உள்ளூர் செய்திகள்

பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் 3-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்

Published On 2024-06-30 09:45 GMT   |   Update On 2024-06-30 09:45 GMT
  • கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
  • விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்.

காஞ்சிபுரம்:

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கு தேவையான நிலம் விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட உள்ளன.

இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஏகனாபுரம் கிராமமக்கள் பரந்தூர் விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள். இன்று அவர்களது போராட்டம் 705-வது நாளாக நீடித்தது.

இந்த நிலையில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் ஏகனாபுரம் தவிர ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 57 ஊராட்சிகளிலும் நடைபெற்றது. அதிகாரிகள் கிராமசபை கூட்டம் நடத்தவராமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏகனாபுரம் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து பரந்தூர் விமானநிலைய எதிர்ப்பு குழுவினர் வருகிற 3-ந்தேதி(புதன்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் உண்ணா விரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர்.

இதுகுறித்து விமான நிலைய எதிர்ப்பு குழுவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 57 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்து உள்ளது. ஏகனாபுரத்தை அதிகாரிகள் புறக்கணித்து உள்ளனர். நாங்கள் தான் விமான நிலையத்திற்கு எதிராக இதுவரை 7 முறை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். 6 முறை கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தோம்.

இப்போது அதிகாரிகள் எங்கள் கிராமத்தை புறக்கணித்து உள்ளனர். எங்களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை. எங்களை புறக்கணிக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தை அழிக்க பார்க்கிறது. எனவே வருகிற 3-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டக்குழுவை சேர்ந்த 20 பேர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவார்கள், என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏகனாபுரம் கிராம மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி ஆந்திராவுக்கு இடம்பெயர சித்தூர் மாவட்ட கலெக்டரை சந்திக்கப் போவதாக அறிவித்து இருந்தனர். பின்னர் இந்த போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News