தமிழ்நாடு

திமுக தேர்தல் அலுவலகத்துக்கு சென்றால் டீ, காபி, பஜ்ஜி இலவசம்- பொதுமக்களை கவரும் வியூகம்

Published On 2024-07-02 09:00 GMT   |   Update On 2024-07-02 09:01 GMT
  • 200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர்.
  • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் டாக்டர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.

அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி இந்த தேர்தலில் போட்டியிடாததால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.


தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்காக அமைக்கப்பட்ட அக்கட்சியின் தேர்தல் பணிக் குழுவில் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கர், சி.வி.கணேசன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, செஞ்சி மஸ்தான், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட 25 அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சட்டசபைக் கூட்டம் கடந்த சனிக்கிழமை முடிந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அனைவரும் விக்கிரவாண்டியில் முகாமிட்டு வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் 2 வீதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்று பிரிக்கப்பட்டு அங்குள்ள வாக்காளர்களின் தேவையை நிறைவேற்றி வருகின்றனர்.

200 வாக்காளர்களுக்கு ஒரு அலுவலகம் அமைத்து தினமும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்கின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு டீ, காபி கொடுத்து உபசரிக்கின்றனர். வடை, பஜ்ஜி உள்ளிட்டவைகளும் இலவசமாக கிடைக்கிறது.


காலை, மாலையில் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து செல்லுங்கள், உங்கள் பகுதி குறைகளை சொன்னால் நிறைவேற்றி தருகிறோம் என்று கூறுகின்றனர். இதனால் தி.மு.க. தேர்தல் அலுவலகங்களில் எப்போதும் கூட்டம் 'களை' கட்டுகிறது.

பா.ம.க.வை பொறுத்தவரை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசார பலமாக ஒவ்வொரு பகுதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க.வை கடுமையாக சாடுகிறார்.

மாநில, மாவட்ட அளவிலான பொறுப்பாளர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தங்கி பிரசாரம் செய்கின்றனர். தி.மு.க.வினர் எப்படி பிரசாரம் செய்கிறார்கள் என்பதை கண்காணித்து அன்புமணி ராமதாசுக்கு தகவல் கொடுக்கிறார்கள்.

அதன் மூலம் பிரசார வியூகம் மாற்றப்படுகிறது. மதுவின் தீமைகளை எடுத்துக் கூறி பெண்களின் வாக்குகளை மொத்தமாக பெற்றிட டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சவுமியா ஆகியோரும் தீவிரமாக வாக்கு சேகரிக்கின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமம் கிராமமாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். பா.ம.க. எங்கெல்லாம் எழுச்சியாக உள்ளதோ அங்கு கூடுதலாக தி.மு.க. வினர் வரவழைக்கப்பட்டு களப் பணியாற்றுகின்றனர்.

மொத்தத்தில் இந்த தேர்தலில் சாதனைகளை சொல்லி தி.மு.க.வினர் ஓட்டு கேட்கும் நிலையில் வேதனைகளை சொல்லி பா.ம.க. வினர் ஆவேசமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க. வாக்காளர்களின் ஓட்டு யாருக்கு செல்லும் என்பதை பொறுத்தே வெற்றி அமையும் என தெரிகிறது.

Tags:    

Similar News