உள்ளூர் செய்திகள்

சூரிய கிரகணம்,பிள்ளையார்பட்டி கோவில்(கோப்புபடம்)

சூரிய கிரகணத்தையொட்டி தமிழகத்தில் இன்று முக்கிய கோயில்களின் நடை சாத்தப்படும் என அறிவிப்பு

Published On 2022-10-25 03:32 IST   |   Update On 2022-10-25 06:41:00 IST
  • மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
  • சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என எச்சரிக்கை.

தீபாவளிக்கு மறுநாளான இன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவின் சூரிய கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு தென்படும். மாலை 5.42 மணியளவில் இந்த கிரகணம் மறைந்துவிடும். மாலை 5.30 மணியளவில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் சூரிய கிரகணம் தென்படும். சென்னை, கோவை, ஊட்டி மற்றும் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாட்னா, பெங்களூரு, திருவனந்தபுரம், மங்களூரு, கான்பூர், லக்னோ, நாக்பூர், வாரணாசி ஆகிய நகரங்களில் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக சூரிய கிரகணம் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்ககூடாது என்று அறிவியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நாடு முழுவதும் கோளரங்குகளில் சூரிய கிரணகத்தை பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சூரிய கிரணகத்தையொட்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் நடைசாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் இன்று காலை 11:00 மணிக்கு நடை சாத்தப்படும். கிரகணம் முடிந்த பின்னர் இரவு 7:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் ஊத்துக்கோட்டை, ஆரணியை அடுத்த, சிறுவாபுரியில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் செவ்வாய்க்கிழமையான இன்று அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மதியம் 2 மணி முதல், இரவு 7:00 மணி வரை கோவில் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும், 26ம் தேதி வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News