வழிபாடு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 25-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-10-22 07:20 GMT   |   Update On 2022-10-22 07:20 GMT
  • 29-ந்தேதி வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.
  • 30-ந்தேதி "சூரசம்ஹார லீலை "நடைபெறும்.

தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதற்படை வீ்டான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் .நடப்பு ஆண்டிற்கான கந்தசஷ்டி திருவிழா வருகின்ற 25-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. திருவிழாவின் தொடக்கமாக 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியளவில் மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானைக்கும், 8.10 மணியளவில் சண்முகர் சன்னதியில் தெய்வானை, வள்ளி சமேத சண்முகருக்கும் காப்பு கட்டுதல் நடக்கிறது. இதனையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதி (நம்பி பட்டருக்கு) காப்பு கட்டப்படுகிறது. இதனை தொடர்ந்து 8.45 மணியளவில் கம்பத்தடி மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நடக்கிறது.

வருகின்ற 29-ந்தேதி மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணிக்குள் கோவிலுக்குள் ஆலயப்பணியாளர்கள் திருக்கண்ணில் முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் "சக்திவேல்" பெறக்கூடிய வேல்வாங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.

திருவிழாவின் சிகரமாக 30-ந்தேதி மாலை 6.30 மணியளவில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் சக்திவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யக்கூடிய"சூரசம்ஹார லீலை "நடைபெறும். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 31-ந்தேதி காலை 7-15 மணியளவில் மலையை சுற்றி சட்டதேர்வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள் செய்துவருகின்றனர்.

Tags:    

Similar News