில் நிர்வாகிகள், தொண்டர்களோடு இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் தான் தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த முடியும். எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர் இல்லை என்பதை பல இடங்களில் நிருபித்து வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்குவதில் தவறில்லை. ஆனால் ஏன் இவ்வளவு அவசரத்தில் அமைச்சராக்க மு.க.ஸ்டாலின் நினைக்கிறார் என தெரியவில்லை.

    புதுச்சேரியில் தி.மு.க. ஆட்சி அமைய வாய்ப்பு இல்லை என்பது எனது கருத்து. தி.மு.க. தேர்தலில் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கான பதில் வருகின்றன பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் வாழையடி வாழையாக கட்சிக்காக பல தலைமுறைகளை உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
    • புதிதாக வந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் எல்லாம் கிடைக்கிறது.

    திருப்பூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மரத்தான் போட்டி நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு டிடிவி தினகரன் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டம், தொழில் முன்னேறிய பகுதியாக இருந்து வந்தது. தற்போது பல்வேறு பிரச்சனைகளால் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் சரியான முறையில் அணுகி மீண்டும் திருப்பூர் ஒரு சிறந்த தொழில் நகரமாக உருவாவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    உதயநிதி ஸ்டாலின் திமுகவினுடைய எம்எல்ஏ சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராவதில் சட்டப்படி எந்த தவறும் இல்லை. அவருடைய தந்தை மு.க.ஸ்டாலின் 89ம் ஆண்டு முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது அவர் ஒன்றும் அவசரக்கதியில் அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. அனுபவம் வாய்ந்தவர்கள் முன் வரட்டும் என சொல்லி, அனுபவம் வாய்ந்தவர்கள் தான் அமைச்சராக இருந்தார்கள். புதியவர்களும் வருபவதுஉண்டு. அவர் முதல்வராக இருந்த பொழுது கருணாநிதி, ஸ்டாலின் அவர்களை 96 இல் மேயராக தான் கொண்டு வந்தார். பின்பு 2006 இல் தான் உள்ளாட்சி துறை அமைச்சராக அறிவித்தார். பொறுமையாக தான் கையாண்டார். ஆனால், அவருடைய மகன் முத்துவேல் கருணாநிதியின் மகன் என சொல்லிக் கொண்டிருக்கிற திரு ஸ்டாலின் அவசரக் கதியில் அவசர அவசரமாக அமைச்சராக உதயநிதி ஸ்டாலினை அறிவித்தது ஏனோ என எல்லோர் மனதிலும் அய்யம் ஏற்படுகிறது.

    அவர் அரசியலுக்கு வந்ததும் அவசரக் கதி தான் அவர்களின் வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள் என முன்னர் ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது சொல்வதற்கு மாறாக செயல்பட்டு வருகிறார். வரும் காலத்தில் ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர் கூட அறிவிக்கலாம்.

    2023 நவம்பர், டிசம்பரில் அமமுக தேர்தல் கூட்டணி முடிவு அறிவிக்கப்படும்.

    ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் எல்லாம் நாங்கள் எல்லாம் வாழையடி வாழையாக கட்சிக்காக பல தலைமுறைகளை உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், புதிதாக வந்தவர்களுக்கெல்லாம் முக்கிய பதவிகள் எல்லாம் கிடைக்கிறது. அதற்கு காரணம் என்ன அவர்களின் மனக்குமுறலை வெளிப்படுத்தி விட்டார். அதேபோல் பல பேருக்கு அந்த குமுறல் உள்ளது. திடீரென வந்தவர்களுக்கெல்லாம் அவர்கள் அமைச்சர் ஆகிறார். அதற்கு என்ன காரணம் திமுகவில் உள்ளவர்களுக்கு எல்லாம் திறமை இல்லையா? நிர்வாக திறமை இல்லையா? வேற ஏதாவது கரெக்டா கரெக்ட் பண்ணி கொடுக்கிறார்களா? கத்திரிக்கா முத்தினால் சந்தைக்கு வந்து தான் ஆக வேண்டும்.

    புரட்சித்தலைவர் என்ன காரணத்துக்காக ஆரம்பித்தாரோ? அம்மா அவர்கள் அதை என்ன காரணத்திற்காக கட்டி காத்தார்களோ, அது எல்லாம் இன்றைக்கு மாற்றி மாற்று பாதை அமைப்போம் என்பது போல அந்த பாதையில் இருந்து விலகி, ஒரு கடல் போன்ற இயக்கத்தை குட்டை மாதிரி உருவாக்குகிறார்கள். ஒரு வட்டார கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் நாலைந்து பேர் மட்டும் உட்கார்ந்து கொண்டு கட்சியை நடத்துவதை தான் அவர்கள் விரும்புகிறார்கள். அதிமுக வட்டாரக் கட்சி ஆகிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு ஆவர் கூறினார்.

    • ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.
    • இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் நெய் விலை உயர்வு கண்டனத்திற்குரியது. ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து ஆவின் தயிர், ஆவின் பால், தற்போது நெய் ஆகியவற்றின் விலையை உயர்த்திக் கொண்டிருப்பது மக்களை வஞ்சிக்கும் செயல்.

    ஒரே ஆண்டில் 3 முறை நெய் விலையை உயர்த்தி லிட்டருக்கு ரூ.115 வரை அதிகப்படுத்தி இருப்பது ஏற்கத்தக்கதல்ல.இது தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடிக் கூறும் சொல்லாததையும் செய்வதா?

    இவ்வாறு இந்த பதிவில் கூறியுள்ளார்.

    • பிப்ரவரி 4-ந்தேதி-திருச்சி, 7-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-கோவை, 15-ந் தேதி-சேலம் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்
    • பிப்ரவரி 19-ந்தேதி-சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வளர்ச்சி பணிகள் குறித்த, மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் டிசம்பர் 28-ந் தேதி காலை 9 மணியளவில் தொடங்கி, கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ள இக்கூட்டங்களில் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பங்கேற்று ஆலோசனை வழங்க இருக்கிறார்.

    இக்கூட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், கழக அமைப்பு செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் மாநில செயலாளர்கள், கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    28-ந்தேதி-தேனி, சிவகங்கை மாவட்டத்தினர் பங்கேற்கிறார்கள். 29-ந் தேதி-மதுரை, ஜனவரி 6-ந்தேதி-புதுக்கோட்டை, ராமநாதபுரம், ஜனவரி 8-ந்தேதி-விருதுநகர், திருநெல்வேலி மாவட்டத்தினரும் கலந்து கொள்கிறார்கள்.

    அடுத்த மாதம் 10-ந் தேதி-தென்காசி, தூத்துக்குடி, 21-ந்தேதி-தஞ்சாவூர், 27-ந்தேதி-நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், 30-ந்தேதி-பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

    பிப்ரவரி 4-ந்தேதி-திருச்சி, 7-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-கோவை, 15-ந் தேதி-சேலம் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    பிப்ரவரி 19-ந்தேதி-சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது.

    மார்ச் 1-ந்தேதி-ராணிப்பேட்டை, வேலூர், 4-ந் தேதி-விழுப்புரம், கள்ளக்குறிச்சி, 6-ந்தேதி-ஈரோடு, 7-ந் தேதி-செங்கல்பட்டு, காஞ்சிபுரம், 10-ந்தேதி-நாமக்கல், நீலகிரி, 12-ந் தேதி-திண்டுக்கல், 14-ந் தேதி-திருப்பத்தூர், திருவண்ணாமலை, 17-ந்தேதி திருப்பூர், 19-ந்தேதி-திருவள்ளூர், 21-ந்தேதி-கிருஷ்ணகிரி, தருமபுரி, 23-ந்தேதி-கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    ×