என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.
- பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட அந்நாடு தடை விதித்தது.
டாக்கா:
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்கதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வரும்வரை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை கீழ் அவாமி லீக் கட்சிக்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறவுள்ள தேர்தலில் அவாமி லீக் கட்சியினர் பங்குகொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா கட்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக்குழு உறுப்பினர்கள் வங்கதேச பிரதமர் முகமது யூனுசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் மூலம் தங்களுக்கு தேவையான அரசை அமைக்க வங்கதேச மக்களுக்கு உரிமை உள்ளது. அனைத்துக் கட்சியினரும் தேர்தலில் கலந்துகொள்வதை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- அடுக்குமாடி குடியிருப்பின் 16-வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
- கரும்புகை பரவியதால் அங்கிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை அந்தேரி வீராதேசாய் ரோடு பகுதியில் 22 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.
நேற்று காலை10 மணியளவில் இந்தக் கட்டிடத்தின் 16-வது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மாடிகளில் கரும்புகை பரவியது. அங்கிருந்த பலர் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மாடி படிக்கட்டுகளில் சிக்கித் தவித்த 40 பேரை பத்திரமாக மீட்டனர்.மின் வயர்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின. ஒன்றரை மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்திற்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
- ஒடிசா கடற்கரையில் சுதர்சன் பட்நாயக் வாஜ்பாய் மணல் சிற்பத்தை உருவாக்கினார்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.
இதற்கிடையே, முன்னாள் பிரதமரான பாரத ரத்னா விருது பெற்ற அடல் பிகாரி வாய்பாயின் 101வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் வாஜ்பாயின் மணல் சிற்பத்தை உருவாக்கி அஞ்சலி செலுத்தினார்.
- முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கிறது.
- இன்றைய ஆட்டத்திலும் வென்று இந்திய அணி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
திருவனந்தபுரம்:
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
முதல் 2 ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இலங்கையை வீழ்த்தியது.
இந்நிலையில், இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.
இதில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
இலங்கை அணி தொடரை இழக்காமல் இருக்க வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
- ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தன.
ராய்ப்பூர்:
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் உள்ள மேக்னெட்டோ மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட அலங்காரங்கள் செய்யப்பட்டன.
அப்போது, மாலுக்குள் புகுந்த கும்பல் ஒன்று கிறிஸ்துமஸ் அலங்காரங்களை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டது.
மாலில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் அந்த கும்பல் மிரட்டியது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
- இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்ய உணவு பாதுகாப்புதுறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
- தரமான மாவுகளை பயன்படுத்த, கை மற்றும் தலையில் உறைகள் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சென்னை:
தமிழகம் முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.
இப்படி விற்பனை செய்யப்படும் இடியாப்பத்தில் தரம் இல்லை என பல்வேறு புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் உணவு கட்டுப்பாடு துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்நிலையில், இனி இடியாப்பம் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறவேண்டும், ஆண்டுக்கு ஒரு முறை இதனைப் புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான மாவுகளைப் பயன்படுத்தவும், கை மற்றும் தலையில் உறைகள் அணியவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், நோய்த்தொற்று பாதிப்பு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் இடியாப்பம் விற்பனையில் ஈடுபடவும் உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
- சமூக வலைதளங்களில் செய்திகளைப் பார்க்க, கண்காணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி:
கடந்த சில ஆண்டுகளில் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் கசிவு, தவறான தகவல் பரவல், சைபர் உளவு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ ரகசியங்களைப் பாதுகாப்பதற்காக காலத்திற்கு ஏற்ப விதிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ராணுவத்தினர் இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் வலைதளம் ஆகியவற்றில் செய்திகளைப் பார்க்கவும், கண்காணிக்கவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளடக்கங்களை பதிவிட, லைக், கமெண்ட் செய்யக்கூடாது என வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
ராணுவ நடவடிக்கைகள், படை நகர்வு, பயிற்சி விவரங்கள், ஆயுதங்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட அதிகாரபூர்வ அல்லது உள்துறை தகவல்கள் தவறுதலாக கூட வெளியாவதைத் தடுக்கவே இந்த முடிவு என தெரிவித்துள்ளது.
- வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
- சமீபத்தில் இந்து இளைஞர் திபு சந்திர தாசை ஒரு கும்பல் கொடூரமாக கொலை செய்தது.
டாக்கா:
முகமது யூனுஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல், இந்துக்களின் தொழில்களைக் குறிவைப்பது உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்தே அங்கு தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
இன்குலாப் மஞ்ச் என்ற மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். இதையடுத்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது.மேலும், இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவர் கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
வங்கதேசத்தின் சிட்டகாங்கில் உள்ள வெளிநாடுவாழ் இந்துக்களான ஜெயந்தி சங்கா, பாபு ஷுகுஷில் ஆகியோரது வீடுகளை மர்ம நபர்கள் தீவைத்துக் கொளுத்தினர். இது இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் வங்கதேசத்தின் ராஜ்பரி மாவட்டத்தில் இந்து மதத்தைச் சேர்ந்தவரை கும்பல் ஒன்று அடித்துக் கொன்றுள்ளது என அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ராஜ்பரி மாவட்டத்தின் பாங்ஷா உபசிலாவில் உள்ள ஹொசைந்தங்கா சந்தையில் இந்தத் தாக்குதல் நடந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர் அம்ரித் மண்டல் என தெரிய வந்தது. அம்ரித் மண்டல் ஒரு உள்ளூர் குழுவின் தலைவராக இருந்தவர். அவர் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த கும்பல் அவரைத் தாக்கியதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது என கூறினர்
- சுரேகா இந்தியா மட்டுமின்றி ஆசியாவிலேயே முதல் பெண் ரெயில் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றார்.
- கடந்த 36 ஆண்டாக ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தைச் சேர்தவர் சுரேகா யாதவ். விவசாய குடும்பத்தில் பிறந்த சுரேகா யாதவ் 1989-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் துணை ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். இதன்மூலம் இந்தியாவில் மட்டுமின்றி, ஆசியாவிலேயே ரெயில் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
இதையடுத்து, 1996-ம் ஆண்டு சரக்கு ரெயில் ஓட்டுநராக சுரேகா பணியாற்றினார். அதன்பின், 2000-ம் ஆண்டு முதல் பயணிகள் ரெயில் ஓட்டுநராக அவர் பணியாற்றி வந்தார்.

கடந்த 36 ஆண்டாக ரெயில்வேயில் பணியாற்றிய சுரேகா யாதவ் செப்டம்பர் 30-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். பணியின் இறுதியாக மகாராஷ்டிராவின் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையத்தில் இருந்து தலைநகர் டெல்லியின் ஹஜ்ரத் நிஜாமுதின் ரெயில் நிலையம் இடையிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலை சுரேகா யாதவ் இயக்கினார். அப்போது அவருக்கு ரெயில்வே சார்பில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவின் முதல் பெண் ரெயில் ஓட்டுநராக சுரேகா யாதவ் பணியில் சேர்ந்தபின் ரெயில்வேயில் 2,000-க்கும் அதிகமான பெண் ரெயில் ஓட்டுநர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சுரேகாவின் பணி பிற பெண்களும் ரெயில்வேயில் ஓட்டுநராக சேர உந்து சக்தியாக திகழ்ந்தது.

இவரது பணிகளில் சில மைல் கற்கள்:
இந்திய ரெயில்வேயில் முதல் பெண் என்ஜின் டிரைவர்.
1989-ம் ஆண்டு உதவி என்ஜின் டிரைவராக பணி.
ஆசிய அளவிலும் முதல் பெண் என்ஜின் டிரைவர் என்ற பெருமை.
1996-ல் சரக்கு ரெயில் என்ஜின் டிரைவராக பதவி உயர்வு
அதன்பின், மலைப்பகுதிகளில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதில் கைதேர்ந்தார்.
2000-ல் ரெயில்வே மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜி மகளிர் சிறப்பு மின்சார ரெயிலை அறிமுகப்படுத்தினார். அந்த ரெயிலை ஓட்டிய முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றார்.
2023, மார்ச் 13-ல் சோலாப்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. இடையிலான முதல் வந்தே பாரத் ரெயிலை இயக்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழாவிற்கு அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர்களில் சுரேகா யாதவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயந்திரங்கள் உங்கள் பாலினங்களைப் பார்ப்பதில்லை, பலத்தை மட்டுமே பார்க்கிறது என கூறும் சுரேகா யாதவ்,
என்னால் முடியும் என்பதால், எல்லா பெண்களாலும் முடியும் என அனைத்துப் பெண்களுக்கும் தன்னம்பிக்கையாகத் திகழ்கிறார்.
- கிறித்துவ மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுந்தாக்குதல் உலகரங்கில் இந்திய நாட்டின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
- மதவெறித் தாக்குதல்களை அம்மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வலியுறுத்துகிறேன்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தி, கிறித்துவ மக்கள் மீது இந்துத்துவ அமைப்புகளால் நடத்தப்பட்ட கோரத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
உலகம் முழுமைக்கும் கிறிஸ்துமஸ் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நாளில், இந்தியப் பெருநாட்டில் கிறித்துவ மக்கள் மீது நடத்தப்பட்ட இக்கொடுந்தாக்குதல் உலகரங்கில் இந்திய நாட்டின் நன்மதிப்பையே கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
என்ன செய்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம்? ஒன்றியத்தின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை கண்டனத்தைக்கூட தெரிவிக்காது, கள்ளமௌனம் சாதிப்பதேன்? வெட்கக்கேடு!
ஒன்றியத்தில் பாஜக-வானது ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இசுலாமியர்கள், கிறித்துவர்கள், ஆதித்தொல்குடிகள், பழங்குடிகள் என சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள மக்கள் தாக்கப்படுவதும், அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.
அதன் நீட்சியே, தற்போது நடந்தேறிய கோரச்சம்பவங்களாகும். இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பெரும் தலைகுனிவாகும். இந்திய நாட்டின் ஒப்பற்ற மனித வளமோ, பூமிக்கடியில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வளமோ, ஓங்கி உயர்ந்த மலைகளோ, குறுக்கும், நெடுக்குமாகப் பாயும் ஆறுகளோ இந்நாட்டின் பெருமிதங்கள் அல்ல; மதச்சார்பின்மையும், பன்மைத்துவமும்தான் இந்நாட்டின் உயரிய அடையாளங்கள். அதனை மொத்தமாகச் சிதைத்தழிக்கும் வகையிலான மதவெறிச்செயல்பாடுகள் யாவும் கடும் கண்டனத்திற்குரியது.
உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா என பாஜக ஆளும் மாநிலங்களில் கிறித்துவ, இசுலாமியப் பெருமக்கள் மீது தொடரும் மதவெறித்தாக்குதல்களெல்லாம் திட்டமிடப்பட்ட இனஒதுக்கல் கோட்பாட்டின் செயல்வடிவமேயாகும். அதனை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தாங்கள் விரும்பிய எந்த ஒரு மதத்தையும் பின்பற்றவும், வழிபடவும், தங்களது மதம்சார்ந்த பண்டிகைகளைக் கொண்டாடவுமான அடிப்படை உரிமையை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது.
அந்த உரிமையையே முற்றாக மறுத்து, மதவெறித்தாக்குதலை அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தும் மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது. மதவெறியர்களின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தூண்டிவிட்டு, வேடிக்கைப் பார்க்கும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மைச் செயல்பாடுகள் மன்னிக்கவே முடியாத படுபாதகமாகும்.
'தாங்கள் வாழ்கிற நாட்டைவிட சார்ந்திருக்கிற மதமே பெரிதென எண்ணிக்கொண்டு செயல்படத் தொடங்குவார்களேயானால் நாடு சுக்குச் சுக்காகச் சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது' எனும் அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கையைத்தான் நாட்டையாளும் ஆட்சியாளர்களுக்கு இச்சமயத்தில் நினைவூட்டுகிறேன்.
ஆகவே, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கிறித்துவ மக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித் தாக்குதல்களை அம்மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு அதனை உறுதி செய்யவும் வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- சோனியா அகர்வால், அதிக வசனம் இல்லாமல், அதிக காட்சிகள் இல்லாமல் வந்து சென்று இருக்கிறார்.
- குட்டிப்புலி சரவணன், அண்ணன் தம்பியாக நடித்திருப்பவர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
அண்ணன், தம்பி இரண்டு பேர் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள். அண்ணன் ஜாதிதான் உயர்ந்தது என்று வாழ்ந்து வருகிறார். இவரது மகன் வேறொரு ஜாதி பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களது காதல் விஷயம் தெரிந்து மகனை கண்டிக்கிறார். மேலும் காதலிக்கும் பெண்ணை மிரட்டவும் செய்கிறார்.
தம்பி அனைத்து ஜாதியினரும் சமம் என்று வாழ்ந்து வருகிறார். இவரது மகள் பள்ளியில் படிக்கும் சக மாணவனிடம் நட்பாக பழகி வருகிறார். மகளுடன் பழகும் மாணவன் வேற ஜாதியாக இருந்தாலும் மகளை பழக அனுமதிக்கிறார். இந்த ஜாதி பிரச்சினையால் அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.
அதே சமயம் இந்த ஊருக்கு வெளியே வசிக்கும் சோனியா அகர்வால், விவசாய கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.
இறுதியில் சோனியா அகர்வால் ஊருக்கு வெளியே வாழ்ந்து வர காரணம் என்ன? அண்ணன், தம்பி இருவரும் ஜாதி பிரச்சனை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், அதிக வசனம் இல்லாமல், அதிக காட்சிகள் இல்லாமல் வந்து சென்று இருக்கிறார். குழந்தை நட்சத்திரங்களாக நடித்திருக்கும் திலிப்ஸ், வர்ஷிட்ட சுகன்யா இருவரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். குட்டிப்புலி சரவணன், அண்ணன் தம்பியாக நடித்திருப்பவர்கள் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
இயக்கம்
ஜாதி பாகுபாடு மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஏ.குரு. ஜாதிதான் முக்கியம் என்று வாழும் மனிதர்களுக்கு சாட்டை அடி கொடுத்திருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். காட்சிகள் அங்கு இங்குமாக தொடர்ச்சில்லாமல் செல்கிறது. நல்ல கதையை தெளிவில்லாத திரைக்கதை வைத்து இயக்கி இருக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை
ரஞ்சித் வாசுதேவன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. ராஜேஷின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை மாறாமல் படம் பிடித்து இருக்கிறது.
- 2008-ம் ஆண்டு வங்கதேசத்தில் இருந்து லண்டன் சென்றார்.
- தாய் உடல்நிலை மோசமாக உள்ளதால் சொந்த நாடு திரும்பியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதற்கிடையே ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வங்காளதேச தேசியவாத கட்சி தலைவரான முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80) விடுதலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் அவரது உடல் நிலை மோசமடைந்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து லண்டனில் இருக்கும் அவரது மகன் தாரிக் ரகுமான் (60) வங்காளதேசத்துக்கு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா ஆட்சி காலத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டதால் தாரிக் ரகுமான் நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தின் லண்டனில் வசித்து வந்தார். 2008-ம் ஆண்டு தாரிக் ரகுமான் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை அரசாங்கம் விடுவித்த பிறகு 2008-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வந்தார்.
தற்போது தாரிக் ரகுமான் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 17 ஆண்டுக்கு பிறகு அவர் இன்று வங்காள தேசத்துக்கு திரும்பினார். அவர் தனது மனைவி ஜுபைதா ரகுமான், மகள் ஜைமா ரகுமான் ஆகியோருடன் லண்டனில் இருந்து விமானத்தில் புறப்பட்டார்.
தாரிக் ரகுமான் பயணித்த விமானம் இன்று காலை 10 மணிக்கு சில்ஹெட் உஸ்மானி விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் அந்த விமானம் அங்கிருந்து புறப்பட்டு டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
அங்கு தாரிக் ரகுமானுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க வங்காளதேச தேசியவாத கட்சி ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான கட்சி தொண்டர்கள் திரண்டு வரவேற்றனர். சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சி கொடியை அசைத்தபடி தாரிக் ரகுமானை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
அதன்பின் அவர் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாய் கலிதா ஜியாவைச் சந்தித்தார். இதற்கிடையே தனது கட்சியினர் மத்தியில் தாரிக் ரகுமான் உரையாற்றினார்.
அப்போது அவர் "எல்லோரும் இணைந்து நாட்டை கட்டமைக்கும் நேரம் இது. பாதுகாப்பான வங்கதேசத்தை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். வங்கதேசத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என யாராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி, பாதுகாப்பாக வந்து சேர வேண்டும். நாட்டு மக்களுக்காகவும், நாடுகளுக்காகவும் நான் திட்டம் வைத்துள்ளேன்" என்றார்.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரதமர் பதவிக்கு போட்டியிடவும் வங்காளதேச தேசியவாத கட்சி செயல் தலைவரான தாரிக் ரகுமான் முடிவு செய்து உள்ளார். இதற்காக அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் சுட்டு கொல்லப்பட்டதால் சமீபத்தில் வன்முறை வெடித்ததால் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தாரிக் ரகுமான் நாடு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






