டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
- நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
- மண், நீர் மற்றும் காற்று மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
தரங்கம்பாடி:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் அகரகீரங்குடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் தர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்கு சுபவீரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.
அனைத்து வகையான உதவி பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று அட்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.
பின்னர் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி அலுவலர் சுகுமார், அட்மா திட்ட உதவி மேலாளர்கள் விஜய் மற்றும் மதுமனா ஆகியோர் நிகழ்ச்சி செயல் விளக்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.